நமக்கென வாழ்ந்த நம்மாழ்வார் –சில நினைவுகள்.-மணி செந்தில்




அவரை முதன் முதலில் நான் பார்த்தப் போது யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் என்னை அவரிடத்தில் அறிமுகம் செய்து வைத்த போது கள்ளம் கபடமற்ற சிரிப்போடு என்னை கனிவாக பார்த்தார். சட்டை அணியாமல் சால்வை மட்டுமே அணிந்திருந்ததை  ஒரு சந்தேகமாக கேட்டேன்.ஆடு மாடு ,செடி ,கொடி எல்லாம் சட்டை போட்டுக் கொண்டா திரியுது ..?,மனுசப்பய தான் சொகுசா வாழ கத்துக்கிட்டான். தான் சொகுசா வாழ பூமியை அழிச்சி தின்னுக்கிட்டு இருக்கான் என சிரித்தார். அவர் எளிமையாக சொன்னாலும் என்னுள் வலிமையாக விதைத்தார்.அவர்தான் இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வார். (விஞ்ஞானி என்று அழைக்கப்பட்டதை அவர் வெறுத்தார். என்னய்யா பெரிய விஞ்ஞானி..இருக்குறத கண்டுபிடிக்கிறதுல என்னய்யா விஞ்ஞானம்,வெங்காயம் இருக்கு...? மேலும் விஞ்ஞானி என்கிற பேர்ல பல வியாவாரி(வியாபாரி) இருக்கான்.நமக்கு எதுக்குய்யா விஞ்ஞானி, அஞ்ஞானி எல்லாம்..மனுசனா இருப்போம்யா..)


உண்மையில் அவர் ஒரு நேர்மையான விவசாயி. தன் மண்ணிற்கும்,மக்களுக்கும் மிக நேர்மையாக வாழ்ந்தார். எவ்வித பூச்சும், அலங்காரமும் அற்ற வாழ்க்கையை வாழ்ந்த அவர்..விவசாயத்தையும் செயற்கை ஒப்பனை அற்ற..இரசாயான மருந்துகள்,உரங்கள்  அற்ற மாபெரும் கலையாக நிகழ்த்தினார். பசுமைப்புரட்சி என்கிற பெயரில் எம்.எஸ் .சுவாமிநாதன் போன்றோர்  செயற்கையாக தயாரிக்கப்பட்ட இரசாயான உரங்கள் மூலம் இம்மண்ணை மலடாக்க வரிந்துக் கட்டி வேலைப் பார்த்த காலத்தில் தான் ..இம்மண்ணை தாயாக நேசித்த நம்மாழ்வார் தோன்றினார். பாரம்பரியமாக விவசாயத்தை தொழிலாக அல்லாமல் தன் வாழ்வின் ஒரு அங்கமாகவே பாவித்து வந்த தமிழன்..அறிவியலால்..வந்தேறி புகுந்த அயல் சிந்தனை தாக்கத்தினால் தன்னுடைய பூர்விக மரபை இழந்தான். பல வகைப்பட்ட தானிய விதைகளால்,,,நெல் வகைகளால் நிறைந்துக்கிடந்த தமிழனின் வாழ்க்கை உலகமயமாக்கப்பட்ட இந்திய பெரு முதலாளிகளின் கோரப்பசிக்கு இரையானது வேதனை வரலாறு. மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டி போரடித்தவன்…இன்று அதே யானையை பிச்சை எடுக்க வைத்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான். இக்காலக்கட்டத்தில் தான் பாரம்பரிய அறிவினை மீட்போம் என்ற முழக்கத்தோடு அய்யா. நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை போதிக்கத்துவங்கினார்.

பசுமைப்புரட்சி,விவசாய மறுமலர்ச்சி என்ற பெயரில் இம்மண்ணின் உயிர்த்தன்மையை கொன்றழிக்கும் வேலையை பல ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக இந்திய வல்லாதிக்கம் செய்து வருவதை அய்யா.நம்மாழ்வார் கடுமையாக எதிர்த்தார். தனது இறுதி காலத்தில் கூட தஞ்சை டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்க மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியான போராட்டங்களை அவர் முன்னெடுத்து வந்தார். வருகிற சனவரி 2014  மாதத்தில் 25 ஆம் நாளன்று மன்னார்குடியில் ஒரு லட்சம் தமிழர்களை திரட்டி மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திட அவர் முனைப்பாக இருந்தார். அதற்கென ஊருக்கு ஊர் பயணம் செய்து  விவசாயிகளை சந்தித்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தின் கேடுகளை விளக்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார்.

நம்மாழ்வார்  இயற்கை வேளாண் அறிஞர் மட்டுமல்ல. பழந்தமிழர் உணவு முறைகளை அறிந்த மாபெரும் அறிஞர். நீர் பாசன அறிவியல் அறிந்தவர். மரபு வழி உடற்பயிற்சி அறிந்தவர். மிகப்பெரிய கதைச்சொல்லி. எள்ளலும், கிண்டலுமாய்,பாமர மொழியில் மாபெரும் கருத்துக்களை தெளிவாக உரைக்கும் வல்லமை உடைய மாபெரும் பேச்சாளர் , தொடர்ச்சியாக பல்வேறு இதழ்களில் இயற்கை வேளாண்மை பற்றியும், இயற்கை உணவு குறித்தும் மிக நுட்பமான தகவல்களோடு தரமான கட்டுரைகள் எழுதிய எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் செயல்பட்ட அவரது ஆளுமை தமிழ் அறிவுலகில் மகத்தானது. மணப்பாறை அருகே வானகம் என்ற பெயரில் மாபெரும் தோட்டம் அமைத்து இயற்கை வேளாண் வகுப்புகள், வாழ்வியல் முறைகள், போன்ற பல தளங்களில் முகாம்கள் நடத்தி எண்ணற்ற தமிழருக்கு அறிவூட்டிய நமது பெருமை மிக்க முன்னோன் நம்மாழ்வார் அவர்கள்.

பேரழிவிற்கு எதிரான இயக்கம் என்ற மக்கள் இயக்கத்தை கட்டி அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் இச்சமூகத்திற்கு எதிராக நடக்கும் சுரண்டல்,கொள்ளை உள்ளீட்ட அனைத்திற்கும் எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வந்த போராளி.


நமக்காக வாழ்ந்தார். பூவுலகை நேசித்தார். இயற்கையை வாசித்தார். வாசித்ததை வஞ்சகம் இல்லாமல் ..கணக்கு பார்க்காமல் கற்பித்தார்.

அவருடைய இழப்பு  ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்திற்கான இழப்பு.

இயற்கை வேளாண் பெருங்குடியோன் அய்யா.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம்.
-மணி செந்தில்.


காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து கலந்துக்கொள்ளகூடாது என முகநூலில் வேண்டுகோள் விடுப்போம் -பக்கவிபரம்,கடித மாதிரியோடு......



அன்பான வேண்டுகோள்!

கீழ்க்காணும் பிரிட்டிஷ் எம்.பி.க்களின், பிரதமரின், இளவரசர் சார்லசின் முகநூல் பக்கங்களுக்குப் போய் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையிலே நடத்தாதீர்கள் என்று வேண்டுகோள் வையுங்கள், தயவு செய்து. 
Please write to the British MPs, PM and Prince Charles through their Facebook pages and ask them to cancel the CHOGM summit in Lanka.

தம்பி அண்டஸ் ராஜ் பெர்னாண்டோ தொகுத்தளித்த முகநூல் முகவரிகள்:
https://www.facebook.com/conservatives -Official page of conservatives ,https://www.facebook.com/CharlesHRH/-Prince charles offical page,https://www.facebook.com/DavidCameronOfficial?ref=br_tf- PM David Cameron,
https://www.facebook.com/markrtgarnier,
https://www.facebook.com/MichaelDugherMP,
https://www.facebook.com/JakeBerryMp,
https://www.facebook.com/stevebarclaymp,
https://www.facebook.com/StephenMcPartlandhttps://www.facebook.com/RobertHalfon,
https://www.facebook.com/PennyMordauntMP,
https://www.facebook.com/aluncairns,
https://www.facebook.com/PeterHain4Neath,
https://www.facebook.com/TonyBlair,
https://www.facebook.com/gordonhendersonmp,https://www.facebook.com/TessaJowell,
https://www.facebook.com/mpdamiancollins,
https://www.facebook.com/lynne.featherstone,
https://www.facebook.com/charles.kennedy.mp,https://www.facebook.com/KirstenGillibrand,
https://www.facebook.com/libdems,
https://www.facebook.com/.../Norman-Baker-MP/301915916488117,https://www.facebook.com/simonwrightmp,
https://www.facebook.com/pages/Danny-Alexander/374368637467,https://www.facebook.com/mike4eastleigh
https://www.facebook.com/justintomlinsonmp,
https://www.facebook.com/grant.shapps,
https://www.facebook.com/williamjhague,
https://www.facebook.com/laura.sandys.mp
https://www.facebook.com/NadineDorriesMp,
https://www.facebook.com/NadineDorriesMp,
https://www.facebook.com/pages/Lisa-Nandy/194243072092,https://www.facebook.com/matthewhancockmphttps://www.facebook.com/.../Gregory-Barker-MP/300459839764,https://www.facebook.com/rachelreeves10,
https://www.facebook.com/kerry4mp,
https://www.facebook.com/NadhimZahawi,
https://www.facebook.com/barrygardinerMP,
https://www.facebook.com/pages/Rushanara-Ali/37684209618https://www.facebook.com/pages/Gordon-Brown/67132943785https://www.facebook.com/arnaudmontebourg.frhttps://www.facebook.com/luciana4wavertree
https://www.facebook.com/dmiliband
https://www.facebook.com/pages/Stella-Creasy/7916859303https://www.facebook.com/ChukaUmunnaMP
https://www.facebook.com/pages/David-Lammy-MP/19129786540https://www.facebook.com/pages/Sadiq-Khan/275283499191111https://www.facebook.com/edmiliband
https://www.facebook.com/EmmaReynoldsMP
https://www.facebook.com/agriffithsmp
https://www.facebook.com/andy4hammersmith https://www.facebook.com/luciana4wavertree
https://www.facebook.com/Debbie.Abrahams
https://www.facebook.com/liewchintong.my
https://www.facebook.com/pages/Dennis-Skinner/60783991559https://www.facebook.com/YunusCentre
https://www.facebook.com/khaleda.zia
https://www.facebook.com/clive.efford
https://www.facebook.com/tonybennfilm
https://www.facebook.com/pages/Jeremy-Corbyn/330250343871https://www.facebook.com/steve.webb2
https://www.facebook.com/pages/Nic-Dakin/186874346397https://www.facebook.com/RoryStewartMP
https://www.facebook.com/ChrisAlexanderCanadahttps://www.facebook.com/pages/Hon-Diane-Ablonczy/9147373095https://www.facebook.com/pages/Michelle-Rempel/126806667378661https://www.facebook.com/erinotoolecpc
https://www.facebook.com/JimMFlaherty

எழுத வேண்டிய விண்ணப்பம்:

Dear Sir:

Greetings! I write to request you to cancel the forthcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo as the host country’s leader, President Mahinda Rajapakse, stands accused of committing a wholesale genocide and serious war crimes against the minority Tamil people in his country.

After all, the Charter of the Commonwealth reaffirms 16 wonderful ideals as the “core values and principles of the Commonwealth”. If this is indeed true and if “We, the people of the Commonwealth” also include some 100 million Tamil people living all over the world, please cancel the upcoming Commonwealth Heads of Government Meeting (CHOGM) in Colombo and avoid making a war criminal the next Commonwealth Chair-in-Office.

Looking forward to your favorable action, I send you my best personal regards and all peaceful wishes.

Sincerely,

Your Name
(On behalf of some 100 Million Tamils)

நன்றி : இடிந்தகரையின் இடியாத போராளி அண்ணன் சுப.உதயகுமார். 

ஜெயமோகனின் தமிழ்மொழி எதிர்ப்பும்..சித்தனான தோசை மாஸ்டரும்..


ஒவ்வொரு மனிதரும் ஏதோ வகையில் சிறப்பானவராக இருக்கிறார். எனக்கு தெரிந்து ஒரு தோசை மாஸ்டர் இருக்கிறார். கும்பகோணத்தின் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் அவர் தோசை மாஸ்டராக பணிபுரிகிறார். அவரின் கைப்பக்குவத்திற்கென்றே ஒரு கூட்டம் கூடும். தோசை சுடுவதில் வல்லவரான அவருக்கு கொஞ்சம் சித்தர் பாடல்களிலும் அறிமுகம் உண்டு. இரவு நேரத்தில் வேலை முடித்த பின்னர்..2 ரவுண்டு உள்ளே போனவுடன் அவருக்குள் மறைந்துக் கிடக்கும் சித்தர் வெளியே டபக்கென்று குதித்து விடுவார். பிறகென்ன…அந்த ஹோட்டலே சித்தர் மடமாகி விடும். அப்போது தன் எதிரே வருபவரை உற்று பார்ப்பார்.( அப்படியாக அவர் நினைத்துக் கொள்வார்..இருக்குற போதையில எங்கிட்டு உத்து பாக்கிறது..? ) .கண்களை விரித்துக் கொண்டு பெரிய சித்தர் போல எலும்பும், சதையுமாவது ஏதடா..இலக்கமிட்டு இருக்குதோ..என்றெல்லாம் வாய்க்கு வந்ததை எல்லாம் அவிழ்த்து விடுவார். போதை உச்சத்தில் வேட்டி அவிழ்ந்தவுடன் பார்ட்டி கவிழ்ந்துவிடுவார்.காலையில் வழக்கம் போல் தோசை மாஸ்டர். இப்படிப்பட்ட நபரிடம் சித்தர் பாடல்கள் குறித்து விளக்கம் கேட்டால் எப்படி இருக்குமோ…அப்படி இருக்கிறது  4-11-2013 தேதிய தி ஹிந்து தமிழ் நாளிதழில் ஜெயமோகன் எழுதிய ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன ..? என்கிற உலக  மகா ஆராய்ச்சிக்கட்டுரை. 

சென்னையில் ஒரு புத்தககடையில் ஆங்கில புத்தகம் 2000 விற்றதாக இவர் பார்த்ததிலிருந்து தொடங்குகிறது அக்கட்டுரை.  நூலகம் போக தமிழ்நூல்கள் எல்லாம்  500 படிகள் மட்டுமே விற்பதாக இவர் வருந்தி பாரம் சுமக்கிறார் . இவற்றில் எல்லாம் நாம் தலையிட வேண்டாம் .ஏனெனில் அது வியாபாரக் கணக்கு. தமிழ் மொழியில் புத்தகம் விற்கவில்லை என்றால் ஏங்க நீங்க இன்னும் தமிழிலேயே எழுதுறீங்க என்றோ நீங்கள் கட்டுரை எழுதும் ஆங்கில நாளிதழாக இருந்த தி ஹிந்து நாளிதழே தமிழ்ப் பதிப்பு கொண்டு வந்து விட்டதே என்றெல்லாம் கேட்க வேண்டியதில்லை. ஏனெனில் அவையெல்லாம் வடிவேல் கொண்டை போல வெளிப்படை. அடுத்தடுத்த வரிகளில் தான் சிங்கம் தனியே நின்று பெளலிங் போடாமலேயே சிக்ஸர் அடிக்க துவங்கிறது. உலக மயச்சூழலில் ஆங்கிலம் மட்டும் தான் வேலைவாய்ப்பு மொழியாம். இளையத்தலைமுறை எல்லாம் ஆங்கிலத்தில் தான் படிக்கிறார்களாம் என்பது போல உருளுதாம்..சாயுதாம் வகை கருத்துக்கள். எதை இவர் உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. தாய்மொழிவழிக் கல்வியின் அவசியத்தை பற்றி மிகப்பெரிய அறிஞர்கள் எல்லாம் கத்திக் கதறிக் கொண்டிருக்க ,ஜெயமோகன் மட்டும்  தமிழ் மொழி மட்டுமே  சொந்தமாக, அடையாளமாக இருக்கிற தமிழினம் ஆங்கிலம் படிக்க ரெகமண்ட் பண்ணுகிறார். ஆங்கில கல்வி படிக்க எதிர்ப்பு தெரிவிப்பது அடிப்படை வாதமாம். மரபணு அறிவியல் மூலமாக தாய்மொழிக் கல்வி பயலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி மாற்று மொழி பயிலும் குழந்தையை விட அதிகமாக உள்ளது என்பதை மயில்சாமி அண்ணாதுரை முதல் அப்துல் கலாம் வரை நிருபித்து விட்ட பிறகும் கூட ஜெயமோகனுக்கு ஆங்கில மோகம்.

 தாய்மொழியை இரண்டாவது மொழியாக கொள்வதினால்..தாய்மொழி கல்விக்கான மொழியாக இல்லாததினால் .. தாய்மொழி மீது குழந்தைகளுக்கு கவனம் இல்லையாம். அதனால்  தாய்மொழியை தகர டின்னுக்குள் அடைத்து தாய்லாந்திற்கு கடத்திடலாம் என்ற அளவிற்கு பிதற்றிக் கொண்டே போய் இறுதியில் ஒன்றை சொன்னது தான் சூப்பர் டூப்பர் ஹிட் .
அதாவது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழ் எழுத்துருவில்  எழுதுவதை விட…நேரடியாக ஆங்கிலத்திலேயே தமிழை எழுதினால் என்ன என்று கேட்கிறார் ஜெயமோகன். என்ன புரியலீயா.. அதாவது தமிழ் எழுத்துருவை ஆங்கிலத்தில் தானே தட்டச்சு செய்கிறீர்கள் ( amma inke vaa vaa.. என்று தட்டும் போது அம்மா இங்கே வா ..வா.. என்று வரும் இல்லீயா அதைத்தான் அண்ணாத்தே சொல்றார். ) அதற்கு பதில் இனி தமிழ் எழுத்துருவே தேவையில்லாமல், நேரடியாக amma inke vaa vaa  என்று படித்து புரிந்துக்கொள்ள வேண்டுமாம். இதுதான் அய்யாவின் பயங்கரமான பரிந்துரை..

ஏங்க அப்படி ஆங்கிலத்தில் அடித்து தமிழாய் எழுத்துரு வருவதில் உங்களுக்கென்ன தகராறு என்று எளிமையாய் கேட்டால்..இரு மொழி பயில்வதில் குழந்தைகளுக்கு குழப்பமாம் .அதனால் தாய்மொழியை ஆற்றோடு விட்டு விடலாம் என்கிறார். எங்கள் கும்பகோணத்தில் செளராஷ்டிரா என்கிற இன மக்கள் வாழ்கிறார்கள். பட்டு நெசவுதான் அவர்களின் தொழில். இன்னும் ஜெயமோகனுக்கு நெருக்கமாக சொல்வதென்றால் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் கூட அவ்வினம் தான். அவர்களின் தாய்மொழியான செளராஷ்டிரத்திற்கு பேச்சு வழக்கு உண்டு. ஆனால் எழுத்து வழக்கு  வரலாற்றின் போக்கில் இல்லாமல் போய் விட்டது. எனவே எழுத்து வழக்கில்லாத அவர்கள் தமிழில் தான் எழுதி, செளராஷ்டிரத்தில் பேசி வருகிறார்கள். சமீப காலத்தில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தங்கள் தாய்மொழியான செளராஷ்டிரத்திற்கு என  எழுத்து வகையை கண்டறிவது என. அதெற்கென ஒரு குழு அமைத்து செயல்பட துவங்கி உள்ளார்கள். இப்படி எழுத்து வகையே அழிந்த ஒரு மொழிக்கு எழுத்தை தேடி கண்டடைய முயல்கிறது செளராஷ்டிரா இனம். ஆனால் சங்கப்பாடல்களும், இலக்கியங்களும் செறிந்த செம்மொழியின் எழுத்துத்தன்மையை கணிணியில் அழிக்கும் ஆலோசனையைத்தான் ஜெயமோகன் தந்திருக்கிறார்.

கணிணியில் தமிழ் எழுத்துரு உண்டாக்க எத்தனையோ முயற்சிகள் வரலாற்றில் நடந்திருக்கின்றன. டாஸ் (DOS ) ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்கிற இயக்க முறைமையில் ஆரம்பகால கணிணிகள் இயங்கின என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட டாஸ் இயக்க முறைகளிலேயே 1980 களில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. படிப்படியாக டாஸ்,லினக்ஸ்,மேக் போன்ற இயக்க முறைமைகளில் தமிழ்மொழி மென்பொருட்கள் மூலமாக பயன்படுத்தப்பட்டு இறுதியாக விண்டோஸ் என்று அழைக்கப்படும் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மைக்ரோ சாட்டின் இயக்கமுறையில் தமிழ் எழுத்துரு பயன்படுத்தும் முறை ஏற்பட்டு இருக்கிறது. (இன்னும் விரிவான வரலாற்றிக்கு  கணித்தமிழின் காலடித்தடங்கள் –மு.சிவலிங்கம் காலச்சுவடு http://www.kalachuvadu.com/issue-76/kanithamizh02.htm)
எனவே இருக்கும் எழுத்துருவினை மேம்படுத்த எண்ணாமல் , அழித்து விட்டு ஆங்கிலத்திலேயே தமிழை தட்டச்சு செய்து..ஆங்கிலத்திலேயே படிக்க பரிந்துரைக்கும் ஜெயமோகனின் பிதற்றல் எடுத்த எடுப்பிலே விவாதிக்கும் தகுதியை இழக்கிறது.. ஆங்கில புத்தகங்கள் தான் விற்கிறது என்றால்…தாராளமாக ஜெயமோகன் ஆங்கிலத்தில் எழுதப் போகலாம். அவர் சொன்னது போல இங்கிலி தமிழில் ( தங்கிலீஷ் போல..) எழுதலாம். யாரும் தடுக்கவில்லை. தமிழாவது பிழைக்கும்.
இலக்கிய தகுதி இருப்பதாலேயே அனைத்திற்கும் ராஜகுருவாக கிரீடம் சூட்டிக் கொள்ள முயல்வது பேதைமை. இந்த பேதைமை பல முறைகளில் ஜெயமோகனிடம் எக்குத்தப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. இம்முறை கொஞ்சம் அதிகம்.
இந்த கட்டுரையின் முதற்பகுதியில் நிறைய ஆங்கிலச்சொற்கள், கலவைச்சொற்களை பயன்படுத்தியுள்ளேன். எதையும் சீரணிக்க..முழுங்க..ஆட்பட..ஆக்கிரமிக்க..இறுதியில் வெல்ல.. எம் தாய்மொழிக்கு தகுதி. உண்டென காட்டத்தான் அவை.



-மணி செந்தில்
advmsk1@gmail.com

www.manisenthil.com.

அண்ணன் கொளத்தூர் மணி கைது...


இன்று (02-11-2013) அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் கைது நடவடிக்கை. சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது திவிகவினர் பெட்ரோல் குண்டு வீசியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் இரவு 2 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் கைது வழக்கில் தொடர்பில்லாத எவரையும் தனது அதிகாரத்தின் மூலமாக இணைக்கலாம் பிணைக்கலாம் என்கிற தமிழக அரசின் அதிகார ஆணவத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஜெ தமிழின உணர்விற்கு எதிரியாக இருக்கிறார் என்கிற நிலையை விட தமிழின உணர்வோடு இயங்கும் தமிழர்கள் ஆகிய நாம் உதிரிகளாக இருக்கிறோம் என்பதுதான் சிந்திக்க வேண்டியது.. # எம் அண்ணனுக்கு மற்றொரு வழக்கு. சிறிய புன்னகையின் மூலம் இதையும் கடந்துச்செல்லும் அவரின் மன உறுதி எந்த அதிகார ஆணவத்திற்கு முன்னாலும் அடி பணியாது. புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா..

இசைப்பிரியா என்ற என் தங்கை...


கடந்த 1-11-2013 அன்று இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி சிங்கள பேரினவாத இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்த மற்றொரு கொடூரத்தை ஒளிபரப்பி உள்ளது. இசைப்பிரியா 2009 ல் நடந்த முள்ளிவாய்க்கால்  போரில் தான் இறந்தார் என்கின்ற சிங்களனின் கட்டுக்கதை இப்போது அம்பலமாகி இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=kjgX9FxR20g

எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் உதிரம் வர வைக்கிற காட்சியாக தொலைக்காட்சிகளில் ஓடியும் ஒருவருக்கும் உறைக்கவில்லை என்றால் இது இனம் அல்ல பிணம். சொந்த தங்கையை அம்மணமாக அடித்து இழுத்துச்செல்கிறான் எதிரி. இங்கே பட்டாசு கொளுத்திக்கொண்டும், புத்தாடை அணிந்துக் கொண்டும், தல படம் பார்த்துக்கொண்டும், டாஸ்மாக்கில் குடித்துக் கொண்டும் கும்மாளமாக இருக்கிறான் தமிழன். இப்படிப்பட்ட தன்மானற்ற ,தரங்கெட்ட இனத்தில் தான் நாமும் பிறந்திருக்கிறோம் என எண்ணும் போது வெட்கி தலைக்குனிகிறேன்.

இசைப்பிரியாவின் படத்தை அப்படியே போடாதீர்கள்  என்கிறார்கள்..வேறு  என்ன செய்ய வேண்டும்...? படத்தை காட்டினால் இந்த இனம் என்கிற பிணத்திற்கு உயிர் வர வில்லையே.. மரணங்களை காட்டித்தான் மரத்துப் போனவனை உசுப்ப வேண்டி இருக்கிறது. துயரங்களை காட்டித்தான் தூங்கிக் கொண்டிருப்பவனின் உறக்கத்தை கலைக்க வேண்டி இருக்கிறது. இத்தனையும் காட்டிய பிறகும் கூட எவனுக்கு இங்கே என்ன நடந்து விட்டது ?. அது என் தங்கை இசைப்பிரியாவின் நிர்வாணம் அல்ல. நான் வெட்கப்பட்டு மறைக்க. மனித தன்மை அற்றுப் போன பேரினவாதமொன்றின் கொடூரம். ரத்தமும், சதையுமாக அம்பலப்படுத்திதான் எமக்கான நீதியை கோருகிறோம். இது வியாபாரமோ,விளம்பரமோ அல்ல. மூடிக் கிடக்கும் உலகத்தின் கண்களை திறப்பதற்கான வெளிச்சம். பதிவிடும் அனைவருமே கலங்கிய கண்களோடும் ,வலி நிறைந்த நெஞ்சோடும் தான் பதிவு இடுகிறோம். வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் தங்கையின் உடை விலகினால் கூட சரியா உட்கார் என்று அறிவுறுத்துகிற இனத்தின் மகள் தான் நிர்வாணமாக்கப்பட்டு கொல்லப்படுகிறாள். எதிர்த்து கேட்டு நம் சகோதரர்கள் மாவீரர்களாய் விண்ணுக்கு போனார்கள்.நாம் மண்ணில் மானங்கெட்டவர்களாய்..அவமானத்தின் ...சாட்சிகளாய்...அடிமை தேசிய இனமாய் வாழ்கிறோம்..வாழ்கிறோம்


அனைவருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன். என்ன செய்யலாம் இதற்காக என்ற புத்தகம்.மதுரை பிரபாகரன் வெளியிட்டது. நூல் முழுக்க ரத்தமும், சதையுமான புகைப்படங்கள் தான்.. இது போன்ற பதிவுகளை வெளியிட வேறு எந்த காரணங்களும் இல்லை. இதெல்லாம் ஒரு வகையான நீதி கோரல் தான். நீதிமன்றத்தில் கூட தாக்கல் செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில் திட்டிய வார்த்தைகளை கூட அப்படியே சென்சார் செய்யாமல் தான் குறிப்பிடுவார்கள். காரணம் சம்பந்தப்பட்ட குற்றம் மிகச்சரியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் தான். நம் தங்கை நிர்வாணமாக கிடப்பது வேதனைதான். நமக்கு இழிவுதான். என்ன செய்வது.. ஆனால் அந்த படத்தை காட்டியும் நமக்கான , நம் தங்கைக்கான நீதி வழங்கப்பட்டு விட்டதா...இல்லையே... என் தங்கையை நிர்வாணமாக பார்க்க விரும்பிய கண்களுக்கு வேண்டுமானால் அது நிர்வாணம். ஆனால் எனக்கு என் தாய் தான் அங்கே வீழ்ந்து கிடக்கிறாள் . இதை விட எப்படி சொல்ல இயலும் என எனக்கு புரியவில்லை. நாமெல்லாம் நினைப்பது போன்ற கண்ணியமான..நேர்மையான ஒரு  சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோமா என்று நான் உணரவில்லை .

பசும்பொன் –பரமக்குடி –நாம் தமிழரின் நோக்கம் கலந்த நிலைப்பாடு.

அய்யா பசும்பொன் முத்துராமலிங்கனார் சிலைக்கு இடது சாரிகள் மரியாதை செய்கிறார்கள். அவரின் சிலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். திமுக,அதிமுக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் நேரடியாகவே கலந்துக் கொள்கின்றன. வருடா வருடம் பசும்பொன்னுக்கு வைகோ போகிறார். விசி மதுரை விமானநிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கனார் பெயர் சூட்டி வலியுறுத்தி தீர்மானம் இயற்றிய கதையும் உண்டு. இறந்து மண்ணாய் கரைந்தவர்கள் கொண்டிருந்த பகைமையை அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தி வரும் அரசியல் யாரையும் மீட்க அல்ல. அனைவரையும் புதைகுழியில் போட்டு அழிக்க. 

செத்துப் போன பகையில் தான் அரசியல் பிழைப்பு இருக்கிறது என்று நம்புபவர்களுக்கும், முரண்கள் கலையாமல் குடிசைகளும், உயிர்களும் கொளுத்தப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வேண்டுமானால் பசும்பொன்னும், பரமக்குடியும் வெவ்வேறானதாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியா இரு சக்திகள். அவர்களை நாங்கள் புறக்கணிக்காமல் அணுகுவதன் அடிப்படையே அவர்கள் பின்னால் நிற்கும் கோடிக்கணக்கான மக்களை தமிழ்த்தேசியத்தின் பாற் ஈர்க்கும் அரசியல் சார்ந்தது.

 மக்கள் திரள் மிக்க தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்கள் காலங்காலமாக முரண் பட்டு நிற்பதை தணிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையும் எங்களுக்கு உண்டு . எனவே தான் அந்த பொறுப்புணர்வோடு நாங்கள் இதை அணுகுகிறோம். கடந்த முறைகளில் நாங்கள் அவ்விடங்களுக்கு சென்ற போது மக்கள் சீமானைப் பார்த்தவுடன் பிரபாகரன் வாழ்க என்று முழக்கமிட்டது போன்ற சம்பவங்களும் நடந்தன. சமூகம் அவர்களை நேசிக்கிறது. சாதிக்குழுக்களாய் பிரிந்துக் கிடக்கிற தமிழ் இனத்தின் இரு பெரும் சமூகத்தினரை புறக்கணித்து விட்டு அல்லது புறம் தள்ளி விட்டு ..தனியே நின்று எதனையும் வெல்ல முடியாது . மக்களிடையே கலந்துதான் பொதுக்கருத்தொன்றை சரியான கருத்துக்களாக மாற்ற வேண்டும். இணையத்தில் இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் இருப்பவர்கள் அவர்களது தட்டச்சுப் பலகையை வேண்டுமானால் தட்டிக் கொண்டு இருக்கலாம். இவர்களை தாண்டிதான் சமூகம் இருக்கிறது. சொல்லப்போனால் இந்த வருடம் பசும்பொன்னிற்கோ,பரமக்குடிக்கோ சீமான் செல்ல கூட இல்லை. ஆனால் அய்யா முத்துராமலிங்கனாரின் குருபூசை நிகழ்வுகளுக்கு வருடாவருடம் தவறாமல் செல்பவர்களை நாசூக்காக விட்டு விட்டு அய்யா இமானுவேல் சேகரன் குருபூசை நிகழ்வில் இதுவரை எட்டி பார்க்காதவர்களை கூட கண்டுக் கொள்ளாமல் விடுத்து , நாம் தமிழர் மீது மட்டும் பாய்ந்து பாய்ந்து தாக்குவதன் அரசியல் காழ்ப்புணர்ச்சியானது.
இதன் பின்னால் எந்த தத்துவார்த்த அரசியல் வெங்காயங்களும் இல்லை. தனிப்பட்ட எரிச்சலும், வன்மமும்தான் இருக்கின்றன. பழமை வாதங்களுக்கு நியாயம் கற்பிப்பதல்ல எமது பணி. ஆனால் சமூகம் இவ்வாறாகத்தான் இருக்கிறது. இதை ஒரு நொடிக்குள் மாற்ற நாங்கள் மந்திரவாதிகள் அல்ல. எடுத்துக்காட்டாக பசும்பொன்னுக்கு செல்கிற யாரும் அய்யா இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்றதில்லை. எட்டிக்கூட பார்த்ததில்லை. ஆனால் நாங்கள் தான் இரு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்தோம். அது ஒரு விதமான நல்லிணக்க நடவடிக்கை. இது போன்ற நல்லிணக்கம் தான் அடிப்படையில் தேவைப்படும் மாற்றம். தமிழனுக்காக அரசியல் பேசப்படுவதும் , தமிழினத்திற்குள்ளாக இருக்கும் சாதிய முரண்கள் களையப்படுவதற்கு சாதகமான இது போன்ற விவாதப்பரப்புகள் ஏற்படுவதும் நாங்கள் மாற்றமாகவே பார்க்கிறோம். சாதியற்ற சமூகம் அடைய சாதியான மக்களைத்தானே  நாடவேண்டியிருக்கிறது..?

நாம் தமிழர் – விமர்சனங்களின் பின்னால் ..





எங்களை மதவாதிகளுக்கு பிடிக்காது..ஏனெனில் நாங்கள் இனவாதிகள்.
எங்களை சாதீயவாதிகள் சாடுகிறார்கள். ஏனெனில் தமிழர் என நாங்கள் கூடுவது அவர்களின் அரசியலை சாகடிக்க. ..முற்போக்காளர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் அவர்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு அருகில் ..நாங்கள் நிற்கிறோம். இந்தியர்கள் எம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள். ஏனெனில் இந்நாடு இந்தியா, தமிழ்நாடு என பிரிந்தே கிடக்கிறது. என்கிறோம். ஏற்கனவே இருந்த தமிழ்த்தேசியர்கள் எம்மை தேர்தல் பாதையில் செல்லும் பிழைப்பாளர்கள் என பிழை பேசுகிறார்கள்.ஏனெனில் தமிழ்த்தேசியம் அவர்களால் வெல்லமுடியாத தேர்தலிலும் வெல்லும்..அதிகாரத்தை அள்ளும்.. என நிற்கிறோம். திராவிடவாதிகள் எங்களை எதிரி என்கிறார்கள்.ஏனெனில் எம் இனத்தின் எதிரிதான் திராவிடவாதிகளாக இருக்கிறார்கள் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கிறார்கள் என்கிறார்கள். விமர்சிக்கவே அவர்தான் கற்றுத்தந்தார் என்கிறோம்.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறார்கள்.எம் இனத்திற்கு என்று ஒரு நாடு அடைவதை விட உன்னத அரசியல் உலகில் இல்லை என்கிறோம். விடுதலைப்புலிகளை மற்றவர்கள் ஆதரித்தார்கள். நாங்கள் தரித்தோம். பிரபாகரனை தலைவர் என்றார்கள். நாங்கள் எம் அண்ணன் என்றோம். காங்கிரசை மற்றவர்கள் எதிர்த்தார்கள். நாங்கள் எரித்தோம்...கருணாநிதி சொல்லிதான் கட்சி ஆரம்பித்தார்கள் என்றார்கள்.பின்னர் கட்சி ஆரம்பித்ததே கருணாநிதியை எதிர்க்கத்தான் என்றார்கள். ஜெயலலிதா ஆதரவில் இருக்கிறார்கள் என்றார்கள். ஜெ எதிரி கருணாநிதிக்கு கிடைக்கும் கூட்ட அனுமதி கூட எமக்கில்லை என்ற போது நழுவினார்கள். தாதுமணல் கொள்ளையை ஆதரிக்கிறார்கள் என்று கார்ட்டூன் வரைந்தார்கள். தாதுமணல் கொள்ளையை எதிர்த்து போராடும் ஒரே கட்சி நாங்கள் தானே என்று கேட்டால் கார்ட்டூன் வரையும் கரங்களுக்கு கண்கள் இல்லை என்கிறார்கள். இந்துத்துவாவின் ஆதரவாளர்கள் என அலறினார்கள் . மோடிக்கு பீடி பற்ற வைப்பவர்களை கேட்காமல் யாசின் மாலிக்கை தமிழ் மண்ணிற்கு அழைந்த வந்தவர்களை ஏன் அவதூறுகிறீர்கள் என்று கேட்டால் புத்தகம் போட்டவரில் இருந்து புண்(ஆகும் வரை )ணா (நா)க்கு விற்றவர் வரை மெளனித்தார்களே,,ஒழிய..உண்மையை உரைக்க ,பாராட்ட ஒருவரில்லை. அனைவரையும் ஒன்றாக பார்க்கிறார்கள் என உறுமுகிறார்கள். இனம் வென்றாக அனைவரை ஒன்றாக்க வேண்டும் என்கிறோம். முரண்களை களையாமல் இணையமுடியாது என இறுமுகிறார்கள். இணைந்தால் முரண் களையும் என முழங்குகிறோம். # விமர்சிக்கப்படுவதிலும்..உற்று நோக்கப்படுவதிவதிலும்..எதிர்க்கப்படுவதிலும் தான் உணர முடிகிறது எமது வலிமையையும்.. அவர்களது வலியையும். நாம் தமிழர்,

இயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகளில் மிதக்கும் விடுதலைச்சிறகு.




                 அது 2010 ஆம் வருடம் . சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டின் வெப்பநிலை பிரதேச வேலூர் நகரமே கொதித்திக் கொண்டிருந்தது . சிங்களர்களை எதிர்த்து பேசி மாபெரும், மகத்தான , கொடூரமான ,கொலைக்குற்றத்திற்கு (?) நிகரான குற்றத்தை இழைத்த காரணத்தினால், இந்திய தேசியத்திற்கு குந்தகம் ஏற்படுத்திய காரணத்தினால் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காண்பதற்காக நான் உட்பட பலரும் சிறை வாயிலின் முன் காத்திருந்தோம். அங்கு காத்திருந்த எவருக்கும் அந்நாளில் சீமானைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் என்ற காரணத்தினால் எனக்கு மட்டும் அனுமதி கிடைத்தது . நான் உள்ளே செல்ல நுழைய தயாரான போது அங்கு ஒரு கருப்பு நிற கார் அந்த வளாகத்தில் வந்து  நின்றது . அந்த காரில் தான் இனமான இயக்குனர் மணிவண்ணன் இருந்தார் . கருப்பு உடை அணிந்திருந்த அவர் எங்களை பார்த்து லேசான புன்னகை பூத்தாலும்  கடுமையாக களைப்புற்றும் சோர்வாகவும் தெரிந்தார். சமீப காலமாக அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என அனைவரும் அறிந்திருந்தோம்.  என்னை அருகே அழைத்த அவர் சிறையிலிருக்கும் சீமானை பார்க்க ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரினார்அவருடைய கோரிக்கையை பெற்றுக் கொண்டு நான் சிறைத்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளே சென்றேன்பல முறை கேட்டுக் கொண்ட பிறகும் கூட  சிறைத்துறை நிர்வாகம் அய்யா மணிவண்ணனுக்கு சீமானை சந்திக்க அனுமதி தர மறுத்து விட்டது. இத்தகவலை அவரிடம் தெரிவித்த போது அனுபவங்களும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களும் விளைவித்த சுருக்கங்கள் பல நிரம்பிய அவரது முகம் மேலும் வாட்டமடைந்தது. நடக்கவே சிரமப்பட்ட அவர் இறுதியாக சிறைத்துறை அதிகாரிகளை சந்திக்க நேரில் வந்தார். சிறைத்துறை அதிகாரியிடம் தழுதழுத்த குரலில் அவர் இறைஞ்சிய போது உண்மையில் அவரது கண்கள் கலங்கின. ஒரு எளிய தகப்பன் ,உணர்விற்காக போராடி சிறைப்பட்டு கிடக்கின்ற தன் மகனை பார்க்க கூட உங்கள் ஜனநாயக நாட்டில் அனுமதி இல்லையா என்று கேட்ட அவரது குரலில் ஆற்ற முடியாத வேதனையும், இயலாமையும் தொனித்தது .


அவர் கேட்ட முறையும் , அவரது இரக்கம் தொனிக்கும் குரலும் அவர் நடித்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட நெகிழ்ச்சி காட்சி ஒன்றை ஒத்திருந்தது.கண்கள் கலங்க அவர் நின்ற முறையில் எனக்கு திரையில் பார்த்த மாயாண்டிதான் நினைவுக்கு வந்தார் . நிழலிலும், நிஜத்திலும், திரையிலும் அசலாக வாழ்ந்த ஒரு மனிதனாக மணிவண்ணன் திகழ்ந்தார் . இறுதியாக சிறைத்துறை நிர்வாகம் பிடிவாதமாக அனுமதி மறுக்கவே தளர்ந்த நடையோடு தடுமாறியவாறே அவர் சிறையை விட்டு வெளியேறிய காட்சி அழியாத சோகச் சித்திரமாய் ஆன்மாவில் ஆழப் பதிந்துள்ளது .

நான் அதற்கு முன்னரும்,பின்னரும் நிறைய முறை மணிவண்ணன் அவர்களை சந்தித்து இருக்கிறேன். அவரது வீட்டில் தான் நாம் தமிழர் உருவாவதற்கான முன்னேற்பாடு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருந்தன . ஈழத்தின் அழிவு அவரை மனதளவில் வெகுவாக பாதித்து இருந்தது. தீவிர பெரியாரியவாதியான மணிவண்ணன் திராவிட இயக்கத்து அரசியல் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்த காரணம் நிகழ்கால அரசியல் நிலைகள் அவருக்கு கற்பித்த பாடங்களே என்றால் மிகையில்லை . திராவிட இயக்கத்து அரசியல் தலைவர்களின் சுயநல,பித்தலாட்ட அரசியல் நிலைப்பாடுகளால் தான் தமிழர்கள் தங்களது தாய் நிலத்தை இழந்தார்கள் என அவர் கருதினார் . தனது அரசியல் வாழ்க்கையை திமுக அனுதாபியாக தொடங்கிய அவர்  திமுக தலைவர் கருணாநிதி மீது ஒரு காலத்தில் மிகவும் பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர் . அன்றைய அதிமுக அரசினை சாடி பாலைவன ரோஜாக்கள் என்கிற இவரது திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிற அளவிற்கு அவர்கள் இருவருக்குமான உறவு இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுக தொடங்கிய போது வைகோவோடு திமுகவில் இருந்து விலகி, அவரது தீவிர விசுவாசிகளுள் ஒருவராக திகழ்ந்தார். வைகோ சாயலில் கதாநாயகனை வடிவமைத்து சத்யராஜை நடிக்க வைத்து திரைப்படம் எடுத்தார். மதிமுக விற்காக பத்திரிக்கை நடத்தினார் .பிறகு மதிமுகவில் இருந்தும் விலகி தனித்திருந்தார். திராவிட அரசியலில் தீவிர நாட்டம் கொண்டு தலைவர்களுக்காக உழைத்து, அவர்களது சுயநல அரசியலால் களைப்புற்று,  சோர்ந்துப் போன தொண்டனாய் அவர் விளங்கினார். இனவிடுதலை,மொழியுணர்வு என யார் மேடை போட்டு கூப்பிட்டாலும் ஓடிச்சென்று உணர்வை எள்ளலும்,நகைச்சுவையுமாக கொட்டி விட்டு வருகிற வேலையை தான் வாழ்நாள் முழுக்கச் செய்தார்.  
மிகச்சிறந்த வாசிப்பாளராக திகழ்ந்த அவர் செல்லுமிடங்களில் எல்லாம் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசித்துக் கொண்டிருக்கும் பழக்கமுடையவர் . தங்கும் விடுதிகளில் அவர் அறைக் கதவை திறந்து பார்க்கும் போதெல்லாம் கண்ணாடி அணிந்துக் கொண்டு ஏதாவது ஒரு புத்தகத்தை ஆழமாக படித்துக் கொண்டிருக்கிற காட்சியை நெருக்கமானவர்கள் அடிக்கடி கண்டிருப்பார்கள். புத்தகங்களைப் பற்றி நானும் அவரும் நிறைய உரையாடி இருக்கிறோம். அதுவே எங்கள் இருவரையும் மிக நெருக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தது .  கும்பகோணத்தில் அன்னைக் கல்லூரி விழாவிற்காக அவர் வந்திருந்த போது திடீரென்று லா..ராவின் அபிதா படித்துள்ளாயா என கேட்டார். நூறாவது நாள் என்கிற திகில் மசாலா படம் எடுத்த இயக்குனர்  தீவிர இலக்கியம் பேசுவது சற்று முரணாகவே எனக்கு தோன்றியது. பின்னர் நானே அவரிடம் ஒரு முறை இதைப்பற்றி அவரிடம் கேட்டுள்ளேன். நீங்கள் வாசிக்கிற புத்தகங்களும், எடுக்கிற திரைப்படங்களும் எதிர்க் கோட்டு முரணாக இருக்கிறதே என்று கேட்ட என்னை சற்றே கிண்டலாக பார்த்தார். 2 படம் எடுத்துப்பார் .தெரியும் என்றார் ஆழமாக. எனக்குத் தெரியும் . அவர் தயாரிப்பாளருக்கு நேர்மையாக இருக்க முயன்றார்.ஆனால் கண்டிப்பாக அவர் தன்னளவில் நிறைவு கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே.   ஏறக்குறைய தமிழின் அக்காலத்து சர்யலிச பாணியில் அமைந்த  நவீனத்திரைப்படங்களுள் ஒன்றானநிழல்கள்அவரது கதையில் உருவானது. அவரால் நிழல்களும் எழுத முடிந்தது. அமைதிப்படையும் எடுக்க முடிந்தது . அவரால் தான் முடியும்.

          திரைத்துறையில் இருக்கிற பலர் தாங்கள் படிப்பாளிகளாக, அறிவாளிகளாக காட்டிக் கொள்கிற காலத்தில் உண்மையில் வாசிப்பாளராக, நுண்ணறிவு கொண்டவராக இருந்த அவர் தன்னை மிக எளிமையாகவே சித்தரித்துக் கொண்டார் . மார்க்சியம் தொடங்கி பின்நவீனத்துவம்,நிகழ்கால இலக்கியம், சங்கப்பாடல்கள், நவீன கவிதைகள் என அவரது அறிவு விசாலமானது. பாரதியார் கவிதைகளை வரி மாறாமல் மனப்பாடம் செய்து வைத்திருந்தார் . சிற்றிதழ்களை தேடிப் பிடித்து வாசிக்கும் பழக்கமுடையவர். நூல் வெளியீட்டு விழாக்களில் புத்தகத்தை முழுமையாக படித்து விட்டு மேடை ஏறுபவர். உதவி கேட்டு பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களை படித்து விட்டு  அந்த முகவரிக்கு தொடர்ச்சியாக  பணம் அனுப்பும் பழக்கமுடையவர். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே சிறு நீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மார்க்சியவாதியான நெடுவாக்கோட்டை ராஜேந்திரன் குறித்து அப்போதைய நிறப்பிரிகை ஆசிரியர்களான அ.மார்க்ஸ், கோ.கேசவன் ஆகியோர் தினமணியில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து விட்டு பணம் அனுப்பி உதவி செய்தார் .

        தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டு பல்வேறு கூட்டங்களில் பேசினார் .தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரைப் போல தமிழனை தமிழின வரலாறு கண்டதில்லை என்பார். மேடைகளில் சீமான் தலைவர் பிரபாகரனை  பெருமைப் பொங்க விவரிக்கும் போது  அவரது முகம் பளீரிடும் . ஈழத்தைப் பற்றி பேசும் போதெல்லாம்  கண் கலங்கி உணர்ச்சிவயப்படும் உளவியலை அவர் கொண்டிருந்தார் . இறந்த பிறகு தன் உடலில் புலிக் கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என அறிவித்ததும் ஈழ விடுதலையின் மீது கொண்ட ஆழ்ந்த பற்றுறுதி காரணமாகத்தான் .

அவரது படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒரே சாயலில் திரைமொழி எழுத அவருக்கு பிடிக்காது . டிக் டிக் டிக்,நூறாவது நாள்,24 மணிநேரம் போன்ற மர்ம திகில் படங்கள் எடுத்த அவரால் அமைதிப்படை,பாலைவனரோஜாக்கள் போன்ற அரசியல் சமூகப்படங்களையும் மிக எளிமையாக எடுக்க முடிந்தது. கொடிப்பறக்குது என்கிற படத்தில் வில்லனாக நடித்து நடிகனாக தன் மற்றொரு பரிமாணத்தை தொடங்கினார். பிறகு குணச்சித்திர ,நகைச்சுவை நடிகராகவும் முத்திரைப் பதித்தார். முதல்வன்,சங்கமம்,உள்ளத்தை அள்ளித்தா,படையப்பா, அவ்வை சண்முகி,மாயாண்டி குடும்பத்தார் என அவர் நடித்த வெற்றிப்படங்களின் எண்ணிக்கை மிக நீண்டது .

தனது திரைப்பட வாழ்வில் 50 படங்களை இயக்கியும்,400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததால் மட்டுமே மணிவண்ணன் நினைவுக்கூரத்தக்கவரல்ல. மாறாக மொழி உணர்வும், இன உணர்வும் அற்றுப் போன திரைப்படத்துறையில் இன மானம் நேசிக்கிற ஒரு உணர்வாளராய்,ஈழ விடுதலை வேட்கையின் திரைத்துறை பிரதிநிதியாய் ,ஆழ்ந்த இலக்கிய வாசிப்பாளராய், அடுத்த மனிதனுக்கு உதவும் இரக்க இதயம் இருப்பவராய் ..அனைத்தையும் விட தமிழ்த் தேசிய கொள்கை பற்றாளனாய் விளங்கிய மணிவண்ணன் என்றென்றும்  நம் ஆன்மாவில் நின்று நினைவாய் சுரப்பவர்.

தான் ஈன்றெடுத்த மகனாகவே சீமானை நேசித்து பழகியதாகட்டும், தன் உடன்பிறந்த இணையாய் நடிகர் சத்யராஜை நினைத்து அவரின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்ததாகட்டும் ,அவருடன் பழகியவர்கள் யாருக்கும் அவருடைய இழப்பு எளிதானதல்ல.  எளிய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதாலேயே அவர் நாம் தமிழர் கட்சியில் மிக நெருக்கமாக இருந்தார் .கட்சி கட்டமைப்புக் கூட்டங்களில் நம்பிக்கையுடன் பங்கேற்று தனது கருத்தினை பதிவு செய்தார்.  ஈழ விடுதலை மட்டுமல்ல மரணத் தண்டனை ஒழிப்பு, இராசீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு தமிழரின் விடுதலை, முல்லை பெரியாற்று சிக்கல் போன்ற தமிழினம் சார்ந்த முக்கிய பிரச்சனைகளில் தனக்கென தெளிவான கொள்கையை அவர் கொண்டிருந்தார்.

நாம் தமிழர் அமைப்பினரால் அன்பொழுக அப்பா என்று அழைக்கப்படும் இனமான இயக்குனர் மணிவண்ணன் சரிந்துப் போன சகாப்தம் அல்ல... என்றென்றும் தனது இனமான உணர்ச்சியினால் விரிந்தெழுந்த ஒரு பறவையின் விடுதலைப் பெற்ற சிறகு.

அவரது முடிவும் கூட அவரது முதற்படத்தின் தலைப்பை நினைவூட்டுகிறது.

கோபுரங்கள் சாய்வதில்லை.

-மணி செந்தில்.


                        
                                            

கொள்கையற்ற அரசியலின் கோமாளிகளும் – காணச்சகிக்காத காட்சிகளும் –


11-06-2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தேமுதிக வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி பேசும் போது தமிழக முதல்வரை புரட்சித்தலைவி என்று பெருமைப் பொங்க விளித்தார். இதில் அதிர்ச்சியடைவோ, ஆச்சர்யம் கொள்ளவோ ஏதுமில்லை என்றாலும் கூட காட்சித்தாவும் அல்லது தாவ முயலும் ஒரு நபர் கொள்ளும் தயக்கத்தின் அளவு கூட  தற்போது சற்றும் இல்லாமல் போய் விட்டதுதான் வேதனை அளிக்கிறது. தொகுதி பிரச்சனைக்காகத்தான் முதல்வரை சந்தித்தேன் என்று கூறும் சாந்தியிடம் அவருக்கு எளிதாக கிடைத்த முதல்வர் தரிசனம்  அதே தொகுதிப் பிரச்சனைக்களுக்காக ஏற்கனவே முதல்வரை சந்திக்க மனு கொடுத்து காத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் அதன் சட்டமன்ற கொறடா சந்திரக்குமாருக்கும் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் இருக்காது.  இப்போது தேமுதிகவிற்கு நிகழ்கிற இந்த சறுக்கல்களுக்கு அது கொண்டிருக்கிற கொள்கையற்ற அரசியல் தான் மிக முக்கிய காரணமாக நம்மால் உணர முடிகிறது.

கொள்கை சார்ந்து உருவாகிற எந்த அமைப்பும்  உளவியல் ரீதியாக இறுக்கமாக உருவாகிறது. கட்சித் தலைமையின் அறிக்கைகளும், ஆவணங்களும், பொறுப்பாளர்களின் உரைகளும் அந்த கொள்கை சார்ந்து அதன் ஊழியரை மேலும் இறுக்கமடைய செய்கிறது.  ஒரு அரசியல் கட்சியின் தோற்றம் நிகழ்ந்தவுடன் அதன் திசைவழி குறித்த பார்வை பிறக்கிறது. அரிதான சில சமயங்களின் வரலாற்றின் போக்கும் ஒரு அரசியல் கட்சியின் திசை வழியை தீர்மானிக்கிறது. அரசியல் திசைவழி தீர்மானிக்கப்பட்டதும் கட்சி ஊழியர்கள் ஒரு தீர்க்கமான அம்சம் ஆகின்றார்கள். அவர்களுக்கு திசைவழி குறித்து பயிற்றுவிப்பதும் ஒரு அரசியல் கட்சியின் போராட்டக் கடமை என்கிறார் மாவோ.
   
ஆனால் தேமுதிகவின் பிறப்பும், திசைவழியும் கொள்கை சார்ந்து விளைந்தவை அல்ல.அதன் தொண்டர்களும் கொள்கை அரசியலால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல. ரசிக மனப்பான்மையிலும், திமுக, அதிமுக என்கிற இரு பெரும் கட்சிகளில் இடம் கிடைக்காத அனாதைகளாலும் உருவானது தேமுதிக. கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படை அம்சமாக கொண்ட திராவிட இயக்க அமைப்பொன்றின் முதல் பூசை திருப்பதியில் நடந்தது என்பதுதான்  தேமுதிகவின் கடந்த கால வரலாறு. அதனால் தான் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ரேசன் பொருட்களை வீடு தேடி வந்து கொடுப்பது என்று விஜயகாந்தால் சிரிக்காமல் பதிலளிக்க முடிந்தது. அதனால் தான் இவரை புரட்சிக் கலைஞர் கேப்டன் என்று புல்லரித்து உச்சரித்த சாந்தியால் அடுத்த நொடியே ஜெயலலிதாவை புரட்சித்தலைவி அம்மா என பூபாளம் பாட முடிகிறது.

தேமுதிக நிகழ்த்தும் அரசியல் காட்சிகள் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை விட கோமாளித்தனமானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பெயர் மாற்றி தடுமாறி உச்சரித்த விஜயகாந்திடம் பெயரை சரியாக சொல்ல சொன்ன கட்சி வேட்பாளர் அடி வாங்குகிறார். விமான நிலையத்தில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் நீயா எனக்கு சம்பளம் தர்ற..? என கேட்டு அடிக்க பாய்ந்ததும், சட்டமன்றத்தில் நாக்கைத் துறுத்தி காட்டியதும் ....எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. என்ன..நாமெல்லாம் மக்களாய் இருக்க ..இவர்கள் எல்லாம் தலைவர்களாக இருக்கிறார்களே என்கிற வேதனைதான் இதயத்தை அறுத்துக் கொண்டே இருக்கிறது.  

திராவிடக் கட்சிகள் தமிழக அரசியலின் மீது ஏற்படுத்தியுள்ள கடுமையான தாக்கம் அதன் அற விழுமியங்களை பாதித்து இருக்கிறது. தன்னைப் புகழும் ஒரு கட்சிக்காரரை காமராசர் சட்டையை பிடித்து அமர வைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தை தனது பாராட்டு மன்றமாக பாவிக்கிறார். 90 கவிஞர்களை புகழ வைத்து மகிழ்ச்சிக் கொள்ளும் கருணாநிதியின் உளவியல்தான்  ஜெயலலிதாவிடமும் இருக்கிறது. சாராயக் கடை திறந்து முதல் சாந்தி கட்சி மாறுவது வரை திராவிடக் கட்சிகளின் காட்சிகள் எதுவும் காண சகிக்காதவை. சென்ற ஆட்சியில் கருணாநிதி மதிமுகவை  உடைப்பதில் குறியாக இருந்தார். இது அம்மா நேரம். கெட்ட நேரம் தேமுதிகவிற்கு.
கொள்கை சார்ந்து இயங்கும் ஒரு அரசியல் அமைப்பில் தேமுதிக வில் நிகழ்கிற காட்சிகள் போல நிகழ்வது அரிதான ஒன்றாக இருக்கிறது. கொள்கை சார்ந்து இயங்கும் அமைப்பில் துரோகங்கள் நடக்கலாம். ஆனால் தேமுதிகவில் நடப்பது போல கோமாளித்தனங்கள் நடக்காது. தேமுதிகவின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமிழக முதல்வரை சந்தித்து உள்ளனர். தொகுதிப் பிரச்சனைகளுக்காகத்தான் அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்கிறார்கள் என்றால்.. முதல்வர் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையாவது தொகுதிப் பிரச்சனைக்காக சந்தித்து இருக்கிறரா..?. அல்லது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் தொகுதி பிரச்சனையே இல்லையா..?

 திராவிடக் கட்சிகளின் இரு பெரும் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு அரசியல் வெளியை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலை காசு போட்டு காசு எடுக்கும் கம்பெனியாய் கலர் மாற்றியவர் கருணாநிதி. உள்ளூர் கம்பெனியை உலக கார்ப்ரேட் கம்பெனியாக மாற்றியவர் ஜெயலலிதா. இதன் நடுவே குண்டுச்சட்டிக்குள் எம்ஜிஆர் குதிரை ஓட்ட வந்தவர் விஜயகாந்த். கறுப்பு எம்ஜிஆரின் குண்டுச்சட்டி இன்று உடைந்து கிடைக்கிறது.

முடிவாய் ஒன்று தோன்றுகிறது.

இங்கே..
யாருக்கும் வெட்கமில்லை.


-மணி செந்தில்.

சாதீயத்தினை தகர்க்கும் தமிழ்த்தேசியம்.-மணி செந்தில




 தீர்மானகரமானது எதுவெனில் நாளும் முதிர்ந்து வரும் போராட்ட மன உறுதி, நடக்கின்ற இழிவுகளுக்கும் ,அழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிகர மாறுதல் தேவை எனும் உணர்வு, மற்றும் அது இயலும் என்னும் நிச்சயப்பாடு இவை தான் “- ரெஜி டெப்ரே (புரட்சிக்குள் புரட்சி  என்ற நூலிருந்து...)

முள்ளிவாய்க்கால் அவலத்தில் பெருகிய தமிழனின் குருதியின் ஈரம் தமிழக வீதிகளில் மூண்டெழுந்த இளையோர்களின் விழிகளில் வன்மமாய் படர்ந்ததுகடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்திற்குள் ஆழமாய் வேரூன்றி படர்ந்திருக்கும் சாதீய முரண்களை முற்றிலும் கடந்து விட்டு தமிழர்களாய் கரம் கோர்த்து தமிழக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் தம் இனத்திற்காக களத்தில் நின்றது வரலாற்றுப் பெருமிதம் வாய்ந்ததுஉண்மையில் சாதிகள் அற்ற இன ஓர்மை உடைய ஒரு போராட்ட வெளியை தமிழக அனைத்துக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினார்கள்எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தமிழக மாணவர்களின் கரங்களில் புகைப்படமாகஉடைகளில் போராட்ட அடையாளமாக,உரத்து முழங்கிய முழக்கங்களில் துளிர்த்த ஆவேசமாய் மாறி நின்றார்.தலைவரின் மகன் பாலச்சந்திரனின் உணர்வுகளை சுமந்த விழிகள் தமிழக இளையோர்களை இயக்கும் சக்தியாக மாறிப் போயின..

  ஆனால் இக்காட்சிகள் கடந்த சில நாட்களாக மாறியிருக்கின்றன.. தமிழ்த் தேசிய இனம் தனது விடுதலைப்பாதையில் விரைந்து பயணிக்க தடையாக சாதீயம் என்கிற சமூக முரணே முதன்மையான காரணியாக விளங்குகிறது என்பதை தான் அண்மையில் அதிகரித்திருக்கும் சாதீய மோதல்கள் காட்டுகின்றன. தமிழர் என்கிற தேசிய இனத்திற்குள்ளாக இரண்டு சாதிகளுக்குள் நிகழும் முரண் ஒட்டு மொத்த இனத்தின் எழுச்சியை மட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் வீழ்த்தவும் முயல்கிறது.  மேலும் இவ்வாறு நிகழும் சாதீய மோதல்கள் தமிழ்த்தேசிய உணர்ச்சியின் தோல்வியாக விவரிக்கப்படுவதன் அரசியலும் மிக நுட்பமானது. இரண்டு சாதிகளுக்கு இடையே நிகழும் மோதல்களால் கண்டிப்பாக பலன் அடைகிற பாத்திரத்தினை தமிழ்த்தேசியர்கள் வகிக்கவில்லை என்பது உண்மை என்பதோடு சாதீய உணர்வை தூண்டி மோதல்களை உருவாக்கி அதனால் ஏற்படும் அதிர்வுகளால் தன் அரசியல் பிழைப்பு வாத இருப்பினை தக்க வைத்துக்கொள்ள சாதீய அரசியல் கட்சிகளும், சாதீய சங்கங்களும் முயல்கின்றன என்பதும் நம் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தியாக இருக்கின்றன. இன்னும் ஆழமாக கவனித்தால் சாதீய சங்கங்களும், அதனைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் சமூகத்தில் வாழ்வதற்கான சக்தியை இதுப் போன்ற சாதீய மோதல்கள் மூலம் தக்க வைக்கின்றன. 

தம் இனத்திற்காக சாதிகள் கடந்து சாதிக்க துடித்த ஒரு இனத்தின் மக்கள் தங்கள் சாதிகளுக்காக போர்க் கோலம் பூண்டு நிற்கிறார்கள்.  மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவினை ஒட்டி மரக்காணம் உள்ளீட்ட பகுதிகளில்  நிகழ்ந்த சாதீய மோதல்கள் தமிழக மண்ணை அமைதியற்ற நிலமாக மாற்றி இருக்கின்றனஅங்கு ஆண்ட சாதி என்றும், உயர்ந்த சாதி என்றும் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் உறுதியாக கண்டிக்கத்தக்கது. சகத் தமிழனை இழிவாக நிறுவ முயலும் ஆதிக்க சாதி உளவியல் தமிழ்த்தேசிய ஒர்மைக்கு எதிரானது.  ஒன்று பட்ட இனத்திற்குள் குண்டு வைக்கின்ற வேலையை செய்கின்றன. அறிவியல் வளர்ச்சி விண்ணைத் தொட்ட இக்காலத்திலும் ஆதிக்க சாதி உணர்வினால் சக மனிதனை இழிவாக நடத்துவதும், தரக்குறைவாக நினைப்பதும் நாம் பேண விரும்பும் தமிழிய பெருமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.இந்நிலை இழிநிலையிலும் இழிநிலையானது.

தமிழக மண்ணை தாண்டினால் சபரிமலையில் தமிழன் முகத்தில் வெந்நீரை ஊற்றி துரத்துகிறான் கன்னடன். ஈழத்தில் கொத்து கொத்தாய் தமிழர்களை கொன்று குவித்தான் சிங்களன். தமிழனின் வயிற்றில் அடிக்க முல்லை பெரியாறு அணையை உடைக்க காலம் கணித்துக் கொண்டிருக்கிறான் மலையாளி. கூடங்குளம் அணு உலை திறந்து தமிழ்நாட்டினை சுடுகாடாக்க முடிவு செய்து விட்டான் வடவன். மூன்று தமிழர்களின் கழுத்தில் இறுகிக் கொண்டிருக்கும் தூக்குக்கயிறு என்று உயிர் பறிக்குமோ தெரியவில்லை. தமிழர்களை வீழ்த்த, அழிக்க எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து..ஒத்த அலை வரிசையில் ஒன்றாக நிற்கும் போது தமிழன் தனக்குள்ளே சாதியாக அடித்துக் கொண்டு சாகின்றான்.  இவன் ஆண்ட சாதி, இவன் அடங்கிய சாதி என்று கணக்கு வைத்தா தமிழனின் முகத்தில் வெந்நீர் ஊற்றுகிறான் கன்னடன்..? இசைப்பிரியா இந்த சாதியவள் என்று அடையாளம் கண்டு அழித்தான் சிங்களன்..? . எதிரிகள் தெளிவாக இருக்கின்றார்கள். எனதருமை தமிழினம் இழிவாக கிடக்கின்றது.

  சாதியின் பெருமிதத்தினை நிறுவி பராமரிக்க லட்சக்கணக்கில்  மக்களை திரட்ட முடிந்த ஒரு கட்சியால் ..லட்சக்கணக்கில் நம் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட போது பலன்  தரக்கூடிய முன்னெடுப்புகளை ஏன் எடுக்க முடியவில்லை என்கிற வினாவிற்கு இங்கு யாரிடத்திலும் பதிலில்லை. சகத் தமிழனின் குடிசைகளை கொளுத்துவதில்..சொத்துக்களை சூறையாடுவதில், கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதில் இவர்களுக்குள்ள அக்கறையை , ஆர்வத்தினை என்றாவது இந்த இனம் செழிக்க,வளர காட்டி இருக்கிறார்களா என்றால்..இல்லை.

பெருமைகள் பல வாய்ந்த தமிழ் மரபில் சாதிக்கான இடம் சரித்திரத்தில் எங்கும் இல்லை.வந்தேறி மரபான ஆர்ய வருணாசிரம தத்துவத்தால் தொழில் பிரிவுகளாக வேர்விட்ட சாதீயம் இன்று தமிழ்ச் சமூகத்தின் நிரந்தர பிரிவுகளாக மாற்றப்பட்டதன் விளைவே இன்றளவும் சகத்தமிழனாலேயே தமிழனின் குருதி தமிழக மண்ணில் சிந்துகிறது. 50 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக தோன்றிய திராவிட தத்துவம் வழி வந்த ஆட்சியாளர்கள் தனது அரசியல் லாபங்களுக்காக சாதீய பிளவுகளை தமிழக மண்ணில் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சாதி கடந்து தமிழர்கள் ஒன்று பட்டு நின்றால் தெலுங்கனும்,கன்னடனும் திராவிடத்தின் பெயரினால் இங்கே அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதில் திராவிட அரசியலாளர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். சாதி என்கிற பிளவு இருந்தால்தான் தங்கள் பிழைப்பும் ஒடும் என்பதில் சாதீய சங்கத்தினரும், அதனைச்சார்ந்த அரசியல் கட்சியினரும் கவனமாக இருக்கின்றார்கள். எப்போதெல்லாம் இந்த இனம் ஒன்று பட்டு வீதிக்கு வருகின்றதோ..அப்போதெல்லாம் சாதீய பெரு நெருப்பினை ஊதி ஊழித்தீயாக மாற்றுகின்ற வேலையை திட்டமிட்டு சாதீய அரசியல்வாதிகள் செய்கின்றனர். தமிழர்களாக இச்சமூகம் திரண்டு விடக்கூடாது என்கிற பணியை சாதீயவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதில் எந்த பங்கும் வகித்திராத தமிழ்த்தேசியர்கள் மேல் தேவையில்லாமல் விமர்சனங்களை சிலர் எழுப்புவது உள்நோக்கமுடைய அரசியல் நடவடிக்கையே.

தமிழர் என்பது வெறும் இனத்தை சுட்டும் ஒரு சொல்லல்ல. மாறாக அது ஒரு பிரகடனம். தமிழன் என்று தன்னை அறிவிக்கிறவன் சுய சாதி மறுப்பாளானாக, மத மறுப்பாளானாக  விளங்குகிறான். அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உளவியலை தமிழ்த்தேசிய உணர்வே சாத்தியப்படுத்துகிறது.தமிழர்களில் யாரும் உயர்ந்தோரும் இல்லை. தாழ்ந்தோரும் இல்லை. இந்த அளவுக்கோலை மீறி யோசிக்கும் யாரும் தமிழர்களே...ஏன்..மனிதர்களே இல்லை.  

ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக, ஆதிக்கச் சாதி உளவியலுக்கு எதிராக களத்தில் முதன்மையாக நிற்பவர்கள் தமிழ்த்தேசியர்களே. சாதீய முரண்களால் மிகுந்த பின்னடைவினை சந்திப்பது தாம் அனைவரும் ஒரினம் என்ற உளவியல். இந்த உளவியல்தான் தமிழ்த்தேசிய உணர்வின் அடிப்படையாக இருக்கிறது. மாவீரன் முத்துக்குமாரும், தங்கை செங்கொடியும், அண்ணன் அப்துல் ரவூப்பூம் சுய சாதி ,மத உணர்ச்சியை தகர்த்து இனம் வாழ விழுந்த விதைகளாய் வரலாற்றில் சாட்சிகளாய் .. தமிழ்த்தேசியர்களின் இலக்கணமாய். காணக்கிடைக்கிறார்கள். சாதி என்கிற உணர்வினை  உருத்தெரியாமல் அழித்தொழிக்க வேண்டுமானால் நாம் தமிழர் என்கிற உணர்வினை ஒவ்வொரு தமிழனும் பெற்றாக வேண்டும்.இது ஒன்றே கடந்த வரலாறு கற்பித்த விளைச்சலாக இருக்கிறது . தர்மபுரி,மரக்காணத்தில்,பாப்பாபட்டி ,கீரிப்பட்டி, திண்ணியத்தில்  எரிந்த குடிசைகளும்.. அடைந்த இழிவுகளும்..ஈழத்தில்  எரிந்த உடல்களும்..அடைந்த அழிவுகளும் வெவ்வேறானவை அல்ல.. எரித்த சிங்களனும்..இவர்களும்.. வெவ்வேறானவர்கள் அல்ல என்ற புரிதலோடு சாதீயத் தகர்ப்பினையும் தனது இன விடுதலைக்கு ஒப்பான இலட்சியமாய் சுமந்து...பயணிக்கும் நாம் தமிழர்களின் அரசியல் பாதை உண்மையில் புரட்சிக்கரமானது. அதுவே சாதீயத்தை ஒழிக்கும் கருவியை சாத்தியப்படுத்துவது.

”சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்று வரும் சண்டையுலகிதனை
ஊதையினில் துரும்பு போல் அலைக்கழிப்போம்: பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்” –பாவேந்தர் பாரதிதாசனார்.

 நாம்  தமிழர்.

பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்





        பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே  கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம்  சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும்  கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து  வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி எரியும். உறக்கமும், விழிப்புமாக அலைகழித்த என் கனவின் நினைவில்.. பாலச்சந்திரன் மார்பின் மீது எதிரியின் குண்டுகள் பாய்ந்தன. அந்த ஒலியில்,வலியில்  என்னருகே படுத்திருந்த என் மகன் பகலவன் ஓங்காரமாய் அழத் துவங்கினான். திடுக்கிட்டு விழித்த என் கழுத்தின் ஓரத்தின் வன்ம விலங்கொன்றின் பற்களின் தடம் ரத்தமாய் கசிந்து கொண்டிருந்தது.  என் அருகே படுத்திருக்கும் என் மகனும், தாய்நிலத்தில் வீழ்ந்திருக்கும் பாலச்சந்திரனும் வெவ்வேறானவர்கள் அல்ல என என் ஆதி அறிவு உணர்கிறது. மகனை இழந்த வலியில் தளர்ந்த தந்தையாய் கணிணி திரை முன் அமர்கிறேன்.

  எனக்கு முன்னால் ஒளி விடும் அந்த கணிணி திரையில் பாலச்சந்திரன் அசையாமல் அமர்ந்திருக்கிறான். சற்றே சரிந்து அமர்ந்திருக்கும் அவனது முறை அவனது தந்தையை நினைவுப் படுத்துகிறது.  அவனது விழிகளில் இருந்து அந்த நொடியில்..அவன் விழிகளின் எதிரே நிகழ்ந்த, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நான் அப்படியே வாசிக்க முயன்று தோற்கிறேன். சலனமற்ற விழிகளை அவன் அவனின் தந்தையிடமிருந்து பெற்றுள்ளான். புகைப்படங்களில் பார்க்கும் போது கூட துளியளவும் வஞ்சகம் பேசாத நேர்மையாளனின் கண்கள் அவை . களங்கமற்ற அந்த விழிகள் உண்டு,படுத்து,முயங்கி,வாழும் சராசரி மானுட இனத்திற்கு உரித்தானவை அல்ல. மாறாக  மானுட பாவத்தை செரித்து தன் உடலின் குருதியாய் கசிய விட்ட தேவனுக்கு உரித்தானவை.  

         வரலாற்றில் எப்போதாவது தோன்றும்  ஒரு மகத்தான மன்னனுக்கு மகனாக பிறந்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை அவன். ஒரு தேசிய இனத்தின் மரபியல் அடையாளமாக அந்த குடும்பம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கு பாலச்சந்திரன் சாட்சியாக இருக்கிறான் . வரலாற்றின் நதி முடிவிலியாக கால ,தேச,தூரங்களின் கரைகளை தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தன் பயணத்தில் இப்படிப்பட்ட ஒரு இளவரசனை சந்தித்ததே இல்லை.  வீழ்த்தப்பட்ட நிலமொன்றின் மன்னனாக இருக்கும் அவனது தந்தை ஒரு நொடி நினைத்திருந்தால்.. தன் மகன்களை,தன் மகளை,தன் மனைவியை பாதுகாப்பான தேசமொன்றில்  அரண்மனை ,பணியாளர்களோடு ஆடம்பரமாக வாழ வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படியல்ல. உயிருடன் உருக்கும் போதே உதட்டிற்கு அருகேயே மரணத்தை தொங்கப் போட்டு திரிந்த மனிதர் அவர். மரணத்தையும், வாழ்வினையும் செய்கின்ற செயல்களை வைத்து எடை போடும் உளவியல் அவருக்கானது.  அவர் மரபு சிதையாத ஆதித் தமிழனின் நேரடி பிள்ளை. தமிழ் தொல்குடியின் ஆதித் தொழிலான விவசாயத்தினை போலவே விடுதலையையும் விதைத்து அறுத்து விடலாம் எண்ணினார் அவர். அலை அலையாய் விதைகளை நிலமெங்கும் வீசித் திரிந்த அவரது கரங்கள் ஒரு போதும் சோர்ந்ததே இல்லை. தாய்ப் பெரு நிலத்தில் முளை விட்ட விடுதலை பசுமையை மூர்க்கமாய் பேரினவாத வல்லூறுகள் தாக்க பறந்து வருகையில் தாய்ப் பறவையாய் தன் இறகை விரித்து காத்து நின்றார் அவர். விதைகள் தீர்ந்த நாள் ஒன்றில் இறுதியாய் அவர் தேர்ந்தெடுத்து தூவியது தன் மகனை..

விதையாய் விழுந்து கிடந்த மகனின் சற்று திறந்திருந்த விழிகளில் ..சிறுவயதில் அவனை தூக்கி கொண்டாடிய தளபதிகள்,வீரர்கள் ஆகியோர் மங்கலான தோற்றத்தில் தெரிந்திருக்கவும் கூடும்.

ஒரு இளவரசனாக பிறந்த அவன் எப்போதும் இளவரசனாக வாழ்ந்ததில்லை.மண்ணின் விடுதலை ஒன்றே மகத்தான இலக்காக நினைத்து இயங்கும் அவனது தந்தை மிகவும் கறாரானவர்.  வயதான தன் தாய் தந்தையரை பொதுமக்களோடு மக்களாய் அனுப்பி வைத்தவர் . தனது மூத்த மகனை போர்க்களத்தில் நிற்க வைத்து சகப் போராளிகளோடு சாவினை தழுவச் சொன்னவர். தன் மகளை சீருடை அணிய வைத்து படையணியில் முன்னணியில் நிறுத்தியவர். நம் நிலம் போல மூத்த மகனுக்கு மத்தியில் பதவி,இளைய மகனுக்கு மாநிலத்தில் பதவி ,மகளுக்கு பாராளுமன்றத்தில் பதவி என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவர்களில் யாருமே இல்லை. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணத்தை விட நமக்கு அதிர்ச்சியூட்டுவது தன் குடும்பம்,தன் மகன்,மகள் குறித்து அவனின் தந்தை கொண்டிருந்த மதிப்பீடுகளே. கண் மூடுவதற்கு முன் தன் மகனுக்கு அரசியல் அரியணையில் முடி சூட்டி விட வேண்டும் என்கிற கணக்குகளும்,பிணக்குகளும் மலிந்திருக்கின்ற மண்ணில் இருக்கின்ற நம்மால்  விடுதலை வேட்கையின் பால் எழுந்து விட்ட ஆழமான பற்றுறுதியை புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

பாலச்சந்திரனின் மரணத்தை வீரமரணம் என்றெல்லாம் வார்த்தை மெழுகு பூசி செழுமைப்படுத்திக் கொள்ள என்னால் முடியவில்லை. அந்த பாலகனின் கொலை இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை உரத்து அறிவிக்கிறது. அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு சிறுவனை கொலை  செய்யும் உளவியல் உலவும் உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்கிற செய்தி. பார்த்த உடனேயே அள்ளிக் கொள்ள தோணும் அச்சிறுவனின் மென்மையான உடலை துளைக்க பேரினவாத பயங்கரவாதத்திற்கு மட்டுமே வலு இருக்க இயலும்.  விடுதலை கோரி குருதி தோய்க்கும் அந்த ஈரப் பெரு நிலத்திற்கு மட்டுமே பாலச்சந்திரன்களை உருவாக்க,சுமக்க,விதைக்க,முளைக்க வைக்க இயலும்.
இதையெல்லாம் காண உலகிற்கு எத்தனை மனவலிமை உண்டோ, அதே  சதவீதத்தில் ஒரு தேசிய இனமே ஆழ்மன வன்மத்தோடு அமைதியாய் காத்திருக்கிறது. எந்த எதிரி என் பிள்ளையை கொன்றானோ, அந்த எதிரியை எம் கண் முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து உபசரிக்கும் இந்தியாவின் இரண்டக எள்ளலையும் பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது. என்னடா முடியும் உங்களால் என எதிரி உதிர்க்கும் எகத்தாள அறைக்கூவலை கனவிலும் செவியெடுத்துக் கொண்டு கவனமாக காத்திருக்கிறது. கண்களில் வெடிக்கும் அழுகையை கழுத்திலேயே தேக்கி ..கண் சிவந்து காத்திருக்கிறது...காத்திருக்கிறது...கணக்குத் தீர்க்கும் கவனத்தோடு. மெளனமாக..

கனன்று எரியும் கண்களில்
நிழலாய் நிற்கிறாய்..
வடித்தெடுத்த  வார்த்தைகளில்
எதிரிகளின் மீது
உமிழும் வன்மமாய் மிஞ்சுகிறாய்..
பால்யம் சுமக்கும் உன் விழிகளை
ஒத்த குழந்தைகள் மீண்டும்
இம் மண்ணில் பிறக்க கூடும்..
அவற்றில் ஏதேனும் ஒன்று
ஏக்கமாய் என்னை பார்க்கும்
தருணத்தில் உன்னை
என்னுள் தருவித்து கொள்வேனடா..
என் மகனே...பாலச்சந்திரா..

-மணி செந்தில்