பரமக்குடி படுகொலைகள் - அரசதிகார ஆதிக்கத்தின் கொடூர முகம்.



வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்த போது ஒரு விசித்திரமான காட்சியை கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கார், காமராசர் ,அண்ணா, தந்தை பெரியார் பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார்,எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் கல்லான சிலைகள் மட்டும் அல்ல அவை என யாரும் எளிதில் புரிந்துக் கொள்ளலாம். அந்த கற்களால் ஆன சிலைகளில் இருந்துதான் அதிகாரத்திற்கான வேட்கையும், அதற்கான அரசியலும் பிறக்கின்றன.சிலைகளை திறப்பதும், பிறகு அவற்றையே அவமதிப்பதும், அதன் வாயிலாக கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரை பிடுங்குவதுமாக பல்வேறு வேடங்களில் உலா வருகிறது சாதீயத்தின் இழிவான அரசியல். இறந்துப் போன தலைவர்களுக்கு இடையேயான அந்தக்காலக்கட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பத்தினை நாளது தேதி வரை பொத்தி பொத்தி பாதுகாப்பதில் தான் இருக்கிறது தனிப்பட்ட சிலருக்கான சில்லறை அரசியல். சாதீயத்தின் கூர் முனைகளை தீட்டாமலிருக்க யாருக்கும் விருப்பமில்லை. சாதீயத்தின் பேரில் நடக்கும் அரசியலையும், கிடைக்கும் அதிகாரங்களையும் எந்த சாதீயத்தலைவரும் இழக்க விரும்புவதில்லை. சாதீய கட்டுமானங்களின் அடிப்படையாக திகழும் சுயசாதி பெருமிதம் என்ற உணர்வே சாதீயக் கட்சிகளின் மூலதனங்களாக விளங்குகின்றன. அரச அதிகாரத்தில் இருப்பவர்களும் சாதீயத்தின் முனை கூர்மழுங்காமல் பாதுகாப்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் பரமக்குடிகள் போன்ற பல ஊர்கள் முளைப்பது அரச அதிகாரத்திற்கும், சுய லாப அரசியலின் இழிவான சாட்சிகளாக இருக்கும் சாதீயக் கட்சிகளுக்கும் தேவையாக இருக்கின்றன.

அரச அதிகாரங்களை பாதுகாக்கும் மிக முக்கிய அரணாக சாதி இருக்கிறது. சாதி இழிவினை போக்க தன் வாழ்க்கையையே அளித்த தந்தை பெரியாரின் வழி வந்ததாக சொல்லிக் கொண்டு அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதீய இழிவினை போக்கலாம் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளை உதிர்த்து தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளே கடந்த பல ஆண்டுகளாக சாதீயத்தினை பாதுக்காக்கும் அமைப்புகளாக செயல்படுகின்றன. திராவிடம் என்ற சொல்லில் தான் பெரியாரியம் முழுதும் அடங்கி இருக்கிறது என்பது போன்றான புனைவுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி உண்மையான திராவிடர்களின் நல வாழ்விற்கான கட்சி திமுக என இன்று வரை பேசிக்கொண்டிருப்பதிலிருந்தே இதை நாம் புரிந்துக் கொள்ளலாம். மொழி வாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு, நமக்கும்-தெலுங்கனுக்கும், நமக்கும்- மலையாளிக்கும், நமக்கும்-கன்னடனுக்கும் நதிநீர் உட்பட பல முனைகளில் முரண்கள் தோன்றும் போது திராவிடம் என்ற சொல்லுக்கான அவசியம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வினா எழுப்புகையில் ,இந்த சாதீயம் தான் அவர்களுக்கு எதிரான முனையாக முன்நிறுத்தப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு அப்பாலும் பெரியாரியம் பரந்து விரிந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழனின் சாதி இழிவு போக்க, தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய,தமிழர்களின் ஒற்றுமைக்காக,பெண்ணுரிமைக்காக என பல தளங்களில் மூர்க்கமாக போராடிய அந்த கிழவனைத்தாண்டி இந்த மண்ணுக்கான தத்துவங்கள் ஏதுமில்லை . ஆனால் அவர் வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் திராவிட கட்சிகளின் அரச அதிகாரத்தில் தான் சாதீயத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. சொல்லப் போனால் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரம் தான் சாதியை போற்றி ,பராமரித்து, பாதுக்காக்கின்ற அரணாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒட்டுமொத்த இன ஒற்றுமையை உரத்துப் பேசும் தமிழ்த் தேசியர்கள் இது போன்ற சமூக உட் குழு பிணக்குகளில் பெருத்த பின்னடைவினை சந்திக்கின்றனர். பண்பாட்டு பெருமிதங்கள் மூலம் கட்டமைக்கப்படும் இனத்தின் ஒற்றுமையை சமூக உட் குழுவான சாதி சிதைப்பது தமிழ்த் தேசிய கருத்தின் பலத்தினை குறைக்கும் . எனவே சாதி முரண்களால் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. காலங்காலமாக ஆதிக்கச் சாதியின் இறுக்கத்தினில் இருந்து வெளியேற ஒடுக்கப்பட்ட சாதிக்கு என்றைக்கும் அரசியல் துணை நின்றதில்லை. துவக்கத்தில் அரசியல் மூலம் மாற்றத்தினை கொண்டு வர விழைந்த அண்ணல் அம்பேத்கார் கூட , இறுதியில் சமூக வழி செயலான மத மாற்றத்தினைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குறுகிய லாபங்களுக்காக தனி நபர்கள் சுயசாதி பெருமிதத்தின் மீது கட்டமைக்கும் அரசியல் இது வரை எவ்விதமான விளைவினையும் இங்கே ஏற்படுத்திவிடவில்லை என்பது உண்மையானது.

தேர்தல்களில் சாதி மக்களின் எண்ணிக்கையை காட்டி சாதிக்கட்சிகள் தங்களின் கூட்டணி தலைமையிடம் இடங்களுக்காக நிற்கின்றன. சாதி ஒழிப்பிற்காக, பிற்படுத்தப்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சமூக நீதிக்காக தோன்றிய திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட தேர்தல்களில் பெருமளவு சாதி பார்த்து,இடம் பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. தமிழனின் சமூக நுகர்வில் சாதிக்கான இடம் மிகப் பெரியது. இந்தப் புள்ளிதான் இன ஒற்றுமையை நிறுவ முயலும் தமிழ்த் தேசியர்களுக்கான உண்மை சவால்.
பரமக்குடி படுகொலைகளின் மூலம் அரச அதிகாரத்தின் ஆதிக்க உளவியலின் இருந்து பிறந்திருப்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறை போக்கிற்கு தீர்வாக காவல் துறை தூப்பாக்கிகளை கையாண்டது எதன் பொருட்டும் ஏற்க கூடியதல்ல. மக்களுக்காகத்தான் அரசு. எனவே அவர்களை மீறி, அவர்களை கொன்று அந்த நாளில் காவல் துறை காப்பாற்றியது எவற்றை என்பதை நாம் ஆராயும் போது அரச அதிகாரத்தின் ஆதிக்க முகத்தினை நாம் நேரிடையாக சந்திக்கிறோம்.பார்த்தவுடன் பதற வைக்கிறது பரமக்குடி. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு அரச வல்லாத்திக்கத்தின் கோர முகம் தெரிகிறது.

வரையறுக்கப்பட்ட,திட்டமிட்ட செயல்களால் பெருகி வந்த வன்முறைகளை தடுத்திருக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் துவக்குகளையும், ரவைகளையும் தீர்விற்கான வழிகளாக காவல்துறை நம்பியது கண்டிக்கத்தக்கது. அரச பயங்கரவாதம் நிகழ்த்திய வன்முறைகளுக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சாதி சார்பு என இவற்றை நாம் குறுக்கி விட இயலாது. மாறாக அரசதிகாரம் தந்த ஆணவமும், வரையறையற்ற அதிகாரமும் இவற்றிக்கான காரணங்கள். இந்த வன்முறையில் பலியானவர்கள் குறித்த தகவல்களை அறியும் போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எளிய மனிதர்கள் சுடப்பட்டு இருக்கின்றார்கள். அதிகாரம் தந்த ஆணவத்தினால் கக்கிய காவல்துறையின் துப்பாக்கிக் குழல்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லை. சுடப்படுபவர் வன்முறையாளரா என்ற வரைமுறை இல்லை. ஆதிக்கத்தின் துப்பாக்கி குழல்களுக்கு தேவை வீழ்த்த ஒரு உடலம். அவ்வளவே. காரண,காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆதிக்க சாதி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின் போது நிகழும் வன்முறைகளை இயல்பாக அனுமதிக்கும் அரச அதிகாரம் , ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சி செய்தால் உயிரை பறிக்க துவக்குகளை தூக்குகிறது. கல்லெறிந்து இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் காஸ்மீர் மக்களை கூட அந்த அரசாங்கம் சுட்டுக் கொல்வதில்லை.

பல்வேறு சாதி மக்கள் வாழக் கூடிய ஒரு நிலத்தில், பெரும்பான்மை சாதிக்குழுவின் முக்கிய ஆளுமையின் விழா நாளில் ஏற்படும் விபரீதங்கள் அதற்கு இணையான ,எதிரிடையாக இருக்கும் மற்றொரு சாதிக்குழுவின் மீது சாட்டப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. மறைந்த தலைவர்களின் விழாக்களின் போது பதட்டம் ஏற்படுவதை சாதீயக்கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் விளையும் பதட்டம்தான் அடுத்த ஒரு வருடத்தின் அரசியலுக்கான மூலதனம். சாதீயத்திற்கு எதிராக ,இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ்த்தேசியர்களை இதில் வலுக்கட்டாயமாக வம்புகிழுப்பதில்தான் இருக்கிறது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.
சாதிதான் பெரிதென்றால் சுய சாதி பெருமிதத்தினை, சாதி பேரில் திரளும் மக்களை வைத்து அரசியல் நடத்திருக்கலாம். ஆனால் இன ஒற்றுமையையும், அதன் வாயிலாக சாதீய ஒழிப்பினையும் சிந்திக்கும் தமிழ்த் தேசியர்கள் மூன்றாம் தர சொல்லாடல்களால் விமர்சிக்கப்படுவது எதன் பொருட்டும் நியாயமல்ல. தமிழ் உணர்வாளர்கள் பாகுபாடின்றி மறைந்த தமிழ் ஆளுமைகளின் விழாக்களிலும் கலந்துக் கொள்வதை மோசடியாக புனைய துடிப்பவர்கள் அதன் மூலம் நிகழும் பொதுமை உணர்ச்சியை நிகழ விடாமல் தடுக்க எண்ணுகிறார்கள். சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் இனத்து ஆளுமைகளை அவர்களுக்குள் அக்காலத்தில் நிலவிய முரண்களுக்கு அப்பாற்பட்டு பார்க்கின்ற பொதுமை உணர்ச்சி நிகழ்கால அமைதி வாழ்வின் பாற்பட்டது. ஒரு சமூகத்தின் இரு தலைவர்கள் அன்று நிலவி வந்த சாதீயச் சூழல் காரணமாக, ஆண்டான், எதிர்ப்போன் என பிளவுப் பட்டு கிடந்தார்கள். அவர்கள் இறந்தார்கள்.அவர்களின் பிள்ளைகள் இதே சாதியை இறுகப் பிடித்துக் கொண்டு, அடித்துக் கொண்டு செத்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இன்றைக்கும் தலைவர்களின் பேரால் அடித்துக் கொண்டு சாகிறார்கள். இந்த பகையை ,இந்த வன்மத்தினை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு கொண்டு போக போகிறோம் என்று கேட்டாலே சாதி வெறியன்களாக சித்திரித்து விடுவது அரச பயங்கரவாதத்தினை விட கொடுமையானது. தமிழ்த் தேசியர்களை இழித்து பேசுவதன் மூலம் தங்களை தாங்களே சொறிந்துக் கொண்டு, தங்களின் குற்ற உணர்ச்சியை மற்றவர்களின் மீது பழி போடுவதன் மூலம் தணித்துக் கொண்டு சுகம் காணும் ‘இணையத்தள போராளிகளை’ நாம் இச்சமயத்தில் சரியாக இனம் காணுவோம்.பரமக்குடி சம்பவங்களில் நிகழ்ந்த ஏழுத் தமிழர்களின் படுகொலைகளுக்கு எதிராக அய்யா.பழ.நெடுமாறன், அண்ணன் சீமான் போன்ற தமிழுணர்வு கொண்ட தலைவர்களும், மே 17 போன்ற இயக்கத்தினரும் அறிக்கைகள் வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். யாராலும் ஏற்க இயலா, குறிப்பாக தமிழ்த் தேசியர்கள் முற்றிலும் எதிர்க்கிற பரமக்குடி கொலைகளை திட்டமிட்டு இன நலனிற்காக போராடிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக நிறுத்துவது அறுவருப்பான செயல்.முகநூலில் போகிற போக்கில் முகப்புப் பக்கத்தில் தமிழ்த் தேசியர்களை பற்றியும், தமிழ் அமைப்புகள் குறித்தும் நஞ்சாய் இந்த ’இணையத்தள போராளிகள்’ கக்கியிருக்கின்ற மூன்றாம் தர விமர்சனங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. கணினித் திரைக்கு அப்பால்தான் உலகம் இருக்கிறது என்பதை அறிய மறுக்கிற இவர்களின் விமர்சனங்கள் நாகரீகமற்றவை. மேலும் காலங்காலமாய் பகைமை கொண்டிருக்கும் இரு குழுக்களிடையே நிலவும் வன்மத்தினை கொஞ்சமும் குறைய விடாமல் பாதுகாப்பதில் தான் இவர்களின் அரசியலே இருக்கிறது. நடந்து முடிந்த பரமக்குடி படுகொலைகளை ஏதாவது தமிழ்த்தேசிய அமைப்பாவது ஆதரித்திருக்கிறதா என்றால் இவர்களிடத்தில் பதிலில்லை. அப்படி இருக்கையில் எதற்காக இத்தனை விமர்சன அம்புகள் என்றால்..சமீப காலமாக இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற, மக்களிடம் தோன்றியிருக்கின்ற நாம் ஒரு இனம்’ என்ற உளவியல். தேசியத் தலைவர் பிரபாகரன் தான் எம் இனத்தின் ஒரே தலைவர் என்ற உளவியல். ஈழம் போலவே சாதிகளற்ற சமூகம் இந்த மண்ணிலும் விளைய வேண்டும் என்ற உளவியல். இந்த உளவியல் போக்குகளே மூன்று தமிழர் உயிர் காக்க தமிழக வீதிகளில் போர்க் குரல்களாய் மூண்டெழுந்தன. இந்த உளவியல் போக்குகள் தான் எப்போதும் ஊரை பிரித்துப் பார்த்து ரசிக்கும் இரண்டகன்களுக்கு பிடிக்கவில்லை.

தமிழ்த் தேசியர்கள் அழிந்த தம் இனத்தின் வலியை சுமந்து நிற்கிறார்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனுக்காக தீக்குளித்து, தன்னுயிரை தந்த கொலுவைநல்லூர் முத்துக்குமார்,பெரம்பலூர் அப்துல்ரவூப் எந்த சாதி,மத மக்களுக்காக ஈகை செய்தார்கள் ?- இனத்தின் மேன்மைக்காக ,இனத்தின் ஒற்றுமைக்காக தியாகம் செய்த அந்த மாவீரர்களை சாதியின் பேரால் நிகழும் இழிவான அரசியல்களால் அவமானப்படுத்துகிறோம். மூன்று தமிழர்களின் தூக்குதண்டனைகளுக்கு எதிராக மூண்டெழுந்த தமிழினம் ஏழு தமிழரை பறி கொடுத்து விட்டு எழுபதாக பிரிந்து கிடக்கின்றது. அதிகாரத்தின் உதடுகளில் தோன்றும் நமுட்டு சிரிப்பினை உணர்ந்து ஒன்றாக கிளம்ப வேண்டிய தருணம் இதுவாகும்.எடுத்துக்காட்டாக நாம் இங்கே சாதியாய் பிளவுற்று செத்துக் கொண்டிருக்கையில் , முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசு நீர் வழி பாதையை ஆய்வு செய்து முடித்து விட்டது,இன்னமும் ஈழப் போரின் போது நடைபெற்ற சிங்கள பேரினவாத குற்றங்களைப் பொறுத்து நமக்கு உலக சமூக நியாயம் கிடைக்கவில்லை.கூடங்குளம் அணுமின் உலையை மூடச் சொல்லி 15,000/- தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துக் கொண்டு இருக்கிறார்கள்.இன்றும் தூக்கு மேடையில் நிற்கும் மூன்று தமிழர்களின் உயிருக்கு உள்ள ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கியபாடில்லை.இந்நிலையில் தமிழர்களின் உள்ளங்களில் மூண்டியிருக்கிறது சா’தீ’. திசை திருப்பல்கள் மூலமாகவே திசையற்று போனான் தமிழன்.
பரமக்குடி சம்பவங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும் சம்பந்தபட்ட பிரச்சனையல்ல. ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் வாழ்வும், கொலைகளும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு உயிருக்கு விலை ஒரு லட்சம் அல்ல. விலை மதிப்பில்லா மனித வாழ்வினை பறிகொடுத்த ஏழு தமிழின சகோதரர்களின் குடும்பங்களை அரசே பராமரித்து வருவதுதான் -இப்போதைக்கான இயன்ற தீர்வாக இருக்க இயலும்.

சாதீய முரண்கள் களையப் பட வேண்டுமானால் , சுய சாதி பெருமிதம் சாக வேண்டும். சுய சாதி பெருமிதம் அழிய வேண்டுமானால் அதற்கு நேர் எதிராக ,முரணாக நிற்கும் ஓட்டுமொத்த இனம் சார்ந்த, மொழி சார்ந்த சிந்தனைகள் மேலொங்க வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகளின் வளர்ச்சியும், எழுச்சியுமே பிளந்துக்கிடக்கும் இனத்தினை ஒற்றுமைப் படுத்தும். சாதிக்க வேண்டிய தமிழினம் சாதிக்காக நின்றால் இழப்புகள் இன்னும் அதிகமாகும்.
மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிர் தந்த செங்கொடியின் தியாகம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத இடைவெளியில் ஏழு தமிழினச் சகோதரர்களை அரச வல்லாத்திக்க துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி விட்டு அமர்ந்திருக்கிறோம். விலங்குகளை சுட்டுக் கொன்றால் தண்டனை விதிக்கும் இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதான் அவலமான முரண்.

சாதியால் பற்றெரியும் நிலத்தின் நாற்றம் தாங்காமல்
சிதையில் புரள்கிறான் முத்துக்குமார்...
பற்றெரியும் மூர்க்கத்தின் வெப்பம் தாங்காமல்
இருமிக் கொண்டிருக்கிறாள் செங்கொடி..
தூக்கு கயிற்றினை அறுக்க நினைத்தவர்களின்
கரங்கள் இரண்டாக கிடக்கின்றன.
விரல்களை இழந்த கரமும்
கரங்களை இழந்த விரல்களும்
துடித்துக் கொண்டிருக்கின்றன..
தீ எரிகிறது.
சா’தீ’

இயக்குனர் மணிவண்ணன் : உணர்வும்- தெளிவும்.


சென்னை: இனி நான் இருப்பது எத்தனை காலமோ தெரியாது. நான் இறந்துவிட்டால் என் உடலை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துவிடுங்கள். புலிக்கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சிகளை செய்யுங்கள். இதுதான் என் விருப்பம், என்றார் இயக்குநரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணன்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் மணிவண்ணன் பேசுகையில், "நாம் தமிழர் கட்சிக்காரர்களும் சீமானும் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா போட ஆரம்பித்து விட்டதாகக் கூறி சிலர் கிண்டலடிக்கிறார்கள்.

மூன்றுபேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் வலி. அந்த நேரம் பார்த்து, தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் எனக்கில்லை என முதல்வரும் சொல்லிவிட்டார்.

ஒரு பக்கம் சட்டப் போராட்டம் ஆரம்பித்து, நீதிமன்ற வளாகத்தில் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீதிபதி 8 வாரங்கள் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட அடுத்த கணம், சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றினார் போன உயிரை திரும்ப அவர் தந்தது போல உணர்ந்தோம்... இப்போது சொல்லுங்கள். இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்வது?

முந்தைய தினம் சட்டமன்றத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற கூறிவிட்டாலும், தமிழ் மக்களின் உணர்வை மதித்த அம்மா, இரவெல்லாம் தூங்காமல், சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து, அடுத்த நாளே தண்டனையை நிறுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாரே... அந்த மனசு யாருக்கு வரும்? கருணாநிதியாக இருந்தால், தான் சொன்னதே சரி என்று பிடிவாதமாக இருந்து மூவரின் உயிரையும் போக வைத்திருப்பார்.

ஜெயலலிதாவின் இந்தத் தாயுள்ளம், பெரும் கருணைக்கு நாம் காலமெல்லாம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி கேட்பதையெல்லாம், எதற்காக போராடுகிறார்களோ அந்தக் கோரிக்கையை எல்லாம் அந்த அம்மா நிறைவேற்றித் தருகிறார். இதற்கு நன்றி செலுத்தாமல் விட்டால் காலம் மன்னிக்காது.

திருக்குறளை சரியாகப் படித்திருந்தால் திமுகவினருக்கு செய்நன்றியின் அர்த்தம் விளங்கும். அவர்கள் கடலில் திருவள்ளுவருக்கு சிலை வைத்ததோடு சரி. அவர் சொன்னதை மறந்துவிட்டார்கள்.

இன்று தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் முழுமையாக நம்புவது நாம் தமிழர் கட்சியையும் தம்பி சீமானையும்தான்.

தான் இறந்த பிறகு தன் உடலை குடும்பத்திடம் ஒப்படைக்கச் சொன்னார் பேரறிவாளன். முருகனும் சாந்தனும் தங்கள் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு எழுதி வைத்துவிட்டனர்.

நண்பர்களே, நான் மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். எனக்கு அரசியல், பதவி என எந்த ஆசையும் இல்லை. இந்தப் பிள்ளைகள் மூவரும் உயிரோடு திரும்ப வேண்டும். சீமானைப் போன்றவர்களால் இந்தத் தமிழினம் உயர்ந்த நிலையில் இருப்பதைப் பார்த்துவிட்டு இறந்து போக வேண்டும். நான் இறந்தால், என் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் உடம்பில் புலிக்கொடியைப் போர்த்தி எடுத்துச் செல்லுங்கள், அது போதும்," என்றார்.

மணிவண்ணனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றுவிட்டனர். கீழே கூடியிருந்தவர்கள் உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கி நின்றனர்.

நன்றி :தட்ஸ் தமிழ்

விழிகளுக்கு தெரியாத வெளிச்சங்கள்.....



’ கயிற்றின் நிழலில்

சர்பத்தின் சாயல்..

உடல் தீண்டிய நிழலில்

பற்றி பரவுகிறது நீலம்’.

ஆகஸ்ட் 29/2011.

அந்த மதியப் பொழுதில் தமிழ்நாட்டின் வெப்பமான அந்த நகரம் சற்றே மேக மூட்டமாய் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்தது. வேலூர் மத்திய சிறைச்சாலையின் வளாகம் எனக்கு மிகவும் பழக்கமானதுதான். ஆனால் இம்முறை நான் உள்ளே நுழைகையில் இருந்த பதட்டம் நான் அறியாதது . காவல் துறை அளவுக்கதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது இயல்பான சூழ்நிலையை வெகுவாக மாற்றிருந்தது. ஒருவர் ஒருவராக அனுமதிக்கப்பட்ட அப்பொழுதில் எனக்கு முன்னதாக சென்று திரும்பிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சேனா.பிரபு மிகுந்த இறுகிய முகத்துடன் திரும்பி வந்தார். அவர் முகத்தினை பார்த்து ஏதேனும் அறிந்துக் கொள்ள இயலுமா என நான் முயற்சித்தேன். ஆனால் அது முடியவில்லை. நான் கேட்கும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும் மனநிலையில் அவர் இல்லை. கடந்த பல மாதங்களாக அவர் ஒரு உன்னதப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அந்த முயற்சியில் ஒரு முக்கிய கட்டம் மறு நாள் வர இருந்த அச்சூழல் அவரை மிகவும் வருத்தி இருக்கவேண்டும். அவரைப் போன்ற உன்னதமான சில இளைஞர்கள் கையில்தான் வரலாறு மிக முக்கியமான பணியொன்றினை வழங்கி இருந்தது. அது இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு எந்த நேரமும் தூக்கில் தொங்க விடப்படும் ஆபத்தில் உள்ள பேரறிவாளன் ,முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை சட்டப் போராட்டங்கள் மூலமாக காப்பது.

.

இந்த சிறை வளாகம் எனக்கு புதிதல்ல. சென்ற திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த அண்ணன் சீமான் அவர்களை நான் அடிக்கடி பார்க்க சென்ற போது அந்த சிறை வளாகம் எனக்கு பழக்கப்பட்டு இருந்தது. சீமான் அண்ணனை பார்க்க போகும் போது ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு சிறைப்பட்டு கிடக்கின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய அண்ணன்மார்களை நான் சந்திக்க நேர்ந்தது. நான் மட்டுமல்ல , அண்ணன் சீமானை பார்க்க வரும் எண்ணற்ற நாம் தமிழர் தம்பிமார்களுக்கு இவ்வகையாக இனமான அண்ணன்மார்கள் அறுவர் கிடைத்தனர். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாம் நன்றி சொல்லலாம். அண்ணன் சீமானை அவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூரில் சிறைப்படுத்தாவிடில் எமக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. எனக்கு கடந்த காலங்கள் நினைவிற்கு வந்தன. அண்ணன் சீமான் இங்கே இருந்த போது கள்ளங்கபடமற்ற அந்த அன்புள்ளங்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்துக் கொண்டே இருக்கும். பார்க்க செல்லும் நாங்களும் அந்த மகிழ்வில் கலந்துக் கொள்ள , அந்த சிறை வளாகம் மகிழ்ச்சிக்கான கேளிக்கைக் கூடமாக மாறிப்போகும்.சிறைக் கொட்டடியில் அடைப்பட்டிருந்தாலும்..உதிரும் புன்னகையோடு..கை கோர்த்த உறவுகளாய் நம் அண்ணன்மார்கள் விளங்கிய காலக்கட்டம் அது. வெகு காலமாக வெளிச்சம் படாதிருந்த அவர்களின் அவல வாழ்வு அண்ணன் சீமானின் சிறை வாசத்தால் உலகிற்கு தெரிந்தது.

.

அடுத்து ..எனது முறை. கண்கள் கலங்கத்துவங்கி விட்டன. என்னை தயார் செய்து அனுப்பும் தஞ்சை வழக்கறிஞர் . அண்ணன் நல்லதுரை பலவாறு ஆறுதல் சொல்லி உள்ளே அனுப்பினார். கடுமையான பரிசோதனைகளுக்கு மத்தியில் நான் உயர் பாதுகாப்பு தொகுதி என்றழைக்கப்பட்ட அந்த வளாகத்திற்குள் நுழைந்தேன். பறவைகள் சரணாலயம் ஒன்றில் நுழைந்து விட்டது போன்ற உணர்வு..பறவைகள் கீச்சொலி. வெண் புறாக்கள் மேய்ந்துக் கொண்டிருந்தன. அந்த புறாக்களை இராபர்ட் பயஸ் அண்ணன் வளர்த்து வருகிறாராம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய அண்ணன்மார்களை தனித்து வைக்க, பயஸ் அண்ணன் அந்த வளாகத்தினில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். இரை போட்டு வளர்த்த பயஸ் அண்ணனை தேடிக் கொண்டு அதே வளாகத்தில் திரிவதாக ஒரு காவலர் என்னிடம் கூறினார். கருணை நிராகரிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல என்று நினைத்துக் கொண்டேன். வரிசையாக இருட்டறைகள் . அண்ணன்மார்கள் மூவரும் தனித்தனியே அடைக்கப்பட்டிருந்தனர். என்னைப் பார்த்த்தும் அறிவு அண்ணன் மணி என்று உற்சாக குரல் எழுப்பினார். முருகன் அண்ணன் எட்டிப்பார்த்தார். சாந்தன் அண்ணன் அவசர அவசரமாக சட்டை மாட்டிக் கொண்டிருந்தார்.

.

எனக்கும், அவர்களுக்கும் இருந்த ஆதி உறவின் தொடர்ச்சியான மரபணு விழித்துக் கொண்டது. நான் பாய்ந்து அவர்களை இறுகத் தழுவிக் கொண்டேன். பாருங்கள் ...விசித்திரத்தினை. மரணத்தின் வாயிலில் நின்றுக் கொண்டிருந்த அண்ணன்மார்கள் என்னை ஆற்றுப்படுத்தினார்கள். ஒருவருக்கு கூட மரணத்தின் பயம் இல்லை. கண்களில் அளப்பரிய நம்பிக்கைகளை சேமித்துக் கொண்டு முகப்பொலிவோடு திகழ்ந்த அம்மூவரையும் சந்திக்கும் எவரும் நேசிக்காமல் இருக்க இயலாது. நாளையின் விடியலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்கள் அவர்கள். எனக்குத்தான் நம்பிக்கை இல்லை. ஏற்கனவே இந்திய நீதித்துறை அவர்களை சிதைத்து போட்டிருப்பதன் அவலத்தினை எனக்குள் எண்ணிப் பார்த்துக்கொண்டேன். ஆனால் அறிவு அண்ணன் தான் தயாரித்து வைத்திருந்த வழக்கு சங்கதிகளை என்னுடன் பகிரத் துவங்கினார். தேர்ந்த வழக்கறிஞர்களுக்குரிய அனைத்து தகுதியும் அவரிடம் இருந்தது. அவர்களின் வழக்குரைஞராக உள்ளே போன நான் எதுவுமறியா எளிய கட்சிக்காரனைப் போல அவர்களின் அறிவொளிக்கு முன்னால் நின்றேன்.

.

அன்றைய காலையில் தான் தனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தமிழக முதல்வர் அறிவித்திருந்த தருணம் அது. ஆனால் அந்த மூவரும் தமிழக முதல்வரை அந்த தருணத்திலும் நம்பி நின்றது எனக்கு ஆச்சர்யத்தினை அளித்த்து. தமிழக முதல்வருக்கு எதிராக எதுவும் செய்து விட வேண்டாம் என அவர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக என்னிடத்தில் சொன்னார்கள். தங்கை செங்கொடியின் அளப்பரிய தியாகம் தான் மூவரையும் கலங்க வைத்திருந்தது. எமது போராட்டத்தின் மூலம் உயிரை காப்பதுதான்.ஆனால் உயிரை காக்க உயிர் போவது சித்ரவதைக்குள்ளாக்கிறது என சாந்தன் அண்ணன் சொன்னார். எமக்காக போராடும் ஒவ்வொருவரையும் நாங்கள் இப்போராட்டத்தில் வெற்றிப் பெற்ற பிறகு நேரடியாக சந்திக்க விரும்புகிறோம். எனவே உயிர் தியாகங்கள் எம்மை கொல்கின்றன என சங்கடத்துடன் முருகன் அண்ணன் சொன்னது என்னை கண் கலங்க வைத்தது. அந்த தருணத்திலும் தமிழக முதல்வர் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை அசலானது. முதல்வர் கையில்தான் தங்கள் தூக்கின் முடிச்சு இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். அனைத்து அதிகார மட்டங்களையும் சந்தித்து விட்ட காரணத்தினால் என்னவோ, இம்முறை தமிழக முதல்வர் அவர்களை காத்து விடுவார் என நம்பினர். சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் அவர்களை மேலும் உறுதி கொள்ள வைத்தது. இதே கருத்தினை அவர்கள் ஊடகங்களுக்கும் செய்தியாக சொல்லச் சொன்னார்கள். தமிழக முதல்வர் மீது அவர்கள் பாராட்டும் நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமளித்தது. ‘இன்று அவரை விட்டால் நமக்கு வேறு யாரும் இல்லை’ என்றார் சாந்தன் அண்ணா.உரையாடல்களில் சீமான் அண்ணனின் நடவடிக்கைகள் குறித்து பேச்சு வந்த போது ’அண்ணன் முதல்வருக்கு எதிராக செயல்படாமல் அரசோடு இணைந்து செயல்படுவதென்பது மிக முக்கிய அரசியல் நடவடிக்கை. அதிகார பலம் அற்ற தமிழினத்து உணர்வாளர்கள் மீது சிங்கள அரசின் மீது காட்டமான தீர்மானம் இயற்றிருக்கின்ற தமிழக முதல்வர் கொண்டிருக்கும் கண்ணோட்டம் இம்முறை ஆறுதல் அளிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே சீமான் அண்ணனின் நிலைப்பாடு மிகச் சரி. அவரோடு தான் நாங்கள் நிற்கிறோம் ’என்றார் முருகன் அண்ணன்

.

அரித்திராவின் குரலை பிபிசி இணையத்தளத்தின் ஊடாக கேட்டேன் என்ற உடன் முருகன் அண்ணனின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. பாப்பா என்ன சொன்னாள்..? என ஆர்வத்துடன் விசாரித்த அந்த அன்பு மிக்க தந்தையின் கண்களில் தாய்மையின் சுடரைக் கண்டேன். நேரம் முடிந்தது.நீங்கள் கிளம்பலாம் என கறார் குரல் வந்தது. மீண்டும் ஒரு முறை அவர்கள் மூவரையும் ஆறத் தழுவினேன். கண்டிப்பாக இது கடைசி சந்திப்பாக இருக்கக் கூடாது. நான் கலங்கியதும் அறிவு அண்ணன் நாளை மாலை இதே நேரத்தில் நீ மகிழ்வாக இருப்பாய் என நம்பிக்கையுடன் அனுப்பி வைத்தார். திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தேன். கம்பிகளின் ஊடே தமிழ்த் தேசிய இனத்தின் பெருமை மிக்க மூன்று அண்ணன்மார்கள் நின்று கொண்டிருந்தார்கள்

.

அந்த வளாகத்தினை விட்டு வெளியே வந்த உடன் எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. உள்ளே அழுதால் அண்ணன்களின் உளவியலை பாதிக்கும் செயலாக அமையும் என்ற கவனம் வெளியே வந்த உடன் தகர்ந்தது. அழுதேன். கூட வந்த காவலர் என்னை பிடித்துக் கொண்டார். அது என் அழுகை அல்ல. என் மூதாதையான உலகின் ஆதி மனிதனின் மரபணுவில் இருந்து தொடர்ந்து வந்த அழுகை. 12 கோடி மக்கள் இருந்தும் மூன்று அண்ணன்மார்களை காப்பாற்ற வழி தெரியாது கையேந்தி நிற்கிற எளிய மனிதனின் கண்ணீர். ராசீவ் கொலையை காரணம் காட்டி ஈழப் பெருநிலத்தினை அழித்தார்கள். இந்த இனம் இனிமேல் அடைந்து விட முடியாத அதி உன்னத ஈழ நாட்டை அழித்தார்கள்.காட்டுக்குள் இருந்தாலும்..விமானம் கட்டி விண்ணில் பறந்த அறிவார்ந்த தலைமுறையை அழித்தார்கள். அழித்தும் தீராத வன்மத்தின் நாவுகள் இன்று மூன்று சகோதரர்களை மரணத்தின் கொட்டடியில் அடைத்து வைத்திருக்கின்றன. அழுதேன். எனக்காக காத்திருந்த அண்ணன் இராபர்ட் பயஸ் கண்ணீரோடு என்னை கட்டியணைத்தார்.

.

வெளியே வந்தேன். உள்ளே நடந்தவைகளையும், அண்ணன்கள் சொல்லி அனுப்பிய செய்திகளையும் நான் அண்ணன் சீமானிடம் அலைபேசியில் தெரிவித்தேன்.அவர் அமைதியாக் கேட்டுக் கொண்டு இருந்தார்.அண்ணன்கள் முருகனும், சாந்தனும் தூக்கிலிடப்பட்டால் தங்களின் உடலை சீமான் அண்ணனிடம்தான் தர வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் எழுதி அளித்திருந்த செய்தியும் அவரை வெகுவாக பாதித்திருந்த்து. ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் .. அண்ணா என நான் சீமான் அண்ணனிடம் கேட்டேன். ”இது என் சொந்த துயர். என் குடும்பத்தில் மூவருக்கு எந்த நொடியிலும் மரணம் என்ற அவலம் என்னை அரசியலில் இருந்து தூர வீசி விட்டது. தூக்கு கயிற்றுக்கு முன் மூன்று தம்பிகளை நிற்க வைத்துக் கொண்டு என்னால் அரசியல் செய்ய இயலாது. கயிற்றினை அறுக்கும் அதிகாரம் உடையவர்களிடத்தில் கருணையை எதிர்பார்க்கிற எளிய அண்ணன் நான் . எனவே தான் அமைதியாக சட்டத்தின் மூலமாக என் தம்பிகளை விடுவிக்க அலைந்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மறுநாள் நம்பிக்கையோடு நின்ற அண்ணன்மார்களின் சொற்கள் பலித்தன. அவர்கள் நம்பிய தமிழக முதல்வர் அவர்களை காப்பாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார். வழக்கிலும் அவர்களுக்கு இடைக்காலத் தடை கிடைத்தது. துயர் முகங்கள் நிரம்பி வழிந்த உயர்நீதிமன்றம் ஒரு நொடியில் கொண்டாடங்களின் குடியிருப்பாக மாறிப்போனது. என் அருகில் நின்று கொண்டிருந்த வழக்கறிஞர் சேனா.பிரபுவினை நான் இறுக தழுவினேன். இந்த வழக்கிற்காக வெகு நாட்களாக உழைத்து வரும் முதல் நாள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர். அண்ணன் தடா சந்திரசேகர் வந்து கொண்டிருந்தார் . வணங்கினேன். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களோடு இணைந்து பிரபு,பாரி,ராசீவ்காந்தி, பாலாஜி போன்ற பல இளம் வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் கடுமையாக உழைத்தார்கள். நீதிமன்ற தடையுத்தரவு கிடைத்த அவ்வேளையில், கொண்டாட்டங்கள் நடந்துக் கொண்டு இருந்தன. எவ்வித விளம்பரமும் தேடாமல் அளவற்ற உழைப்பினை வாரி வழங்கிய இந்த இளைஞர்கள் அமைதியாய் புன்முறுவலோடு நின்றுக் கொண்டிருந்தது அழகாக இருந்தது .

.

.

அபாயம் இன்னமும் முற்று முதலாக நீங்கி விட வில்லை. 2 மாத இடைக்கால தடை இறுதி வெற்றியல்ல. இறுதி வெற்றி சிறைப்பட்டு கிடக்கின்ற நம் அண்ணன்மார்களின் விடுதலையில் தான் அடங்கி இருக்கிறது. தமிழக முதல்வரின் கருணையும், மக்களின் தன்னெழுச்சி குரல்களும் அதை சாத்தியப்படுத்தும் என நாம் நம்புவோம். இந்த மாபெரும் முயற்சியில் எண்ணற்ற தோழர்கள் தங்களின் அளப்பரிய உழைப்பினை நல்கி இருக்கிறார்கள். குறிப்பாக தங்களையும் மரணத்திற்கு ஆட்படுத்திக் கொள்ள துணிந்த 3 பெண் வழக்கறிஞர்களின் தீரம் வியப்பிற்குரியது. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இனத்திற்காக, மனித உரிமைகளுக்காக, மரணத்தண்டனை ஒழிப்பிற்காக நின்ற தோழர்களின் கூட்டுழைப்பு எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது.

இந்நேரம் எம் தங்கை செங்கொடி சிதையில் தணலாய் இருந்து இந்த தாய்மண்ணின் மணலாய் மாறி இருப்பாள். தம் அண்ணன்மார்களுக்காக தன்னுயிர் தந்த தங்கையின் இறுதி மூச்சுக்காற்று இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது. ஓயாத அந்த சுழிக்காற்று சுழன்றடித்து இனமான நெருப்பினை பரப்பிக் கொண்டே இருக்கும். அது என் தாய் அற்புதம் அம்மா அவர்களின் விழி நீரையும் காய வைக்கும்.

முத்துக்குமாரும் முடிவல்ல..

முள்ளிவாய்க்காலும் முடிவல்ல..

செங்கொடி தொடர்கிறாள்..

அலை அலையாய் வருகிறார்கள்..

ஆதி இனத்தொன்றின் கோபத்தினை

சுமந்தவாறே..

அழிவிலிருந்துதான் துவங்குகிறது எம் உலகமும்.

நெஞ்சினை பதற வைக்கும் போர்க் குற்ற காட்சிகள் - சிங்கள ராணுவ வீரரின் நேரடி சாட்சியம் -மீண்டும் சேனல் 4 வெளியிட்டது


இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதையடுத்து போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்து வருகிறது.

இந் நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்களை `சேனல் 4' மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப் லிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப் புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாக சேனல் 4 தெரிவித்துள்ளது.

இதையடுத்து விடுதலைப்பு லிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தகவலை அப்போது இலங்கை ராணுவத்தின் 58வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத் தூதராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.

அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.

ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.

இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.

தகவல் : தட்ஸ் தமிழ்.

கலங்கிய விழிகளுடன்
நிற்கிறேன்.
நிகழ்காலத்தில் என் நினைவு பிறழாமல் இருப்பதற்காக
கூசுகிறேன்.
மானுடனாய் இருந்திருந்தால் உண்மையில் மாண்டிருப்பேன்.
தமிழனாய் பிறந்திருப்பதால் தலைக் குனிந்தவாறே உடலை சுமக்கிறேன்.

- மணி.செந்தில்

இராஜீவ் கொலை - நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ-கீற்று நந்தன்


இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி'. மற்றொன்று, களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிர‌தமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயர‌ங்களும்)'. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துக்களுடனும், செய்திகளுடனும் வெளிவந்துள்ளன. முந்தைய புத்தகம், சி.பி.ஐ. ‘தயாரித்து’ வைத்த‌ புலனாய்வுக் குறிப்புகளின் அடிப்படையிலும், பிந்தைய புத்தகம் கொலை வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் இராபர்ட் பயஸின் சுயசரிதைக் குறிப்புகளின் பின்னணியிலும் இராஜீவ் காந்தி கொலை வழக்கை அணுகுகின்றது. சவுக்கு வெளியீடு, சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவினை லேசாக‌ கன்னத்தில் தட்டிவிட்டு, 'வெல்டன் பாய்ஸ்' என்று உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இரண்டாவது புத்தகம், சிபிஐ புலனாய்வுக் குழுவின் அராஜகமான, மனிதத் தன்மையற்ற விசாரணை முறைகளின் மீது காரி உமிழ்கிறது.

ஒன்று, கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உண்மைக் குற்றவாளிகள் என அவர்கள் மீது, வழமையான போலீஸ் ஜோடனைக் கதைகளை மிகவும் சுவாரசியமாக (எந்த வெட்கமும் இன்றி) விவரித்துச் செல்கிறது. மற்றொன்று, ஈழத்தில் பிறந்ததையன்றி ஒரு குற்றமும் செய்யாத - அந்த ஒரு காரணத்திற்காகவே ஒரு ஈழத் தமிழரும், அவரது சொந்தங்களும் அனுபவிக்கும் கடுந்துயரங்களை மிகுந்த வலியுடன் பதிவு செய்கிறது. முதல் புத்தகத்திற்கு சிபிஐ முன்னாள் இயக்குனர் விஜய்கரன் முன்னுரை எழுதியிருக்கிறார். களம் வெளியீட்டிற்கு பத்திரிக்கையாளர் அய்யநாதன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், மனித உரிமையாளர் பால் நியூமென் ஆகியோர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள்.

சவுக்கு வெளியீடு, இந்தியாவை வல்லரசாக்க வந்த மகத்தான தலைவனாக இராஜீவ் காந்தியை பெருமிதத்துடன் புகழ்கிறது. களம் வெளியீடு, இந்திய அமைதிப் படையை அனுப்பி, ஈழத்தில் இராஜீவ் காந்தி நடத்திய கொலைவெறியாட்டத்தைப் பதிவு செய்கிறது. 'சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை' என்பதை முதல் புத்தகமும், 'நமக்கு எல்லாம் உயிரின் வாதை' என்பதை இரண்டாவது புத்தகமும் பேசுகின்றன. ராஜீவ் சர்மா எழுதிய புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும், நமக்கு அடக்கமாட்டாத எரிச்சலும், எழுதியவனின் குரல்வளையை முறிக்கத் தூண்டும் கோபமும் ஏற்படுகிறது. இராபர்ட் பயஸின் தரப்பு நியாயத்தைப் பேசும் புத்தகத்தைப் புரட்டும்போது, அடக்க முடியாத கண்ணீரும், இத்தனை ஆண்டுகளாக அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்களே என்ற துயரமும் நெஞ்சை அழுத்திக் கொள்கிறது; உண்மையை வெளிக்கொண்டு வந்த வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், மணி.செந்தில் இருவரது கைகளையும் நன்றியுடன் பற்றிக்கொள்ளத் தோன்றுகிறது.

முதலில் சவுக்கு புத்தகத்திலிருந்து இராபர்ட் பயஸ் பற்றிய சிபிஐ குறிப்புகள்...

“...நளினி மற்றும் முருகன் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மேலும் இரு முக்கியமான எல்டிடிஈ போராளிகள் எஸ்.ஐ.டி.யின் தேடுதல் வலையில் வீழ்ந்தனர். அந்த இருவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதுடைய ராபர்ட் பயஸ் மற்றும் தமிழ்நாட்டில் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஜி.பேரறிவாளன் என்ற அறிவு. இலங்கைத் தமிழரான பயஸ் சிவராசன், தனு மற்றும் சுபாவிற்கு தங்குவதற்கான இருப்பிடத்தை தயார் செய்தார். அறிவு, பாக்கியநாதன் மற்றும் பத்மாவுடன் தங்கியிருந்தார்.

சென்னை போரூரில் இருந்த பலசரக்குக் கடை, கொலை நடந்த காலம் வரை இந்தக் கொலைக்குழுவிற்கு, யாழ்ப்பாணம், இத்தாலி, டென்மார்க் மற்றும் கனடாவிலிருந்து வந்த செய்திகளை பரிமாறிக்கொள்ளும் இடமாக பயன்படுத்தப்பட்டது. கொலை நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு பயஸிற்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உள்ளூரிலிருந்து வந்த அந்த அழைப்பின்போது பயஸ் மிக மெதுவாகவே பேசினார் என அந்த பலசரக்குக் கடை முதலாளி எஸ்.ஐ.டி.யிடம் தெரிவித்தார். கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்புவரை பயஸ் வீட்டிற்கு வெளியே ஒரு ஆம்னி வேன் நின்றதை பலநாட்கள் பொதுமக்கள் பார்த்துள்ளனர். அந்த வாகனம் நபர்களை, குறிப்பாக பெண்களை அழைத்துச் சென்றதற்காக பயன்படுத்தப்பட்டது.

அந்தக் கொலைக் குழுவிலிருந்த மற்றொரு நபரான ஜெயக்குமார் ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத் தமிழரான ஜெயக்குமார் சென்னையில் சிவராசன் மற்றும் சுபா தங்குவதற்கு வசதி செய்து தந்தார். ஜெயக்குமார் ராபர்ட் பயஸின் உறவினர் எனப் பின் தெரியவந்தது...”

இப்போது களம் வெளியீடான 'விடுதலைக்கு விலங்கு' புத்தகத்திலிருந்து (களம் வெளியீடு 8, மருத்துமனை சாலை, செந்தில் நகர், சின்னபோரூர், சென்னை - 600 116. விலை ரூ.100) சில பகுதிகள்...

“...காட்டுமிராண்டித்தனமாக என் வீட்டின் உள்ளே நுழைந்த இந்திய இராணுவ வீர‌ர்களின் கர‌ங்களில் பிறந்து பதின்மூன்றே நாட்களான எனது மகன் சிக்கிக் கொண்டான். அன்று மலர்ந்த இளம் ரோஜா ஒன்று, மதம் பிடித்த யானையின் காலடியில் சிக்கிக் கொண்டதைப் போல பந்தாடப்பட்ட எனது பாலகனை இந்திய இராணுவ வீர‌ன் ஒருவன் தூக்கி எறிந்தான். அழுது வீறிட்டபடியே விழுந்த எனது பச்சிளம் பாலகனுக்கு தலையில் பலத்த காயம். தடுக்கப் பாய்ந்த எனது மனைவியையும் எட்டி உதைவிட்டு கீழே தள்ளியது இந்திய இராணுவம். காயம்பட்ட என் பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஓடினோம். ஆனால் சின்னஞ்சிறு மலர‌ல்லவா, சீக்கிர‌மே உயிரை‌ விட்டுவிட்டது. கொடிய மிருகங்கள் உலவும் காட்டில் எளிய உயிர்களுக்கு இடமில்லை. குண்டு மழை பொழியும் நிலத்தில் சின்னஞ்சிறு அபலை உயிர்களுக்கு மதிப்பில்லை.

உயிர்வாழும் ஆசைதான் எத்தனை விசித்திர‌மானது!.. இந்த வேட்கைதான் காயங்கள் மீது காலம் பூசும் மருந்துக்கு மயிலிறகாக உதவுகிறது. நாங்களும் அப்படித்தான்; உயிர்வாழும் வேட்கை தந்த ஆசை. தடுக்கி விழுந்தால், தாங்கிப் பிடிப்பார்கள் என்று உறவுகள் மீது வைத்த நம்பிக்கை. இந்த இர‌ண்டும் தான் எம்மை தாயகத் தமிழகத்தை நோக்கி விர‌ட்டியது..."

"...குழந்தையை இந்திய இராணுவத்திடம் பறிகொடுத்த ஈழத் தகப்பன் ஒருவன் தான், இராசீவ் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று யாரே‌னும் நம்புவீர்கள் என்றால், என்னைப் போன்று பல்லாயிர‌க்கணக்கான தகப்பன்கள் அச்சமயத்தில் இந்திய இராணுவத்திடம் தங்கள் குழந்தைகளைப் பறிகொடுத்தார்கள். அவர்களையும் ஏன் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கவில்லை? பழிவாங்குவதற்கும் ஒரு பலம் வேண்டும். அனைத்தையும் இழந்து நிராதர‌வாக வந்து நிற்கும் அலைக்கழிக்கப்பட்ட ஓர் எளியவனிடம் பழிவாங்கும் உணர்வு என்ன?... வேறு எந்த உணர்வும் இருக்காது...”

“..10/06/1991. இந்த நாளை என்னால் உயிர் உள்ளவரை‌ மறக்க இயலாது. நான் கடைத்தெருவுக்குச் சென்றுவிட்டு, சென்னைப் போரூரில் வாடகைக்கு எடுத்துக் குடியிருந்த வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்கு அருகில் இருந்த மளிகை கடைக்கார‌ர் பாண்டியன் என்பவர், என் வீட்டிற்கு காவல்துறையினர் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார். இந்த இடத்தில் நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். இங்கு நான் உண்மையான குற்றவாளியாக இருந்திருந்தால் நான் அக்கணமே தப்பித்து ஓடியிருக்க முடியும். ஆனால் எதையுமே எதிர்பார்க்காமல், எதிர்வரும் கேடுகளை அறியாமல் என் வீட்டிற்குச் சென்றேன். அன்றைய தினம் இர‌வு ஒன்பதரை‌ மணிக்கு என்னையும் எனது மனைவியையும், எனக்கு இர‌ண்டாவதாகப் பிறந்த 3 மாத குழந்தையையும், எனது உடன் பிறந்த சகோதரியையும் சிபிஐ ஆய்வாளர் இர‌மேஷ், இக்பால் மற்றும் இரு காவலர்கள் விசாரித்துவிட்டு, அனுப்பிவிடுவதாக சிபிஐ அலுவலகம் அமைந்திருந்த மல்லிகைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அப்பொழுது கூட என் மனதில் பெரிதாக அச்சமில்லை. ஒரு அகதியாய் தஞ்சம் புகுந்தவனின் வாழ்க்கை நிலையற்றது மட்டுமல்ல, இதுபோன்ற காவல் கெடுபிடிகளுக்கு உட்பட்டது என்பதனை நான் நன்கு அறிந்திருந்தேன்...”

“...அந்த அறையில் இருந்த அலுவலர்கள் என்னைச் சூழ்ந்து நின்றனர். அதில் ஒரு அதிகாரி சிவராசன், காந்தன் இருவரை‌யும் தெரியுமா எனக் கேட்டார். எனக்குத் தெரியாது எனக் கூறிய நொடியில், கடுமையான வேகத்தில் என் முகத்தில் ஓர் அறை விழுந்தது. முதல் அடியிலேயே பொறி கலங்கிப் போனேன். பிறகு அங்கு இருந்த அனைவரும் சேர்ந்து கொண்டு அடிக்கத் துவங்கினர். அடி தாங்காமல் கீழே விழுந்த என் மீது ஷு காலால் உதைத்தனர். நான் வலி தாங்காமல் கத்தும் போது நான் கத்திய சத்தம் பக்கத்திலிருந்த என் மனைவிக்கும், என சகோதரிக்கும் கேட்டிருக்க வேண்டும். நான் கத்தும் போதெல்லாம் அவர்களும் கத்திக் கொண்டிருந்தார்கள்.."

"...என்மீது விழுந்த அடிகளும் உதைகளும் ஏற்படுத்திய வலிகளை விட, இவர்கள் ஏன் இப்படி அடிக்கிறார்கள் என்ற வினா ஏற்படுத்திய உறுத்தலே எனக்குக் கடுமையான வலியைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் அடிக்கும் அடியின் வலி மெதுவாகக் குறையத் துவங்கியது. அப்போது தான் எனக்குப் புரிந்தது நான் மயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று. விழித்துப் பார்த்த போது, நான் அந்த சிமெண்ட் தளம் போடப்பட்ட தரை‌யில் சுருண்டு கிடந்தேன். நான் கிடந்த அந்த சிமெண்ட் தரை‌ முழுவதும் எனது வியர்வைத் தடம்.

எனக்கு அந்த நொடியில் கடுமையான தாகம் எடுத்தது. அங்கே அருகில் நின்று கொண்டிருந்த காவலரிடம் குடிக்கச் சிறிது தண்ணீர்க் கேட்டேன். ஆனால் காவலர் எனக்குத் தண்ணீர் தர‌ மறுத்துவிட்டார். கடுமையான தாகம் ஏற்படுத்தும் துயர‌ம் மிகக் கொடுமையானது. ஒரு குவளை குடிநீருக்காக என் உயிரை‌யும் நான் மாய்த்துக்கொள்ளத் தயாரானது போன்ற மனநிலை. கடுமையான தாகமும் மிகுதியான உடல் வலியும் தந்தக் களைப்பினால், நான் அப்படியே கண்ணயர‌த் துவங்கினேன். அப்போது சுளீர் என்று முகத்தில் ஒரு வலி. அயர்ந்த எனது முகத்தின் மீது அருகில் நின்று கொண்டிருந்த காவலர் குளிர்ந்த நீரை‌த் தெளித்தார். ஏற்கெனவே கலங்கி இருந்த எனது விழிகளில் இருந்து பெருகிய கண்ணீரோடு தண்ணீரும் கலந்து உலர்ந்த எனது உதடுகளின் மீது பட்டது.

நான் எனது முகத்தில் வழிந்த தண்ணீரை‌ நக்கிக் குடித்து என் தாகம் தணிக்க முயன்றேன். அப்போதுதான் ஆய்வாளர் சுந்தர்ராஜன் என்பவர் அந்த அறைக்குள் வந்தார். வந்த வேகத்தில் வேகமாக ஓர் அடி, என் முகத்தில் அடித்தார். என் பல்லில் பலமாக அடிபட்டு இர‌த்தம் கொட்டியது. அந்த நொடியில் இருந்து பாதிக்கப்பட்ட பல்லைச் சிறைக்கு வந்த பிறகுதான் நானே பிடுங்கி எறிந்தேன்.

அந்த இர‌வின் ஒவ்வொரு நொடியும் எனக்கு நினைவிருக்கிறது. மிக நீண்ட வலி மிகுந்த கொடுமையான இர‌வுகள் என் வாழ்வில் வர‌ப்போகின்றன என எனக்கு அப்போதுத் தெரியாது. அந்த இர‌வில் தூங்கவிடாமல் செய்வதற்கு எனக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய வேலை என்னவெனில், என்னைத் தூங்கவிடாமல் துன்புறுத்துவதும், மீறித் தூங்கினால் முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்புவதும் தான். விசார‌ணை முறைகளில் தூங்கவிடாமல் துன்புறுத்தும் விசார‌ணை முறை, மனிதனை மிகவும் வதைக்கும் கொடுமையான ஒன்றாகும். களைத்த உடல் கண்ணயரும்போது அதைத் தடுத்தால் அந்த உடல் மேலும் பலவீனமாகி தாங்கமுடியாத உளவியல் சிக்கலுக்கு ஆட்படும். இப்படி உளவியல் சிக்கலுக்கு ஆட்படும் ஒருவனிடம் இருந்து எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற அனுபவங்கள் தந்த பாடங்களைத்தான் காவல்துறையினர் நாளது தேதிவரை‌ கடைபிடித்து வருகின்றனர். இறுதியாக விடியற்காலை என்னை தூங்கவிடாமல் துன்புறுத்திய காவலரே‌ கண்ணயர்ந்துவிட்டார். பாவம் அவரும் மனிதன் தானே. நானும் அப்படியே கண்ணயர்ந்தேன். வெளியே கொடூர‌மான இர‌வு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த பொழுது எனது அறையில் எனக்கு அறிமுகமில்லாத சுபா சுந்தர‌ம், ஓ.சுந்தர‌ம் மற்றும் சிலர் இருந்தார்கள். யார் யாரோ வந்தார்கள். சிவராசன் தெரியுமா, காந்தன் தெரியுமா எனக் கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தெரியாது என நான் சொன்ன அடுத்த நொடியில், அவர்கள் அடிக்கத் துவங்கிவிடுவார்கள். அன்று பகல் முழுக்க என்னை அடித்துக்கொண்டே இருந்தார்கள். என்னை விசாரித்த விசார‌ணை அதிகாரிகளுக்கு நேர‌ம், காலம் கிடையாது. இர‌வு பகல் என்றெல்லாம் அவர்கள் பார‌பட்சம் காட்டுவதில்லை. எப்போதெல்லாம் அவர்களுக்கு தோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னைக் கேள்விகேட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே‌ மாதிரி அடித்தால் வலி பழகிப் போய்விடும் என்பதற்காக, அவர்களுக்குத் தெரிந்த வித்தியாசமான நடைமுறைகளை எல்லாம் கடைபிடித்தார்கள்..."

"...என்னைக் கைது செய்து மூன்றாம் நாள் மதியம் என்று நினைக்கிறேன், சிவராசன் எங்கே எனக் கேட்டு என்னை அடித்துக் கொண்டிருந்த விசார‌ணை அதிகாரிகளுக்குத் திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. என் இர‌ண்டு கால்களையும், சேர்த்து கட்டத் துவங்கிய அவர்களின் எண்ணம் குறித்து நான் புரிந்துக் கொண்டேன். நான் ஒத்துழைக்க மறுத்தேன். இருந்தும் அவர்கள் என்னை விடவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தி தலைகீழாக என்னைத் தொங்கவிட்டார்கள். பலமற்ற கயிறு போலும், கயிறு அறுந்து நான் கீழே விழுந்தேன். எனக்கு முதுகில் பலமாக அடிபட்டது. நூறு ஊசிகளை எடுத்து நடு முதுகில் குத்தியதைப் போன்று மிகக் கொடுமையான வலி. வலியின் மிகுதி எனக்கு மயக்கத்தைத் தந்தது. மயங்கினேன். கடுமையான உடல்வலியும், கொடுமையான குடிநீர்த் தாகமும் ஒன்றுக்கொன்று உடன்பிறந்தவைப் போல் என்னை உலுக்கி எடுத்துவிட்டன.

மயங்குவதும், மயக்கம் தெளிய காவலர்கள் முகத்தில் தண்ணீர்த் தெளிப்பதும், அந்தத் தண்ணீரில் நான் நாக்கை நனைத்துக் கொள்ளுவதுமாக நேர‌ங்கள் கழிந்தன. எதன் பொருட்டும் காவலர்கள் அடிப்பதை நிறுத்தவே இல்லை. நேர‌ம் அதிகரிக்க என் முதுகு வலியின் தீவிர‌ம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. நான் வலி தாங்க முடியாமல் கத்திக் கதறிக் கொண்டே இருந்தேன்…”

"...சிபிஐ யின் விசார‌ணை முறை என்பது மிகத் தனித்துவமானது. பல்வேறு குழுக்கள், பல்வேறு விசார‌ணை முறைகள், குறிப்பாக டி.ஐ.ஜி. ராஜூ தலைமையில் இருந்த டி.எஸ்.பி.சிவாஜி, ஆய்வாளர் இர‌மேஷ், ஆய்வாளர் மாதவன், ஆய்வாளர் இக்பால் மற்றும் சிலர் இருந்த அந்தக் குழுவினரை‌ என்னால் எப்போதும் மறக்க இயலாது. ஏனெனில், விதவிதமாக அடிப்பதற்கும், வகைவகையாக துன்புறுத்துவதற்கும் பெயர் போன குழு அது. இர‌ண்டு கை விர‌ல்களுக்கு இடையே பேனாவை அழுத்திப் பிடித்துக் கொண்டு பேனாவைத் திருப்புவது. இர‌ண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு நாற்காலியில் உட்காருவதைப் போன்று நிற்கச் சொல்லி, சிறிது நேர‌ம் நின்றதும் தசை பிடித்து வலிக்கும்போது, பின்புறம் லத்தியால் அடிப்பது போன்ற பலவிதமான சித்திர‌வதைகள்..."

"...உண்மையைக் கேட்பதற்கு உலகிற்குச் செவிகள் இல்லை. அதே உலகிற்கு பொய்களைப் பர‌ப்ப ஆயிர‌ம் உதடுகள் உண்டு என்பதை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர‌த் துவங்கி இருந்தேன். எங்களை அழைத்து வருவது தெரிந்து நிறைய பத்திரிகைக்கார‌ர்களும், புகைப்படக்கார‌ர்களும் அங்கே குழுமியிருந்தார்கள். உண்மை எதுவென அறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும் யாருக்குமே அங்கு விருப்பமில்லை. மாறாக, மறைந்த இராசீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகள் யாöர‌ன கண்டுபிடிக்கப்படாமல் இருந்த வெற்றிடத்தை எதைக்கொண்டேனும், எவரை‌க் கொண்டேனும் நிர‌ப்பிவிட வேண்டும். இல்லையேல், மாபெரும் வல்லாதிக்க நாடாக, வளரும் நாடுகளின் தலைவனாக விளங்கும் இந்தியாவின் புலனாய்வுத் துறைக்கு அது மிகப்பெரிய களங்கமாக விளங்கும் என்பதற்காகவே இந்த அவசர‌மும், மூர்க்கமும் நிறைந்த தவறான முடிவு..."

"...ஈழத்திலிருந்து அகதிகளாக என்னுடன் வந்த ஜெயக்குமார், அவர‌து மனைவி சாந்தி, அவர்களது மகன் பார்த்திபன் ஆகியோரை‌, நான் கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்குப் பின்னர் கைது செய்திருந்தார்கள். என் கண் எதிரே‌ பல முறை ஜெயக்குமார் குடும்பத்தினரை‌ச் சித்ர‌வதை செய்யும் போது நான் மிகவும் துயருற்றுக் கண்ணீர் சிந்தினேன். ஜெயக்குமார் மனைவியும் , என் சகோதரி முறையிலான சாந்தி உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் விடுதலை அடைந்தது எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த ஆறுதலை அளித்தது.

என்னால் என்னையே காப்பாற்றிக் கொள்ள இயலாத மிகத் துயர‌மான சூழலில் நான் என்னோடு வந்த உறவினர் குடும்பமான ஜெயக்குமார் குடும்பம் படும் பாடுகளைக் கண்டு கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது..."

"...தாங்கள் சொல்வதை உண்மையென என்னை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும் என்ற மூர்க்கத்தில் டிஐஜி.சிறிக்குமாரும், அவருடைய ஆட்களும் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில் உள்ள குளிரூட்டப்பட்ட அறைக்கு இழுத்துப் போனார்கள். இருட்டாக இருந்த அந்த அறையில் கூர்மையான பனிக்கட்டி மீது என்னை நிற்க வைத்து விட்டு குளிர்சாதனத்தின் குளிரூட்டும் சக்தியை அதிகப்படுத்தினார்கள். நான் அந்த பனிக்கட்டி மீது நிற்கும் போது உடலெல்லாம் எனக்கு கடும் வலி. உயிரே‌ என்னை விட்டு பிரிவது போன்ற அவஸ்தை. நேர‌ம் கழியக்கழிய என் உடல் குளிரால் விறைக்கத் துவங்கிவிட்டது. குளிரால் விறைத்துப் போன என்னை அடித்துக் கொடுமை செய்தார்கள். அவர்கள் சொல்லும் பொய்யை ஒப்புக்கொண்டால் வழக்கு முடிந்தவுடன் அந்த வீடு எனக்கே கிடைத்து விடும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார்கள். நான் உறுதியாக மறுக்கவே, என்னை அடித்துக் கொண்டே இருந்தார்கள். அந்த இர‌வும் என்னை தூங்க விடவில்லை..."

"...அந்த காலக்கட்டத்தில் சிக்கிய யாராவது ஒருவரை‌ இழுத்து வந்து அங்கு அடித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வேளை அவர்களுக்கு அடிக்க ஆள் கிடைக்காவிட்டால் அதிகாரிகள் மாதவனும், ரமேசும் என்னை அழைத்துக் கொண்டு போய் ஏதாவது கேட்டு அடிப்பார்கள்..."

"...இந்திய நாட்டின் முன்னாள் பிர‌தமர் ஒருவரின் கொலை வழக்கு மிகவும் ஒருதலை சார்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என அறிய யாருக்குமே விருப்பமில்லை. இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த புலனாய்வுத் துறையினர், தாங்கள் புனைந்த ஒரு கதைக்கு கதாப்பாத்திர‌ங்கள் தேடினர். அந்தக் கதாப்பாத்திர‌ங்களாக சிக்கிக் கொண்டவர்கள்தாம் நாங்கள். உண்மையில் எனக்கு அமர‌ர் இராசீவ் காந்தியின் மீது பரிதாபம் தான் மிஞ்சுகிறது. ஒரு வல்லாதிக்க நாட்டின் முன்னாள் பிர‌தமர் கொலையின் உண்மைகளை அறிய யாருக்குமே விருப்பமில்லை, என்பதுதான் எத்தனைத் துயர‌மான விடயம்..."

"...தடா சட்டத்தின் கீழ் நான் அளித்ததாகக் கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்பது காவல்துறையினர் என்னை சித்திர‌வதைகள் செய்து, பலாத்கார‌மாகப் பல வெற்றுத் தாள்களில் கையெழுத்துப் பெற்றது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்கள் தாங்களாகவே தயாரித்தனர்' என்று என் போலிசு காவல் முடிந்து நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்ட போது நீதிமன்றத்தில் மனுகொடுத்தேன். நீதிபதி, வழக்கு விசார‌ணையின் போது விசாரிப்பதாகக் கூறினார். ஆனால் வழக்கு விசார‌ணை நடைபெற்ற தடா நீதிமன்றத்தில் இந்த மனு விசார‌ணைக்கு வர‌வே இல்லை..."

"...இராசீவ் காந்தி கொலை என்பது பலவிதமான இர‌கசியங்களைக் கொண்ட ஒரு குற்ற நடவடிக்கையாகும். ஒரு நாட்டின் முன்னாள் பிர‌தமரின் கொலையில் தொடர்புடைய, சந்தேகிக்க வேண்டிய பலவித கார‌ணிகளை இந்திய புலனாய்வுத்துறை வேண்டுமென்றே நிராகரித்தது. தாங்கள் முடிவு செய்திருக்கும் இந்த வழக்கின் பாதையில் இருந்து சற்றே விலகி உண்மையைக் கண்டெடுத்துவிடக் கூடாது என்பதில் இந்தியப் புலனாய்வுத்துறை மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக அடையாளம் காட்டப்பட்ட பலரும் என்னைப் போலவே சிக்கிக் கொண்டவர்கள்தாம்…”

இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருப்பது புத்தகத்திலிருந்து ஆங்காங்கே சில பகுதிகள் மட்டும்தான். முழு புத்தகமும் மனித உரிமைகளைப் புறந்தள்ளிய, உண்மைகள் குறித்து சிறிதும் அக்கறையில்லாத சிபிஐ-ன் விசாரணை முறைகளையும், அதிலிருந்த ஓட்டைகளையும் பேசுகிறது.

வழக்கறிஞர் தடா சந்திரசேகரரிடம் இராபர்ட் பயஸ் அளித்த வாழ்க்கை மற்றும் வழக்குக் குறிப்புகளை, வழக்கறிஞர் மணி.செந்தில் மிகச் சிறப்பானதொரு புத்தகமாக ஆக்கியுள்ளார்.

விசாரணை என்ற பெயரில் இராபர்ட் பயஸ் அனுபவித்த சித்திரவதைகளை அதன் வலியை வாசகர்களுக்குக் கடத்துவதில் மணி செந்திலின் மொழியாளுமை பெரிதும் துணை நின்றிருக்கிறது.

இராஜீவ் சர்மா எழுதிய புத்தகம் பலத்த எதிர்பார்ப்புடனும், பெரும் ஆராவரத்துடனும் வெளியாகி விட்டது. உண்மை எப்போதும் ஆர்ப்பரிப்பதில்லை; அடங்கியே இருக்கிறது. மணி செந்தில் எழுதிய புத்தகமும் அதுபோலத்தான்.

மக்களிடம் நாம் எதை கொண்டு செல்லப் போகிறோம்?

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15190&Itemid=263)

நன்றி.- கீற்று.காம் (

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்


“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

இனி..விளைவதில் தான் இருக்கிறது.. விதைப்பது .


இறுதியாக உலகத்தின் மெளனம் கலைக்கப்பட்டிருக்கிறது.


ஐ.நா. குழுவினரின் அறிக்கைக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரானப் போர் எனவெல்லாம் அமைதிப் புறாக்களாக கூவியவர்கள் இன்று மெளனம் காக்கிறார்கள். அடுக்கடுக்காய் குவிந்த போர்க்குற்றப் புகைப்படங்களும்,காணொளிகளையும் கண்டு காணாமல் இருந்த உலகத்தின் உதடுகள் எல்லாம் இப்போதுதான் இலேசாக முணுமுணுக்க துவங்கியுள்ளது . இதோடு மட்டுமல்ல இன்னும் காண சகிக்காத காட்சிகள் பல இருக்கின்றன என சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இங்கே தேர்தல் முடிந்து அலை ஓய்ந்த கடலாய் தமிழகம் இருக்கிறது. 7 கோடி தமிழர்கள் வாழும் தாயக தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மக்களுக்கு முன்பாக என்ன பேசுவது என்ற நிலையில் மருங்கிக் கொண்டு தவிக்கிறார்கள்.


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர் இணைக்கப்பட்டதற்காக தேர்தலுக்கு பின் முதன் முதலாக 27-04-2011 அன்று கூடிய தி.மு.க வின் உயர்நிலை செயல் திட்டக்குழு போகிற போக்கில் ஐ.நா குழு வரைந்த அறிக்கையின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டும் காணாத அளவிற்கு ஒரு தீர்மானத்தினை வரைந்திருக்கிறது. இவர்களின் இலட்சக்கணக்கான தீர்மானங்களின் கதி என்ன, அதன் மதிப்பு என்ன, அதை இவர்களே பின்பற்றும் லட்சணம் என்ன என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.


இத்தனை அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நம்மையெல்லாம் புருவத்தினை தூக்க வைத்திருக்கிறது அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கை. தேர்தலுக்கு முன் பிரச்சார சமயத்தில் இந்த அறிக்கை வந்திருந்தால் ஓட்டுக்காக பேசியதாக நினைத்துக் கொள்ளலாம் . ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் இந்த அறிக்கை வெளியாகி இருப்பதுதான் நமது ஆர்வத்தினை தூண்டுகிறது. பார்ப்போம். மாற்றம் என்பதுதான் மாறாத தத்துவம் என்பதில் நம்பிக்கை கொள்வோம். வழக்கம் போல நமது நம்பிக்கைகள் கொடநாட்டின் குறட்டையில் முடியாமல் இருந்தால் சரி.


எதைப் பேசினாலும் 1956-க்கு பறந்து போய் பழங்கதைகள் பேசும் திமுக தலைவர் கருணாநிதி ஜெயலலிதாவின் கடுமையாக அறிக்கைக்கு பதில் சொல்லத் தெரியாமல் ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகள் விட்டு குழம்பியும்..குழப்பியும் போனார். 40 எம்.பிக்களை ராஜினாமா செய்ய சொன்னோம், போர் நின்று விட்டதாக பொய் சொன்னோம், மழை நின்றது..தூவானம் நிற்கவில்லை என்றெல்லாம் இரக்கமில்லாமல் ஒரு பொருட் இருமொழி பேசினோம் என்பதெல்லாம் திமுக தலைவருக்கு நன்றாகத் நினைவிருக்கும்.டாஸ்மார்க்கில் குடித்து விட்டு, கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்த்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட மக்கள் இவற்றையெல்லாம் மறந்திருப்பார்கள் என நினைத்திருப்பார் போலும் .


சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் ஈழம் மலர உறுதுணையாக நிற்பேன் என ஜெயலலிதா பேசியதை நாடகம்..நடிப்பு.. என்றெல்லாம் துடிதுடித்த கலைஞர் ஆதரவுப் பெற்ற ஆன்றோர் பெருமக்களால் , ஒரு நடிப்பிற்காகவேனும் ஈழத்தமிழர்களுக்காக ஈழம் அடைய பாடுபடுவேன் என திமுக தலைவரை பேச வைக்க, அவரது கட்டை விரலை கூட அசைக்க வைக்க முடியவில்லையே..? .. சரித்திரம் படைத்த அந்த’ சாகும் வரை உண்ணாவிரத்தினை’ பற்றி இச்சமயத்தில் யாராவது நினைக்கக்கூடும். சிம் கார்டு இல்லாத அலைபேசியில் காரைக்குடி அண்ணாச்சியுடன் பேசியதாக கூறி போர் நின்று விட்டது என அறிவித்து விட்டு மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்று விட்ட சாதனையை யாராவது நினைக்கக் கூடும். “20 ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருந்த போரை ஒற்றை நொடியில் நிறுத்திய புறநானுற்றின் புத்துலகு விளக்கமே” என்றெல்லாம் திமுக தலைமையே தனக்குத் தானே சுவரொட்டி அடித்து சுவரை நாறடித்த கதையை யாராவது யோசிக்க கூடும். இவற்றையெல்லாம் நாடகம் ..நடிப்பு என்றெல்லாம் நாம் குறுக்கி விட முடியாது. இவை எல்லாம் அதற்கு மேலான ‘பெர்ப்பாமென்சுகள்’. தமிழ் ஈழம் என்ற நாடு இப்பூமிபந்தில் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஒரு நாடாக இருந்த போது ஆதரிக்க மனமில்லாமல் சகோதர யுத்தம். என்றெல்லாம் சாக்கு சொல்லி புறக்கணித்த திமுக தலைவருக்கு இப்போது மட்டும் தனி ஈழம் தீர்வாக தோன்ற காரணம் இதை வைத்து 2 ஜி க்கு மாற்றாக காங்கிரசை மிரட்டலாம் என்றுதான் .


நம் தலைவர்கள் வைத்திருக்கும் ‘சிங்களப் பற்று’ மிகவும் புகழ் வாய்ந்தது. ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் இவர்களின் இருதய துடிப்பே இருக்கிறது என்பது போல இருக்கின்றன இவர்களது நடவடிக்கைகள். தமிழரும், சிங்களரும் சம நீதி பெற்று வாழ்வதுதான் தனது விருப்பம் என அறிவித்துள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை கண்டு சிங்களர்களுக்கே புல்லரிப்பு ஏற்பட்டிருக்கும். அங்கே சாகக்கிடக்கும் தமிழனுக்கு சம நீதி என்ன ..எதுவும் கிடைக்காது என்பது இவர் அறியாததா..? . இப்போது இவர் தான் இப்படி என்றால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித்தலைவி வெளியிட்ட அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் என்றுதான் வருகிறதே ஒழிய தப்பித் தவறி ஈழம், ஈழத்தமிழர்கள் என்ற வார்த்தைகளே காணோம். நம்மினத்தினை ஒட்டு மொத்தமாக சிங்கள பேரினவாதம் அழித்துப் போட்ட பின்னரும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இவர்கள் காட்டுகிற ஆர்வம் சிங்களர்களை மிஞ்சியது ஆகும்.


நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலின் போது காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தமிழுணர்வாளர்கள் அனைவருக்கும் இருந்தது. ஆனால் காட்டிய வழிகள் திசைக்கொன்றாய் திரும்பி நின்றதுதான் முரணாக இருந்தது. காங்கிரசினை தோற்கடிக்க வேண்டும். சரி. அதற்கு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் முடிவெடுத்தார்கள். காங்கிரசு எதிர்ப்பாளர்கள் காங்கிரசினை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்தால் அது காங்கிரசுக்கு ஆதரவாக முடியுமே என்ற கேள்விக்கு பதிலில்லை. இன்னும் சிலர் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும், ஆனால் காங்கிரசை எதிர்த்து நிற்கிற பிரதான கட்சிக்கு ஓட்டளிக்க கூடாது.டெபாசிட்டே பறி போகின்ற சுயேட்டைக்கு ஓட்டளித்து ஓட்டுக்களை பிரித்து காங்கிரசினை வெற்றிப் பெற செய்ய வேண்டும் என வித்தியாசமான முடிவெடுத்தார்கள். இன்னும் சிலர் இந்திய தேசியம் நமக்கு எதிரானது. அதனால் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் இத் தேர்தலினை நாம் புறக்கணிக்க வேண்டும். மாநில அரசதிகாரத்தால் எதுவும் இயலாது, இந்தியாவினை விட்டு தமிழ்நாடு பிரிந்து வந்த பிறகுதான் ஈழம் சாத்தியம் என்றெல்லாம் மிக கச்சிதமாக யோசித்து தேர்தலை புறக்கணித்தார்கள். இதில் என்ன சோகம் என்றால்…மக்கள் யாரையும் மதிக்காமல் வழக்கத்திற்கு மாறாக 80% சதவீதத்திற்கு மேலாக வருகை தந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.


மக்களை வெல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. மக்களிடம் மாற்றம் நிகழ்ந்தாலொழிய மண்ணில் மாற்றம் நிகழப் போவதில்லை. சிறிய இலக்குகளை அடைந்து அது வாயிலாகவே பெரிய இலக்குகளை அடைவதென்பதுதான் இதற்காக வழி. காங்கிரசு தோற்க வேண்டும் என்றால் எதிர்த்து நிற்கிற பிரதான எதிர்க்கட்சி வெற்றிப் பெற்றாக வேண்டும். இது தான் இருந்த ஒரே வழி. பல எதிரிகளை ஒரே நேரத்தில் வீழ்த்தியெறிவதற்கான அரசியல் பலமும், மக்கள் திரளும் இன்னமும் தமிழ் அமைப்புகளுக்கு கைக்கூடாத நிலையில் காங்கிரசினை எந்த விதத்தில் வீழ்த்தலாம் என சிந்திருக்கவேண்டும்.


அதைத்தான் தன்னால் இயன்றளவு நாம் தமிழர் அமைப்பினர் செய்தார்கள். காங்கிரசினை வீழ்த்த நேரடியாக களம் கண்ட அமைப்பினர் இந்த தேர்தலில் இவர்கள் தான். வேலூர், பாபநாசம் சென்னை, இராமநாதபுரம் போன்ற பல தொகுதிகளில் நாம் தமிழர் அமைப்பினர் மீது காங்கிரசார் நேரடியாக தாக்குதல் நடத்தியதும், வீரமிக்க இளைஞர் கூட்டம் எதிர்த்து நின்று போரிட்டதும் நடந்தது . செந்தமிழன் சீமான் அவர்களின் உணர்ச்சிக்கரமான உரைகள் காங்கிரசு போட்டியிட்ட இடங்களில் வெடிகுண்டுகளாய் விழுந்தன. கடைசிநேரத்தில் சீமானை எதிர்த்து காங்கிரசு சார்பாக களமிறக்கப்பட்ட எஸ்.வி.சேகர் “காங்கிரசைப் பற்றி தெரியுமா..?, இந்திய சுதந்திரத்திற்காக சீமானா குரல் கொடுத்தார்..?” என்றெல்லாம் பேசி விட்டு காங்கிரசை விட்டு தங்கபாலு நீக்கியவுடன்” சீமானாவது ஒவ்வொரு தேர்தலில் மட்டும்தான் காங்கிரசை அழிக்க பாடுபடுவார். ஆனால் தங்கபாலு எப்போதும் காங்கிரசை அழிக்க பாடுபட்டு வருகிறார் ,எனவே , ஆயிரம் சீமான்களுக்கு சமமானவர் தங்கபாலு” என்று காமெடி செய்து கலைந்துப்போனார்.


ஒரு வழியாக தேர்தல் முடிவடைந்து முடிவடைந்து முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கின்றன. மக்கள் திரண்டு வந்து தன்னெழுச்சியாக பொங்கி வந்து வாக்களித்தது ஏதோ அருவ அலை அடித்திருக்கிறது என்பதற்கு அறிகுறியாக இருக்கிறது. முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் தமிழர்கள் ஒன்று படும் காலம் வந்து விட்டது. சாதி,மதம்,அமைப்பு கடந்து இணைய வேண்டிய இடம் வந்து விட்டது. இல்லையேல் இனம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும் . அதுதான் இத்தனை துயரங்களுக்கு பின்னர் நாம் கற்கிற பாடம்.


விளைந்தது எல்லாம்

நாம் ஏற்கனவே விதைத்தது.

இன்று விதைப்பது எல்லாம்

நாளை விளைவது – சீனப் பெருமொழி