எம்.வி.வெங்கட்ராம்..... பின்னிரவின் மழை…




மே 18...

காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு...இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்....அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்...

தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது…
அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து தான் போனேன்…இருக்காதா பின்னே…..


எம்.வி.வி என்று அழைக்கப் பட்ட எம்.வி .வெங்கட்ராம் என்ற அந்த எழுத்தாளரின் வீச்சை நானும் உள்வாங்கி இருக்கிறேன்…அவருடைய காதுகள் என்ற நாவல் என் பல நாள் தூக்கத்தை திருடி இருக்கிறது…வேள்வி தீயும் ,அரும்பும் என்னை மிகவும் ஏற்கனவே பாதித்து இருக்கின்றன….அவருடைய வியாசர் படைத்த பெண்மணிகள் –மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் குறித்த மீள்புனைவு..ஒரு பெண் போராடுகிறாள் என்ற மிகப் பெரிய நாவலும் வாசிக்க வேண்டிய ஒன்றுதான்…காதுகள் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது…குழந்தைகளுக்காக பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்ற தொகுதியில் பல புத்தகங்களை மிக எளிமையாக ,தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்ததும் எம்.வி.விதான்.

எம்.வி.வி கும்பகோணத்தில் அறுபதுகளில் முகிழ்ந்த இலக்கிய விருட்சங்களில் மிக முக்கியமானவர்.தி.ஜானகிராமன்.,கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி,கு.பா.ரா என்று கும்பகோணம் பல பெருமைகளின் உச்சத்தை எட்டியுள்ளது…தி.ஜானகிராமனின் புகழ் பெற்ற நாவலான மோகமுள்ளில் எம்.வி.வி ஒரு கதாபாத்திரமாகவே வருவார்..

எம்.வி.வியும் சரி…அவர்களது நண்பர்களும் சரி..தேர்ந்த கலாரசிகர்கள்..பெண்களை மிகவும் அசலாக பதிவு செய்தவர்கள்….கொந்தளிக்கும் காமமும்..குமுறும் வாழ்க்கை முரண்களுமே அவர்களின் கதைகளுக்கான அடிநாதமாக விளங்கின…

குறிப்பாக எம்.வி.வியின் காதுகள் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்று…காதுக்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களையும்…அதை சார்ந்த கனவு வயப் பட்ட மனநிலையையும் விவரிக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப் பட்ட உளவியல் சார்ந்த நாவல்களில் சிறப்பானது…எம்.வி.வியின் சுயம்தான் இந்த நாவல் என்ற தகவலும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று…

எம்.வி.வி தன் எளிய கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்க இயலா உணர்வுகளை தன் கதைகளில் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்…பெரும்பாலும் கும்பகோணத்தில் வாழும் செளராஷ்டிரா மக்களின் வாழ்க்கையை தன் கதைகளின் களமாக வைத்துக் கொண்டு எழுதிய எம்.வி.வி, வாழுங்காலத்தில் எவ்வித இலக்கிய அரசியலுக்கும் சிக்காதவர்…

எம்.வி.வியின் எழுத்துக்கள் பின்னிரவின் மழை போல அதிகம் அறியப் படாதவை..அற்புதம் மிக்கவை…

அவரின் கதைகள் மனிதனின் ரகசிய வேட்கைகளை போகிற போக்கில் அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்கின்றன…அதனால் தான் எம்.வி.வி நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளராக என்றும் இருக்கிறார்…அவருடைய பல கதைகளை என் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாசித்து வந்திருக்கிறேன்…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அவருடைய கதைகள் ஒவ்வொரு அர்த்தத்தை கற்பிப்பது எனக்கு புரிபடாத ஆச்சர்யமாக இருக்கிறது…அவருடைய எழுத்தில் உக்கிரம் இல்லை…மாறாக யாரோ ஒருவர் நம் அருகே அமர்ந்து மென்மையான குரலில் ,நம் தோளில் கைப் போட்டவாறே ,நமது ரகசிய ஆசைகளை சற்றே கூச்ச தொனியில் சொல்வது போன்ற வகையில் அமைந்திருக்கும்.

எனவே தான் தேனுகா அழைத்த போது நான் மிக உவகையுடன் சம்மதித்தேன்….கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் இருந்து தேனுகா என்னை மற்றும் சில நண்பர்களை தோப்பு தெருவில் இருக்கும் எம்.வி.வி வீட்டிற்கு அழைத்து சென்றார்….

வெயில் மழை போல அமைதியாக , அதே சமயம் உக்கிரமாக பெய்து கொண்டிருந்தது…தோப்புத் தெருவில் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திய தேனுகா எங்களையும் அங்கேயே வண்டியை நிறுத்த சொன்னார்…

சாலையில் சிறுவர்கள் கோடை வெயிலை போர்த்திக் கொண்டு வியர்க்க ,வியர்க்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்…அந்த வீட்டின் மும் நாங்கள் கூடியதை கண்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பிரச்சனை போல ஆர்வமாக எட்டி பார்த்தனர்…

பழமையான வீடு…வீட்டின் முகப்பில் பெரிய நாமம் இடப் பட்டு இருந்தது…சற்று உயரம் குறைவான திண்ணை…பல இலக்கிய மேதைகளை தன் மடியில் இருத்திக் கொண்ட அந்த திண்ணை புழுதி படர்ந்து கிடந்தது..நான் ஆசையாய் அதில் உட்கார்ந்து கொண்டேன்…இங்குதான் எம்.வி.வியும் ,தி.ஜாவும் அமர்ந்து மோகமுள்ளின் யமுனாவை பற்றி பேசி இருப்பார்களோ…?
வீட்டின் கதவு சற்று லேசாக திறந்திருந்தது…வீட்டில் வறுமை தெரிந்தது.செளராஷ்டிரா இனத்து மக்களுக்கு உரித்தான பாணியில் கட்டப் பட்ட வீடு..வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் வெயில் தனிமையாய் இறங்கிக் கொண்டிருந்தது.தேனுகா உள்ளே இருந்து யாரையோ அழைத்தார்…கைலி கட்டிய வாறு ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.வாங்க…வாங்க ..உற்சாகமாக அழைத்த அவரை தேனுகா எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…அவர் எம்.வி.வியின் மகன்.எங்களுடன் கூச்சத்துடன் கைக்குலுக்கினார்…பிறகு தேனுகா நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்தார்…


மறைந்த…அதிகம் புகழ் பெறாத …அமைதியான ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய போன எங்களை அவர் மிகவும் ஆச்சர்யமாகவும் ,வியப்பாகவும் பார்த்தார்…தன் வீட்டிற்கு முன்னால் கூடிய இச்சிறு கூட்டம் தன் தந்தையின் எழுத்துகளின் மீதுள்ள காதலினால் வந்துள்ளது என்பது அவருக்கு பெருமையாக இருந்தது,,,,

நான் அவரின் நடுங்கிய கைகளை பிடித்துக் கொண்டு….நாங்கள் உங்கள் தந்தையின் ரசிகர்கள்…மாபெரும் எழுத்தாளர் அவர் என்று நான் சொன்னவுடன் கூச்சத்துடன் நன்றி என்றார் அவர்…வந்திருந்த நண்பர்களும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்…அனைவரின் நினைவுகளிலும் எம்.வி.வியின் எழுத்துக்கள் பசுமையாக ஒளிர்ந்தன….

நாம் எல்லோரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் என்று தேனுகா சொன்னவுடன் இருங்க ..நான் உள்ளே போய் வேட்டி கட்டிகிட்டு வந்திர்றேன் என்று ஓடினார் எங்கள் மாபெரும் எழுத்தாளரின் மகன்….

வரும் போது அவர் எம்.வி.வி எழுதி விருது பெற்ற காதுகள் நாவலையும்…வேள்வி தீ நாவலையும் எடுத்து வந்தார்…நான் அதை உடனே ஆசையாய் வாங்கிப் பார்த்தேன்…நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் எம்.வி.வியின் கையெப்பம் பச்சை வண்ண மையில் மங்கி இருந்தது…எம்.வி.வி தன் எழுத்துக்களை தானே வாசித்த புத்தகம் அது என்பதால் எனக்கு அது சற்று பெருமிதமாகவும் இருந்தது….

நாங்கள் மிகவும் மகிழ்வுடனும் ,நெகிழ்ச்சியுடனும் கூடியிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தெருவே வேடிக்கை பார்த்தது.பிறகு வீட்டிற்கு அருகே இருந்த இடிந்த பழமையான ஒரு கோவிலுக்கும் அழைத்துச் சென்றார் தேனுகா…மாலை வேளைகளில் எம்.வி.வி அந்த கோவிலின் படிக்கட்டிகளில் அமர்ந்திருப்பாராம்…அங்கேயும் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்……. நாம் இன்னொரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது என்று தேனுகா சொன்னார்..நாங்கள் மீண்டும் எங்களின் அன்பினையும், மரியாதையினையும் அந்த மாபெரும் எழுத்தாளனின் மகனுக்கு தெரிவித்து விட்டு….நாங்கள் தேனுகா வழியில் சென்றோம்.

கும்பகோணத்தின் குறுகலான பல தெருக்களில் எங்களின் இரு சக்கர பயணம் நீண்டது…
இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தது கும்பகோணத்தின் ராமசாமி கோவிலுக்கு…நேரம் நடுப் பகலை கடந்து விட்டு இருந்ததால் கோவிலின் கதவு அடைக்கப் பட்டிருந்தது…ஒரு சிறிய நுழைவாயில் மட்டுமே திறந்திருந்தது..அதன் முன் நின்ற வாட்ச் மேனிடம்..தேனுகா உள்ளே செல்ல அனுமதிக் கேட்டார்…சன்னதி எல்லாம் முடியாச்சே…என்று சொன்ன வாட்ச் மேனிடம் ...நாங்க சாமி கும்பிட வர்ல…இங்கு அதிகமாக வந்து போன ஒருத்தவரின் நினைவுக்காக வந்திருக்கிறோம்…கொஞ்சநேரம் முன் பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டு போயிடுறோம்…என்று சொன்ன தேனுகாவை வாட்ச்மேன் தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தார்…

வெளியே வெயிலின் உக்கிரம் கோவிலுக்குள் தெரியவில்லை.அற்புதமான பல சிற்பங்கள் நிறைந்த கோவில் அது..தேனுகா அனைத்தையும் உற்சாகமாக விளக்கியபடி வந்தார்..கோவிலின் இடது புறத்தில் இருந்த ஒரு மேடையில் அனைவரும் அமர்ந்தோம்..அங்குதான் எம்.வி.வியும் ,தேனுகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம்..எம்.வி.வி.க்கு மிகவும் பிடித்த இடமாக ராமசாமி கோவில் இருந்திருக்கிறது….

அங்கு உட்கார்ந்து மீண்டும் எம்.வி.வியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…எம்.வி.வியும் எங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் அனைவருக்குமே தோன்றியது…

நம் தமிழ் சமூகத்தில் எம்.வி.வி போன்ற எளிமையான ,அதே சமயம் அசலான பல இலக்கிய மேதைகள் வாழ்ந்திருக்கின்றனர்..எழுதுவதும்…அதில் இன்பம் துகிப்பதுமான ஒரு மனநிலையில் தன் படைப்புத் தளத்தில் பல சாகசங்களை எவ்வித விளம்பரமும் இன்றி நிகழ்த்தி இருக்கின்றனர்…மனிதனை மிக அருகில் நின்று …ஒரு சிற்பத்தை செதுக்குவது போல ..அணுஅணுவாய் தங்கள் படைப்பு உலகை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்…..

ஆனால் அவர்களிடம் விளம்பரம் இல்லை…விருதுகள் கூட அதிகமில்லை…வருமானம் இல்லை..அதற்கான வழிகளை அமைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை…படிப்பதும்…
எழுதுவதுமே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது…எளிய மனிதர்களாய் பிறந்து…எளிய மனிதர்களாய் இறந்தும் போய் இருக்கின்ற மாமேதைகள் அவர்கள்…

தான் வாழுங்காலத்தில் புகழப் படுவதும் ,போற்றப் படுவதும் நிகழ்வது இலக்கியவாதிகளை பொறுத்த வரையில் ஒரு கனவுதான்..மேடையில் வைத்து இலக்கிய செம்மல்,வேந்தர் என்றெல்லாம் பட்டம் பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை விழா முடிந்து ,விழா நடத்தியவர்கள் காரினில் சென்று விட … வீட்டிற்கு திரும்பி செல்ல காசில்லாமல் டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து..நடத்துனரிடம் கெட்ட வார்த்தை திட்டு வாங்கி…அலுப்புடன் கதவை திறக்கும் மனைவியிடம் சலிப்பு வாங்கி…அப்பா என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலில் பார்த்த குழந்தைகளின் பார்வையில் வெறுமையை வாங்கி….வறுமையில் வீழ்ந்து கிடப்பதுதான் பெரும்பாலான நடை முறையாக இருக்கிறது…

இலக்கிய வாதிகளின் வீட்டை…அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அருங்காட்சியமாக வைத்து போற்றுகின்றன மேலை நாடுகள்…
ஆனால் நம் நாட்டிலோ …….

எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் மதிப்பில்லை….

சிந்தனையோடு நாங்கள் பிரிந்தோம்…

வெளியே வெயில் தளராமல் தாக்கிக் கொண்டிருந்தது…
வேக வேகமாக வீட்டிற்கு வந்து..அம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்தேன்….
வயிறு குளுமையாக ஆனது….

எம்.வி.வி எழுத்தும்…கோடைக்காலத்து குடிநீர் போலத்தான்…
வறண்ட வாழ்க்கையில்…உணர்வின் இருப்பை நினைவுப் படுத்துகின்றன அவை….

அம்பேத்கார் பிறந்த நாள்..கனவும்..நினைவும்..


"நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''

- டாக்டர் அம்பேத்கர்.

பேரன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உடைய நீலப் புலிகள் சமூக இயக்கத்தின் தலைவர் அய்யா T.M.உமர் பாரூக் அவர்களே..,

நீலப் புலிகள் இயக்கத்தின் மாநிலத் தலைவர்.., என் அண்ணன் ,என் வழிகாட்டி, என் மண்ணின் மைந்தன் ..வழக்கறிஞர் இளங்கோவன் அவர்களே….
நீலப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகிகளே ….வழக்கறிஞர் உறவுகளே,,,,
பெரியோர்களே…அருமை தாய்மார்களே ..உங்கள் அனைவருக்கும் இந்த இனிய மாலை வேளையின் மகத்தான வணக்கங்களை,வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒரு பொது உடைமை இயக்கத்துகாரான நான் இந்த மேடையில் மிகுந்த உரிமையோடு ஏறியுள்ளேன்….இந்த சமூகத்தில் புரையோடி போயிருக்கும் சாதி என்ற புற்று நோயை அழிக்க வல்ல அரு மருந்தென தோன்றியிருக்கும் எந்த ஒரு சமூக இயக்கமும் எங்கள் சகோதர இயக்கம் தான்.அந்த வகையில் நீலப் புலிகள் இயக்கத்தின் மீது என் அன்பை நான் இங்கு பதிவு செய்கிறேன்…

இதில் மற்றொரு முக்கிய விஷயம் அண்ணன் இளங்கோவன் ஆணையிட்டால் நான் எந்த மேடையானாலும் ஏற தயாராகி விடுவேன்…அது தூக்கு மேடையாக இருந்தாலும் கூட…..அந்த உரிமையில் …அந்த பற்றில் உங்களிடத்தில் என் அன்பை பகிர்ந்துக் கொள்ளவே இந்த மேடையிலே நான் ஏறியுள்ளேன்….

ஒரு மகத்தான ஒரு மனிதரை…உலகம் இது வரை பார்த்திராத, இனியும் பார்க்க துடிக்கின்ற ஒரு தலைவனின் நினைவுகளை,அவரது சிந்தனைகளை பகிர்ந்துக் கொள்ள நாம் இங்கு கூடியுள்ளோம்…

அண்ணல் அம்பேத்கார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு தலைவராக குறுக்கப் பட்டதில் இருந்தே நமக்கு வரலாற்றின் வஞ்சகம் தெளிவாக புரிகிறது.

தெற்கே தந்தை பெரியாரின் வீரமும்…வடக்கே அண்ணல் அம்பேத்காரின் தீரமும் இணையானவை……இருவரும் மிக நெருக்கமான கொள்கைகள் உடைய தலைவர்கள்.இந்து மதம் என்ற ஓரவஞ்சனை நிறைந்த கோட்டையை தகர்க்க பாடுபட்ட தளகர்த்தர்கள். கடைசி வரை ஒருவரை ஒருவர் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்து கொண்டவர்கள் இல்லை.

நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சூளுரைத்தார் அண்ணல் அம்பேத்கார். உலகத்தில் இந்த இந்து மதம் போன்ற மோசடியான ,அயோக்கியத்தனமான மதம் வேறு எங்கும் இல்லை….ஊருக்கு ஊரு சாமி…ஊருக்கு ஊரு பழக்க வழக்கங்கள்..

தோழர்களே…இந்து மதம் கடவுளின் தலையிலே உதித்தவனாக வருணிக்கின்ற பார்ப்பனன் யாராவது தீ மிதிக்கிறானா…அலகு குத்துறானா…..காவடி எடுக்கிறானா ..இல்லை…இப்ப சித்திரை மாசம் வேற ..ஊருக்கு ஊரு திருவிழா..தெருவுக்கு தெரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…..

இதுல நடக்குற ஒவ்வொரு சடங்கும் நாம தாழ்ந்தவனு நமக்கு நினைவூட்ட உண்டாக்கப் பட்டிருக்கு,,,,நல்லா சிந்திச்சி பாருங்க மக்களே…

ஏன் அய்யன் மாருங்க தீ மிதித்து ..அலகு குத்திக்க மாட்றான்…

சபரி மலைக்கு போற பசங்க நம்ம ஆளுங்கதானே..?

ஆனா பார்ப்பனர்கள் எல்லாம் கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெல் செட்டில்டா அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்…

ஆனா நம்ம சனம் இந்த நூற்றாண்டிலும் சாதகம் பார்த்து ,அலகு குத்தி ,காவடி தூக்கிட்டு இருக்கு.

இந்த கொடுமை உலகுல எங்கும் நடக்கல…இந்த பைத்தியகாரத் தனம் தான் நம்மள காலம் காலமாய் அடிமை படுத்தி வைச்சிகிட்டு இருக்கு.

கோவில் கட்டியது யாரு..நாம…கல்லு சுமந்தது யாரு நம்ம முப்பாட்டான்…தேரு கட்டினது யாரு…நம்ம தாத்தன்…ஆனா கோவிலுக்குள்ள சாமிய தொட்டு பார்க்கறதுக்கு நமக்கு உரிமை கிடையாது.சாமி சிலைய செதுக்குனது கூட நம்ம ஆளுதான்..ஆனா பார்ப்பான் ஒரு குடம் தண்ணியை அந்த கல்லு மேல ஊத்திட்டு சுக்கிலா பிரதம் பாடிட்டு அது சாமியாயிடிச்சின்னு சொல்றான் …நம்ம ஆளும் அதை போயி கும்பிட்டுட்டு தட்டுல காசு போட்டுட்டு வர்றான்….

முதல்ல நாம சாதிய விட்டு வெளியேறுணும்னு நினைச்சா ..நாம இந்துங்கிற நினைப்பை அழிக்கணும்….இந்த நூற்றாண்டிலும் நம்ம நாட்டுல இரட்டை குவளை முறை இருக்கே தோழர்களே….பெரியார் திராவிட கழகம்னு ஒரு சமூக இயக்கம் ..இங்க நீலப் புலிகள் இயக்கம் போல…ஒரு இயக்கம் கோவை மாவட்டத்துல உள்ள டீக் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கடை பிடிக்கப் பட்டு வருதுன்னு கடை அட்ரஸோடு போட்டு இருக்காங்க…..என்ன நடவடிக்கை இந்த அரசாங்காத்தினால எடுக்க முடிஞ்சது…?

இன்னிக்கும் சாதிய நம்புறான்..அரசியலுக்கு..ஓட்டு வாங்குறதுக்கு சாதிய நம்புறான்……பகுத்தறிவு இயக்கம்னு சொல்லிக்கிற திராவிட கட்சிகள் கூட சாதிய நம்பித்தானே கட்சிய நடத்துது..?

இதை த்தான்..இந்த மோசடித்தனங்களை தான் அண்ணல் அம்பேத்கார் அன்று எதிர்த்தார்..உன்னை இழிவு செய்கிற எதையும் உன் வாழ்க்கையில அனுமதிக்காதே ன்னு அந்த தலைவர் சொன்னார்…

ஆனா யாரு கேட்டா…..யாரு கேட்டா மக்களே..யாரும் கேட்கல…….

எந்த வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாமல் இந்த நூற்றாண்டிலும் சாமியாருகிட்ட ஏமாந்துகிட்டு தானே மக்களே இருக்கோம்…..

இந்து மதம் தான் உன்னை அடிமைப் படுத்துது,,உன்னை இழிவுப் படுத்துது…நீ தாழ்த்தப் பட்டவனு வீட்டுக்குள்ள ,கோவில்குள்ள ,கடைக்குள்ள நுழைய விட மாட்டுது….அப்புறம் எந்த இழவுக்கு இந்த மதத்த பிடிச்சிகிட்டு நாம அழுவுணும்..?

வீட்டுக்கு வீடு அம்பேத்கார் படத்த,பெரியார் படத்த மாட்டி வைச்சிருந்தா மட்டும் போதாது….நம்மை இழிவு செய்யுற இந்து மதத்த விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கணும்….இந்து மதம் என்கிற மோசடி தகர்க்கப் பட்டால் ….சாதி வேறுபாடு..உயர்ந்தவன்..தாழ்ந்தவன் என்கிற அனைத்தும் அடிச்சி வீழ்த்தப் படும்…

அதைத்தான் அண்ணல் அம்பேத்கார் செய்தார்…தன்னை இழிவுப் படுத்தின மதத்தை விட்டு வெளியேறினார்….

தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனி இட ஓதுக்கீடு ஆங்கில அரசு வழங்குவதை எதிர்த்து காந்தி அன்னிக்கு உண்ணா விரதம் இருந்தார்…அண்ணல் அம்பேத்கார் அவர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்துனாரு ….பேச்சு வார்த்தை தோல்வி…கோபமா வெளியே வந்த அம்பேத்கார நிருபர்கள் கேட்டாங்க….காந்தி இப்படி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தா செத்துடுவாரு……னு கேட்டாங்க..அதுக்கு அம்பேத்கார் ஒரு நல்ல விஷயத்துக்கு காந்தி தடையா இருக்குறத விட சாகலாம்னு துணிச்சலா சொன்னாரு,,,,,அதுதான் அம்பேத்கார்,,,எதிலும் ஒரு போர்க்குணம்…சமரசம் இல்லா மனநிலைன்னு வாழ்ந்தார்….

லட்சக் கணக்கான தலித் மக்களை அழைத்துக் கொண்டு புத்த மதத்தை அம்பேத்கார் தழுவிய போது சொன்ன வார்த்தை அப்பாடா …என் இழிவு நீங்கியதுனு…….எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்…


நான் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்பும் செய்தி இதுதான்…

நாம இந்துவா இருக்கின்ற வரைக்கும் இந்த இழிவும் ..,இந்த மூடத்தனமும் ,இருக்கும்…முதல்ல நாம இந்து மத சடங்குகளை செய்யக் கூடாது…செஞ்சா நம்ம சாதியை நாம ஓத்துக்குறோம்னு அர்த்தம்

எனவே மக்களே அம்பேத்கார் நமக்கு விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்வோம்…நம்மை பிடித்திருக்கும் சாதீய இழிவில் இருந்து தயங்காமல் வெளியேறுவோம்

நன்றி …வணக்கம்……….

பாரதி-இந்துத்வா வெறியரா..?


தோழர்களே...

பாரதி குறித்து நம் அருமை தோழர்.வே.மதிமாறன் அவர்கள் வலைப்பூவிலும் ,பாரதீய ஜனதா பார்ட்டி என்ற நூலிலும் பலவிதமான விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறார்.

திரு.வே.மதிமாறன் அவர்களுடைய விமர்சனம் பாரதி குறித்த சரியான பார்வையா என்பதில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு.எனவே பாரதி குறித்த தெளிவை நாம் ஏற்படுத்திக் கொள்ளுல் மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்...

சூத்திரனுக்கு ஒரு நீதி,
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறொரு நீதி என்று சாஸ்திரம்
சொல்லிடுமாயின் அது சாஸ்திரம்
அன்று சதி என்று கண்டோம்........

என்று பாடிய பாரதி சாதீய உணர்வாளரா என்பதே என் கேள்வி.....


பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே..என்று பாடிய பாரதி ..தன் வாழுங்காலத்தில் அவர் சொந்த பந்தங்களால் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தார்..?

அக்ராஹாரமே அந்த தனி மனிதனை ஒதுக்கியதே......

என்ன காரணம்...?

சாதியை மறுத்தான்..சமயத்தை வெறுத்தான்.....அந்த ஈரமுள்ள மனிதன்..

அல்லா...அல்லா..என்று அதனால்தான் அவனால் பாடவும் முடிந்தது.

பாரதி மீது விமர்சனம் வைப்பவர்கள் ஒரு முக்கிய விஷயத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்.....அது பாரதி வாழ்ந்த காலம்....

பாரதி வாழ்ந்த காலக் கட்டத்தில் ஊரோடு ஒத்து வாழ்ந்து..சாதி சமயம் பேண முடியாமல் தத்தளித்த அந்த மனிதனின் நிலை கவனிக்கத் தக்கது....

எதற்காக பாரதி என்ற தனி மனிதனிக்கு .....அத்தனை இடைஞ்சல்கள்...?

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு சாவுமணியாய் பாரதியை பழைமைவாதிகள் பார்த்தனர்....

உயர்ந்த குலம் என்று போற்றப் பட்ட ஒரு குலத்தில் பிறந்து, வைதீக ,வேத கேள்விகளில் மிளிர்ந்து ,அளப்பரிய கவிதை திறன் உடைய ஒரு மனிதன் சாதி மறுப்பாளனாக ஏன் வாழ வேண்டும் ..? என்ற கேள்வி மிக முக்கியமானது.

கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் பாரதிக்கு ராஜபோக வாழ்க்கை கிடைத்து இருக்குமே...?

அதானாலேயே அந்த மனிதன் அனாதையாய் செத்து போனானே...?

இது கவனித் தக்க வேண்டிய அம்சம் இல்லையா..?

ஓகேனக்கல் விஷயத்தில்.....கலைஞரின் சமரசம் ராஜதந்திரம் என்றால் ....

பாரதிக்கு ஏன் ராஜதந்திரம் இல்லாமல் போயிற்று,,,,?

ஒரு மனிதன் ஏன் அவ்வளவு சவால்களும்,இடைஞ்சல்களும் உடைய வாழ்வினை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...?

இது தான் என் முதல் கேள்வி..

எனக்கென்ன சந்தேகம் என்றால் ...பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுள் ஏற்பட்ட மீறலால் விளைந்த சவால்கள் அதிகம் தானே..??

தமிழ் சமூகவியலில் பாரதியின் பங்கு அவரது குலம் சார்ந்த உணர்வை பிரதிபலிக்கிறதா...?

குறிப்பாக..பாரதி ஆரியன் என்று அழைக்கும் சொல் பார்ப்பனர்களை குறித்த சொல்லாடல் இல்லை என்ற சிந்தனை இருக்கிறது...

பிச்சை வாழ்வு உகந்து பிறருடைய ஆட்சியில்
அச்சம் உற்று இருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் இல்லன்.

என்றும் பாரதி பாடுகிறார்.....

அப்படி என்றால் ஆரியர் என்ற சொல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகவே பாரதி பயன் படுத்தி உள்ளார்.....

நினைவின் சருகில்...



காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடர் விட்டு மறைகிற மின்னலாய் நம்மை மிக எளிதாய் கடக்கிறது.....

காலம் நம்மை கடப்பதும்...காலத்தை நாம் கடப்பதுமாய்...நடக்கின்ற விளையாட்டு முடிவிலியாய் தொடர்கிறது.....

ஏதோ ஒரு நள்ளிரவில் ....தொலைதூர பயணத்தின் உணவக நிறுத்தத்தில் நிறுத்தப் படும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்த்திருந்த நான்....கழுத்தின் மடிப்பில் வியர்வைப் படிந்ததால் மெலிதாய் கண்விழிக்க...பக்கத்தில் நிறுத்தப் பட்டு இருந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் ..என்னைப் போலவே தலை சாய்த்திருந்த ...அவளைக் கண்டேன்...

அவளா...? இருக்காது. அவளாய் இருக்காது..இருக்கவும் கூடாது...இனி சந்திக்கவே போவதில்லை என்ற நம்பிக்கை இருள் படர்ந்த மனதில் கடும் துயரமென கவிழ்திருந்தாலும்.......அதுவே எனக்கு ஆறுதலாகவும் இருந்தது விசித்திரம்....

ஆம்...அவள்தான் என்று சாத்தானாய் ஓங்கார மிட்டது மனம்....இதயத் துடிப்பு அதிகரித்தது.....காலமும் ,பயணமும் அவளை கசக்கி இருந்தது......

மடியில் இருந்த குழந்தையின் சிணுங்கலை ஆறுதல் படுத்தி விட்டு மீண்டும் தலை சாய்த்த அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்...பேரலை அடித்த பாறையாய் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்....

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது.....? எந்த பொன்னிறக் கைகளுக்குள் முகம் புதைத்து.....முச்சிறைத்து கிடந்தேனோ......அந்த கைகள் தான் ...அதே கைகள்தான் சலனமற்று என்னைக் கடக்கின்றன.....

பேருந்து புறப்படுகிறது....அவள் அங்கேயே நிற்கிறாள்..

இதுதான் முடிவு என்று தெரிந்திருந்தால்...வலிக்காமல் வாழ்ந்திருப்போமே....

பேருந்தின் ஜன்னலோர காற்று முகம் தொடுகிறது....இரவும்..நினைவும் என்னை அலைகழிக்கின்றன...

வாழ்வின் விசித்திர மாயக் கோடுகளின் ஊடே சிக்குண்டு...விழுங்கியும் செரிக்காத நினைவுகளின் உறுத்தலால் விடிந்தும்..விடியாமல் கிடக்கின்ற இரவில்....ஏதோ ஒரு புள்ளியில் இருந்து துவக்குகிறேன்..


ஆம்....அப்படித்தான் அவளை முதன் முதலில் பார்த்தேன்.......இயல்பான முகத்தில் எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது....முகத்தை பார்த்துதான் முதலில் நேசம் பிறக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.......

கொஞ்சம் நகர்றீங்களா...? ......

கேட்டதற்கு பதிலையோ அல்லது என் எதிர்வினையையோ எதிர்பார்க்காது.....என் எதிரே இருந்து நகர்ந்து ....சுவர் ஓரமாய் ...படியேறி ..கடந்தது எனக்கு பிடித்திருந்தது......

அனைத்தையும்....வியப்பாகவும்...குதுகாலமாகவும்...ரகசிய கண்களோடு பார்க்கும் பருவம் ..பள்ளியில் படிக்கிற ப்ளஸ் ஒன்...ப்ளஸ் 2 படிக்கிற காலம்....

நம் அபத்தமான...வக்கிரமான சினிமா இயக்குனர்கள் அந்த அற்புதமான பருவத்தை....காமக் கடும் புனலாய் விவரிக்கிறேன் என்ற போர்வையில் திரையில் பாழ்படுத்தி ..வீழ்த்தியதை நான் மிகவும் துயரத்தோடு பார்த்திருக்கிறேன்....

மனித உணர்வுகளின் மீது கட்டப்பட்ட புனித பிம்பம் சிதையாமல் ..மிகவும் நேர்மையோடும்...ஒரு வித அச்சத்துடன் அணுகும் அந்த வயதிற்குரிய அனைத்தும் உடையவனாய் அப்போது இருந்தேன்....கவிதை..இலக்கிய முயற்சிகள்...எல்லாம் அப்போது ஒரு அழகிய பெண்ணை வசீகரிப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டவை என்று மெய்யாகவே நினைத்தேன்...பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால்...கோரமும்....அவலமும் நிறைந்த சமூகம் ஒன்று இருக்கிறது என்பது எனக்கு தெரியாது....சாதி,அரசியல் என்று எந்த விஷமும் கலக்காத பாலாய் பொங்கி திரிந்துக் கொண்டிருந்தேன்....மாற்று பாலினத்தின் மேல் இயல்பாக வரும் ஈர்ப்பு தரும் ஆர்வமும்....தூண்டும் சாகசமும் அற்புதமானவை.....இசையின் மீது அளவிடற்கரிய மோகம் பிறந்ததும் அப்போதுதான்......
இப்படி என் வாழ்வில் நான் நேசிக்கிற ,,,இன்னமும் என்னால் விட முடியாமல் இருக்கின்ற அனைத்தும் முதன் முதலாய் நிகழ்ந்தது ......அந்த பருவத்தில் தான்.....

என் பள்ளியின் வளாகம் மிகவும் வீஸ்திரணமானது...காலையில் நடக்கும் கடவுள் வாழ்த்துக்கு முன்னால் செய்திகள் வாசிக்கப் படும்....பெரும்பாலும் அவள் தான் வாசிப்பாள்.....செய்திகள் சுவையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்...

இப்போது நினைத்தாலும் மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன்.....பேச்சுப் போட்டி என்பது அப்போதெல்லாம் அடுக்கு மொழியில்,யார் கை நீட்டி, நடிகர் திலகம் பாணியில் ஏற்ற இறக்கங்களோடு விடாமல் வசனத்தை யார் ஒப்பிக்கிறார்களோ ..அவருக்கே முதல் பரிசு.....இதில் எனக்கும் ..அவளுக்கும் கடுமையாக போட்டி வரும்...அவளின் இயல்பான மென்மை அவளை வீழ்த்தும்....சிறு தோல்வி கூட அவளை முகம் சிவக்க அழ வைத்து...சிதறடிக்கும்..... இருந்தும் தொடர்ந்து மோதுவாள்...... ஆசிரியர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்..என் வெற்றி கூட என்னால் சகிக்க முடியா பெருந்துயராய் என் மீது கவிழ்ந்திருக்கும்........

தினமும் மாலை அவள் பள்ளி முடிந்தவுடன் பைபிள் வகுப்பிற்கு செல்வாள்....

நான் என் அம்மாவிடம் நேராக சென்று பைபிள் கற்றுக் கொள்ள போவதாக சொன்னேன்....உன்னை எல்லாம் அங்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அம்மா சொன்னது ...சே ...நம்ம மதத்துல படிக்கிற மாதிரி ஒரு பைபிள் இல்லையே என வருத்தப் பட்டேன்.....

என் வகுப்புத் தோழன் சாலமனிடம் இருந்து பைபிள் இரவலாக பெற்றேன்....சிறு சிறு எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த பைபிளின் தமிழும்...அதன் உச்சரிப்பு தன்மையும் என்னை வெகுவாக ஈர்த்தன.....இன்னமும் தமிழில் மிக அழகாக எழுதப் பட்டிருக்கும் உயரியப் படைப்பு பைபிள் தான் என்ற நம்பிக்கை எனக்குண்டு......

(தொடரும்....)

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி....



அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……

எந்த கல்லூரியில் படித்தீர்கள்?

இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை –யில் படித்தேன்…..பி.ஏ தமிழ் -79% எம்.ஏ தமிழ் 80.64% சதவீத மதிப்பெண்கள்….பி.எட் டில் 76% மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்….

தங்களின் தற்போதைய நிலை..?

வேலை தேடி வருகிறேன்..ஊரில் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன்…

குடும்பத்தின் நிலை…?
வறுமை…மிக வறுமை.என்னை படிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு தம்பி கல்வியை நிறுத்தி விட்டனர்…இப்போது படித்த நானும்,படிக்காத அவனும் கூலி வேலை பார்த்து வருகிறோம்…..

எதற்காக தமிழ் படித்தீர்கள்…?

மொழி மீது உள்ள பற்று…+2வில் கணிப்பொறி துறைதான் படித்தேன்…தமிழாசிரியாக வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் படித்தேன்….

ஏன் தமிழ் படித்தோம் என்று நினைத்தது உண்டா…?

அந்த சூழ்நிலையில் தான் உள்ளேன்,…எப்போதும் நினைக்கிறேன்...

இந்த உலகம் தமிழ் படித்த பட்டதாரியை எப்படி பார்க்கிறது..?

சொல்ல வெட்கமாக உள்ளது….மிகவும் கேவலமாக பார்க்கிறார்கள்….தமிழ் படித்தால் தமிழ் நாட்டிலேயே வேலை இல்லை….மற்ற அறிவியல் படிப்புகளுக்கு உள்ள மதிப்பும்,வரவேற்பும் நம் தாய்மொழி தமிழ் படிப்பிற்கு இல்லை..இதில் தனியார் கல்வி நிறுவனங்கள் வேறு..எங்கள் வறுமையை பயன்படுத்தி மிக சொற்ப சம்பளத்தில் எங்களை வேலைக்கு அழைக்கிறார்கள்…எனக்கு தெரிந்த தமிழ் முதுநிலை பட்டதாரி , ஆராய்ச்சி மாணவர் ஒரு தனியார் கல்லூரியில் மிக சொற்பமான சம்பளத்தில் பியூனாக பணிபுரிகிறார்….அதற்கே ஆயிரெத்தெட்டு போட்டி….

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் பியூன் வேலைக்கு போவீர்களா..?
கண்டிப்பாக……நிச்சயம் செல்வேன்….என் கல்வி தகுதியை விட என் வறுமை மிகவும் உயர்ந்தது…

இனி யாருக்காக தமிழ் படிக்க சொல்லி சிபாரிசு செய்வீர்களா…?

கண்டிப்பாக மாட்டேன்…..

கற்றது தமிழ்..?

எங்கள் நிலையை அந்த திரைப்படம் மிக நெருக்கமாக படம் பிடித்து காட்டியுள்ளதாக உணர்கிறேன்….

உங்களைப் போன்று எத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள்..?

குறைந்தது 50,000 நபர்களாவது இப்படி இருப்பார்கள்…அறிவியல் முதுகலையும் ,பி.எட் டும் படித்தால் இடை நிலை ஆசிரியர் பணி கிடைத்து விடுகிறது…ஆனால் தமிழ் முதுகலை ,பி.எட் படித்தவனுக்கு இந்த விதி பொருந்தாது…


இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்...?

அரசின் தவறான கல்விக் கொள்கை.....மற்றும் தாய்மொழி மீது எவ்வித அக்கறையும் ,அன்பும் இல்லாத சமூகமும், அதன் அமைப்பும் மற்றொரு காரணம்..

ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி என்ற தகுதியில் உலகமெங்கும் வாழும் …இணையத்தில் தமிழ்,தமிழுணர்வுக்கு ஆதரவாக,அக்கறையாக எழுதும் தமிழர்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்..?( எனக்கும் சேர்த்து…)

கணிப்பொறியில் இருந்து தட்டச்சு பலகையில் தமிழ் வளர்ப்பதாக நினைத்து கொண்டு…. பொழுது போக்கிற்காக தமிழ் உணர்வில் திளைப்பதாக நடிக்கிறீர்கள்…..

இங்கே தமிழ் படித்தவன் தட்டேந்துகிறான்….ஊர்க்காரன் கூட தமிழ் படித்தவனை கண்டு ஏளனமாக பார்த்து..ஒதுங்கி சென்று விடுகிறான்…..

உங்களுக்கு அடுத்த வேளை சாப்பாடும் ,வருமானமும் உள்ளது…நீங்கள் தமிழ் வளர்க்கலாம்…(?) …ஆனால் தமிழ் படித்தவன் இங்கு தெருவில் நிற்கிறான் ….இதனை மனதில் வைத்துக் கொண்டு தமிழ் வளருங்கள்….

உங்களின் நோக்கம் தமிழை வாழ வைப்பதா..? இல்லை தமிழனை,தமிழ் படித்தவனை வாழ வைப்பதா..?

என்னால் வாழ்க தமிழ் என்று சொல்ல முடியவில்லை…

நன்றி…

(பேட்டியை பாதியிலேயே முடித்துக் கொண்டு கண்ணீரோடு விடை பெற்று செல்கிறார் தமிழ் பட்டதாரி தாமோதரன்…)

புத்திசாலி ஞாநிக்கு ஒரு கடிதம்.....



---------------------------------------------------------

திருவாளர்.ஞாநி அவர்களுக்கு.....

வணக்கம். குமுதம் 09-04-08 இதழில் பேராசிரியர் சுப.வீ .அவர்களுக்கு ஒ..பக்கங்கள் பகுதியில் தாங்கள் எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் எழுத தமிழனாய் தன்னை உணருகிற எவருக்கும் பதில் சொல்ல உரிமை உண்டு என்ற நியாயமான பார்வையில் இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்...

நமக்குள் ஏற்கனவே அறிமுகம் உண்டு.தந்தை பெரியாரையும்,அறிஞர் அண்ணாவையும் மிகத் தவறான முறையில் ஒப்பிட்டு ஆனந்த விகடன் இதழில் தாங்கள் எழுதிய ஒ..பக்க கட்டுரைக்கு எதிர்வினையாக நான் எழுதியவிமர்சனங்களுக்கு– ஞாநி தி ரைட்டர் என்ற ஆர்குட் குழுமத்தில் தாங்கள் நேரிடையாக வந்து என்னோடு விவாதித்தீர்கள்.மீண்டும் அதே போன்ற ஒரு காரணத்திற்காக தங்களின் பழித் தூற்றல் கருத்துக்களுக்காக நான் என்னுடைய விமர்சனங்களை முன் வைப்பது என்னுடைய இனக் கடமையாக நான் நினைக்கிறேன்.

பேரா.சுப.வீ அவர்களுக்கு தனிப்பட்ட முறைமையில் எழுதப் பட்ட கடிதமாக நான் அதை கருத வில்லை.பேராசிரியர் இயங்கி வருகின்ற தமிழ் உணர்வாளர்கள் தளத்தில் இயங்கி வருகின்ற அனைவரும் மீதும் வீசப்பட்ட, அவதூறு என்ற விஷம் தோய்ந்த கத்தியாகவே நான் அதை பார்க்கிறேன்.

என் மொழிக்காகவும், என் இனத்திற்காகவும் தாங்கள் அய்யா சுப.வீ அவர்களோடு இணைந்து பணியாற்றியதை நான் மிக்க நன்றியுடன் நினைவு கூறுகிறேன்....ஆனால் இந்த ஒரு தகுதி மட்டுமே எங்கள் உணர்வு மிக்க செயல்பாடுகளின் மீது அவதூறு பூசி விட முயற்சிக்கும் உரிமையை தங்களுக்கு தந்து விடாது என்பதனையும் தங்களிடம் நான் பதிவு செய்கிறேன்.
முதலில் தங்களுக்கு நான் தெளிவாக ஒன்றை கூறி விடுகிறேன்...என் தாய்மொழிக்காகவும்.,என் இனத்திற்காகவும் போராடவும்.., ஓங்கிக் குரல் கொடுக்கவும் எனக்கு உரிமை உண்டு.என் இனத்தின் மாண்பை குலைக்கும் வகையில் தவறான முறையில் ,உள்நோக்கத்தோடு திரைப்படம் ,பத்திரிக்கை ஆகிய ஊடகங்களில் கருத்தால் தாக்கும் சிங்கள பட இயக்குனர் தூசாரா பெய்ரிஸ் மற்றும் தங்களைப் போன்றவர்களை எதிர்த்து போராட...குரல் கொடுக்க...என் கருத்தை பதிவு செய்ய எனக்கு பரிபூரண உரிமையூண்டு.

ஒரு இனத்தின் மீது தாக்குதலை நாம் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
1.யுத்தக் களத்தில் நின்றும், நிலம்,வான்,கடல் பரப்புகளில் நின்றும் ஒரு இனத்தின் மீது ...அந்த இனத்தை சேர்ந்த மக்கள் , அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது...
2.ஒரு இனத்தின் வரலாற்றை,அடையாளங்களை அழிப்பது அல்லது தவறான கற்பிதங்களால் மாற்றி நிறுவ முயற்சிப்பது. மற்றும் பத்திரிக்கை,நூல்கள்,,இணையம்,திரைப்படங்கள்,கல்வியியல் சார்ந்த பாடப் புத்தகங்கள் போன்றவற்றில் தவறான கற்பிதங்களை திணித்து.., அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்களை தங்கள் இனம் சார்ந்த பற்றை பலவீனப் படுத்துவது.
மேற்கண்ட இரண்டு தாக்குதல்களில் இரண்டாவதாக சொல்லியுள்ள தாக்குதலையே நான் மிகவும் ஆபத்து நிறைந்ததாக கருதுகிறேன்.

வரலாற்று கருத்தியல் தளத்தில் ஒரு இனம் சார்ந்த பற்றை ,அடையாளங்களை,நடவடிக்கைகளை பலவீனப் படுத்துவதன் மூலம் அந்த இனம் சார்ந்த அனைத்தையும் மாசுப் படுத்தி , இறுதியில் அந்த இனத்தை அழிப்பதற்கான அத்தனை வழிகளையும் சாத்தியப் படுத்துவது...மேலும் இனத்தை அழிப்பதற்கான தங்களது முயற்சியை சமூகத் தளத்தில் நியாயப் படுத்துவது.ஆகியவற்றையும் உள்ளடக்கிய அந்த இரண்டாம் வகை தாக்குதலைதான் திருவாளர் .ஞாநி அவர்களாகிய தாங்களும், அந்த சிங்கள இயக்குனரும் செய்து வருகிறீர்கள்.
அந்த சிங்கள இயக்குனரின் நடவடிக்கைக்காகவாது அவரது இனம் சார்ந்த நியாயம் இருக்கிறது...ஆனால் தொடர்ந்து கருத்தியல் ரீதியாக தாக்கி வரும் தங்களுக்கு எவ்விதமான நியாய,தர்மங்களும் இல்லை.

நீங்கள் மிகவும் சாமர்த்தியசாலி ஞாநி அவர்களே...அதனால் தான் ஈழப் போராட்டத்தையும்,சாதியம் சார்ந்த அமைப்பையும் தங்களால் புத்திசாலித்தனத்தோடு முடிச்சிப் போட முடிகிறது.ஆனால் ஈ.வே.ரா என்று கருப்புச் சட்டைக்காரரால் இரண்டு தலைமுறைகளாகத்தான் நாங்கள் கல்வி கற்க முடிகிறது.எனவே தான் தங்களது புத்திசாலித் தனங்களை புரிந்துக் கொள்ளவும்,மென்று விழுங்கி சீரணிக்கவும் சற்று கடினமாக உள்ளது.
இந்த்துவா,பஜ்ரங் தள்..,தாங்கள் கட்டுரையில் சொன்ன அந்த வேதாந்தி ஆகியோர் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி முட்டாள்களே. உங்களைப் போன்று .இதயத்தில் உள்ளவற்றை உதட்டிலும் ,நடவடிக்கைகளிலும் நிறுத்தி வைக்க அவர்களால் முடியவில்லை.தங்களின் புத்திச்சாலித் தனம் இல்லாத அவர்களை தாங்கள் முட்டாள் என்று வருணித்தது தங்களைப் பொறுத்தவரையில் நியாயமே.ஆனால் எங்களால் முட்டாள்களை எளிதில் சமாளிக்க முடிகிறது.ஆனால் தங்களைப் போன்ற புத்திசாலிகளை தான்
அடையாளம் காணுவதில் தமிழ் மண்ணிற்கு தாமதம் ஏற்பட்டு விடுகிறது.

சாதீயம் சார்ந்த நடவடிக்கைகளில் அய்யா சுப.வீ அவர்களின் நடவடிக்கையை பற்றி வினா எழுப்பி உள்ளீர்கள்.....தந்தை பெரியாரின் கருத்துக்க்களை மேடை தோறும் பேசி,எழுதி ,என்னைப் போன்ற இளைஞர்களுக்கு வாழும் உதாரணமாக இருந்து வரும் பேராசிரியரின் சாதி ஒழிப்பு நிலைப்பாடு அனைவரும் அறிந்த ஒன்று.பார்ப்பனீய நிலைகளை கருத்தியல் ரீதியாக தகர்ப்பதன் மூலம் சாதி,சமயமற்ற சமூகத்தை படைத்து விடலாம் என்ற கொள்கை அடிப்படையில் செயல்பட்டு வரும் பேராசிரியரின் நடவடிக்கைகள் தங்களைப் பொறுத்தவரையில் கவலைப் படத் தக்க அம்சமே..தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் ஆகியோர் தோன்றிய பிறகுதானே பார்ப்பனீய ஆலமரத்தின் விழுதுகளான சாதி நிலைகளால் தாழ்ந்துக் கிடந்த மனிதனுக்கு சுய உணர்வு வந்தது....இப்போதுதான் மீள துவங்கி உள்ளோம்...இன்னும் சில காலங்களில் சாதி,சமய நிலைகள்,இரட்டைக் குடுவை முறைகள் அனைத்தும் தமிழ் மண்ணை விட்டு அகன்று விடும் என்ற உன்னத நம்பிக்கையோடு பேராசிரியரும் ,தமிழ் உணர்வாளர்களும் செயல்பட்டு வருகின்றனர்.


தங்களின் கவலைகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது..எங்கள் ஈழ உறவுகளை கொன்று குவிக்கும்.சிங்கள பேரினவாத அரசின் தலைவர் ராஜபக்சே வை தன் வீட்டு மணவிழாவிற்கு அழைத்து கொண்டாடிய,எங்கள் ஓட்டு வாங்கி வென்ற மணி சங்கர் அய்யர் கூட இப்போது கவலை அடைவார்தான் .என்ன செய்வது..? தமிழன் விழிக்க துவங்கி விட்டானே,,,,,,,
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை தொடர்ந்து தாக்கி எழுதி வருகின்ற தாங்கள் ‘முட்டாள் வேதாந்தி’ குறித்து கவலைக் கொள்வதும் நியாயம்தான்...உங்கள் புத்திசாலித்தனங்களை உங்கள் ஆட்களுக்கு சொல்லிக் கொடுங்கள் ஞாநி அவர்களே....


தங்கள் சொந்த நாடு இழந்து....உறவுகளை பலிக் கொடுத்து அகதிகளாய்...நெஞ்சம் முழுக்க வலிகளோடும் ,வடுக்களோடும் திரியும் எங்களது ஈழ உறவுகளுக்கு எங்களது ஆதரவை ,எங்களது பரிவை,எங்களது கண்ணீரை பகிர்ந்துக் இந்த நாட்டில் எங்களுக்கு உரிமையில்லை.எங்களது ஈழ உறவுகளின் போராட்டத்தை, அவர்களது வாழ்விற்கான விடுதலைப் போரை கொச்சைப் படுத்தி,கருத்தியல் ரீதியாக ஈழப் போராட்டத்தை உலக அளவில் மாசுப் படுத்த துடிக்கின்ற சிங்கள பேரினவாத அரசின் தூதுவனாக படம் எடுத்து,அதையும் தமிழ் மண்ணிலே பிரிண்ட் போட வந்திருக்கும் சிங்கள இயக்குனரிடம் நியாயம் கேட்க சென்ற இடத்தில் என் சகோதரர்கள் உணர்ச்சி வயப் பட்டு உடல் ரீதியாக செயல்பட்டது தங்களக்கு தவறாக தெரிகிறது...

ஆனால் கிட்டத் தட்ட 35 வருடங்களாக கொன்று குவிக்கப் பட்டு வரும் எங்கள் ஈழ உறவுகளை பற்றி அவதூறாக படம் எடுத்து வெளியிட முயலும் சிங்கள இயக்குனருக்கு பரிந்து வர ஞாநிக்கு எவ்வாறு உரிமையுள்ளதோ அதே உரிமை அந்த இழிவை தட்டிக் கேட்கும் உரிமை எங்களுக்கும் உண்டு.
எங்களால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்கும் சிங்கள பேரினவாத அரசிற்கு ஆதரவாக படம் எடுத்து தமிழ் மண்ணிலே வெளியிட துணியும் சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக இந்த மண்ணிலே ஞாநிகளும்,சாமிகளும் இருக்கின்றார்கள்.ஆனால் கடல் கடந்து கொன்று குவிக்கப் பட்டு வரும் எம் ஈழ உறவுகளை நினைத்து கண்ணீர் விட இந்த நாட்டில் தடை..

எங்கள் அண்ணன் சீமானை வைத்து ‘படம் எடுக்கத் துணியுங்கள் என்று சொல்கிறீர்கள்...ஏற்கனவே ஜான் என்பவர் எடுத்த ஆணிவேர் என்ற படத்தின் வரலாறு தங்களுக்கு தெரியும்.புகழேந்தி எடுத்து 'காற்றுகென்ன வேலி'க்கு இன்னும் தடையாய் ஆயிரமாயிரம் வேலிகள்...

ஜனநாயகம் என்ற அம்சம் ஒரு இனத்திற்கு எதிரான கருத்து தாக்குதலை ஆதரிக்கிறதா என்ன..? உங்கள் ஜனநாயகக் கருத்துக்களை வாட்டாள் நாகராஜிடம் போய் சொல்லுங்கள்....


எங்கள் சொந்த உறவுகளை பற்றி அப்பட்டமாக,அட்டூழியமாக படம் எடுத்தவர் மீது கூட உணர்ச்சி வேகத்தில் பலம் குறைந்த வகையில் தாக்குதல் நடத்தி விட்டு,புத்தாடை அணிவித்து சகல பாதுகாப்புடன் இந்த மண்ணை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதித்துள்ள நம் தமிழர்களின் உணர்வு ஞாநிக்கு எப்படி தெரியாமல் போகுமா...?
இயக்குனர் சீமான் உள்ளிட்ட என் அண்ணன்களுக்கு படமெடுப்பதை பற்றியும், அதில் கொள்கைகளை பேசுவது பற்றியும் ஞாநிக்கு திடீரென்று ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றி.
பக்கத்து கர்நாடகத்தின் கதை இந்நேரம் ஞாநிக்கு தெரிந்திருக்கும்...கருத்தை கருத்தால் சந்திப்போம் என்ற கருத்து தமிழக மண்ணிலே இருப்பதால் இங்கே ஞாநிகளும்,சாமிகளும், சர்வ சுதந்திரத்துடன் நடமாடி விஷம் கக்க முடிகிறது..


தற்போதைக்கு அண்ணன் அறிவுமதி கவிதையோடு விடை பெறுகிறேன்...

“கசக்கிப் பிழிந்து ...ருசித்து சுவைத்தப் பின்.. தூக்கி எறியப் படுகின்ற
மாங்கொட்டைகள் மரங்களாய் விசுவரூபம் எடுக்கும்
என்பதை இவர்கள் மறந்து போயிருக்கிறார்கள்......
கோழிக் குஞ்சிகளை காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளை கலைக்கத் துடிப்பது குற்றமா ..என்ன..?
சூரிய முகங்களை சுமந்த என் தோழர்களே...
புறப்படுங்கள் ..தொடரட்டும் ...நம் மக்கள் பணி.....
-பாவலர் அறிவுமதி...
மீண்டும் வருவேன்...

(இக்கடிதம் கீற்று.காம் இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது)

பதுங்குக் குழிகளை தேடும் ஞாநி....




குமுதம் இதழில் ஓ பக்கங்களில் பேரா.சுப.வீ குறித்து அவதூறுகளை அள்ளி வீசிய ஞாநி தொடர்ந்த நம் எதிர்ப்புகளால் இப்போது பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்..திடீரென்று இந்த வாரம் மருத்துவர் ராமதாஸை ஆதரித்துள்ளார்...ஜெயலலிதா ஆட்சியில் ஒகேனக்கல் திட்டம் இம்மியளவும் நகர்த்தப் பட வில்லை என்று சாமரம் வீசிய கைகள் இன்று சாமர்த்தியம் பேசுகின்றன...மாலடிமை ..என்றும் தமிழ் கலாச்சார காவலர்
என்றும் மருத்துவர் அய்யாவை தூற்றியவர் பாய்ந்து வரும் எதிர்ப்புகளால் இன்று பதுங்குக் குழிகளை தேடி அலைகிறார்...

ஞாநி...அவர்களே...
கருத்துச் சுதந்திரத்தின் நவீன காவலரே....தங்கள் ஆர்குட் குழுமத்தில் இருந்து மாற்றுக் கருத்துக்கள் வைத்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை தடை செய்துள்ளீர்கள்...என் கருத்துகளும் ....என் அண்ணன் அறிவுமதியின் கடிதம் அடங்கிய கட்டுரையை ...தங்களை அம்பலப் படுத்தி விடும் என்ற அச்சத்தால் அவசர..அவசரமாக ..முன் அறிவிப்பின்றி...அகற்றி உள்ளீர்கள்..இது தான் தங்களின் கருத்து காவலின் கதை....விவாதத்தில் பங்கெடுக்க முடியாத தாங்கள்.....எங்கு பதில் சொன்னால் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சியை உருவி விடுவார்கள் என்று அஞ்சும் நீங்கள்... உண்மைத் தமிழனாய்....உணர்வின் வீரனாய் பொங்கி எழுந்து ....ஆவேசமாய்.....உங்கள் ஆணி வேரை ஆட்டி பார்த்த ...சத்யராஜ் அவர்களுக்கு குட்டு வைக்கிறீர்கள்.....சத்யராஜ் சங்கர மடத்து பெருமைகளை பாடி இருந்தால் பூச்செண்டு கொடுத்து இருப்பீர்கள்..

...ஒரு மனிதனை குட்டுவேன் என்று எழுதுவது வன்முறை இல்லையா....
எந்த தகுதி உங்களுக்கு குட்டும் அதிகாரத்தை வழங்கியது என தெரிந்து கொள்ளலாமா....ஞாநி.....தலையில் தோன்றிய தகுதியா...?


ஞாநி அவர்களே....

தங்களை அம்பலப்படுத்துவதை நான் இந்த தமிழுலகிற்கு செய்யும் பெரிய சேவையாக கருதுகிறேன்...தாங்கள் மிகவும் ஆபத்தானவர்....தமிழகத்தின் மிகப் பெரிய இதழியல் ஊடகங்களான ஆனந்த விகடனிலும்,அதற்கு பிறகு குமுதத்திலும் தொடர்ந்து தமிழ் பண்பாட்டு நிலைகள் மீதும்,திராவிட இயக்க ஆளுமைகள் மீதும் கருத்துத் தாக்குதலை தொடர்ந்துள்ளீர்கள்..இந்த தாக்குதல் சிங்கள பேரினவாத அரசு எம் ஈழ உறவுகளின் மீது தொடுத்திருக்கும் வன் தாக்குதலுக்கு இணையானது...சிங்கள இராணுவத்தின் தாக்குதலாவது இந்த தலைமுறையோடு நின்று விடும்...எம் தொப்புள் கொடி உறவுகளின் அடுத்த தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது...ஆனால் தாங்கள் ஊடகங்களில் பரப்பி வரும் தமிழ் உணர்வாளர்கள் ,மற்றும் திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களின் மெய் நிலைகளை திரிக்கும் கருத்து திணிப்புகள் ஒட்டுமொத்தமாக தடுக்கப் படவேண்டிய ஒன்றாக நான் கருதுகிறேன்....

இத்தனை ஆண்டு காலம் உங்களது முன்னோர்கள் எங்களது பண்பாட்டு வரலாற்றை அவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதினார்கள்..பார்ப்பனர்கள் அடுத்தவரை ஏய்த்து..அரசனை கருத்தால் மாய்த்து...,மாய்மாலம் செய்து உச்சாணிக் கொம்பில் கொழுத்து இருந்து..சதுர்வேதி மங்கலங்களை,பட்டவர்த்திகளை பெற்ற காலங்களை பொற்காலம் என்றும்...சாதி வேறுபாடுகளை தகர்த்து,, பார்ப்பனர்களுக்கான சலுகைகள் மறுக்கப் பட்ட காலங்களை இருண்டகாலங்கள் என்று தமிழ் வரலாற்றை தங்களுக்கான வரலாறாக எழுதிய அதே உத்தியைத் தான் இன்று தாங்களும் எழுதுகிறீர்கள்.....

தாங்கள் எழுதியுள்ள தவறான...உண்மைக்கு திரிபான கருத்துக்களை எதிர்கால தமிழகம் அப்படியே வடிக்கட்டலின்றி வரலாறாக கவனித்து விடும் என்பதற்காகவே தாங்கள் கருத்துகள் மீது இவ்விதமான தொடர் மாற்றுக் கருத்துக்களை வைத்து வருகிறேன்...
தங்களை நேரடியாக விவாதத்திற்கு அழைக்கிறேன்.....நீங்கள் புழங்கும் உங்கள் தளத்திலேயே வந்து எழுதுகிறேன்....உண்மை இருப்பின்...உங்கள் கருத்தில் தெளிவு இருப்பின் ...உங்களது ஆரவாரமான சேனைகளோடு வந்து விவாதிக்க வேண்டியது தானே..?

அதை விடுத்து.....என் கட்டுரையை அழிக்கிறீர்கள்...என்னை தடை செய்கிறீர்கள்....
இது கருத்து சர்வாதிகாரம் இல்லையா...தங்கள் கருத்துக்களை அப்படியே தமிழன் தயங்காமல் முழுங்கி விட வேண்டுமா என்ன......

சென்ற முறை தந்தை பெரியாரை தாங்கள் இழிவுப் படுத்தியது குறித்து தாங்கள் என்னோடு நடத்திய விவாதத்தில் உங்கள் ஆர்குட் குழுமத்தையே அழிக்க வேண்டும் என உத்திர விட வில்லையா....?

தங்களது கருத்துகளை வெளியிடும் குமுதமும் அடுத்த வாரம் தங்கள் அவதூறு கருத்துகளை எதிர்த்து பேரா.சுப.வீ அவர்களின் பதிலையும்..அவரின் பதிலுக்கான உங்களது எதிர்வினையையும் ஒரே இதழில் வெளியிட துணிந்திருப்பதும் தங்களை காப்பாற்றும் செயலாகவே நான் பார்க்க வேண்டியுள்ளது...குமுதம் போன்ற மக்கள் அதிகமாக படிக்கக்கூடிய இதழ் ..இப்படிப்பட்ட அவதூறுகளை வெளியிடுவது தவறு...இந்த போக்கு எதிர்காலத்தில் பிழையான வடுவாக எஞ்சி இருக்காதா...?

இத்தனை ஆண்டு காலம் தமிழ் அறிவுலகில் இயங்கி வந்துள்ளீர்கள்...தங்களை எத்தனையோ மேடைகளில் ...ஊடகங்களில் நிறுத்தி வைத்து.....கைத் தட்டிய தமிழர்கள் மீது கொஞ்சமும் நன்றி இல்லாமல் தொடர்ந்து தவறாகவே எழுதி வருகிறீர்கள்...

விவாதத்திற்கு வாருங்கள் ஞாநி..அதை உலகத் தமிழர்கள் சார்பில் நான் வரவேற்கிறேன்...உங்களது அனைத்து பதிலுக்கு பதில்களுக்கும் எங்களிடம் தலைமுறை கடந்த கேள்விகள் இருக்கின்றன..அதனை விடுத்து பதில் சொல்லாமல் சாதூர்ய சந்தில் பதுங்காதீர்கள்....

இந்த சின்னத் தூறலுக்கே...
இப்படி இரும்புக் குடைக்குள்
ஒண்டுகிறீர்களே.......
நாளைய நெருப்பு மழைக்கு
எந்தக் குடையில்...
அடேய்..
எந்தக் குடையில்...

-பாவலர். அறிவுமதி..

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை......





வணக்கம் தோழர்களே....
சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது...

இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த மாமேதை எப்படி மற்ற இசை வல்லுனர்களை விட தனித்து நிற்கிறார் என்பதற்காகவும் ,அவரின் தனித்துவமான இசைக் கூறுகள் எப்படிப்பட்ட உச்சங்களை தொடுகின்றன என்பதை நான் உணர்ந்தவைகளை உங்களிடத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டவன் என்பதற்காகவும் இந்த இக் கட்டுரையை எழுதுகிறேன்..

தமிழ்சினிமாவின் ஆரம்ப கால இசைக் கூறுகள் மேட்டிமைத் தனம் வாய்ந்த ,கர்நாடக இசை அறிவு உடைய மேலோருக்கும் உடையதாக இருந்தது என்பதும்,நாடகத்தின் நவீன வடிவமாய் சினிமா தோன்றியதால் இசை என்ற அம்சம் முழுக்க நாடகத் தன்மை நிறைந்ததாக விளங்கியது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமுமில்லை...

சினிமா என்ற அம்சம் மெல்ல மெல்ல பாமர மனிதர்களை ஈர்க்க துவங்கியதன் விளைவுகள் திரையசையிலும் எதிரொலிக்க துவங்கியது..

தமிழ்த்திரையுலகில்சி.ஆர்.சுப்பாராமன்(தேவதாஸ்),
எஸ்.வி.வெங்கட்ராமன்(மீரா),எஸ்.ராஜேஸ்வரராவ்(மிஸ்ஸியம்மா),
கண்டசாலா(பாதாளபைரவி,மாயாபஜார்),ஜி.ராமநாதன் (ஹரிதாஸ்,உத்தம புத்திரன்,அம்பிகாபதி) போன்ற இசைமேதைகள் மின்னத் துவங்கினர்.

திருவிளையாடல் ,வசந்தமாளிகை போன்ற படங்களுக்கு இசையமைத்த கே.வி.மகாதேவன் அவர்களும் திரையிசையில் மறக்க இயலாத உச்சத்தை தொட்டவர்தான்.
1957-ல் மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் –ராமமூர்த்தி என்ற இரட்டையர் தமிழ் திரையிசையின் போக்குகளை மாற்றத் துவங்கினர்.பாமர மக்களும் ,எளிய மக்களும் திரை இசை சுகத்தை அனுபவிக்க துவங்கினர்.
மெல்லிசை மன்னர்கள்,ஏ.எம்.ராஜா,போன்றோர் திரையிசையின் திரைக் கட்டுகளை மெதுவாய் நெகிழ்த்தி அதை சாதாரண மக்களின் உணர்வு தளத்திற்கு கடத்தினர்....மக்கள் திரையிசையை தன் சாதாரண வாழ்க்கையின் மறுக்க முடியாத அம்சமாய் வரையறுத்துக் கொண்டதும் இந்த காலக் கட்டதில்தான்...

தமிழ் திரையுலகில் பாபி,குர்பானி,சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட இந்தி திரையிசையின் தாக்கம் மிகுதியாக இருந்த காலக் கட்டத்தில் ,நவ நாகரீக தூதுவர்கள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள துடித்த இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்களே உட்காரத் துவங்கியது.
அந்த நேரத்தில்தான் அன்னக் கிளி படம் மூலம் ஒரு குக்கிராமத்தில் இருந்து,தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்து,கருத்த நிறத்தில்,சினிமா உலகிற்கென வகுக்கப் பட்ட எந்த ஒரு இலக்கணத்திற்கும் உட்படாத ,
சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள் ஏதும் அறியாத,எளிய மக்களின் அடையாளமாய் நுழைந்த இளையராஜாவின் பிரவேசம் நடந்தது.

இளையராஜாவின் இசை துவக்கம் முதலே மனித உணர்வின் தளத்தின் ஊடே நுழையும் வித்தையை தெரிந்துவைத்திருந்தது தான் இன்றளவும் எனக்குள்ள ஆச்சர்யம்.
முதல் பாடல் அன்னக் கிளியே உன்னை தேடுதே என்ற பாடலில் அவர் நம் தமிழ் மண்ணுக்கே உரிய நாட்டுப் புறத்தன்மையும்,வளைவும் நெளிவும் நிறைந்த புல்லாங்குழல் இசையோடு கூடிய ,ஒரு கிராமத்து வாழ்வியலை நினைவுக் கூறும் ,மெல்லிய மேற்கத்திய இசை வடிவங்களின் அடிப்படையோடு கலந்த புதுமையான இசையை வழங்கினார்...

கோரஸ் என்ற கூட்டுப் பாடல் உத்தியை மிகவும் அழகாக தன் பெரும்பாலான பாடல்களில் கையாளுகின்ற இளையராஜா அதற்கென பாடலோடு இழைகின்ற சின்னச் சின்ன உத்திகளால் அந்தப் பாடலை ஒரு அழகான கவிதையாய் மலர்த்துவதில் தனித் திறமை கொண்டவராக இருக்கிறார்..

இளையராஜாவின் ஆரம்பகால படங்களான , சிட்டுக்குருவி,கவிக்குயில் பத்ரகாளி போன்ற பாடங்களில் தனக்கேரிய தனி முத்திரை எதுவென தேர்ந்தெடுக்க இளையராஜாவிற்கு எந்த ஒரு குழப்பமும் இருந்ததில்லை.

கவிக்குயில் என்ற திரைப் படத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் இன்றும் கவனித் தக்க இசையை கொண்டிருக்கிறது...அந்தப் பாடல் முழுக்க நீரோடை போன்ற ஒட்டத்தை கொண்டது...குறிப்பாக அந்த பாடலை பெண் குரலில் கேட்கும் போது ...முதலில் அதிர்ச்சி அம்சத்துடன் துவங்கும் சோக உணர்வை ஏற்படுத்தும் வயலின் இசையையும், இனிய புல்லாங்குழல் குரலோடு,பனி இரவில் பெளர்ணமி நிலவில் தனியாய் ஒடும் ஒற்றை நீரோடை காண்பதில் உள்ள சுகத்தை ஏற்படுத்தும்.

அதே போல சிட்டுக்குருவி என்ற படத்தில் வரும் என் கண்மணி என்று துவங்கும் பாடல் மிகவும் வித்தியாசமான முயற்சி..இரட்டை குரலோடு ஒலித்தாலும், அந்த குரல்களின் இடைவெளி தூரத்தை இளையராஜா வகுத்திருக்கும் தன்மை பிரமிக்க வைக்கக் கூடியது. அந்த பாடலின் ஊடே பேருந்து பயணச் சுவடுகளை விதைத்து அந்த பாடலை அழகானதாக ,அபூர்வமான ஒன்றாக வடிவமைத்து இருப்பார் ராஜா.

சக்களத்தி படத்தில் வாடை வாட்டுது என்ற பாடல் இரவின் தனிமையும்,தன்னிரக்கத்தையும் நம்மிடையே விதைக்க வல்லது.
இதே போன்ற பாடல்தான் மலைக்கிராமத்தின் இரவினைப் பற்றிப் பேசும் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வரும் உச்சி வகுந்தெடுத்து என்ற பாடல்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் சிறு பொன்மணி துவங்கும் பாடல் சரணமும் ,பல்லவியும் நீண்ட தொடர்களாக அமையும் வண்ணம் அமைத்திருப்பது புதுமை.இதே உத்தியை அவர் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் கண்மணியே ...காதல் என்பது என்ற பாடலிலும் ,கேளடி கண்மணி படத்தில் மண்ணில் இந்த ..என்ற பாடலிலும் ,புதிய வார்ப்புகள் படத்தில் தம் தன தம் தன தாளம் வரும் என்ற பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.

நிறம் மாறாத பூக்கள் படத்தில் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற ஒரு பாடலுக்காகவே தனிக் கட்டுரை எழுதலாம்...இசைக் கலவையின் உச்சம் அது.ஜென்ஸி என்ற மயக்கும் குரல் உடைய பாடகி தன்னால் முடிந்த அளவிற்கு அந்த பாடலை கிளாசிக் என்ற வகையில் சேர்த்திருப்பார்...
இதே போன்ற பாடல்தான் கரும்பு வில் திரைப்படத்தில் வரும் மீன் கொடி தேரில் மன்மதராஜன்..என்ற பாடல் மற்றும் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்.....என்ற பாடல்களும்...

அதே போல் உதிரிப் பூக்கள் படத்தில் கேட்கும் போதெல்லாம் நம்மை உள்ளுக்குள் கலங்க வைக்கும் அழகிய கண்ணே என்ற பாடலின் தனித்துவத்தை உணர்ந்து காட்சியமைப்பில் கவிதையாக்கி இருப்பார் மகேந்திரன்...தாயின் வாசனையையும், தனிமையின் துயரத்தையும் அந்த பாடல் இன்றளவும் கசிய விட்டுக் கொண்டிருக்கிறது.இதே போன்ற மற்றொரு பாடல் மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே...என்ற பாடல்.

அலை அலையாய் துவங்கும் 16 வயதினிலே திரைப்பட பாடல் செந்தூரப் பூவே என்ற பாடலில் நாட்டுப் புற இசை வடிவங்களை கொண்டு பருவத்தின் கனவுகளை மெல்லிய சோகத்துடன் வடிவமைத்து இருப்பார்....

மெல்லிய ராகமாய் ,ஒரு பூ அவிழ்வது போல உச்சத்தை எட்டும் மற்றொரு பாடல் ஜானி திரைப்படத்தில் காற்றில் எந்தன் கீதம் என்ற பாடல்...அதில் முதல் முதல் பல்லவிக்கு முன்னர் சேர்க்கப் பட்டிருக்கும் இசைக் கோர்வை மிகவும் பிரசித்தமானது. அதே படத்தில் வரும் மற்றொருப் பாடலான என் வானிலே என்ற பாடலும் மிகவும் நல்ல உணர்வுகளை நம்மில் எழுப்பக் கூடியது.

ஜாஸ் வகை பாடல்கள் என்ற வரிசையில் ஒலிக்கும் சிவப்பு ரோஜாக்கள் பாடலான இந்த மின்மினிக்கு ...என்ற பாடலில் துவக்கத்தில் மற்றும் நடுவில் வரும் பெண்ணின் கோரஸ் குரல் கேட்க மிகவும் சுவாரசிய தன்மையை உடையது.விக்ரம் படத் தலைப்பு பாடலான விக்ரம் என்ற பாடலில் வரும் பெண்களின் கோரஸ் குரல் கோர்வைகளும் இத்தகையதே...

காதலாகட்டும், காமம் ஆகட்டும் ,கோபம் ஆகட்டும், விரக்தி ஆகட்டும் இளையராஜா மனித உணர்வுகளை இசை மொழியாக வகுக்கும் விதமே அலாதி.அவரின் மிகுதியான உற்சாகத்தை வழங்கக் கூடிய பாடல்களிலும் மாலை இருட்டினை பேசும் தனிமையான சோக உணர்வினை வழங்கக்கூடிய இசையினை மெலிதாக கசிய விட்டிருப்பார்.

(தொடர்ந்து எழுதுவேன்...)