புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..
என் அன்பிற்கினிய கல்யாண்..,
இந்த பொழுதில் இமைகளில்
துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு..
உன் உயிர் அண்ணனாகிய
நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் .
என் பாசமுத்தங்கள் உனக்கு..
ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ்
போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் .
நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற
ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட,
நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில்
கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட,
நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக்
கொடுத்திருக்கிறோம் …
புரட்சி என்பது சொல் அல்ல. அது வாழ்க்கை
என புரிந்து வைத்திருக்கிறோம்..
நம் உயிரையும் விட மகத்தானது-இம் மொழி
காக்க, இந்த இனம் காக்க
தன்னுயிர் தந்த
மாவீரர்களின் கனவு என்பதனை தெரிந்து
வைத்திருக்கிறோம்..
எத்தனையோ இரவுகளில் தனியே பயணப்படும் போது
நாம் நமது தாய்நாட்டிற்காக,தாய்மொழிக்காக
நமது அடுத்த தலைமுறையின்
ஒளிமயமான எதிர்காலத்திற்காக
உழைக்கிறோம் என்கிற பெருமிதம் நம்முள் பொங்கும்..
சராசரி வாழ்வில் கொண்டாடி
மகிழ்ந்திருக்க வேண்டிய சுகங்களை நாம் இழந்தோம்..
நாம் இரவுகளை இழந்தோம்..
பகல்களில் பறந்தோம்..
சராசரி இளைஞர்களின் ஆவலான
பணம் தேடும் வேட்கையை
இழந்தோம்..
ஏன் ,,சில சமயங்களில் நம் குடும்பத்தினையும்,தாய் தந்தையையும்
மறந்து நின்றோம்… நாம் சராசரிகள் அல்ல ..அல்ல என்பதனை
உலகிற்கு உரக்கச் சொன்னோம்..
இவையெல்லாம் எதற்காக..
புன்னகையுடன் நீ நெஞ்சு நிமிர்த்தி சொல்வாய்..
எம் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரனுக்காக..
ஆம்..உண்மைதான்..
தேசியத்தலைவர் வேறு..தேசம் வேறு இல்லை.
அவர் வேறு..இந்த இனம் வேறு இல்லை..
அவர் தான் வீழ்ந்தும் கிடக்கும்
இந்த இனத்தின் மீள் எழுதலுக்கான அடையாளம்..
அந்த அடையாளத்தினை நம் ஆன்மாவில் சுமந்து…
உயிருக்குயிராய் நம்மைப் போன்று தலைவரை
நேசிக்கின்ற ,நம் அண்ணன்
சீமான் அவர்களின் சீரிய தலைமையில்
நாம் களத்தில் நிற்கிறோம்.
அண்ணன் பிரபாகரனின்
கனவினை சுமக்கும் தம்பியாக
அண்ணன் சீமான் நிற்கிறார்.
மாவீரர்களின் மூச்சுக்காற்று
அண்ணன் சீமானை உறங்க விடுவதில்லை..
சுழலும் சொற்களாக…கம்பீர முழக்கங்களாக
சதா ஒலிக்கும் அண்ணன் சீமானின் குரல் தான்
இனி தமிழினத்தின் முகவரி..
அனுதினமும் இந்த இனத்திற்கான பெருங்
கனவினை சுமக்கும்
அவர் வரைந்திருக்கின்ற வானத்தில்
தான் ஒளிரும் சிறகுகளோடு
நாம் பறக்கிறோம்..
நமக்குள்ள இலட்சிய தாகம் பெரிது .
கொண்டிருக்கும் கனவு பெரிது..
விலை தலையே ஆனாலும் தரத் துடிக்கும்
தாகம் பெரிது..
ஆம். இலக்கு ஒன்று தான்.எம்மினத்தின் விடுதலை.
சராசரிகளை போல நாம் வாழ விரும்பவில்லை
என்பதை நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும்
உறுதிப்படுத்தினோம்.
உரக்க பேசுகிறோம்..நம் மொழியில் கோபமும்
வேகமும் நீடிக்கிறதா என்பதை ஒவ்வொரு
நொடியிலும் கவனம் கொள்கிறோம்..
இலட்சிய தாகம் கொண்ட போர் வீரனாக
நமது வாழ்வை நாம் அமைத்துக் கொண்டு
விட்டோம்.
தலைமையின் மீது ஆழ்ந்த பற்றுறுதி
கொண்டிருக்கும் கொள்கை மீது தீவிர
விசுவாசம் என நமக்கான கோடுகளை நாமே
வரைந்து கொண்டு விட்டோம்..
நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும்
இந்த இனத்திற்காக என எழுதி வைத்து விட்டோம்.
இந்த நிலையில் தான்
செளமியா வருகிறார்.
உன் இணையாக..துணையாக..
இனி உன் பயணத்தின் நிழலாக..
ஒரு இலட்சிய வீரனுக்கு வாழ்க்கைப்
பட்ட வாழ்க்கை துணைவியும்
ஒரு இலட்சிய வீராங்கனையே..
இரவு நேர பயணம் முடிந்து வரும்
கணவனிடம் எவ்வித சலிப்பும் காட்டாமல்
கூட்டம் எப்படி..?
சீமான் மாமா எப்படி பேசினார் ?
என்பதை அவர்கள் தான் எவ்வித சங்கடமும்
இல்லாமல் கேட்கிறார்கள்.
குழந்தை படிக்கும்
பள்ளியில் தந்தை வரவில்லையா என கேட்கும்
ஆசிரியரிடம் அவர் முக்கிய கூட்டத்திற்காக
போய் இருக்கிறார் என கண்ணியத்தோடு
அவர்கள் தான் பதில் சொல்கிறார்கள்…
அவசர அவசரமாய் ஊருக்கு கிளம்பும்
போது வீட்டுக்குள் நிலவும்
பொருளாதார சங்கடம் பற்றி பேசாமல்
பெருமை காக்கிறார்கள்..
அவர்கள் நம் தாய்மொழி போலவே
பெருமை வாய்ந்தவர்கள்..
பொறுமை வாய்ந்தவர்கள்..
பாரங்களை தன் மீது சுமத்திக்
கொண்டு சமூக பாரம் தூக்கித்
திரிய நம்மை வெளியே அனுப்புகிறார்கள்..
எம்மால் எமது மொழியையும், நாட்டையும்
எம் உயிருக்கு மேலாக நேசிக்கும் எம்மால்
எம்மோடு வாழ்வில் பயணிக்கும் சக தோழமையை
தாய்மையின் மற்றொரு வடிவத்தினை நேசிக்க முடியாதா என்ன..?
என் தம்பி கல்யாண் செளம்யாவை உயிராக..
உயிருக்கு உயிராக நேசிப்பான் .
அந்த வகையில் இன்று எம் இல்லத்தில்
நுழைந்திருக்கும் செளமியா மிகவும் கொடுத்து
வைத்தவர் .
இனமானம் சிறக்க..தமிழ்க் கொண்டு
களமாடும் என் தம்பி கல்யாண் அவர்களுக்கு
செளமியா அவர்கள் மொழியாய்..விழியாய்
இருக்க வேண்டும்..
அவனால் ஆக வேண்டிய
காரியம் நிறைய இருக்கிறது..
வீரியமாய் செளமியா இருப்பார்.
நம் அண்ணன் சொல்வது போல
நமது பயணம் வெகு தொலைவு..
அந்த பயணத்தின் முதன்மை தம்பியாய்..
அண்ணன் சீமானின் படை வலிமையாய்
தம்பி கல்யாண் விளங்குவான். அவன் உள்ள
உறுதியாய்..இல்லப் பெருமையாய்
செளமியா விளங்குவார்..
நாம் தமிழர் என்கிற இனமானத்திற்கான
இந்த பெரும் குடும்பத்தின் பெருமையை காப்பார்.
என்னால் வெகுவாக நேசிக்கப்படுகின்ற
இருவரின் இணையேற்பு நிகழ்விற்கு வர
முடியாமல் போனது எனக்கு வெகுவாக
வலிக்கிறது..
எம்மினம் போல
நான் விழுந்திருக்கிறேன்.
மீண்டும் உத்வேகத்தோடு
எழுவதற்காக..
எழுவேன்..
அண்ணன் சீமானின் உயரும் கரங்களில்
சுடர் விடும் ஒளியாக நாங்கள் இருப்போம்..
அவரின் இனமானம் காக்கும் இந்த மகத்தான
கனவுப் பணியில் களமாடும் ஆயுதங்களாக நாங்களே
திகழ்வோம்..
இல்லறம் ஏற்கும் என் அன்பு தம்பிக்கும்,
எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும்
செளமியா அவர்களுக்கும்
எனது புரட்சிக் கர வாழ்த்துக்கள்..
தோளோடு தோள் சேர்த்து …வாழ்வோடு
தமிழ்த் தோய்ந்த பெருமை கொள்க..
நாம் தமிழர்.
அன்பின் மகிழ்வில்..
மணி செந்தில்..
மாநில இளைஞர் பாசறை செயலாளர்.
நாம் தமிழர் கட்சி
Labels:
கடித இலக்கியம்,
சுயம்...
மதுபானக்கடை –இதுதான் நம் சமூகம்
யாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார்
அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத
சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து
சிரிப்பதையோ, அழவதையோ விட பேசாமல் அவர்களை
இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம்.
முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம்
அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின்
அவலம் இப்படத்தின் இயக்குனருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது .வழக்கமான சினிமாத்தனங்களில்
இருந்து அப்பாற்பட்டு சிந்திப்பது பாராட்டத்தக்கது என்றாலும் இப்படியுள்ள சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற
நினைப்பு நம்மை உறுத்தாமல் இல்லை. ஒரு திரைப்படத்திற்கு
அடிப்படை தேவைகளான ஒரு கதை, அதற்கான திரைக்கதை, கதாநாயகன்,கதாநாயகி ,நகைச்சுவை பகுதி,
சண்டைக்காட்சிகள் , என எல்லாவித காரணிகளையும் அடித்து நொறுக்கி விட்டு தனிப்பட்ட திரைமொழியை
உருவாக்கி இருப்பது வழமையான திரைப்படக் கலையின் சமன்பாடுகளை கலைத்துப் போடுகிறது.
உலகம் முழுக்க திரைக்கலை நினைத்துப் பார்க்க முடியாத உச்சங்களை
தொட்டு வரும் இந்த நவீனயுகத்தில் மதுபானக்கடை நம் திரைமொழி வரலாற்றில் ஒரு மைல் கல்லா
என சிந்திக்கும் போது ஆம் என தயக்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கொள்கிற
இத்தயக்கம் தான் இயக்குனரின் வெற்றி. ஒரு கதை, ஒரு நாயகன்,ஒரு நாயகி என பெரும்பாலும்
நேர்க்கோட்டில் பயணிக்கும் தமிழ்த் திரைக்கலைக்கு கண்டிப்பாக மதுபானக்கடை அதிர்ச்சி
வைத்தியம் தான். தனக்கென பண்பாடுகளை இறுக்கமாக கட்டமைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த்
திரைப்படமொழிக்கு வில்லன் போன்ற கெட்டவன் தான் குடிக்க வேண்டும் .கதாநாயகன் மது அருந்துவதாக
காட்சிகள் அமைத்தால் கூட அது ஒரு காதல் தோல்வியாகவோ,விரக்தி மனநிலையானதாகவோ காட்டப்பட்டு
அது நியாய வகைகளில் சேர்க்கப்படும்.
ஏனெனில் மது குடிப்பு என்பது ஒழுங்கீனத்தின் வடிவமாக ,கட்டறு
நிலையின் தோற்றமாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகள்
இடம் பெறுவது தாங்கள் புனைய விரும்பும் தோற்றத்திற்கு
அது இழுக்கானது என நினைத்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் மது அருந்தும் இருந்திருக்கிறதா என்றால் கள் அருந்தும்
முறை இருந்து வந்திருக்கிறது .கள் குடிப்பதும்,மது அருந்துவதும் வெவ்வேறான தன்மை உடையவை.
உலக பெருநிறுவனங்களின் ஊடுருவல் உள்ளூர் டாஸ்மார்க் கடை வரை ஊடுருவி விட்ட இந்நாளில்
உள்ளூர் பனையிலிருந்து தயாரிக்கப்படும் கள்
என்பது தேசிய பானம். பொருளாதார நலன்கள் மிளிரும் மது சார்ந்த அரசியலில் தற்போதைய ஆளும்
கட்சியான அதிமுகவும், அதன் எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி என்றால் அது உண்மையானதே. சாராய நிறுவனமான மிடாஸ் –ல் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி திருமதி சசிகலாவின் பங்கு பற்றி
திமுக மேடைகளில் உரத்து பேசப்பட்டது தற்போது
மெளனமாகிப் போனதும் இவ்வாறே. திமுக ஆட்சிக்காலத்திலும் மிடாஸ் –ல் இருந்து அதிக சரக்கு
கொள்முதல் செய்யப்பட்டது இதன்படியே. சாதாரண
திமுக, அதிமுக தொண்டர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அது தலைவர்களின் தனி அரசியல்.
உடல் நலனுக்கு பெரும் தீங்குகள் விளைவிக்கதாக கள்
அருந்தும் முறை தமிழ்ச்சமூகத்தில் ஒரு கொண்டாட்டத்தின்
வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் கள் கலயங்கள் சுமந்து
திரிவோர் பற்றி ஏராளம் குறிப்புகள் காணப்படுகின்றன. ( சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே,பெரியகட் பெறினே
,யாம்பாடத் தான் மகிழ்ந்துண்ணு மன்னே –புறநானூறு
).ஒளவையும் அதியமானும் கள் குடித்து மகிழ்ந்ததாக இன்குலாப்பின் ஒளவை நாடகம் பேசியது
.கள்ளுண்ணாமை என்ற திருக்குறள் அதிகாரமும் தமிழர்ச் சமூகத்தில் கள்ளுக்கு இருந்த அதிகாரத்தை
உரத்துப் பேசும் மிக முக்கிய ஆவணமாகும்.
மது,கள் ஆகியவற்றிக்கு முக்கிய வேறுபாடுகள் உண்டு. தயாரிப்பு
நிலையிலிருந்து சந்தைப்படுத்துதல் வரையிலான பயணத்தில் மதுதான் உற்பத்தியாளர்களின் விருப்பமாக
இருக்கிறது . மது வணிகப் பொருள். கள் தமிழர்களது உணவுப் பொருள். உடல் நலனிற்கு பெரிதும்
தீங்கினை விளைவிக்க கூடிய மதுவினை அரசு தெருவிற்கு தெரு கடையாக திறந்து விற்பதும்,
உடல் நலனிற்கு பெரிதும் கேடுகள் விளைவிக்காத, அதிகம் செலவுகள் ஆகாத கள்ளை அரசு தடை
செய்து வைத்திருப்பதும் முற்றிலும் முரணான ஒன்று.
மதுவிலக்கு என்பது அரசின் நிறைவேறாத பல இலட்சியங்களில் ஒன்று.அரசிற்கு பெரிதாக வருமானம்
தரக்கூடிய மதுவை மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மது விலக்கினை அமல் செய்யக்
கூடிய அவ்வளவு நாகரீகமான உலகில் நாம் வாழவில்லை என உறுதியாக நம்புவோம்.தந்தை பெரியார்
மதுவிலக்கினை மிகக் கடுமையாக எதிர்த்து இருக்கிறார் என்பது ஆச்சர்யகரமான தகவல். கடும்
உழைப்பு தரும் அசதியை போக்க மனிதன் மது அருந்துகிறான்.
கடும் உழைப்பினை மட்டும் மனிதன் மேல் திணித்து மதுவினை விலக்க நினைப்பது என்ன நியாயம்
என தந்தை பெரியார் கேட்கிறார். இது குறித்து லும்பினி இணையத்தளத்தில் சுகுணா திவாகர்
ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
சரி நாமும் மதுபானக் கடைக்கு திரும்புவோம். பெட்டிசன் மணியாக
அசத்தியிருக்கும் கவிஞர் என்.டி.ராஜ்குமார் நடிப்பிற்கும்-இயல்பிற்கும் உள்ள மெல்லியக்
கோட்டை அழிக்க முயல்கிறார். பாருக்குள் வரும் இராமன் –அனுமார் பெட்டிசன் மணியை பார்த்து
பயப்படுவது கலகலப்பு ஊட்டுகிறது. இந்துத்துவாவின் புனித பிம்பங்களை சாதாரண மனித நிலையில்
நிறுத்தி குலைத்துயிருப்பது ,சாதிப் பெருமை பேசுபவருக்கு எதிராக புயலென எழும் நகர சுத்தி
தொழிலாளர்களின் கோபம் என காட்சிக்கு காட்சி பிம்பங்களை சிதைத்துப் போடுவதில் இயக்குனருக்கு
வெற்றியே.இப்படத்தின் இயக்குனர் உலக சினிமா விரும்பியாம்.அரசாங்கத்தினையே கேள்வி கேட்கும்
சாதாரண ’குடி’மகன்கள்.சிரிக்கிறோம்.பிறகு ஏண்டா சிரித்தோம் என நினைக்கிறோம்.
பல பாத்திரங்கள் மூலம் மதுபானக் கடையொன்றின் குணாதிசயத்தை
நிறுவி இருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன். இதனால் சொல்ல வருவதென்ன என்று
யோசித்தால் மதுபான கடை திரண்டிருக்கும் இச்சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம் நம்மை
சிந்தனை வயப்படுத்துவது என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு சினிமா என்றால்
ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன என இயக்குனர் சிந்தித்திருப்பார் என எண்ண வேண்டியிருக்கிறது.
இயக்குனர் தனது விகடன் பேட்டியில் சொல்கிறார் . இது ‘அண்டர்ஸ்டூட்’ படம் என்று.
சரிதான்.
பழக்கம் இருக்கிறதோ..இல்லையோ..
ஒரு முறை போய் வாருங்கள்.
மதுபானக்கடைக்கு..
-மணி செந்தில்
Labels:
திரைப்பட விமர்சனம்
பெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..
தாயக விடுதலைக்காக ஈழ மண்ணில் பெருக்கெடுத்த மண்ணின் மைந்தர்களின்
செங்குருதிதான் தமிழர்களின் மற்றொரு தாய்நிலமான தமிழகத்திலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான
உரிமைக் குரலை கூர்மைப்படுத்தி,செழுமைப்படுத்தி,வலுவேற்றியது. தமிழ்நாடு தமிழருக்கே
என முழங்கும் மண்ணின் மைந்தர்களின் குரல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு
இப்போது உயர்ந்து ஒலிக்கத்துவங்கி இருப்பதன் அரசியல் மிகவும் நுணுக்கமானது. தமிழர்
என்ற உணர்வின் அரசியல் வெளியாக இதுவரை கருதப்பட்டு வந்த திராவிடம் முரண் செயல்பாடுகளால்
தனது இறுதி காலத்தில் நிற்கிறது. அவரவர் அளவிற்கு திராவிடர் –தமிழர் என சிந்திக்க
வைத்ததில் இம்மண்ணின் மைந்தர்களுக்காக புறப்பட்டு இருக்கின்ற புதிய அரசியலுக்கு பெரும்
பங்கு இருக்கிறது.
எப்படிப்பட்ட மகத்தான தத்துவமும் ,கருத்தும் உரிய
தலைமைகளால் உறுதியாக்கப்படாவிட்டால் உருக்குலைந்து போகும் என்ற சரித்திர உண்மைக்கு
சமீபத்திய சரியான எடுத்துக்காட்டு திராவிடம் .
திராவிடம் என்பது மொழியா என்றால் இல்லை.
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என நீளும் ஒரு மொழிக்
குடும்பத்தின் பொதுப்பெயராகத்தான் நான் சூட்டினேன் என்கிறார் கால்டுவெல். நான் இனத்தால்
திராவிடன்,மொழியால் தமிழன் என கதறும் திமுக தலைவர் கருணாநிதி கருத்துப்படி அது இனத்தினை
குறிக்கும் சொல்லா என்றால் ஒரு இனத்திற்கான வரையறைகளான ஒரே மொழி, குறிப்பிட்ட நிலம்,
பொதுவான பொருளாதார வாழ்வு,பொது பண்பாட்டில் வெளிபடும் தாம் ஓரினம் என்ற உளவியல் என்பவைகளான
எவையும் திராவிடத்திற்கு பொருந்தவில்லை. பிறகு திராவிடம் ஒரு நிலமா என ஆயும் போது வடவேங்கடம்
தென்குமரியோடு தமிழன் எல்லை முடிந்து விட்டது எனில் திராவிட நிலம் என்பது என்ன..?
.மராத்தியும்,குசராத்தும் கூட ஒரு காலத்தில் திராவிட நிலங்களாக கருதப்பட்டிருக்கிறது
.1948 ஆம் ஆண்டில் திருவாரூர் மாநாட்டில் உரையாற்றிய தந்தை பெரியார் இனி திராவிடம்
என்ற சொல் மண் சார்ந்ததாக இருக்க இயலாது என அறிவித்தார். பிறகு நிலமும்,இனமும்,ஒரு
மொழியும் இல்லாத திராவிடம் கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பெரு நிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.
இன்னமும் ஆள துடிக்கிறது எனில் இந்த மண்ணின் பூர்வீக குடிகளான தமிழர் என்கிற
தேசிய இனத்தின் உரிமைக்குரல் எப்படி தவறாகும் .?
இன்றைய திராவிட கருத்தியல்களுக்கு மூல அமைப்பாக தோன்றிய
நீதிகட்சியின் தோற்றம் 1916 –ல் நடந்தது. பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக துவங்கிய
அதன் துவக்கம் ‘திராவிடம்’ என்ற பெயரில் துவங்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
1916 துவங்கி அதன் இறுதியான காலம் 1936 வரையிலான 17 ஆண்டுக் காலத்தில் தமிழர் எவரும்
அக்கட்சியில் தலைவர் ஆனதில்லை. அது மட்டுமில்லாமல் பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக
கருதப்பட்ட நீதிக்கட்சியின் ஆதரவோடு என்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் என்ற பார்ப்பனர் கூட
அமைச்சராக முடிந்தது.
ஆனால் அக்கட்சியில் இருந்த இரட்டைமலை சீனிவாசன்,திரு.வி.ஐ.முனுசாமி
பிள்ளை,திரு.தர்மலிங்கம் பிள்ளை , திரு என்.சிவராஜ் போன்ற படித்த பட்டதாரி தமிழர்கள்
அமைச்சராக கூட ஆகமுடியவில்லை. தமிழனாக, தாழ்த்தப்பட்டவனாக பிறந்ததுதான் இவர்களின்
மாபெரும் தகுதி குறைவு. 1923 முதல் 1933 வரை சென்னை சட்டமன்றத்திற்கு சென்னை
தொகுதிக்கு உரிய 4 பொது இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 3 பேர் தமிழர் அல்லதோர்.
1 தமிழர். மேலும் நீதிக்கட்சி ஆண்ட 16 ஆண்டு காலத்தில் சென்னை மாநகராட்சிக்கு
தெலுங்கரே கமிசனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1916-ல் நீதிக்கட்சி பிறந்த போது
தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் துவங்கப்பட்டன. ஆங்கிலத்தில்
ஜஸ்டீஸ் எனவும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனவும் துவங்கப்பட்ட அந்த நாளிதழ் தமிழில்
மட்டும் ‘திராவிடன் ‘ என்ற பெயரில் வெளிவந்தது மிகவும் கவனிக்கத்தக்கது.
திராவிடம் பார்ப்பனர்களுக்கு எதிரான ஒரு குறியீட்டு சொல்.
தமிழன் என்றால் பார்ப்பான் புகுந்து விடுவான்.திராவிடன் என்றால் பார்ப்பனுக்கு இடமில்லை
என்பதான திராவிட சிந்தனை மரபு எங்கிருந்து துவங்கியது என நாம் ஆராயும் போது தென்னிந்தியாவில்
பிறந்த திருஞான சம்பந்தரை ’திராவிட சிசு’ என அழைப்பு ஆதிசங்கரனின்
விளிப்பு நமக்கு தெளிவாக அறிவுறுத்துவது என்னவென்றால் 20 ஆம்
நூற்றாண்டின் அரசியல் மற்றும் சமூகத்தேவைகளே பார்ப்பனரல்லாதோரை ஒரு குடையின் கீழ் திரட்டும்
அரசியல் தந்திரோபயமான (political tactics) சொல் ‘திராவிடம்’ என்பதுதான்
.
எதையும் இவரிடம் இருந்துதான் துவங்க வேண்டி இருக்கிறது.
இதையும் இவரிடமிருந்துதான் துவங்கி இருக்கிறோம். தமிழ்த் தேசிய உணர்விற்கு எதிராக பெரியார்
நிறுத்தும் அரசியல் கண்டிப்பாக முரண் தன்மை உடையது என்ற புரிதலில் தான் நாம் பெரியாரை
அணுகுகிறோம்.
தமிழ் நாட்டினை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரத்தக்குரலை
முதன் முதலில் அரசியல் தளத்தில் எழுப்பிய தந்தை பெரியாரை தமிழ்த்தேசிய உணர்வின் மூலவராக
நாம் அறிகிறோம். தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரலை தனது அரசியல் வாழ்க்கையின்
துவக்க காலத்திலும், இறுதி காலத்திலும் தீர்க்கமாக முழங்கிவிட்டு போன அவரது தெளிவு
இன்று மாற்றார்கள் இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற துடிப்பை உள்ளுக்குள் உருவேற்றிக் கொண்டு
உதட்டில் திராவிடம் முழங்கும் அறிஞர்களிடம் உண்டா என்பதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.
‘1924 முதல் 1954 வரை ஒரு தமிழன் கூட முதன் மந்திரியாக
வரமுடியவில்லை. முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாக கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக
வந்திருக்கிறார்”. (காமராசர் முதல்வரான போது தந்தை பெரியார் விடுதலையில்
3-12-19)
காமராசரை தந்தை பெரியார் ஆதரித்தது வரலாற்றின் ஏடுகளில்
நீக்கமற நிறைந்திருக்கிறது. காமராசரை தந்தை பெரியார் ஆதரித்து பேசிய பெரும்பாலான கூட்டங்களில்
அவரை ‘பச்சைத் தமிழர்’ என அழைத்ததன் அரசியலை இப்போது உள்ள ’திராவிட
பற்றாளர்கள்’ ஏற்பார்களா ? –இதில் பச்சை என்கிற சொல்லில் தான் தந்தை பெரியாரின்
ஆன்ம விருப்பம் புதைந்து கிடக்கிறது. மிகவும் தூய இரத்த கலப்பில்லாத மண்ணின் மரபணு
மைந்தனாக (purest) காமராசரை தந்தை பெரியார் உருவகிக்கிறார். வெறும் தமிழர் என்று
சொன்னால் போதாது.அதிலும் கறார் தன்மை கொண்டு,இன்னமும் வடிகட்டிய வார்த்தையான ‘பச்சை
தமிழராக’காமராசரை தந்தை பெரியார் அடையாளம் காட்டியது எதற்காக.? தமிழ்நாட்டினை திராவிடன்
என்ற பெயரால் தெலுங்கனும்,கன்னடனும்,மலையாளியும், ஆள்வதற்காகவா..?- ஒரு தலைவனை முன்னிருத்தும்
போது தந்தை பெரியாருக்கு இருந்த புரிதல்,அக்கறை ஏன் இந்த திராவிடவியாளர்களுக்கு இல்லை
?
தமிழன் என்று பேசினால் தந்தைபெரியாரை எதிராக நிறுத்துவதென்பது
அவரது சிந்தனைகளுக்கு திராவிட பற்றாளர்கள் செய்கிற துரோகம்.
ஒரு திராவிட இயக்கத்திற்கு கன்னடத்து ஆரிய தலைமை
வாய்த்தது பற்றியோ,பெரியாரின் பள்ளியில் பயின்று சாய்பாபாவின் பெருந்தொண்டராக மாறிப்
போன மஞ்சள் துண்டு போர்த்தி ,குடும்ப உறுப்பினர்களின் சோதிட ஆலோசனைகளின் பேரில் செயல்படும்
கருணாநிதி தலைமை தாங்குவது பற்றியோ, ஒரு தனியார் நிறுவனமாக திக வை மாற்றிய
கார்ப்பரேட் முதலாளி வீரமணி பற்றியோ , ஈசானி மூலையில் புறாக்களை பறக்க விட்டு,திருப்பதி
கோவிலில் திராவிட கட்சி துவக்கப் பத்திரிக்கையை வைத்து துதித்த விஜயகாந்த் பற்றி திராவிட
பற்றாளர்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் விசுவாசம்
போற்றும் இம் மண்ணின் மைந்தர்கள் மேல் தான் இவர்களுக்கு இத்தனை காழ்ப்புணர்வு.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ,முல்லை பெரியாற்றிலும்,
காவேரி நதி நீரிலும்,பாலாற்றிலும், பிற ’திராவிட’ சகோதரர்களால் பாதிக்கப்பட்ட
பிறகு,இந்த இத்துப் போன திராவிடத்தினை மற்ற திராவிட இனங்கள் என இவர்களால் அடையாளம்
காட்டப்பட்ட தெலுங்கர்களோ,மலையாளிகளோ,கன்னடர்களோ ஒரு முடியளவு கூட மதிக்காத நிலை
இருக்கும் போது தமிழனை மட்டும் திராவிடனாய் இருக்கச்சொல்லுவதன் அரசியல் இந்த மண்ணில்
தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் பெற்றிருக்கின்ற, தொடர்ந்து பெற்று வருகின்ற
சமூக,கலை,அரசியல்,பண்பாட்டு செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் தொலைந்து விடும் என்ற அச்சத்தின்
காரணமாக என்பது அப்பட்டமாக தெரிகிறது .
தமிழன் என்றால் பார்ப்பனர்கள் இடம்பெற்று விடுவார்கள்
என்கிற அச்சம் தேவையற்றது மற்றுமல்ல, நம்மை நம் அடையாளத்தின் மூலம் அங்கீகாரம் பெறுவதை
தடுக்கின்ற திராவிடத்தின் சூழ்ச்சி என நாம் தெளிவாக வேண்டும். இன்று எந்த தமிழ்த்தேசிய
அமைப்பிலும் பார்ப்பனர்கள் இடம் பெறுவது இல்லை. .இது வரை இடம் பெற்றுதும் இல்லை. ஆனால்
திராவிடக் கட்சிகளில் இன்று இடம் பெற்றுள்ள பார்ப்பனர்களின் பட்டியலை நாம் வெளியிட்டால்
இப்பக்கங்கள் போதாது தமிழ் ,தமிழர் என்று பேசினால் இந்து ராம்,துக்ளக் சோ, மாலன்,சுப்பிரமணிய
சாமி போன்ற அக்கிரகாரத்து அசல் மனிதர்களுக்கு இன்றும் வேப்பங்காயாகத்தான் கசக்கிறது
என்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன்
தமிழ் மண்ணில் உண்டு. ஆரிய படை வேண்டாம், ஆரியத்தின் சடையை தொட்ட திராவிட மன்னன் என்று
எங்கேயும் குறிப்புகள் உண்டா.?
1933 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய
தந்தை பெரியாரின் முழக்கம் அப்போது ஆரிய பத்திரிக்கையான ஆனந்த விகடனுக்கு கடுமையான
கோபத்தினை ஏற்படுத்தியது. ‘எலி வலை எலிகளுக்கே’ என எகத்தாளம் பேசவும் வைத்தது,
ஆரியத்தின் தீவிர எதிரி தமிழ்த் தேசியமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய திராவிடம் எக்காலத்திலும்
இல்லை.
திராவிடத்தின் இன்றைய இலக்கு தமிழ் மண்ணில் தமிழனைத் தவிர
மற்றவர்களுக்கான அரசியல் இடத்தினை உறுதி செய்வது . இம் மண்ணின் மைந்தர்கள் மண்ணை
ஆள விரும்பும் இயல்பான விருப்புறுதியை குலைப்பது.
நான் பிறப்பால்,மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் தமிழன்.
நான் ஏன் திராவிடன் என அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டால் யாரிடமும் பதிலல்லை.
பார்ப்பனரல்லாதோருக்கான ஆரிய எதிர்ப்பு அரசியல் குறியீட்டுச் சொல்தான் திராவிடம்
என்றால் இன்றைய திராவிடம் என்ற கருத்தியலின் அரசியல் வடிவங்கள் அதற்கு முற்றிலும் முரணானவை.
நான் மொழியால் தமிழன்,இனத்தால் திராவிடன்,நாட்டால் இந்தியன் என குழப்பும் கருணாநிதி
1947க்கு முன் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்.? கால்டுவெல் ஒப்பிலக்கணம்
எழுதுவதற்கு முன்னால் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்..? .
இந்தியம்,திராவிடம் என்ற இரண்டுமே தமிழ்த்தேசிய கருத்தியல்களுக்கு
எதிரானவை. தமிழரின் தனித்த அடையாளங்களை, இறையாண்மையை மறுப்பவை. மேலும் இவைகள் தான்
ஆரியத்தினை பாதுக்காக்கும் கவசங்களாய் இன்று செயல்படுபவை.ஈழத்தின் அரசியலில் சிங்களனின்
ஆதிக்கத்தினை எதிர்க்கும் திராவிட பற்றாளர்கள் இங்கே ..இந்த மண்ணில் தமிழனின்
அரசியலில் தெலுங்கனின், கன்னடனின் ஆதிக்கத்தினை ஏன் இங்கே எதிர்க்க மறுக்கிறார்கள்
?
திராவிடம் எனும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.இது முந்தித்
தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. திராவிடம் என்பது கற்பனை –(பாவலரேறு
பெருஞ்சித்திரனார். –வேண்டும் விடுதலை –பக்கம் எண் 294,295 )
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூட தனது இறுதிக்காலத்தில்
தமிழ்த்தேசியராகத்தான் வாழ்ந்தார் என்பதும்,திராவிட நாடு என வருகின்ற இடத்தில் செந்தமிழ்நாடு
என திருத்தினார் என்பதும் வரலாறு. எம் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்
இந்த இனத்தினை தமிழ்த்தேசிய இனம் என்றுதான் வரையறுத்தாரே தவிர திராவிட இனம் என
திருகி குழப்பவில்லை.
தமிழர்களில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை ஆதி திராவிடர்கள்
என அழைத்த திராவிட பற்றாளர்கள் ஆதி திராவிடர் என ஆந்திராவில் யாரையாவது அடையாளம் காட்ட
இயலுமா ? தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் நிலை கருதி 1890- துவங்கப்பட்ட
பறையர் மகாஜன சபை 1910 ஆண்டு கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் தாக்கத்தினால் ‘ஆதி
திராவிடர் மகாஜன சபை’ என பெயர் மாற்றம் அடைந்தது. இந்த சபை 1918 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களை பறையர்-பஞ்சமர் என குறிக்கக் கூடாது, ஆதி திராவிடர்
என குறிக்க வேண்டும் என மனு அளித்தது. ஆனால் தெலுங்கர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை.
தங்களை ஆதி ஆந்திரர் என அறிவிக்கவேண்டும் என போராடிய தெலுங்கர்கள் வென்றார்கள். தாழ்த்தப்பட்ட
கன்னடர்களும் தங்களை ஆதி திராவிடர் என அழைக்கக்கூடாது என்றும் தங்களை ஆதி கன்னடர் என்றுதான்
பதிய வேண்டும் எனவும் போராடி வென்றார்கள். 1922 –ல் சென்னை சட்டமன்றத்தில் நீதிக்
கட்சி கொண்டுவந்த தீர்மானத்தின் படி தமிழன் ஆதி கன்னடன் ஆதி கன்னடன் ஆனான். தெலுங்கன்
ஆதி தெலுங்கன் ஆனான். ஆனால் தமிழனை மட்டும் ஆதி திராவிடன் ஆக்கி ‘திராவிட’ தொடர்பினை
அறுந்து விடாமல் பாதுகாத்தது நீதிக்கட்சியில் ஆதிக்கம் பெற்ற தெலுங்கர்களின் திட்டமிட்ட
சூழ்ச்சியே ஆகும். ஆந்திராவினைச் சேர்ந்த திரைப்பட நடிகர் என்.டி.ராமராவ் அந்த
மண்ணுக்கான அரசியலை முன் வைத்து தெலுங்கு தேசம் துவங்கினார். ஆனால் நம் நாட்டு நடிகர்
விசயகாந்த் திராவிடத்தில் தேசியத்தினை ஊற்றி முற்போக்கில் முழ்கினார். ஏனெனில் திராவிடம்
என்று சொன்னால் தான் தமிழர் அல்லாத மாற்றார்கள் தமிழ் மண்ணில் அரசியல் பிழைக்க தகவாக
இருக்க முடியும்.
தந்தை பெரியார் திராவிடம் என்ற கருத்தியலை சமூகத்தளத்தில்
பயன்படுத்தியதன் நோக்கம் மிக வெளிப்படையானது. தீவிர பார்ப்பன எதிர்ப்பினை சமூக மாற்றத்திற்காக
தன் கையில் எடுத்த தந்தை பெரியார் சமூகக் கொடுமைகளுக்கு ஆதாரமாக இந்து மதமும், அது
பாதுகாக்குகிற பார்ப்பன மேலாண்மையும் இருப்பதை கண்டார். எனவே தான் இந்து மத எதிர்ப்பு,மற்றும்
அது சார்ந்த கடவுள் மறுப்பு, அது வளர்த்து வந்த சமூக பண்பாட்டு காரணிகளை வேறோடு வீழ்த்துதல்
ஆகியவற்றை தனது அரசியலாக அவர் கொண்டார். இந்து மத பண்பாட்டினை தாங்கிப் பிடிக்கும்
மிகப்பெரிய ஆயுதங்களாக தமிழ்மொழியும், அதன் இலக்கியங்களும் இருப்பதை உணர்ந்தார். தமிழன்
என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது.
மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன் வைத்த
மறைமலை அடிகளார்,ம.பொ.சி,திரு.வி.க போன்றோர் சமய ஆதரவாளர்களாக
திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில்
வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன்
போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற்
போல் தமிழ்த்தேசிய கருத்தியலை படைக்க முயன்றனர். பெரியாரின் அக விருப்பமான தமிழ்த்தேசிய
கருத்தியலை தத்துவார்த்தமாக நிறுவியதில் அய்யா பழ.நெடுமாறன்,அய்யா.பெ.மணியரசன்,தோழர்.தியாகு,பேரா.சுப.வீ
போன்றோர்க்கு அதிகம் பங்கு உண்டு. சித்தர் மரபில் துவங்கி ,தந்தை பெரியாரின் சிந்தனை
மரபின் தொடர்ச்சியாக செழுமையடைந்து, ஈழம் கற்றுத்தந்த பாடங்களை உள்வாங்கி இன்று தமிழ்த்தேசிய
கருத்தியல் தனக்கென அரசியல் வெளியையும் தகவமைக்க துவங்கியுள்ளது. தமிழ் மொழி கல்வி
குறித்து ஆழமாக சிந்தித்த தந்தை பெரியாரை ஆங்கிலம் படிக்கச்சொல்லி தமிழை தவிர்க்கச்சொன்னார்
பெரியார் என முழங்கும் திராவிட பற்றாளர்கள்
”ஆங்கிலம் வளர்ந்த மொழி-விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி
யடையாத பழங்கால மொழி என்பதும் எனது மதிப்பீடு .இதை நான் சொன்னதற்கான மிக முக்கியமான
நோக்கம் தமிழ்மொழி ஆங்கிலம் அளவிற்கு விஞ்ஞான மொழியாக,பகுத்தறிவு மொழியாக ஆகவில்லை
என்பதுதானே தவிர, தமிழ்ழொழி மீது எனக்கு தனி வெறுப்பில்லை. நான் பேசுவதும் ,எழுதுவதும்
தமிழில் தான்”. (1-12-1970 விடுதலை தலையங்கம்) என்று தமிழ்மொழி மீது பெரியார்
கொண்டிருக்கிற பற்றினை, மொழி வளரவேண்டும் என்கிற பரிதவிப்பினை உணர்வார்களா..?.
அவருக்கு தமிழ் மொழி மீது இருந்த காத்திரம் அதன் சமயம் சார்ந்த தன்மை பொறுத்ததே தவிர
கண்டிப்பாக அதன் இனம் சார்ந்த தன்மை பொறுத்தது இல்லை.
தந்தை பெரியார் தனது இறுதி காலம் வரை முழங்கிய முழக்கம்
தமிழ்நாடு தமிழருக்கே. அவரது இறுதி பிறந்த நாள் அறிக்கையிலும் (1973 செப்டம்பர் ) தனது
உறுதியான ,இறுதியான விருப்பத்தினை உரக்கச் சொல்லி விட்டுத்தான் போனார். தந்தை பெரியார்
நின்ற காலமும் ,களமும் இன்று வெகுவாக மாறி இருக்கின்றன. வெகு சன அரசியல் விழிப்புணர்வு
கூடியிருக்கிறது. ஈழத்தின் அழிவு உணர்வினையும்,விழிப்பினையும்,பாடங்களையும் போதித்து
இருக்கிறது. எனவே , என்ன சொன்னாலும் அப்படியே ஏற்காதே என்றும் சிந்தித்து செயல்படு
என்றும் அறைகூவிய தந்தை பெரியாரின் கருத்துக்களை மண்ணுக்கேற்ற மார்க்சியம் போல சூழலின்
பாற்பட்டு, தற்காலத்திற்கேற்றாற் போல் தகவமைக்க வேண்டிய மாபெரும் கடமை அறிவுலகத்திற்கு
உண்டு. தமிழ்த் தேசிய கருத்தியலை சமூக நீதி புரிதலின் வழி நின்று பெரியார் சிந்தனை
மரபின் தொடர்ச்சியாய் வளர்த்து வார்த்தெடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை.
தந்தை பெரியார் பிறப்பால் கன்னடர். அதை மறைக்காமல்,மறக்காமல்
வெளிப்படுத்திய உண்மையாளர். தமிழ்மண்ணில் தனக்கென எழுந்த அரசியல் ஆதரவை தன் பதவிக்காக
பயன்படுத்தாமல் ஒரு தமிழனை முன் நிறுத்திய தகைமையாளர். அர்ஜெண்டினா நாட்டில்பிறந்தாலும்
கியூப விடுதலைக்கு பாடுபட்ட சே குவேரா போன்ற, உலகப்பந்தின் ஏதோ மூலையில் பிறந்தாலும்
உலக மாந்தனின் பசி பற்றி சிந்தித்த மாமனிதர் மார்க்சைப் போல ஆளுமை மிக்க புரட்சியாளர்.
அவரை புறக்கணித்து தமிழ்த் தேசமோ,தமிழ்த் தேசியமோ இல்லை. மாறாக அவர் வகுத்த பாதையில்
தான் தமிழர்கள் இன்றளவும் தனக்கான தேசியக் கருத்தியலோடு நடக்கிறார்கள்.
ஆம் எம் தந்தை பெரியார்.
கண்டிப்பாக கன்னடனுக்கோ,தெலுங்கனுக்கோ,மலையாளிகளுக்கோ
அல்ல.
தொடர்புடைய நூல்கள்:
1.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் –கால்டுவெல்
2. திராவிடம் தமிழ்த்தேசியம்-பெ.மணியரசன்-பன்மை வெளி வெளியிடு
3. பெரியார் ஈவேரா சிந்தனைகள் –வே. ஆனைமுத்து.-பெரியார்-நாகம்மை
கல்வி அறக்கட்டளை
4.தமிழகத்தில் பிற மொழியினர் –ம.பொ.சிவஞானம்- புலம்
வெளியீடு
5.பெரியார்-தமிழ்-தமிழர்-தமிழ்நாடு –தொல்தமிழன்.-கரந்தை
வெளியிடு
6. மார்க்சியம்,பெரியாரியம்,தேசியம்- எஸ்.வி.ராஜதுரை –விடியல்
பதிப்பகம்
7. பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் -சுப.வீரபாண்டியன்
-தமிழ் முழக்கம் வெளியீடு
8.பெரியாரும் பெருந்தலைவரும்- கோபண்ணா- நவ இந்தியா பதிப்பகம்
-மணி.செந்தில்
Labels:
கட்டுரைகள்..
Subscribe to:
Posts (Atom)