உதிரச் எச்சலில் உருக்குலைய நேரிடும் உலகு… மணி.செந்தில்


இந்த உலகில் வாழ்கிற சாதாரண மனிதர்களைப் போல் உரிமைகளுடன் கூடிய வாழ்க்கைக்காக ..விடுதலை வேட்கையுடன் போராடிய மாவீரர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்த சர்வதேச சமூக வல்லாதிக்கத்தின் முகத்திற்கு முன் அலை அலையாய் வந்து விழுந்துக் கொண்டே இருக்கின்றன ஈழப்போரின் கொலைக் குற்ற காட்சிகள். ஈவு இரக்கம் அற்ற மனித மாண்பிற்கு அப்பாற்பட்ட காட்சிகளை கண்ட எவரும் கண்கள் நிறைந்து தலை குனிவர். படக் காட்சிகள் பலவற்றை வைத்துள்ள இங்கிலாந்தின் சேனல் 4 மானுட சமூகத்தின் நாகரீக வரையறைகளுக்கு உட்பட்ட காட்சிகளைத்தான் தங்களால் வெளியிட முடிந்தது என்றும் வெளியிட முடியாத அளவிற்கு காண சகிக்காத கொடுங்கோலங்களை கொண்ட படக்காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்றும் கூறி அதிரச் செய்து இருக்கிறது. ரத்தமும், கொடூரமும் வழியும் அந்த படக்காட்சிகள் விலங்குகளாய் மனிதன் திரிந்த கற்காலத்தில் படம் பிடிக்கப்பட்டவை அல்ல. உலகத்தீரே.. நாகரீகமும்..அறிவியல் முன்னேற்றமும் சொல்லில் விவரிக்க முடியாத அளவில் உயர்ந்து..தனி மனித விழுமியங்களுக்காகவும், சமாதானத்திற்காகவும் உலக சமூகம் உருவாக்கப்பட்டு வருகிறது என பறை அடித்து பாசாங்கு காட்டுகின்ற தற்காலத்தில் தான்.. என்று உணருங்கள்.

நிர்வாண உடல்களை பேரினவாதத்தின் அலகுகள் கொத்தி சிதைத்திருப்பதைதான் இந்தியா உள்ளீட்ட வல்லாதிக்கங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என விளக்கமளித்தன. விரிந்துக் கிடக்கின்ற ஈர நிலத்தில் விடுதலைக் கனவு சுமந்த கண்கள் கட்டப்பட்டு..மறுத்த உரிமைகளின் மேல் வெகுண்டெழுந்த கைகள் இறுக்கப்பட்டு… தகிக்கின்ற சுதந்திர தாகத்திற்காக, இறுதியில் ஆடையும் அவிழ்க்கப்பட்டு ..சிறு முனகலோடு சிதைகிற சகோதரன். வன்புணர்வின் வலியில் கசங்கிய மலராய்.. உதிர முகத்துடன் உரு கலைக்கப்பட்டு ..வீழ்ந்து கிடக்கின்ற சகோதரி.. இறுகிக் கிடக்கும் உடலில் போர்த்தப்பட்டிருக்கும் உடையை காற்று கூட விலக்க துணியாமல் கண் கலங்கி நிற்கையில்.. வக்கிர சிரிப்புடன் ஆடை அவிழ்ந்து காட்டும் சிங்களனின் மன நோய்க்கு உலகம் வைத்திருக்கும் பேர்தான் பயங்கரவாத எதிர்ப்புப் போர்..

பேரினவாத வன்முறையினால் நம் சொந்த சகோதரியின் சிதிலமடைந்த பெண் குறியை நம் விழிகளில் உதிரம் மல்க பார்க்க நேர்ந்த அவலத்தினை நாம் எங்கே கொண்டு தொலைப்பது..? நம் சொந்த சகோதரியின் நிர்வாணத்தினை கண்ட பிறகும் கூட எவ்வித சலனமுமில்லாமல் மற்ற பணிகளை பார்க்கத் துணியும் எம் விழிகளை எங்கே கொண்டு புதைப்பது..? நம் கண் முன்னால் நம் சகோதரியை ஆடை அவிழ்ந்து காட்டுகிறான் எதிரி. முகத்தில் உதிரம் வழிய இறந்துக் கிடக்கிறாள் இசைப்பிரியா.. இசைப்பிரியா மட்டுமா அங்கு இறந்து கிடக்கிறாள்..? அல்லவே தோழர்களே.. தொன்மம் மிகுந்த ..இமயத்தில் புலிக்கொடி நட்டு உலகத்தினை ஆண்ட இனத்தின் நம் தாய்தான் அங்கு அம்மணமாக வீழ்ந்து கிடக்கிறாள்.. உடைந்த அவளின் தலையில் இருந்து காலம் காலமாய் நமக்கு மரபாய்..பண்பாடாய்..விழுமியமாய் புகட்டப்பட்ட தாய்ப்பாலின் மிச்சம் உதிரமாக அல்லவா அந்த ஈர நிலத்தில் பாய்கிறது..? அங்கே தான் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் உள்ளாடையோடு கிடக்கிறான். அங்கேதான் அம்மணமாய் பின்புறம் காட்டி கைகள் கட்டப்பட்ட மன்னன் ராசராசன் கிடக்கிறான். மானத்திற்காக மண்டியிடாத இரும்பொறை மண்டை உடைந்து மல்லாக்க கிடக்கிறான்.

உலக சமூகம் வரையறுத்து வைத்துள்ள அனைத்து நாகரீக சமன்பாடுகளையும் சிங்கள பேரினவாதம் மாற்றி அமைத்து போட்டிருக்கிறது . உலகத்தினை அழிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறி எவ்விதமான புற, அக ஆதாரங்களையும் கணக்கில் கொள்ளாமல் ஈராக்கின் மீது படையெடுத்து அதன் அதிபரான சதாமை அவசர அவசரமாக தூக்கில் இட்ட அமெரிக்க வல்லாதிக்கம் உள்ளீட்ட உலக நாடுகள் புகைப்படங்களாக, படப்பதிவுகளாக என மலைமலையாய் குவிந்துக் கொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்ற காட்சிகளை கண்டு கண் மூடி மவுனத்திருப்பதன் நோக்கம் வெறும் பொருளாதார காரணிகள் மட்டும்தான். சகல வளங்களோடு விரிந்துக் கிடக்கும் தமிழரின் தாயகமான ஈழப் பெரு நிலம் வல்லாதிக்கங்களைப் பொறுத்த வரையில் நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான பண்டம் ஒன்றுதான்.

தங்களின் தாயக விடுதலைக்காக களமாடிய விடுதலைப்புலிகள் இறுதி வரை கடைப்பிடித்த ஒழுங்கமைவும், மனித சமூக நலனிற்கு உட்பட்ட விழுமியங்கள் சார்ந்த மரபு வாயிலான போர் முறையையும்…அதன் எதிர் வினையாக சிங்கள அரசு கடைப்பிடித்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளையும் உலகம் தன்னிரு கண்கள் கொண்டு பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இன்றளவும் மக்களை நேசித்த..மக்களுக்காக போராடிய இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க எந்த நாடும் முன் வராத சூழலில் தான்… அடுக்கடுக்காக சிங்கள பேரினவாதத்தின் போர்க்குற்றக்காட்சிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உலக சமூகத்தினால் கைவிடப்பட்ட தனித்த இனமாக தமிழ் தேசிய இனம் மாறிப் போய் இருக்கிறது. உலக சமூக நலனிற்காக உருவாக்கப்பட்ட பொதுவுடைமை சித்தாந்தம் பேசும் நாடுகள் கூட ஈழப் பெரு நிலத்தின் மேல் கவிழ்ந்துள்ள துயரங்களுக்கு ஆதரவு அளிக்க இயல வில்லை. மாறாக உலக மானுட மாண்புகளுக்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் கொடுங்கோலங்களுக்கு துணை புரிவதன் அரசியல் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

ஈழப் பெரு நிலத்தின் விடுதலை என்பது இன்று தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையாக முகிழ்ந்து இருக்கிறது என்பதுதான் நடந்து முடிந்த நான்காம் கட்ட ஈழப்போர் உலக தமிழின சிந்தனை மரபில் ஏற்படுத்திய மாற்றம் ஆகும். உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ்த் தேசியத் இனத்தின் ஒற்றைக் கனவாக ஈழப் பெரு நிலம் மாற்றப்பட்டு விட்டது . ஈழத்தில் நிகழ்ந்திருக்கிற வன் துயரங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது நிகழ்ந்த வன்முறையை சார்ந்தவை அல்ல. மாறாக 12 கோடி மக்களாய் விரிந்திருக்கிற தமிழ்த் தேசிய இன சுதந்திர வேட்கையின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். தன் சொந்த சகோதர, சகோதரிகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொடுங்கோன்மைகளுக்கு உலகச் சமூகம் பதில் தந்தாக வேண்டும் என்ற உத்வேகம் தமிழர்களின் ஆழ் மனதில் வன்மமாக உருவேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக தான் பனிக் கொட்டிய இரவில் இரகசியமாக வந்து இறங்க முயன்ற சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவிற்கு பிரிட்டன் தமிழர்கள் அளித்த கடும் எதிர்ப்பு . மேலும் தாயக தமிழகத்திலும் ஜவுளி கண்காட்சியை துவக்கி வைக்க கோவை வந்த சிங்கள பேரினவாத எம்.பியை ஓட ஓட விரட்டியடித்த பெரியார் தி.க, நாம் தமிழர் உள்ளீட்ட தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு. இனி சிங்களம் கொழும்பினை விட்டு எங்கு தரை இறங்கினாலும் உலகத் தமிழினம் பாய்ந்து எதிர்க்கும் என்பதனை சிங்கள பேரினவாதம் உணர்ந்து நடுங்க துவங்கி இருக்கிறது.

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ்ச் சமூகத்தின் ஆன்மாவில் ஆழ்ந்த வடுக்களாக வடிவம் பெற்று வலித்துக் கொண்டிருக்கின்றன. தன் சொந்த சகோதரியின் ஆடையை அவிழ்ந்துக் காட்டி சிரித்து மகிழும் எதிரியின் எக்காளத்தினை தமிழனால் ஒருக்காலும் மறக்க இயலாது. தன் சகோதர சகோதரிகளின் நிர்வாணத்தினை முன் வைத்து தன் மனித தன்மையற்ற செயலால் தொன்ம தமிழின அற மனத்தின் தன்மான உணர்ச்சிக்கு சிங்கள பேரினவாதம் விடுத்துள்ள சவாலை உலக தமிழினச் சமூகம் நேரிடையாக சந்திக்கிறது . நாகரீகங்களை உலகிற்கு போதித்த தமிழனின் வரலாற்று மனதில் ஆற்றவே இயலா கடும் காயத்தினை ஏற்படுத்தியுள்ள ஈழத்தின் இறுதி நாட்களின் ஓலம் வெறிப்பிடித்த விலங்காய் தமிழினத்தினை துரத்திக் கொண்டே இருக்கும். விழிகளில் வழியத் துடிக்கும் நீருடன், காயம் தந்த வன்மத்துடன் ஒரு தேசிய இனமே தன் விடுதலைக்காக இந்த உலகப் பெரு வெளி சமூகத்தில் தன்னை மீண்டும் தகவமைத்துக் கொண்டு போராட துணிகிறது. விடுதலை குறித்த சிதைக்க இயலா நம்பிக்கைகளோடு தமிழின இளைஞர்கள் உலக வீதிகளில் பாட்டனின் புலிக் கொடியோடு அலைகிறார்கள்.

ஆனால் போர்க்குற்றம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் வெளியான பின்னரும் உலக சமூகத்தின் கனத்த மெளனம் தமிழ் மக்களை வெறுப்பின் வெளியில் தள்ளி இருக்கிறது . அடையாள அரசியலுக்காக வெளியிடப்படும் உலக பிரதிநிதிகளின் கண்டன அறிக்கைகள் தமிழ் மக்களின் மீது நிகழ்ந்துள்ள கடும் துயரங்களுக்கு போதுமானவை அல்ல . தடை செய்யப்பட்ட இரசாயான ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒரு பொய்யினை கூறி அவசர அவசரமாக ஒரு நாட்டின் மீது படையெடுத்து, அந்த நாட்டின் தலைவரை சிறைப்பிடித்து..குறுகிய காலத்திற்குள் தூக்கில் ஏற்ற முடிந்த உலக வல்லாதிக்கத்தினால் அடுக்கடுக்காய் ஆதாரங்களை கண்டு விட்டப்பிறகும் சிங்கள பேரினவாத போர்க்குற்றவாளி இராசபக்சேவினை தண்டிக்க முடியாமல் தடுமாறுவது எதனால்..?

பெருகி வழியும் தன் உதிரத்தினால் தன் மேலான சுதந்திர தாகத்தினை உலக மானுடத்தின் மனசாட்சியின் முன் நிரூபிக்கிறார்கள் தமிழர்கள் . தம் தொன்மையான தாய்நிலம் பறி போவதை காணச் சகிக்காமல் வெகுண்டெழுந்து போராடிய ஒரு தேசிய இன மக்கள் தங்களின் அளப்பரிய தியாகங்களினால் மூடிக்கிடக்கும் உலகின் கண்களை திறக்க முயல்கிறார்கள் . சமூக நீதி மற்றும் மானுட உரிமையின் மேலும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கதைக்கப்படும் உலகின் அறம் தொக்கி நிற்கும் சமூக வாழ்வின் மேல் தன் உதிர எச்சிலை உமிழ்ந்து காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். அவர்களின் வலியுணராமல் ..நீதி மறுக்கப்பட்ட அநீதியான இந்த உலகச்சமூகத்தின் மெளனம் தொடருமானால்… குமுறி உமிழப்பட்ட அவர்களது உதிர எச்சலில் உருக்குலைய நேரிடும் இவ்உலகு.

…அவர்களின் இன்றைய தேவை

வெறும் வார்த்தைகளல்ல.

உயர்த்திய கரங்கள்

அழுத்தமாய் ஒலிக்கும் குரல்கள்

சங்கிலித் தொடராய்

இணைந்த கைகள்

அடக்குமுறையை எதிர்த்து நிற்கும்

அணிவகுப்புகள். “ ( -கோசின்ரா கவிதையிலிருந்து)

எங்கள் இனத்திற்கு சீமானின் குரல் வேண்டும் – தீபச்செல்வன்


அன்பான சீமான் அண்ணன் மற்றும் பேரறிவாளன், முருகன் அண்ணன்களுக்கு.

போர் தின்ற பூமியில் இருந்து கொண்டு எனது நலத்தை எப்படிச் சொல்ல. அதிகாரங்கள் எழுச்சியின் குரல்களை தின்னும் பூமியில் உள்ள உங்கள் நலத்தை எப்படி விசாரிக்க.நாங்கள் எல்லோருமே கட்டுண்டு அகதிகளாகவும் அடிமைகளாகவும் இருக்கிறோம். இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல கடந்த காலத்தில் எமதினம் அனுபவித்த துன்பத்தை எந்த இனமும் அனுபவிக்க மாட்டாது.

உங்களால் எங்களுக்காக எழுப்பப்படும் குரல்கள் இங்கு பெரும் அதிர்வை உண்டு பண்ணுபவை. அதற்கு இலங்கை அரசு பயம் கொள்ளுகின்றது. ஆனால் சீமான் அண்ணன் அவர்களே! இன்று ராஜபக்ஷ விரும்புவதை கருணாநிதி செய்து உங்களை சிறை வைத்திருக்கிறார். நீங்கள் விடுதலை பெற்று வரவேண்டும் என்று நாங்கள் காத்திருக்கிறோம். பொங்கிய தமிழகத்தையும் திரையுலகத்தையும் கட்டுப்படுத்தி ஆட்சி நடத்தும் கருணாநிதியும் , உலகத் தமிழர்களின் குரல்களை கண்டு அஞ்சாது யுத்தம் நடத்திய ராஜபக்ஷவும் ஒன்றுதான்.

நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்தளவில் அதிகாரத்தால் எங்களை சிதைத்து வதைத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. சிங்களக் குடியேற்றம், காணி நிலங்களை அபகரிப்பது, சிங்கள அரச கைக்கூலி அதிகாரிகை திணிப்பது, மீள்குடியேற்றத்தை பின்னடிப்பது என்று பல வகையில் மக்களுக்கு அவலத்தை அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

நாங்கள் எதைப் பற்றியும் பேச முடியாத சூழலை உருவாக்கி எங்கள் தாயகத்தை கனவை அழிக்கப் பார்க்கிறது.

நீங்கள் எப்பொழுது சிறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள் என்று அடிக்கடி நண்பர்களை விசாரிப்பதுண்டு. விடுதலையாக வேண்டும் என்று காத்திருக்கிற உணர்வுத் தமிழரர்களில் நானும் ஒருவன். திடமாக நம்புகிறேன் மீண்டும் அதிரும் உங்கள் குரல் எமக்காய் ஒலிக்குமென்று.

பேரறிவாளனது “தமிழ்முழக்கத்தில்“ வெளியான பதிவை படித்த பொழுது மிகவும் துக்கமாக இருந்தது. புகைப்படத்தை பார்க்கும் பொழுது ஈழப் போராளியின் முகம் என்று நினைத்தேன். அன்பான பேரறிவாளன் விடுதலை பெற்று வர தொரடர்ந்து போராடுங்கள். உங்கள் விடுதலைக்காக நாம் காத்திருக்கிறோம். “அணுகுண்டு வைத்திருக்கும் அமெரிக்கா, துவக்கு வைத்திருப்பவனை பயங்கரவாதி என்றான்” காசி ஆனந்தனின் வரிகள் சொல்லுவதைப் போல அதிகார விதியினால் உங்களை சிறை வைத்திருக்கிறார்கள். நம்பிக்கையுடன் போராடுங்கள் பேரறிவாளன்.

முருகன் “குப்பி“ திரைப்படம் பார்த்த பொழுதுதான் எனக்கு அந்த நாட்கள் மேலும் மனதை நெருக்கின. அந்தப் படம் பிழைத்து வி்ட்டதாக சொன்னார்கள். சகோதரி நளினி அத்தோடு உங்கள் வாழ்க்கை இப்படி கழிந்து விட்டது. எங்களுக்காக எங்கள் விடிவிற்காக இப்படியெல்லாம் உங்கள் வாழ்க்கை ஆகிவிட்டது. நீங்கள் சிறையிலிருந்து படிக்கிறீர்கள், எழுதுகிறீர்கள், ஓவியம் வரைகிறீர்கள் என்றெல்லாம் எங்கள் தினசரிப் பத்திரிகைகளில் செய்திகள் வரும். உங்களுக்கு இந்தா விடுலை அந்தா விடுதலை என்றும் செய்திகளும் படங்களும் வரும்.

உங்கள் பிள்ளையின் ஓவியம் என்று நினைக்கிறன் எங்கள் தினசரிப் பத்திரிகை ஒன்றில் வந்திருந்தது. உங்களது விடுதலை சாத்தியமாக வேண்டும் என்று காத்திருக்கின்றோம். அமீர் சொல்லிய பேட்டியில் ‘நாங்கள் சிறையில் இருப்பதைப்போலவும் நீங்கள் வெளியில் இருப்பதைப்போலவும்’ உணருக்கிறன். நம்பிக்கையுடன் விடுதலைக்காக போராடுங்கள். அந்த நாள் தமிழர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நினைக்க மனம் ஏதோ செய்கிறது.

உங்கள் அருகில் சீமான் இருக்கிறார். அவரை பத்திரமாக பாத்துக் கொள்ளுங்கள். எங்கள் இனத்திற்கு அவரது குரல் வேண்டும். நீங்கள் வேண்டும். உங்களை அவர் பார்த்துக் கொள்ளுவார்.ஏதோ ஒரு நம்பிக்கையில் இருக்கிறது எங்கள் நிலம். ஆபத்தும் அழிவும் அதை சூழ்கிறது. முடியுமானவரை நமது உரிமைக்காக வேலை செய்வோம். ஒரு காலத்தில் நாங்கள் சந்திப்போம் அண்ணன்களே.முடிக்க முடியாத துயருடன் என் கடிதத்தை முடித்துக் கொள்கிறன்.

மிக்க அன்போடு தம்பி தீபச்செல்வன்