காஞ்சிபுரம் பார்ப்பன குருக்களின் காமமும்- உடைத்தெறியப் பட்ட பார்ப்பனப் புனிதமும்….



பிராமணர்கள் யார்..?


எக்காரணம் கொண்டும் சரீரப் பிராயசைப் படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ, கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்து கொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியால் உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்


- தந்தை பெரியார் (19-09-1937 குடிஅரசு பக்கம் 9 )



சமீப காலமாக காஞ்சிபுரம் குருக்கள் தேவநாதனின் புகழ் தமிழ்நாட்டில் கொடிக்கட்டி பறக்கிறது. இளசுகளின் அலைபேசியில் குருக்களின் கருவறை லீலைகள் படங்கள் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன. இதற்கு முன்னால் காஞ்சிபுரம் ஜெயேந்திரர் மூலமாக உலகப் புகழ் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் தற்போது தேவநாதன்.
இது முழுக்க முழுக்க பார்ப்பனர்களும், இந்து மதத்தின் சீரழிவும் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் இந்து மத புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட சாதீய இழிவுகளால் பாதிக்கப்பட்டோர் என்ற முறைமையில் நாம் மகிழ சில சங்கதிகள் உண்டு.


உண்மையில் நாமெல்லாம் தேவநாதனை ஒரு வகையில் பாராட்டத்தான் வேண்டும். ஆலய கருவறை நுழைவுப் போராட்டம் என்பதனை நாம் வெகுநாட்களாக ஒரு லட்சிய இலக்காக வைத்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், எவ்வித ஆர்பார்ட்டமும் இல்லாமல் சாதிகளை கடந்து பெண்களை கருவறைக்குள் அழைத்து சென்றிருக்கிறான் அவன். மேலும் கடவுள்ள அது: கல் தான் .. என நாம் காட்டுக்கத்தலாய் தெரு முனைகளில் கத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் வெகு சுலபமாக பாலாலும், தேனாலும் அபிஷேகம் செய்து படையல் வைத்து ஆயிரம் காலமாய் புனிதம் போற்றி தொழுகிற அந்தணர் பாதம் மட்டுமே பட்டு வந்த கருவறைக்குள் எல்லாவித தடைகளுக்கும் சவாலாய் சாதி வேறுபாடின்றி பெண் என்ற ஒற்றைத் தகுதியை மட்டும் பார்த்து கட்டிய குடுமியுடன் கட்டிப்பிடித்து ஆலிங்கணம் நடத்திய தேவநாதன் இத்தனை ஆண்டு காலம் பார்ப்பனர் கட்டி வைத்த பாரம்பரிய கோட்டையின் அடித்தளத்தில் குண்டு வைத்து தகர்த்திருக்கிறான்.


தேவநாதன் சாதிகளை கடந்த மனிதனாக, கல்லை கல்லாக மட்டும் உணர்கிற நாத்திகனாக நமக்குப் படுகிறான். தமிழர்க்கு எதிராக எது நடந்தாலும் குதூகலமாய் கொக்கரித்து செருமாந்த செறுக்கோடு செய்தி வெளியிடுகிற பார்ப்பன நாளேடு தினமலர் பார்ப்பனக் குருக்கள் தேவநாதனை பூசாரி தேவநாதன் என வில்லங்கமாய் விளித்து செய்தி வெளியிட்டது. குருக்கள் என்று வெளியிட்டால் அது பார்ப்பான் என பட்டவர்த்தனமாய் தெரிந்து விடும் என்பதால், சூத்திரப் பெயரான பூசாரி என்ற பட்டத்தோடு செய்தி வெளியிட்டது.
தேவநாதன் மிகவும் பட்டவர்த்தமனமாக, வீடியோ ஆதாரங்களோடு நடத்திய கருவறை காம லீலைகள் பார்ப்பன இந்துத்வாவின் புனித முகத்தினை சிதைத்து இருக்கிறது. சாதீய கட்டமைப்புகள், கோவில், புனித பூசைகள் என திட்டமிட்டு பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட இந்துத்வா கோட்டையில் தேவநாதன் மிகப் பெரிய விரிசல். தேவநாதன் தான் முதன் முதல் பார்ப்பன சீரழிவு அல்ல. இதற்கு முன்னால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில் கஞ்சா வழக்கு உட்பட ,அனுராதா ரமணன், சொர்ணமால்யா என தொடர்ந்த காமக் குற்றச்சாட்டுகளில் காஞ்சி மடம் சிக்கிய போது பார்ப்பன உலகம் அதிர்ந்தது. இதில் என்ன மிகவும் விசேசம் என்றால் வழக்கு தொடரப்பட்டது தன்னை சட்டமன்றத்தில் பாப்பாத்தி என வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில். சம்பந்தப்பட்ட ஒரு சிலரை தவிர அனுராதா ரமணன் ,சொர்ணமால்யா என அனைவரும் பார்ப்பனர்களே. இப்போது தேவநாதன் காஞ்சி மட சீரழிவின் நீட்சியாக திகழ்கிறான்.


ஒரு மனிதன் பூணூல், உச்சிக் குடுமி ,பஞ்சகஜ வேட்டி என அனைத்து விதமான பார்ப்பன சாதி மேலாண்மை சின்னங்களோடு பல ஆயிரம் ஆண்டுகளாய் புனித பிம்பமாய் பார்ப்பனர் திட்டமிட்டு நிறுவியுள்ள சாதீய கட்டமைப்புகளின் உச்ச சின்னமான கோவிலில், பிற சாதியினர் நுழைய கூட அனுமதி இல்லாத கருவறையை மூன்றாம் தர விபச்சார விடுதியாக பயன்படுத்தியது ஒழுக்கமும், தூய்மையும் பிறப்பின் அடிப்படையில் விளைவதல்ல என்பதனை நெற்றிப் பொட்டில் அறைந்து சொல்கிறது.

தந்தை பெரியார் சொல்கிறார்…


பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும் தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானை பிராமணன் என்றோ, சாமி என்றோ , மேல் சாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான்-
தந்தை பெரியார்
(3-12-1971 விடுதலையில்..)


பார்ப்பன, இந்து மதத்தின் உயிர் சின்னமான கடவுளர்களின் சிலைகளுக்கு முன்னால் தான் தேவநாதன் தன் லீலைகளை நடத்தி இருக்கிறான்.கல்லை எடுத்து, கற்றொளி கொண்டு..சிலை வடித்து, சிற்பம் செதுக்கி, ஆலயம் அமைத்து, கருவறை கட்டி..அந்த சிலையையும் தூக்கிக் கொண்டு நாம் உள்ளே கொண்டு போய் வைத்தால்..ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு குடமுழுக்கு நடத்தி கோவில் கட்டிய நம்மை வெளியே நிற்க வைத்து ..அழகு பார்த்த பார்ப்பனீய இந்து மத பிரதிநிதியான தேவநாதன் கடவுளை போற்றும் சிறப்பு இதுதான்.


ஆனால் இதையெல்லாம் உணராத தமிழ்ச்சமூகம் கண்ணீர் மல்க கடவுள் பக்தியோடு கைக்கூப்பி நின்று கையேந்தி வரும் பார்ப்பான் தட்டில் காசு போட்டு கொண்டிருக்கிறது.


தேவநாதன் ஒருவன் அல்ல. இவனைப் போல நாட்டில் ஏராளமான குருக்கள்,சாமியார் வகையறாக்கள் ஏராளம் உள்ளனர். இப்படி கேடு கெட்டவர்கள் கையால் தான் திருநீறு பூசிக் கொண்டு ,தமிழன் அலகு குத்தி காவடி தூக்கிக் கொண்டு திரிகிறான்.


தீண்டதகாதவன் என்ற ஒற்றை காரணத்தினால் நந்தனை கோவிலுக்குள் அழைக்காத கடவுள் நந்தியை நகர்த்தி வைத்து தரிசனம் காட்டினாராம். நந்தியை நகர்த்த முடிந்த கடவுளுக்கு கூட சாதீயத்தினை உடைத்து நந்தனை கோவிலுக்குள் அழைக்க முடியவில்லை. கடவுள் கூட செய்ய முடியாத பிற சாதீயினரை கருவறைக்குள் நுழைவினை தேவநாதன் மிக எளிமையாக தன் காமத்திற்காக நிகழ்த்தி தன்னுடைய கேடு கெட்டத் தனம் கடவுளை விட உயர்ந்தது அல்ல என்பதனை நிருபித்து இருக்கிறான்.இதில் நாமும் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்.. தமிழனின் கருவறை நுழைவு இப்படி யாருக்கும் தெரியாமல் காமத்தின் பாற் கேடு கெட்டத்தனமாய் விளையாமல்..சாதிகளை துறந்த சமத்துவ நோக்கில் கலகம் வாய்ந்த புரட்சியாக நிகழ வேண்டும் என்பதே.


தேவநாதனை விளக்குமாற்றால் அடிக்க பெண்கள் பாய்கிறார்கள். இதையெல்லாம் தனக்கு முன்னால் நிகழ்த்திக் கொண்டு இன்னும் கல்லாக சமைந்து நிற்கும் கடவுளின் சிலைகளை இவர்கள் எக்காலத்தில் எதனைக் கொண்டு அடிக்கப் போகிறார்கள்.?


தந்தை பெரியார் தன் வாழ்நாட்கள் முழுவதையும் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்து வந்ததை தேவநாத பார்ப்பான்கள் தங்கள் நடத்தைகள் மூலம் நிரூபித்து காட்டுகிறார்கள்.

இந்த நிகழ்வு மூலம் கோவில் ,சிலைகளின் எல்லையற்ற அதிகாரமும், புனிதமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.பார்ப்பன மேலாண்மையின் சீரழிவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.


பார்ப்பன லீலைகளை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டிய தேவநாதனுக்கு நாம் நன்றி சொல்வதோடு..இனியாவது பார்ப்பானிடம் ஏமாறாத சமூகம் தமிழ்ச் சமூகம் அமைய உறுதிக் கொள்வோம்.

எம் தலைவர் பிரபாகரன் - அறம் வழி நின்ற சான்றோன்...


மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலை இய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல-
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும் உடையோய் ..

- புறநானூறு- முரஞ்சியூர் முடிநாகராயர்

தொன்மம் நிறைந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக, தங்களை தம் இனத்தின் சுதந்திரம் நிறைந்த வாழ்விற்காக வரலாற்றின் கரங்களில் தியாகப் பக்கங்களாக அளித்து விட்டு …நம் ஆன்மாவில் என்றும் சுடர் விடும் ஒளியாய் நிறைந்திருக்கும் மாவீரர்களின் நினைவினை வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குத் உலகத் தமிழர்கள் ஒரே அலைவரிசையில் திரண்டு போற்றி மகிழ்ந்தனர்.தாயக தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. ஒரு மாபெரும் வீழ்ச்சிக்கு பின்னர்.. எதிர்காலம் குறித்த மாறா நம்பிக்கையை உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழ் தேசிய இனத்தின் வழித் தோன்றல்கள் தங்களுக்குள் தாங்களே எழுப்பிக் கொண்டார்கள். நம் சம காலத்தில் தமிழருக்கே உரிய தொன்ம அறப் பலத்தோடு நம்மை எல்லாம் வழி நடத்தும் நம் தேசிய தலைவர் பிறந்த நாளை தங்கள் இனத்தின் மீட்சி நாளாக உலகத் தமிழர்கள் ஒற்றைக் குரலில் உலகுக்கு அறிவித்தனர். ஒரு பேரழிவிற்கு பின்னால்..சாம்பலாய் கருகிய ஒரு இனம்..சுதந்திர வேட்கையும் ,இன மான உணர்வும் கொண்டு தனக்குள்ளே உயிருட்டி..உருவாக்கிக் கொண்டு தங்களுக்கான சுதந்திரத்தினையும், தங்களுக்கான நாட்டினையும் அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் சிந்திக்க துவங்கி உள்ளனர் என்பதற்கு அறிகுறிகளாக உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள் அறிவிக்கின்றன. ஒரு தொன்ம அறம் வழி சார்ந்த ஒரு தேசிய இனத்தின் ஈடு இணையற்ற தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என்பதனை நம் எதிரிகளும், துரோகிகளும் புரிந்துக் கொண்டு முழி பிதுங்கி நிற்கின்ற நிலைமையை உலகத் தமிழர்கள் மாவீரர் தின நிகழ்வுகளால் இன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.

தமிழரின் நெடிய வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது ஒரு அற உணர்வு கொண்ட தேசிய இனம் தான் இது என்று நம்மை நாமே பெருமிதம் கொள்ள நிறையக் காரணங்கள் உண்டு.

குறியீடுகளால் நிரப்பப் பட்டது தமிழரின் இலக்கியம். முல்லைக்கு தேர் அளித்த பாரி, மகனை தேர்க் காலில் இட்ட சோழன், தன் பச்சிளம் மகவினையும், போர்க் களத்திற்கு அனுப்பிய தாய்,காயம் பட்ட புறாவிற்காக தன் தொடையினை அறுத்த சிபி ,குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை அளித்த பேகன் என புனைவும் ,குறியீடுமாய் திகழும் நம் இலக்கியங்கள் காட்டும் குறியீடுகள் எவை என்று ஆராயும் போது வீரமும் , அறமும், இரக்கமும்,ஈகையும் நம் முன்னோர்களின் வாழ்வாக இருந்திருக்கின்றன.வரலாற்றில் ஒரு இனத்திற்கென இப்படிப் பட்ட அறவியல் கூறுகளை எங்கும் பார்க்க இயலாது. சங்க இலக்கியங்களில் ஒழுகும் அற உணர்வு தமிழரின் வாழ்வியலில் அறம் எத்தனை நூற்றாண்டு காலமாய் நீடீத்து வந்திருக்கிறது என்பதனை உணர்த்துகிறது. எதிரியிடம் கூட நாம் நாகரீகத்தினை, இரக்கத்தினை காட்டும் தன்மையை நம் தொன்ம இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன.
உலகில் தன் இனத்திற்காக,மொழிக்காக தன்னைத் தானே தனிமனிதனாய் எரித்துக் கொண்டும், வெடித்துக் கொண்டும் இறந்த தமிழின இளைஞர்கள் தன் இனத்தின் அறவுணர்ச்சி மூலமாகவே ஆன்ம பலம் அடைந்தார்கள். தன் இனத்திற்காகவும், மொழிக்காவும் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள முன்வருவதுதான் தியாகத்தின் உச்சம். அந்த தியாகத்தினை மிகவும் நேர்த்தி மிகுந்த துணிவான முறையில் தமிழ் இளைஞர்கள் மனம் உவந்து செய்தார்கள். இதே அற உணர்வினால் தான் தன் கைக்கு எட்டிய தொலைவில் தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட உயிர் ஈகைப் போராளிகள் தங்களைத் தாங்களே நெருப்புக்கு இரையாக்கி விதையாய் இந்த மண்ணில் வீழ்ந்ததும் நடந்தது.ஆணுக்கு சமம் பெண் என உலக நாகரீகங்களுக்கு கற்றுக் கொடுத்த நம் தமிழ் பண்பாட்டின் தொடர்ச்சியாய் நம் சகோதரிகள் பெண் புலிகளாய் களம் புகுந்ததும், தீரத்துடன் போரிட்டதும், நம் விழிகளை பெருமித கண்ணீரால் நிறைக்கும் உணர்வாகும். இதே அறம் தான் நம் வான்புலிகள் சிங்கள மக்கள் மீது குண்டு வீசாமல் படை இலக்கினை மட்டுமே தாக்கி விட்டு பறந்த போதும் இருந்தது. இதே அறம் தான் நம் தேசிய தலைவர் மீதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் இன்றளவும் ஒரு தவறான செய்தியை கூட சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு எதிரிகளை நிற்க வைத்திருக்கிறது.

வரலாற்றின் நெடிய பக்கங்களில் பார்க்கும் போது வேறு எந்த இனத்தினை காட்டிலும் தன் மொழிக்காகவும், தன் இனத்திற்காகவும் கரும்புலிகளாக, மொழிப் போராட்ட தீரர்களாக திகழ்ந்து தான் வீழ்ந்து இனம் செழிக்க களம் புகுந்த மாவீரர்கள் உடைய ஒரே இனம் நம் தமிழினம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஈகையும், வீரமும் உடைய நம் முன்னோர்களின் வழித் தோன்றலாய் தோன்றி, உலகினை ஒற்றை இயக்கத்தின் வாயிலாக எதிர்த்த தனி மனித ஆளுமையான நம் தேசிய தலைவர் தமிழர்களின் பெருமை மிகு அடையாளம். கொடும் துயர்களுக்கும், துரோகங்களுக்கும் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் பெருமை மிகு தலைமையும் அறம் இழக்கா உணர்வினை தக்க வைத்ததுதான் நான்காம் கட்ட ஈழப் போர் நமக்கு விட்டுச் சென்ற பாடம். இந்த பூமிப் பந்தெங்கும் வன்னி முகாம்களில், தமிழக வயல்களில், வளைகுடா நாடுகளின் சுடும் பாலையில், மலேயா காடுகளில், அமெரிக்க, கனடா நாடுகளில், கணினி திரைகளுக்கு முன்னால், என எங்கும் பரவிக் கிடக்கும் தமிழினம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக நம் தொன்ம அறத்தின் தொடர்ச்சியாய் தலைவரும், இயக்கமும் பாதுகாத்த இந்த அற உணர்வுதான் இருக்கிறது.
செஞ்சோலை குழந்தைகளை கூட குண்டு வீசி கொல்லும் கொடிய சிங்கள ராணுவத்திற்கு எதிராக அற உணர்வுடன் தலைவர் நடத்திய மரபு வழிப் போரும், பிடிபட்ட சிங்கள ராணுவ வீரர்களை மிகவும் மதிப்புடன் நடத்திய பண்பும் நம்மை மேன் மேலும் பெருமிதத்திற்கு உள்ளாக்குகிறது. தொடர்ச்சியான கடும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் தன் மக்களை பாதுகாத்த உளப்பாட்டின் உறுதி நம் தேசிய தலைவரின் மதிப்பினை பன் மடங்கு உயர்த்துகின்றன.

ஒரு இனம் வீழ்வதும் ..பிறகு வீழ்ச்சியினை கடந்து மீள்வதும் உலகத்தியற்கை. தேசிய இனங்களின் தன்னுரிமைக்கான விடுதலைப் போராட்டங்கள் போராட்டங்கள் உலக நாடுகளில் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகின்றன. ஆனால் வேறு எந்த இனத்திற்கும் மேதகு.பிரபாகரன் போல அறம் வழி நின்ற தலைவர் கிட்ட வில்லை. தன் குடும்பத்திற்காக தன் இனத்தினை காட்டிக் கொடுத்த தலைவர்களை ஈழ விடுதலைப் போர் நமக்கு அடையாளம் காட்டியது. ஆனால் தன் இனத்திற்காக தன் குடும்பத்தினரையும் தலைவர் இழக்க சித்தமாக இருந்ததை நாம் அறிகிறோம்.அதற்கு உதாரணமாக இன்னும் சிங்கள ராணுவத்தின் கோரக் கரங்களின் ஊடாக தேசிய தலைவரின் பெற்றோர்கள் இருந்து வருகிறார்கள்.

தேசிய தலைவரை எந்த ஆன்ம சக்தி இப்படி நேர்மை வலிவோடு செயல்பட வைக்கிறது என்று நாம் சிந்திக்க துவங்கினால் நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்று விடுகிறோம். தமிழ் தொன்மத்தின் அறவுணர்ச்சி முழுவதையும் உள்வாங்கிய ஒரு மனிதராய் நம் தேசிய தலைவர் இருக்கிறார். தன் வாழ்வு முழுக்க மக்களுக்கான ஒன்று என்பதனை அவர் மிகச் சரியாக உணர்ந்திருந்தார். சாதாரண மனிதர்களுக்கு உண்டான பலவீனங்கள் எதனையும் அவரிடம் காண முடியாமல் போவதற்கு காரணமும் அதுதான். மேதகு.பிரபாகரனின் அறவுணர்ச்சிதான் கடும் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளை காப்பாற்ற செஞ்சோலை சிறுவர் இல்லமாக உருவெடுத்தது. ஆண் குழந்தைகளுக்காக காந்தரூபன் அறிவுச் சோலையாக,போரினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மீள் வாழ்விற்காக வெற்றிமனையாக, இன ஒடுக்கு முறை யுத்தத்தினால் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட முதியவர்களை காக்க மூதாளர் பேணகமாக,போரினால் தொடர்ந்த வறுமையை அழிக்க தமிழர் புனர் வாழ்வு கழகமாக, மருத்துவ பணிகளுக்கு தியாகி திலீபன் மருத்துவ சேவை மையமாக என பரிமாணங்களில் தமிழ்த் தேசியத்தலைவரின் அறவுணர்ச்சி மிளிர்ந்தது.

எமது மன உறுதிக்கு எதிரி சவால் விடுகின்றான்.இந்த சவாலை ஏற்பதற்கு எமது ஆன்ம உறுதியை தவிர வேறு ஆயுதங்கள் தேவை இல்லை
-1991 மாவீரர் தின உரையில்..

மேதகு. பிரபாகரன் ஆயுதங்களை மட்டும் நம்பி போராடிய வெறும் கலகக் காரர் இல்லை . மாறாக ஆன்ம உறுதியோடு சுதந்திர வாழ்விற்காக போராடிய புரட்சியாளர் அவர். சங்க இலக்கியங்கள் ஊடாகவும், நெடிய தமிழ் பண்பாட்டு பாரம்பரிய விதைகள் மூலமாக இயல்பாகவே தமிழன் என்கிற முறைமையின் தலைவர் பெற்ற அறவுணர்ச்சிதான் போர் களத்தில் ஆயுதங்களை விட வலிமையான ஆன்ம உறுதியாக உருவெடுத்தது.

எங்கள் இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் நாங்கள் தேசிய விடுதலைக்காக போராடி வருகிறோம்.எங்கள் மக்கள் சுதந்திரத்தோடும், சுய கெளவரத்துடனும் வாழுகின்ற புனித உரிமையை பாதுகாக்கவே நாங்கள் போராடுகிறோம்.(1984-ல் அனிதா பிரதாப்பிற்கு அளித்த பேட்டியில் )

தேசிய தலைவர் தன் நோக்கத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார். உலகம் முழுதும் வாழுகின்ற தமிழர்களின் கரங்களில் இன்று ஈழ விடுதலைப் போர் கையளிக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோலன் ஹிட்லரால் மாண்ட யூத இனம் எப்படி தங்களுக்கான ஒரு நாட்டினை சமைத்தார்களோ, அதே போல உலகத் தமிழர்கள் தங்களுக்கான ஈழ நாட்டினை என்ன விலை கொடுத்தேனும் அடைந்தே தீர வேண்டும். நாம் இந்த விடுதலைப்போரில் அளவிற்கு அதிகமாகவே விலை கொடுத்து விட்டோம். நாம் இழந்த உறவுகளின் நினைவு எப்போதும் நம் உள்ளத்தின் உச்சாணிக் கொம்பில் நிலை நிற்க வேண்டும். புதைக் குழிகளுக்குள் புதையுண்டு போன எண்ணற்ற தமிழர்களின் இறுதி மூச்சு இந்த காற்றில் தான் கலந்திருக்கிறது என்ற கவனப்பாடு நம் மனதில் என்றும் வேண்டும்.

தமிழின இளைஞர்கள் மற்ற இன இளைஞர்களை காட்டிலும் உள்ளம் முழுக்க வீழ்ந்த வன்மத்துடன் செயல் புரிய வேண்டும். கல்வி,பொருளாதாரம், தொழில் என அனைத்து துறைகளிலும் இழப்புகளின் தீரா துயர் தந்த வன்மத்துடன் போராடி தமிழர்கள் முதலிடம் அடைய வேண்டும். சிறுக சிறுக பெருகி..ஆர்ப் பரிக்கும் மக்கட் வெள்ளமாய் தமிழர்களுக்கான தாயகத்தினை அடைய போராடுவதற்கான மன நிலையை தக்க வைப்பதுதான் நாம் மாவீரர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க இயலும்.

கடும் துயர் சூழ்ந்த போதும் அறம் காத்த சான்றோனாய் தலைவர் பிரபாகரன் இருக்கிறார். அவர் குறித்த பெருமிதமும், தீவிர செயல்பாடுமே நம் எதிர் காலத்தினை தீர்மானிக்கும்

12 கோடி தமிழர்களின் ஒற்றைக் கனவு தமிழீழம். அதை நாம் எந்த விலை கொடுத்தேனும் அடைந்தே தீருவோம். தமிழர்கள் ஒருவருகொருவர் சந்திக்கும் போது அடுத்தாண்டு தமிழீழத்தில் சந்திப்போம் என்று சொல்லுவோம். அறம் வழி நின்று உலகத்திற்கு தமிழரின் துயர் சூழ்ந்த போதும் அகலா அறத்தினையும், மாறா மறத்தினையும் உணர்த்திய தேசிய தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என உரக்கச் சொல்லுவோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

.பழசி ராஜா - வீழ்ந்த ஒரு இனத்தின் விசாலப் பார்வையில் .



பழசிராஜா திரைப்படம் சுதந்திரப் போராட்டத்தில் வீழ்ந்த ஒரு இனத்தின் வீர வரலாற்றினை சொல்கிறது. பழசிராஜாவின் நிலக் களன் நமக்கு புதிது. பசுமை சொட்டும் கேரளா காடுகள், மழையும் ஈரமும் ஆக நகரும் ஒளிப்பதிவின் அழகியல் நம்மை கவரக் கூடியது. பழசி ராஜாவாக தேர்ந்த நடிகர் மம்முட்டி. முகத்தில் உணர்வுகளின் வித்தியாசங்களை மிதக்க விடுவதில் வல்லவர் அவர். அதை இத்திரைப்படத்திலும் அதைத்தான் செய்துள்ளார். தளபதியாக சரத்குமார். வழக்கம் போல இறுக்கமான முகத்தில் அவருக்கு எந்த உணர்வும் வர மறுக்கிறது. மற்றபடி மனோஜ், பத்மபிரியா, கனிகா ,சுமன் என விரிவான நட்சத்திர கூட்டம் மலையாள மண்ணிற்கே உரிய மிகை இல்லாத நடிப்பில் மிளிர்கிறார்கள். இசை நம் இளையராஜா. குன்றத்து எனத் தொடங்கும் அந்த பாடலின் இசை மெய்க்குள் புகுந்து மனதை மயக்கச் செய்கிறது.பின்னணி இசையிலும் இளையராஜா தான் மேதை என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். மலையாள பண்பாட்டினை ஒவ்வொரு காட்சியிலும் புகுத்தி இருப்பது திரைமொழியின் இயல்பான நகர்விற்கு உதவுகிறது. எளிய ஆங்கில வசனங்கள் பல வருகின்றன. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உதவியாக அக்காட்சிகளில் மட்டும் தமிழில் உதவி தலைப்பு (sub-title) பதித்து இருக்கலாம்.

பழசிராஜா கதை மிக எளிமையான ,நமக்கு ஏற்கனவே பழக்கமான கட்டபொம்மன் கதைதான். வரி கொடுக்க மறுக்கும் கேரள வர்ம பழசிராஜாவினை தனது சர்வாதிகார பலத்தினால் அடக்க துடிக்கிறது ஆங்கில ஏகாதிபத்தியம். அதை எதிர்த்து பழசிராஜாவும், அவரது ஈடு இணையற்ற படையினரும் போராடி வீரமரணம் எய்கின்றனர். காட்டிக் கொடுக்க இன துரோகியாக சுமன் கதாபாத்திரம்.
விடுதலைப் போராட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நிகழ்வுகளை கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். மக்களை நினைக்கும் தலைவன். அவரின் விசுவாசமான தளபதிகள். காட்டிக் கொடுக்க துரோகி. மண்டியிடாத வீரம் உடைய தலைவன் மக்களை தன்னை விட்டு போக சொல்லி வலியுறுத்தும் போதும் , அந்த அடர்ந்த காட்டின் நடுவே உணர்வின் ஊற்றாய் தலைவன் திகழ்வதை காணும் போதும் நமக்கு ஈழம் நினைவிற்கு வராமல் இருக்கமுடியாது.
உலகம் முழுக்க ஏதோ பகுதியில் சிந்தி சிதறிக் கிடக்கிற நம் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஈழம் என்ற வலியையும் , நம் தலைவர் பிரபாகரன் குறித்த பெருமிதத்தினையும் சுமந்தே வாழ்கிறோம். எதிரியாக வரும் ஆங்கில அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு விருந்து உபசரித்து அனுப்பும் காட்சியில், பிடிபட்ட சிங்கள வீரர்களை கண்ணியமாக நடத்திய நம் தலைவரின் கண்ணியம் தெரிகிறது. இப்படித்தான் என் மனநிலை இருக்கிறது. எந்த விஷயமும் எனக்கு நம் தேசிய தலைவர் குறித்த பெருமிதத்துடன் தான் நகர்கிறது. அச்சமயங்களில் நான் கண் கலங்கி விடுகிறேன். பழசிராஜா திரைப்படத்தில் அழகியலுக்காகவும், கதாபாத்திர வலுவிற்காகவும் புனைவு இருக்கலாம். ஆனால் சமகாலத்தில் நம் தேசிய தலைவர் எவ்விதமான மிகைப் படுத்தலும் இல்லாமல் இயல்பாகவே அறம் காக்கும் சான்றோனாய் வாழ்வது உண்மையில் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பெருமைதான். பழசிராஜா திரைப்படத்தில் பெண்கள் போரிடுகிறார்கள். கடைசி நொடி வரை நம்பிக்கை இழக்காமல் தியாகம் செய்ய தயங்காமல் தளபதிகள் போர் புரிகின்றார்கள் .இவை அத்தனைக்கும் நம்மிடத்தில் மாவீரர்களாய், கரும்புலிகளாய், பெண் புலிகளாய் வாழ்ந்த நம் ரத்த உறவுகள் உதாரணமாக இருக்கிறார்கள். மலையாள மண்ணிற்காக இரண்டு நூற்றாண்டு முன்னால் இருந்த ஒரு வீர வரலாற்றை திரைப்படமாக எடுத்த்திருக்கிறார்கள். எங்களின் போராளிகளோ சம காலத்து சாட்சிகளாக ,எங்களின் பெருமைமிகு அடையாளங்களாக , எங்கள் ஆன்மாவின் உள்ளார்ந்த வேட்கையாக உறைந்து இருக்கிறார்கள். தமிழர்களுக்கான தேசம் தமிழீழ தேசம். அதை நாங்கள் எந்த விலைக் கொடுத்தாவது , எங்கள் மாவீரர்களின் நினைவுகளோடு அடைந்தே தீருவோம்.
மற்ற படி பழசிராஜா – ஒரு தமிழனுக்கு ஈழம் குறித்த உணர்வினையும், வலியினையும், தலைவர் குறித்த பெருமிதத்தினையும் அளிக்கும் திரைப்பட அனுபவமாக கண் முன்னால் விரிகிறது.

கடைசியாக ஒன்று: முதல்வர் கருணாநிதி இத்திரைப்படத்தினை பார்த்து விட்டு மம்முட்டியை பாராட்டினாராம். இது தான் எனக்கு ஆச்சர்யம். குற்ற உணர்ச்சி அல்லவா வந்திருக்க வேண்டும்?

பேராண்மை -புனைவின் அரசியல்


சமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன். திரைமொழியில் அரசியலையும் தத்துவங்களையும் தெளிவான முறையில் கூறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார் பேராண்மை ஜனநாதன் . படம் துவங்கிய ஆரம்ப காட்சிகளில் காட்டப்படும் வன கிராமமும், அதன் இயல்பான முகங்களும், அந்த கால்நடை பிரசவமும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இரட்டை அர்த்த வசனம் பேசும் மேல்வர்க்க,மேல் சாதியாய் உருவகப் படுத்தப்படும் பெண்களால் சாதீய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் கதாநாயகனின் கதாபாத்திரம் திரையில் ஏதாவது ஒரு காட்சியில் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தனது குரலை பதிவு செய்யும் என ஆவலாய் நாம் அமர்ந்திருந்தால்…ஏமாற்றம் தான் .மேலும் இந்தியக் கொடிக்காவும், நாட்டிற்காகவும் உயிரைக் கொடுக்கவும், துப்பாக்கி தூக்கி தாக்கவும் அர்ஜீனும், விஜயகாந்தும் போதும். அதற்கு அரசு இயந்திரங்களால் சூறையாடப்படும் ஆதி சமூகத்தின் வன மனிதன் தேவை இல்லை. வகுப்பறையில் மார்க்சிய கூறுகளை எளிமையாக விளக்கும் கதாநாயகன் காட்டின் நடுவே அதிகார மையத்தின் சின்னமாக இருக்கும் இந்திய நாட்டிற்கு உயிரைக் கொடுப்பதாக சூளுரைப்பதும், சாதீய ஒடுக்குமுறையினை சகித்துக் கொண்டு மெளனித்திருப்பதும் முரண்களே.. தேசிய இனங்களின் விழிப்பு நிலை சமீப காலமாக உச்ச நிலைக்கு விரையும் இக்காலக் கட்டத்தில் பேராண்மை நிறுவ விரும்புவது எவற்றை..?
1.இந்திய ஏவுகணையை தகர்ப்பதற்காக காடு மலை ஏரி என கண்ணன் தேவன் டீக்காக அலையும் பி.டி.உஷாவினை போல அலையும் சர்வதேச கூலிப்படைக்கு எதிராக போராட விளிம்பு நிலை மனிதர்களும் தயாராக வேண்டும்- தங்களுக்கு எதிராக நாடும், அதன் ராணுவ,காவல் கட்டமைப்பு இயந்திரங்களும் நிகழ்த்தும் வன்முறைகளை ஏற்றுக் கொண்டு அவர்களும் நாட்டினை காக்க போராட வேண்டும் என்று ஜனநாதன் சொல்ல வருகிறாரா?
2. ஆதி வனத் தமிழின பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறையை விட இந்திய தேசியம் உயர்வானது என்று கதாநாயகன் மெளனமாக சகித்திருப்பதும், அதை காக்க போராடுவதும், இந்தியா எனும் பெருமிதத்திற்கு முன்னால் எளிய மக்களின் மீதான சாதீய, அரசு வன்முறை எதிர்வினை புரியத் தக்கதல்ல என்பதனை இறுதிக் காட்சி வரை உறுதி செய்வதன் மூலம் மக்களை விட அரசின் எல்லையற்ற அதிகாரம் ( THE KING CAN DO NO WRONG) என்பதை ஜனநாதன் நிறுவ முயல்கிறாரா.?

தெளிவில்லாத திரைமொழியும், அது நிறுவ முயலும் தத்துவமாக இருக்கும் இந்திய தேசிய உணர்வு காட்சிகளும் நம்மை மிகவும் சோர்விற்கு உள்ளாக்குகின்றன.. உன்னைப் போல் ஒருவன் ஒரு இந்திய பார்ப்பன இந்துத்வா குரலாய் ஒலித்தது..பேராண்மை இந்திய தேசிய மேலாதிக்கத்தினை எளிய மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் சாதீய, அரசு வன்முறைகளை மெளனமாக கடப்பது போன்ற வழிமுறைகள் மூலம் நிறுவ முயல்கிறது. முன்னதை விட பின்னது மிகவும் அபாயகரமானதொன்றாக நான் உணர்கிறேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் ,ஆணிவேர்,கோவில் பட்டி வீரலட்சுமி ஆதிக்க எதிர்ப்புணர்வு போன்ற படங்களுக்கான இந்திய தேசியத்தின் உரத்த, சாசக மறுமொழியாக பேராண்மை இருக்கின்றது.


இயற்கை, ஈ போன்ற படங்களை வைத்து பேராண்மையை கடக்க முடியாது. தமிழ் மொழி கல்வி பயின்ற கதாநாயகிக்கு மட்டும் அந்த ஆதி இளைஞன் மீது காதல் வருவதாக சித்தரிப்பது போற்றத் தக்கது என்றால் அந்த கதாநாயகியும் மற்ற ஆங்கில கல்வி பயின்ற மேல்சாதி,மேல் வர்க்க தோழிகளுக்கு கட்டுப்பட்டவளாக காட்டப்படுவது சலிப்பை தருகிறது. தமிழ் மொழி பயின்றவள் என்றால் திரை மொழியில் பலவீனமான ஒரு கதாபாத்திரமாக சித்தரிப்பது பல படங்களில் தொடர்வது போல இதிலும் தொடர்கின்றது. மற்றப் படி என்.சி.சி மாணவிகளுக்கு ஏவுகணை தொழிற்நுட்பமும், அதி நவீன இயந்திர துப்பாக்கிகளும் கைவரக் கொடுக்கும் கல்வி நம் நாட்டில் எங்கே இருக்கிறது.., அதி பாதுகாப்பு உடைய ஒரு இடத்தின் அருகில் மிக எளிதாக மற்றொரு ஏவுகணையை நிறுவுவது ….போன்ற துளைகள் நிரம்பிய திரைமொழியில் பேராண்மை வடிவேல் கண்கலங்க பேசும் ஒரு வசனத்திலும், உடல் ஊனமுற்ற அந்த ஆதி மனிதன் தன் கைகளால் நடந்து தாக்க முயல்கிற மூர்க்கத்திலும் - நின்று விட போராடுகிறது.


பிழைகள் அற்ற திரைமொழி சாத்தியமில்லைதான்.. ஆனால் பேராண்மை சாத்தியப்படுத்த முயலும் எதிர்வினையற்ற சாதீய, அரசு இயந்திரங்களின் வன்முறை காட்சிகள் மறுக்கவே இயலா பிழைகள் தான்.


நன்றி: தோழர்.விஷ்ணுபுரம் சரவணன்

பறை மொழி அறிதல்..



அடி விழ… அடி விழ
அதிரும் பறை.
தலைமுறைக் கோபம்.
-மித்ரா

குடந்தை தமிழ்க் கழக பொறுப்பாளர் தோழர்.சுடர் பறைக் கற்றுக் கொள்ள போவதாக என்னிடம் கூறிய போது எனக்கு வியப்பும், மகிழ்வும் ஏற்பட்டது. பறை என்ற தொன்மத்தின் மீது நான் வெகு நீண்ட காலமாக சற்று மிதம் மிஞ்சிய ஈர்ப்பில் இருந்தேன். தமிழ் தொன்மக் கூறான பறை என்ற இசை வடிவம் திட்டமிட்டு வந்தேறிய சாதீயக் காரணிகளினால் ஒதுக்கப் பட்ட கலையாகவும், அதை உள் வாங்கி இசைத்த மனிதன் விளிம்பு நிலை பிறவியாகவும் திரிக்கப்பட்டதன் அவலம் உணர்ந்த பின் ..என் தொன்மக் கலையின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்படாமல் என்ன செய்யும்..?

கலை இலக்கிய இரவுகளில் மக்கள் நடுவே பறை இசை நிகழ்த்தப்படும் போது என்னையும் அறியாமல் பறை இசைக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தேன்.ஆண்டைகளின் மீதுள்ள கோபத்தினை..உழும் மாடுகளின் மீது செலுத்திய என் தமிழனின் கோபம் ..பறை மீது ..இசையாய் மாறியது என்று நானே உணர துவங்கியக் காலக் கட்டத்தில் நான் இன்னமும் பறை அருகே நெருங்கினேன்.

என் பூர்வீக கிராமத் திருவிழாக்களின் போது பறை இசைக் கலைஞர்களோடு மிக நெருக்கமான மனிதனாய் நெருங்கியதும் பறை மீதுள்ள பற்றின் காரணமாகத்தான்.உலகம் முழுக்க ஆதி மனித இனங்களின் இசைக் கருவியாக இழுத்து தைக்கப்பட்ட மிருகங்களின் தோல்தான் இருந்து வருகிறது என்பதும்..ஆப்பிரிக்க பூர்வீக மக்களின் தொன்ம இசை வடிவமும் நம் பறை போன்ற ஒன்றுதான் என்பதும் என்னை வெகுவாக கவர்ந்தன.
அதனால்தான் தோழர் சுடர் அழைத்தவுடன் நான் மிகவும் உற்சாகத்தில் விஷ்ணுபுரம் சரவணனை அழைத்துக் கொண்டு பறை இசைப் பயிற்சி நடக்கும் மைதானத்தினை நோக்கி விரைந்தேன்.

.
நாங்கள் அங்கே சென்ற போது ஒரு பூசைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. இரண்டு பறைகளும், சில மூங்கில் துண்டுகளும் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்தன.ஒரு வயதான பறை ஆசிரியரும், அவரது மகனும் பூசைக்கான பணிகளில் இருந்தனர். அதில் அந்த வயதான பெரியவருக்கு இடது கை சற்று ஊனமாகவும், இரண்டு விரல்கள் இல்லாமல் இருந்ததும் கவனிக்கத் தக்கதாக இருந்தன.பூசைகள் முடிந்து பயிற்சி துவங்கும் போது பறை நாம் தமிழர் குடந்தை ஒருங்கிணைப்பாளர் தம்பி புகழ் மாறன் கரங்களில் இருந்தது. மற்றொரு பறை கற்றுக் கொடுக்கும் வயதான ஆசிரியர் கையில் இருந்தது.நான் கண்களில் ஆர்வம் தெறிக்க கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில் பறை அடிக்கும் குச்சிகளை எப்படி பிடித்துக்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டது.புகழ் மாறன் முயற்சி செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பறை அவ்வளவு இலகுவாக வரவில்லை. அடுத்தது பறை எனக்கு அளிக்கப்பட்டது.
.
இழுத்துக் கட்டப்பட்ட அந்த பழுப்பேறிய பறையினை மெதுவாக நான் தடவிப்பார்த்தேன். எனது புலன்களில் இனம் புரியாத நடுக்கம். எனக்குள் இருந்த என் இனத்தின் ஆதி மரபுணுக் கூறுவினை யாரோ தொட்டு எழுப்பியது போல ஒரு உணர்வு. மெலிதாய் தட்டிப்பார்த்தேன். பறை அதிர்ந்தது. அதன் அதிர்வில் என்னை சுற்றியுள்ள அனைத்தும் அசையாத் தன்மை உடையதாக மாறி விட்டதாக நான் உணர்ந்தேன்.

நானும் என் மூதாதையின் கரங்களை உடையவனாக மாறிப் போனேன். ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது என்னுள் இறங்க துவங்கியது. ஆசிரியர் அடிக்கத் துவங்கினார். நானும் அடிக்கத் துவங்கினேன். மிக எளிதாக பறை என் வசப்பட்டது.மேலும் மேலும் என்னுள் உக்கிரம் ஏறிக் கொண்டே இருந்தது.வானில் நிலா காய்ந்துக் கொண்டிருந்தது. என் முன் நிற்பவர்கள் மறைந்துப் போனார்கள். நான் அடித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஒழுங்கு வயப்பட்ட ஒலியை என் இனத்தின் வலியை நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழ நினைவும், வலியும் என்னை மேன் மேலும் உக்கிரப்படுத்தியது. உடலும் மெலிதாக ஆடத் துவங்கியது. அடித்துக் கொண்டே இருந்தேன். தாளக் கட்டுக்கள் மாற்றி வாசித்து காண்பிக்கப்பட்டும் என்னுள் உள்ள வலியும் ,உக்கிரமும் என் தொன்மத்தில் கிளர்ந்து என்னை மயக்க நிலைக்கு இட்டு சென்றது. என் முன்னால் என் மக்கள் பிணங்களாய் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். என் பறை மேலும் உக்கிரமடைந்தது. யாரும் எங்களுக்கு இல்லை..என்ற உணர்வும் தவிப்பும் என்னை தாங்க இயலா சோகத்திற்கு இட்டு சென்றன..என் பறையில் என் மூதாதை உக்கிரமாக வெளிப்படுவது போன்ற உணர்வு. கரங்கள் வலித்தன. கையில் வைத்திருந்த குச்சிகள் பிய்த்துக் கொண்டு போயின.நானும் ,அந்த வயதான பெரியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்தோம்.

கரங்களின் வலி அதிகரிக்கவே..அடிப்பதை நிறுத்தினேன். கரங்கள் வலிப்பதாக கூறியவுடன்.. தம்பி புகழ் நம் தேசிய தலைவரை நினைத்துக் கொள்ளுங்கள் என்றான். நான் மீண்டும் உக்கிரமாக அடிக்க துவங்கினேன்.

பறை மொழி மிகவும் வசீகரமானது மட்டுமல்ல..உள்ளுக்குள் ஊறும் அனைத்தையும் கிளறக் கூடியது. சமீப கால எனது வலி மிகுந்த துயர் மனநிலை பறையுடன் மிக எளிதாகப் பொருந்திப் போனது.ஒவ்வொரு அதிர்விலும் நூற்றாண்டுகளை கடந்து என் இனத்து மூதாதையின் அருகே இருந்து விட்டு வருவது போன்ற உணர்வு. வேறு எந்த இசை வடிவமும் என்னை இவ்வாறு அலைக் கழித்தது இல்லை.என் நிகழ்கால வலியை..எனது துயரத்தினை எனது ஆதி துவக்கத்தின் கரங்களில் வைத்துகொண்டு அழுவது போன்ற அனுபவத்தினை பறை எனக்களித்தது..அந்த இரவும்..அந்த வயதான ஆசிரியரும், அந்த ஒழுங்கமைவு இசையும் என் மனநிலையை பிறழச் செய்தன.சம காலத்தில் என் கண் முன்னரே என் இனம் அழிக்கப்பட்டதை எண்ணி எண்ணி எனக்குள் ஊறிக் கொண்டே இருக்கும் குற்ற உணர்வின் வெளிப்பாடாய் பறையின் மொழி வெளி வந்தது.

ஒரு ஒலிக்கும்..உணர்வுகளுக்கும் இடையில் நிகழும் ஒத்திசைவு பறையில் நிகழ்வது போல வேறு எதிலும் நிகழ்வது இல்லை.

பறை எனக்கானதும்..என் தொன்ம இனத்தின் இசைக்கானதும் ஆகும்.ஆண்டாண்டு காலமாக அதிர்ந்துக் கொண்டிருக்கும் பறையின் மொழி மனிதனின் துயரத்தினை,வலியை, கோபத்தினை ,உக்கிரத்தினை சொல்கிறது.
வாசித்து முடித்ததும் அந்த வயதான பெரியவர் என்னை இறுக அணைத்து முத்தமிட்டார். அதிர்ந்து அதிர்ந்து உணர்வேறிய அவரது விரல்களும் அப்போது நடுங்கின என்பதை நான் உணர்ந்தேன்.

. வானம் இருட்டிக் கொண்டு மழை பெய்ய துவங்கியது.

மிதக்கும் வலி…



இதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்
உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….
தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்ட
உயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.
தனிமையில் கசியும் என் கோப்பை
முழுக்க குழந்தைகளின் உடலங்கள் மிதக்கின்றன..
வளைந்து நெளிந்து எழும் புகை வளையங்களின்
ஊடே…நன்கு கவனித்து பார்த்தால் நீங்கள் அறியலாம்.
ரசாயன எரித்தலில் கருகிப் போன
பிணம் ஒன்று தூக்கில் தொங்குவதை….
என் அறையின் உயரத்தில் தொங்கும் ஒற்றை
விளக்கின் உமிழலில் பரவித் தெறிக்கிறது
கருப்பை ரத்தச் சுழி ஒன்று….
நாசியை புணரும் ரத்த வாடை
என் விழிகளில் மாற்ற இயலா
வடுவாய் எஞ்சி நிற்கிறது..

தூரத்தில் யாரோ அழைக்கிறார்கள்
அறுந்து தொங்கும் ஒற்றை ரத்த விரல் நீட்டி..
தொப்புள் கொடி கழுத்தை சுற்றி பிறந்த பிணங்களின்
வாயில் எச்சில் கோழையாய் வழிகிறது இறையாண்மை..

.
ஓங்காரக் குரல் எடுத்து அழுகிறேன்.
எல்லாம் முடிந்த பின்னர்.
தனிமையாகத் தான் இருக்கிறேன்
என உறுதி செய்துக் கொண்டு.
.






மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.)


மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..





ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி ...வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர்க் கொள்ளலாம்.
இந்த வக்கிரக்காரர்களின் பின்புல அரசியல் மிக கீழ்த்தரமானது. மக்கள் அவலத்தின் ஊடே இவர்கள் தேடுவது எவ்விதமான நியாயத் தீர்வுகளும் இல்லை. மாறாக இவர்களின் சொல்களின் ஊடாக கசியும் மனித இறைச்சி வாசனை கொடுங்கோலன் ராஜபக்சே மனநிலையை விட அபாயமானது. புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு வாயே முளைத்திருக்கிறது..முளைத்ததும் கள்ளிப் பாலாய் சொட்டுகிறது. இது போன்ற நபர்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் அபாயம்தான். இவர்களை தனிமைப்படுத்துவதும்..இவர்களின் பின்புல அரசியலை ஊரறியச் செய்வதும்தான் நம் பணியாக இருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்தினை வாய் கூசாமல் விமர்சனம் என்கிற பெயரில் ஏசவும், தூற்றவும் துணிகிற இவர்களது சொல்லாடல்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன தெரியுமா..?
இவர்களின் ஒருவரான சுகன் ..சென்னையில் நடந்த சமீபத்திய கூட்டமொன்றில் சிங்கள தேசிய பாடலை பெருமையுடன் பாடுவதில் இருந்து இவர்கள் யார் ...? இந்த நரிகள் யாருக்காக ஓலமிடுகின்றன...? என்பது தெரியவில்லையா..?

தோழமையுடன்


மணி.செந்தில்


கும்பகோணம்

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

ஈழ உறவுகளுக்கு…
தாயகத் தமிழகத்திலிருந்து...மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. உங்களின் முகத்தை பார்க்க கூட எங்களுக்கு திராணியில்லை. உங்களின் துயரத்தை கேட்டு பொங்கி அழ கூட எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
இங்கே சினிமா ரசனையும்..மாத சம்பளம் வாங்கும் வர்க்கமும்…போதையில் முழ்கிக் கிடக்கும் கூட்டமும் அரசியலை தீர்மானிக்கின்றன..இங்கே யாருக்கும் தொன்மம் குறித்த புரிதலோ..தமிழ்ச் சமூகம் குறித்த அறிதலோ இல்லை.
மிக எளிதாக நாங்கள் விலைபோனோம் உறவுகளே… எங்களை நாங்களே காட்டிக் கொடுக்க சில ரூபாய் தாள்கள் போதுமானதாக இருந்தது. எங்களின் தொன்ம பெருமை மிகு அடையாளமாய் இருந்த உங்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்கள் மேடை ஏறும் போது..நாங்கள் தலைவர்கள் தொண்டை கிழியும் அளவிற்கு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு இருந்தோம். தமிழ் மரபுகளை மீட்டெடுத்து..இந்த தலைமுறையின் கண்களுக்கு முன்னாலேயே நாடு கட்டி ஆண்டு பார்த்த எங்கள் உறவுகளான உங்களை அழிக்க மூலமாய் இருந்தவர்களின் கரங்களில் நாங்கள் மலர்க் கொத்து கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் தொப்புள் கொடி நம்மை துவளாமல் காக்கும் என நம்பிக்கையோடு இருந்தீர்கள் உறவுகளே….இறுதி வரைக்கும் காத்திருந்தீர்கள்.ஆனால் நாங்கள் ..கேவலம். ஒரு சாராயப் பாக்கெட்டிற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும், இருநூறு ரூபாய் காசுக்காகவும் உங்களை கைக் கழுவி விட்டோம் உறவுகளே…
நீங்கள் பசியால் கதறிய போது..கூக்குரல் கேட்க கூடாது என மருத்துவமனையின் ஏசி அறைக்குள் ஒளிந்துக் கொண்டோம்..
சாவுக் குழிகளுக்குள் நின்றுக் கொண்டு யாராவது காப்பாற்ற வாருங்களேன் நீங்கள் என கதறிய போது ..நாங்கள் கடற்கரை காற்று வாங்க … மதிய உணவு நேரம் வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினோம்.
மழை மழையாய் பொழிந்த குண்டுகளினால் காயம் பட்டு…வலி பொறுக்க முடியாமல் நீங்கள் சயனைடு குப்பிகளை மென்ற போது..நாங்கள் தேர்தல் வெளிச்சத்தில் எங்களை மறந்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் முடிந்தது. வதை முகாம்களில் சிக்குண்டு கிடக்கிற உங்களை நாங்கள் சிந்தித்து பார்க்கவே கூடாது என்பதற்காக..விதவிதமான திரைக்கதைகள்..விதவிதமான நாடகங்கள்..
ஈழ உறவுகளை காப்பாற்றாமல் ..இந்த ஆட்சி இருந்தால் என்ன..போனால் என்ன என்று உருக்கமாய் அய்யகோ கூப்பாடு போட்டோம். .
இங்கு அனைத்திற்குமே ஒரு விலை இருக்கிறது..
எனவே தான் எங்களது ஊழலுக்கும் ,பதவிக்குமான விலையாய் உங்களை நிர்ணயித்தோம்.
ஆனால் டெல்லிக்காரன் புத்திசாலி. இந்த முறை அவன் வாங்கியது உங்களை அல்ல உறவுகளே..
எங்களை.
எங்களை நாங்களே ஒரு விலை போட்டு விற்றுக் கொண்ட கூத்திற்கு இங்கே வித்தியாசமான ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது பெயர் தேர்தல்.
இனி தாயகத் தமிழகத்தில் இப்போது வாழும் இந்த தலைமுறை தன் வாழ்நாள் முழுக்க துயர் மிகு வலியை சுமந்தே வாழும். இதற்கு அப்பாலும் உங்களை நாங்கள் எங்கள் உயிரினும் மேலாய் நேசித்தோம் உறவுகளே..அதை நாங்கள் முத்துக்குமாராய் நிரூபித்தும் காட்டினோம்.,தெரு தெருவாய் அலைந்து மக்களை திரட்டி..ஆர்பார்ட்டம், பேரணி, உண்ணாவிரதம், மறியல், மனித சங்கிலி என அனைத்தும் செய்தோம்.ஆனால் இந்திய அரசு எங்களை சிறிது கூட மதிக்க வில்லை. எப்படி எங்களை மத்திய அரசு மதிக்கும்..? பதவிக்காகவும், ஊழல் பிழைப்பிற்காகவும் எங்கள் தலைவர்கள் தான் டெல்லியின் காலை தொழுதுக் கொண்டிருக்கிறார்களே....எப்படி மதிக்கும்...?...எல்லாம் முடிந்த பின்னர்...என்ன செய்வது என்று தெரியாமல் வலி மிகுந்த மெளனத்தோடு தலைக் குனிந்து நடக்கிறோம்... பிறர் அறியாமல் தனிமையில் அழுகிறோம்.. தலைவரால் நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.. நாங்கள் தலைவர்களால் அழிந்துப் போனோம். இது தான் உண்மை.தமிழர்களுக்கான தேசத்தை நீங்கள் அவசியம் கட்டமைப்பீர்கள். உறவுளே... அதில் எனக்கெல்லாம் எள்ளவும் சந்தேகமில்லை..ஆனால் அந்த வெற்றியில் நாயினும் இழி பிறவிகளான எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் எழுவதும் …வாழ்வதும் சாத்தியம் தான் …ஆனால் நாங்கள்.?
துரோகங்களை வெல்லுங்கள்…
யாருக்கும்..எதற்கும் விலை போகாதீர்கள்…
நல்லத் தலைவனின் வழி தொடருங்கள்..
இல்லையேல் நாளை நம்முடையதல்ல..
அதற்கு சாட்சியாக… தோற்ற சமூகமாக..உங்கள் தாயக தமிழ் உறவுகள்
நாங்கள் இருக்கிறோம்..
எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..
எப்படி வாழக் கூடாது என்பதற்கு.
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
மணி.செந்தில்

ஈழத் தமிழர்களும் … இலக்கியப் புடுங்கிகளும்..


புடுங்கி என்ற சொல் நமது சாதாரண வாழ்வில் கோபத்தின் தொனியாய் வெளிப்படும் ஒரு சொல். அந்த சொல் அலட்சியத்தினையும்,கர்வத்தினையும் பிரபதிலிக்கும் நபர்கள் மீது பிரயோகிக்கப் பயன்படும் ஒரு சொல்..கீழ் வரும் ஆசாமிகளைப் பற்றி எழுத நினைக்கும் போது இந்த சொல்தான் சாலப் பொருத்தமாய் நின்றது. தன்னைத் தானே சிம்மாசனத்தின் மீது அமர வைத்துக் கொண்டு ,அரங்க கூட்ட அரசியல் செய்துக் கொண்டு..இவர்களாகவே இசக் குழுக்கள் அமைத்துக் கொண்டு ..எந்த அவலத்தின் மீதும் …துயரத்தின் மீது கரிசனப் பார்வை கூட செலுத்தாமல்..சுயநல இலக்கியம் படைப்பதாக சொல்லும் சில புடுங்கிகளைப் பற்றி நாம் இந்த நேரத்தில் யோசிப்போம். பிடுங்கி என்றுதான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புடுங்கி என்ற சொல்லில் தொனிக்கும் கோபம் தான் என்னளவில் சரியாகப் பட்டது.


ஈழம் நமக்குள் ரணமாய்,வலியாய்,துயரயாய் இருக்கும் இந்த சூழலில் …இனி என்ன செய்வது என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது…வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் ஏதாவது வினை வைக்கவும், எகத்தாளம் செய்யவும் இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர்.


ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம்..வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து..நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயல வில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ..துயரைப் பற்றியோ.. வாய் திறக்காத இவர்கள்…யுத்தம் மக்களின் அழிவாய் ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது..இந்த இலக்கிய புடுங்கிகள் வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர். இந்த சமயத்தில் இன உணர்வால் போராடி முயன்றுக் கொண்டிருக்கிற …மிகச் சில எழுத்தாள ஆளுமைகள் இதற்கு வியப்பான..விதிவிலக்குகள்..

இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுத துவங்குவதற்கு பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத் தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ…உரிமைகளுக்காகவோ நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்பட வில்லை.மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய்..உள்ளூணர்வின் உந்துதலால் வீதிக்கு வந்து மிகச் சில சக எழுத்தாளன் போராடும் போது…அந்த போராட்டம் பொய்த்து விட்டது எனவும்..தான் தான் தீர்க்கதரிசி எனவும் முரசுக் கொட்டவே இப்போது இறுமாப்புடன் எழுத துவங்கி உள்ளனர் இவர்கள்.

இலக்கியம்..இலக்கியத்திற்காகவே..தமக்காகவே….பிழைப்பிற்காகவே..சோத்திற்காகவே…சாதிக்காகவே என்றெல்லாம் கொள்கை (?) இவர்களாகவே கட்டிக் கொண்டு..ஊருக்கு நான்கு பேர் மட்டுமே வாசிக்கும் இதழில் பக்கம் பக்கமாய் சக எழுத்தாளனை வைது தீர்க்கும் பணியை..தன் வாழ்நாளின் ப(பி)ணியாய் செய்து வரும் இந்த இலக்கிய சிங்கங்கள் ..புத்தக விழாக்களுக்காகவும்..நூலக ஆணைகளுக்காகவும் யாரும் படித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக 400, 500 பக்கங்களில் புத்தகம் போட்டு ஒருவரை ஒருவர் மாற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர்.பின் நவீனத்துவ,முன் நவீனத்துவ..பக்க நவீனத்துவ..துக்க நவீனத்துவ.. என நான்கு திசைத்துவ எழுத்தாளர்களாய்..நாட்டில் நடக்கும் எது பற்றியும் அக்கறை காட்டாது.. மூடப்பட்ட சுவர்களுக்குள் நடக்கும் கூட்டத்தில்..அடித்த போதையில்.. அகப்பட்டவனை அடித்து துவைக்கும் இவர்களுக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஆனால் அனைத்தும் முடிந்த பின்னர்..தவித்த வாய்களுக்கு… தண்ணீர் அளிக்க கூட சிந்திக்காத இவர்கள்…தாகத்தினால் இறந்த ஒரு தலைமுறையின் பிணங்களை சவக்குழியில் இருந்து தோண்டி எடுத்து சவத்தின் மீது நெளியும் புழுக்களின் ஊடே அலையும் புழுவாய் …ஏன்..எதற்கு..எப்படி என ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு கட்டுரை எழுத வந்து விட்டனர்.

இனம் அழிந்து போகும் தருணங்களில் இறுக வாய் மூடி மெளனத்திருந்த இவர்களது நா…ரத்த சுவையின் ஊடே ஊறும் ஊடக வெளிச்சத்தினை நக்கிப் பார்க்க அலைகின்றது.மலை முகடுகளில் ஒளிந்துக் கொண்டு ,எங்கேயாவது மாமிசம் விழுமா..பறந்து திரிந்து பறிக்கலாம் என அலையும் பிணக் கழுகுகள்… மலை மலையாய் செத்துக் கிடக்கும் மனித சவங்களின் மீது அலையத் துவங்கி இருக்கின்றன.. இனி இவர்கள் பக்கம் பக்கமாய் எழுதவும்..வழுக்கவும்.. இவர்களுக்கு ஈழம் ஒரு பிழைப்புக் காரணியாய் நின்று போகும். போர் புரிந்து இறந்த மாவீரர்களின் தடங்களை இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் காசு கொடுக்கும் இன அழிப்பு எஜமானிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு …காட்டிக் கொடுக்கும் கள்ள கட்டுரைகள் எழுதுவார்கள்..இது வரை இல்லாத அளவிற்கு போட்டிக் குழு,போர்ப் பரப்பில் நின்ற சாதீய பார்வை என்றெல்லாம் பேனா மை இருக்கும் வரை ..கத்தை கத்தையாக காகிதங்களில் கசக்கி பிழிவார்கள்.. அலாவுதீனின் அற்புத பூதம் போல..இது வரை எங்கிருந்தார்களோ.. தெரியவில்லை. ஜீபூம்பா என்ற அழைப்பில்லாமலேயே பாய்ந்து வந்து பதறுகின்றனர் இந்த பாசாங்குக் காரார்கள்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் இன மக்களின் வியர்வைத் துளிகளினால் விளைந்த பணத்தை நோக்கி…புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளும் இந்த கொள்ளைக்கார கும்பல்..அவர்களின் துயர் துடைக்க..தோள் கொடுக்காமல்..சவக் காட்டிலும் அரசியல் சதிராட்டம் நடத்தி..பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள். இனம் அழியும் போது எந்த இலக்கிய சங்கமும் வாய் திறக்கவில்லை. மாறாக இலக்கிய அபத்தங்களுக்கு ஆங்காங்கே கூட்டம் நடத்தி ,குழு சண்டை..குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முற்போக்காளர்களுக்கும் ஒரு பிரச்சனை… இதில் வாய் திறக்கலாமா..வாய் திறந்தால் கட்சியின் ஈ உள்ளே போய் விடுமே… கட்டுப்பாட்டு நாற்றம் வெளியேறி விடுமே என்ற பயம்.

இனம் ..மொழி என்ற ஒன்று இருந்தால்தானே..நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும் இவர்களுக்கு…

ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது உளறி கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது.அது என்னவென்றால்..உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம்.அது தான் இட்லி ஆறிய பிறகென்ன..ஊசிப் போன பிறகு கூட இவர்கள் சாப்பிட துணிவது…பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடும்.

எல்லாம் முடிந்த பிறகு ….யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில்..தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில் ..நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுத துவங்கி உள்ளார்கள். இனிமேலும் எழுதுவார்கள்..


வெகு ஜன பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்ன வென்றால்..ஊர் முழுக்க தந்தி அனுப்பவும்,மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது.. ஏதாவது சொல்லும் போது..அன்றே சொன்னனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது.இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக இவர் ஆசைப்படுகிறார். உணர்வும் ,உண்மையும்,கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும்.பிரபாகரன் இருக்கிறாரோ,இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.
சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே..உங்களுக்காகவது எம் தலைவர் வருவார்..வந்தே தீருவார்.

உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம்.எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று ..அவதியுற்று நிர்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும்..என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா,பாரதி, பாரதிதாசன்,காசி ஆனந்தன், இன்குலாப்,அறிவுமதி, என பட்டியல் நீள்கிறது.ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல்..அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது..?.கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே…சமூகம் என்ற ஒன்றும்..உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு… வெங்காயம் இதெல்லாம்..
எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி..எழுதினானே பாரதி..அவனும் படைப்பாளிதானே..

குடிப்பதையும் பற்றியும்..இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்களால் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்.தமிழ் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இன அழிவின் போது சிறு சலனத்தை கூட காட்டாத இவர்கள்..இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?

அய்யா…இலக்கிய இசங்களை கரைத்து குடித்து..வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து…இதிகாச மீள் புனைவில் மீண்டெழுந்து.. குடிப்பதையும்.. குடிச்சாலைகளையும்… ஊற்றெடுக்கும் காமத்தினையும்…வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே…

ஈழத்தினையும்..மக்களையும் விட்டு விடுங்கள்…

அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள்.

காரண…காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே.. வைத்துக்கொண்டு… ஏற்கனவே பணத்திற்காகவும்.. சாராயத்திற்காகவும்… தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளை தொடருங்கள்.

எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும்.. பட்டங்களை பறிக்கவும்.. எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும்..இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்…உங்களுக்கு பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை.

நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் ..எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன..மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன..இது போதாதா..கூட்டம் நடத்தவும்..கும்மி அடிக்கவும்…?

உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது.

ஆனால் எதற்கும் உண்டு விடியல்.

விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது.

நீங்களும்..உங்களும் எழுத்துக்களும் தான்.

வணக்கம் .இலக்கியப்புடுங்கிகளே..

சீக்கிரம் கடந்து போங்கள்.

இல்லையேல் கடத்தப் படுவீர்கள்.

.மணி.செந்தில்...
www.manisenthil.com

எங்கள் அண்ணன் சீமான் தான் இது

வேந்தன் என்பவர் பெயரில் எங்கள் சீமானா இது..? என்ற தலைப்பில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்துள்ளது. அண்ணன் சீமான் இப்போது அ.இ.அ.தி.மு.வை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு குறித்து மிக தவறுதலான ,உள்ளீடற்ற வெற்றுக் கருத்துக்கள் அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என வேண்டுகோளை வைத்து முடியும் அந்த கட்டுரையில் எதை செய்தாலும் குறை கூறி சிதைக்கும் மனப்பான்மையும் ,சாத்தியமில்லா தீர்வுகளும் தான் மிகுதியாக உள்ளன. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தலித்துக்கள் பாதிக்கப்பட்டதாக புதிதான ஒன்று போல சொல்லியிருக்கும் வேந்தன் அடிப்படையில் ஒன்றை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். தலித்துகள் மீதான வன்முறை என்பதும்…அடக்குமுறை என்பதும் அதிமுக ஆட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல.இங்கே கும்பகோணம் பகுதிகளுக்கு வந்து பாருங்கள். திமுக உள்ளூர் அரசியல் பிரமுகர் மூலமாக தான் காட்டூர் என்ற பகுதியில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டது. அதன் விளைவாக நடைபெற்ற போராட்டங்களில் தலித் இளைஞர்கள் மீது எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டன. நீலப்புலிகள் இயக்கம் என்ற தலித் இயக்கம் தான் அந்த போராட்டத்தை இது நாள் வரை கூர் மழுங்காமல் வைத்து போராடி வருகிறது. எல்லா ஆட்சியிலும் தான் தலித் மக்கள் மீதான வன்முறை நடந்துக் கொண்டே இருக்கிறது..இதை நான் சொல்வதால் தலித்துக்கள் மீதான வன்முறையை விட்டு விடலாம் என்று பொருளல்ல.. இன்று அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு உணர்வு மிக்க ஒரு விஷயத்தில் கை கோர்த்து நிற்கிறோம்
அது இன எதிரி காங்கிரஸை தோற்கடிப்பது.வேந்தன் சொல்வது போல தேர்தலை தமிழுணர்வாளர்களும், இன உணர்வாளர்களும் புறக்கணித்தால் அது யாருக்கு சாதகமாக அமையும்…? இதற்கு வேந்தன் நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு கேட்கலாம். வீடு எரிந்துக் கொண்டிருக்கிறது ..தூய்மைப் படுத்தப்பட்ட மினரல் வாட்டரை கொண்டுதான் தீயை அணைப்போம் என்கிறார் வேந்தன். நாங்கள் எங்கள் பக்கத்தில் ஓடுகின்ற வாய்க்காலில் ஓடுகின்ற சாக்கடை நீரை கொண்டு தீயை அணைக்கிறோம். ஜெயலலிதாவை ஆதரிப்பது எங்களது பிரதான நோக்கமல்ல.காங்கிரசை தோற்கடிப்பது. அதற்கு ஓட்டு போடாமல் இருப்பதும், 49 o போடுவதும், சுயேட்சைகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாக்களிப்பதும் தீர்வில்லை. இவ்வாறு செய்தால் ஓட்டுக்கள் பிரிந்து அது காங்கிரஸ்க்கு வெற்றியை அளிக்குமே ஒழிய ,கண்டிப்பாக நம் இனத்திற்கான அரசியல் விருப்பங்களை நிறைவேற்றாது.
காங்கிரஸ் எதற்காக தோற்கவேண்டும் என்பது குறித்தான புரிதல் நம் அனைவருக்குமே உண்டு. இந்த முறை காங்கிரஸ் தோற்பதுதான் நாளை இனநலன்களுக்கு எதிராக செயல்பட எண்ணும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு அச்சத்தை கொடுக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் இன்று ஆதரவு தெரிவிக்கும் ஜெயலலிதாவிற்கே நாம் தனி ஈழத்திற்கு ஆதரவு தந்தது தவறு என்ற எண்ணம் உண்டாகி விடும் அல்லவா..? .மக்களின் பொங்கி எழுகின்ற உணர்வினை கண்டு எதிரிகளே நம் கோட்டைக்குள் வருகின்றனர். வருபவர் வந்து நம் கழுத்தறுத்தால் …நாம் கொண்டாடிய கருணாநிதிக்கே இந்த கதி என்றால் … எதிரிக்கு எந்த கதி என்பதை காலம் சொல்லும்.
அண்ணன் சீமான் இடதுசாரி தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இன்று மின்னும் நம்பிக்கையாக தெரிகிறார்.அவரின் அப்பழுக்கற்ற தியாகமும், போர்க்குணமும் எண்ணற்ற இளைஞர்களை கவர்ந்து வருகிறது. காங்கிரஸ் தோற்பது மட்டும் தான் எங்கள் நோக்கமாக இருக்கிறது.தோற்றால் ஈழ அவலம் தீர்ந்திடுமா…என்ற கேள்விக்கு…எங்களிடம் இப்போதைக்கு பதிலில்லை. அதற்காக எம் இனத்தை அழித்தவர்களை, துணை போனவர்களை எங்களால் எதன் பொருட்டும் வெற்றி பெற அனுமதிக்க இயலாது. தனி ஈழம் அமைத்து தருவேன் என்று ஜெயலலிதாவின் சொல்லுக்கு இந்த முறை வெற்றியை கொடுத்துதான் பார்ப்போமே..வசனங்களை நம்பியும்..வாதுரைகளை நம்பியும் எத்தனை முறை நாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டதில்லையா….? – நம்பிக்கைதான் வாழ்க்கை..
தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கு பதிலாக நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று வேந்தன் நேரிடையாக கேட்டுவிடலாம். இப்படி உணர்வாளர்களை ஓட்டு போடாமல் தடுப்பது யாருக்கு உதவும் என்று நினைக்கிறீர்கள்…கண்டிப்பாக அது காங்கிரஸ்க்குதான் தட்டில் வெற்றியை வைத்து அளித்து போல ஆகும். எதை எதையோ நினைத்து அவலை இடிப்பது போல..சீமானை போகிற போக்கில் சம்பந்தமே இல்லாமல் பொத்தாம் பொதுவாக விமர்சித்து விட்டு போவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இழிவிலும்,அவலத்திலும் சிக்குண்டு கிடக்கிறது நம் இனம். எதிர்காலம் ஒன்றே நமக்கெல்லாம் உண்டா என்ற கேள்வியோடும்..பதைபதைப்பும்,விரக்தியும்,வேதனையும் மிஞ்ச ..ஏதாவது நல்லது நடக்காதா என்ற கனவில் அலைகிறோம் நாங்கள். இணையத் தளங்களில் எழுதினாலும் களத்திலும் இறங்கி இணையத்தமிழர் இயக்கம், உலகத் தமிழ் மக்கள் அரங்கம், தமிழ்நாடு அரசியல், தமிழ் இளையோர் கூட்டமைப்பு,என பல்வேறு குழுமங்களை சேர்ந்த தோழர்கள் வீதியில் இறங்கி காங்கிரசை வீழ்த்தி விட முயன்று கொண்டு இருக்கின்றனர். அண்ணன் சீமானும் அதைத்தான் செய்கிறார். எது இப்போதைய உடனடி தேவை என்று புரிந்துக் கொள்வது மிக அவசியம். இனம் ,மொழி…என்று ஏதாவது ஒன்று இருந்தால் தான் வேந்தன் போன்றோர் போகிற போக்கில் எழுதி விட்டு போக முடியும்.தேர்தல் புறக்கணிப்பு என்ற சொல்லுக்கு எங்களைப் பொறுத்தவரை இப்போதைய அர்த்தம் காங்கிரசை காப்பாற்றுவது.
அண்ணன் சீமான் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் அடையாளமாய் இருக்கிறார்.முழங்கி விட்டு போவது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கியும் எதிரிகளை நிர்மூலப்படுத்தி வருகிறார்.இந்த இனத்திற்காக தனிமைச் சிறைக் கண்டு,தடைகள் பல உடைத்து ,தியாகத்தின் சின்னமாக…நாம் காணும் புரட்சிக்காரனாக இருக்கிறார். இது போன்று கட்டுரைகள் வரைவது அவரை பாதிப்பதை விட..ஒட்டு மொத்த இனவெழுச்சி உணர்ச்சியையே அது சிதைக்கும்..வேண்டாம்.. நம்மை நாமே திட்டிக் கொள்ளவும்..கூட்டம் சேர்த்துக் கொண்டு குறை கூறி ஏசிக் கொள்ளவும் வேறு காலங்கள் வரும்..இதுவல்ல நேரம்.
காங்கிரசினை தோற்கடிப்போம்..தேர்தல் களத்தினில் துரோகிகளை அழிப்போம்…எதிரியாய் இருப்போர் ஒன்று அழிய வேண்டும்…இல்லையேல் நண்பர்களாக வேண்டும்…இல்லையேல் நண்பர்கள் போலவாவது நடிக்க வேண்டும்…இது எது சரி என்பதை எதிரியே தீர்மானிக்கட்டும்.
என்னை தாக்கிய அம்பைத்தான்
இன்று ஆயுதமாக ஏந்தி இருக்கிறேன்…
அது என்னை காப்பாற்றாமல் போனாலும்
பரவாயில்லை..
எதிரிகளை வீழ்த்தட்டும்

கவிஞர். தாமரை அவர்களின் பதில்.

vanakkam adv mani avaragale,

  Sorry that I've to reply in english as i don have tamil font .  I keep getting a lot of cals from all over the world as a response to my speech .  T;hough i am not an orator, i spoke bec , as you said, that is the only thing we can do now. Your letter explains perfectly the feeling of an ordinary tamilian .  

 Lets hope for a good news.   Til then let us do whatever we can , to eradicate congress from tamil soil. 

  Nanri thozhar.

anbudan thamarai

எப்போது விடியும்...?


அன்புள்ள தோழர் தாமரை அவர்களுக்கு...வணக்கம்.

திரைத்துறையினர் நடத்திய தொடர் முழக்க நிகழ்வில் உணர்வு மிகுந்த தங்களது உரையினை இணையத்தளம் மூலமாக கேட்டேன்..மிகத் தெளிவும், உணர்வும் நிரம்பிய தங்களது பேச்சில் நம் இன உணர்வு பொங்கிப் பாய்ந்தது. நடக்கும் அவலத்தை கேட்பார் யாருமின்றி அழியும் நம் இனத்தின் அழிவை, வலியை மிக அழகாக.நேர்த்தியாக,துணிவாக பதிவு செய்துள்ளீர்கள். பிற மொழி கலப்பின்றி நம் மொழியின் ஊடாகவே நவீன இசையின் அனைத்து உச்சங்களையும் உங்கள் பாடல் வரிகளால் தொட்டு விட்ட தாங்கள் இப்போது நம் இன அழிவினை எதிர்க்கும் ஆயுதமாக உருவாகி உள்ளீர்கள்.. வலி மிகுந்த நேரத்திலும் தங்கள் பணி ஆறுதல் தருகின்றது. 



தாங்கள் சொன்னது போலவே நடக்கும் அவலங்களை கண்டு எதுவும் செய்ய இயலாத, முத்துக்குமார் போல சாகவும் துணிவின்றி தினந்தோறும் நல்ல செய்தி ஏதேனும் வராதா என அலைந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களில் நானும் ஒருவன். தினந்தோறும் வீதிகளில் இறங்கி போராடுகிறேன்.யார் ஈழத்திற்காக போராட்டம் நடத்தினாலும் வலிய சென்று கலந்துக் கொண்டு கத்தி தீர்க்கிறேன். இரவில் திடுக்கிட்டு விழித்து அவசர அவசரமாக இணையத் தளங்களை மேய்கிறேன். அலை அலையாய் பாய்ந்து வரும் வதந்திகளில் மனதை இழந்து கலங்கி அழுகிறேன்.என்னருகே தூங்கிக் கொண்டிருக்கும் என் மகனும்..ஈழத்தில் இறந்துக்கிடக்கும் மகனும் வெவ்வேறல்ல என்று உணர்ந்து கசிகிறேன். உற்றார், உறவினர், கூட பணிபுரிபவர் என அனைவராலும் என் அலைகழிப்பும், பதைபதைப்பும் வேடிக்கையாகவும் ,விசித்திரமாகவும் பார்க்கப் படும் நிலையில்...உணர்வுள்ள தோழர்களை தேடிப்பிடித்து கவலையும், கலக்கமும் நிறைந்த குரலில் யுத்தக் கள செய்திகளை பகிர்ந்துல் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னைப் போன்ற எண்ணற்றவர்களின் நிலை.
இரவெல்லாம் தூக்கமின்றி சிவந்து கிடக்கின்றன..பிழைப்பிற்காக நீதிமன்றம் செல்ல வேண்டி நேர்ந்தாலும் உதடுகள் ஒட்டிக் கொண்டு பேச்சு வர மறுக்கிறது..கனத்துப் போன இதயத்துடன் நடக்கவே சிரமமாக உள்ளது..யாரிடமும் பேச விருப்பமற்று தலையை குனிந்தவாறே கடந்து விடுகிறேன். எதிலும் விருப்பமற்று மனம் மரத்துப் போய் வருகிறது. எதையாவது சுவையாக சாப்பிட்டாலோ. நிம்மதியாக கண் மூடி உறங்கினாலோ, கேளிக்கை,சினிமா என ஈடுபட்டாலோ… குற்ற உணர்ச்சியால் உடைந்துப் போய் விடுகிறேன்

என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் சகோதர, சகோதரிகளை, குழந்தைகளை, என் போராளிகளை காப்ப்பாற்ற இயலவில்லை.இந்த உணர்ச்சி....என்னுள் குற்ற உணர்ச்சியாய் பதிந்து என்னை நிம்மதியற்றவனாக அலை கழிக்க வைக்கிறது. என்னால் எதையும் இந்த குற்ற உணர்ச்சியை தவிர்த்து விட்டு செய்ய இயலவில்லை. வழக்கறிஞராக உள்ள நான் நீதிமன்றங்களில் என் இன அழிவின் வலியை சுமந்து பணியாற்ற முடியாமல் தவிக்கிறேன். 

இருந்த போதும் நான் போராடாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே எனக்குள் இருக்கும் வலி மிகுந்த குற்ற உணர்ச்சியை ஆதிக்கம் செலுத்த விடாமல் போராடி வருகிறேன். அதற்கு தங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகளும், உரைவீச்சுகளும் உதவுகின்றன.

நன்றி.

இந்த இனத்தில் இறுதியாய் உணர்வுள்ள ஒருவன் இருக்கும் வரை கத்தி, கதறி தீர்ப்போம்..

நமக்கு நேர்ந்த அரசியல் துரோகங்களை, வலிகளை நமது பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுப்போம்.

வரலாற்றின் எந்த பக்கங்களிலும் பார்த்தாலும் கிடைக்காத அறம் நிறைந்த மாவீரர் பிரபாகரன் நம் இனத்தின் தலைவராக இருப்பதை பெருமையாக நம் பிள்ளைகளிடம் கதை கதையாக சொல்லிக் கொடுப்போம்.

அடுத்த தலைமுறையாவது ஏமாறாமல், கையறு நிலைக்கு சிக்காமல், குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் இருக்கட்டும்.

எப்போது விடியும்...?
விடிந்தாலும்..விடியலை தரிசிக்க விழிகள் இருக்குமா...?
விழிகள் இருந்தாலும்.....விழிகளுக்கு உயிர் இருக்குமா..?

பதில்களில்லா கேள்விகளுடன்
மணி.செந்தில்
www.manisenthil.blogspot.com

சீமான்…கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று.





.
திமிங்கிலம்
ஆழ ஆழ அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!
(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.


கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும் . அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இன மானத்திற்கான கருத்தை பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே ,பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர்,விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். புதுவையில் அண்ணன் சீமானை காண புறப்பட்ட போது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலை தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர்,பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது. தமிழ் பெரியவர் இறைக்குருவனார் , இயக்குநர் அமீர், மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.

நான் சிறை வெளி வாயிலில் இருந்த வாயிற் காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன்.மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்ட போது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலை பேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில் , என்னை பேச சொல்லி அலை பேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார்.மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்
பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலைநீடித்தது.ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன.பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்து பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.
எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர் .தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களை பெற்று என்னிடம் அளித்தார்.தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.
சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். நானும் ,வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.
நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து,அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை. இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வு வயப்பட்ட நிலையில் இருந்தேன்.
அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும் ,வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களை தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானை பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம். எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும் ,வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்து பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.
இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம். ஆனால் நிபந்தனை..புத்தகங்கள் கொடுக்க கூடாது.வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார். …
என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்….அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் ..இனத்திற்காக,இன அழிவினை கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனை பார்த்து விடுவோம்..மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்…எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன
இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இருப்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது.
உள்ளே மங்கலான வெளிச்சம்.வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில் ..வாருங்கள் வழக்கறிஞர்களே…என்ற குரல்..
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ…என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ..பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ….மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ …
அதே குரல்…
குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா..அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன..தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.
அங்குதான்..
தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார்..
நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்..இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன்.ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம் ..பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.
ஒரு சிறைச்சாலையில்… சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ ,அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ… இருக்க முடியவில்லை.மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து…எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப் பட்டு…மீறி எழும் இனமான உணர்வினையும் ..சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்…சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்…அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.
என் புலன்கள் என்னையும் மீறி…ஆதிச்சுழியாய்..சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன் .அண்ணனும் கலங்கி..நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.
அப்பா ..எப்படியிருக்கார்..திமுக காரர் ..அவரிடம் வம்பு வளர்க்காத..பாவம் டா அவரு..என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்..அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா…தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.
எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை ,கலங்குவதை கவனித்துக் கொண்டும் ,பதிவு செய்துக் கொண்டும் இருந்தன…
நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.
சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்துக் கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன்.விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.
வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்ன போது அவரின் முகம் இறுகியது.
சுற்றி நின்ற காவலர்களை பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னை பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள் …அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை..பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள்.இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்க கூட எனக்கு அனுமதியில்லை ..ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.
அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான்.எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர்.அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.


இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர்,உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்..ஏன் அனுமதி ,மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்ட போது அவர்களிடம் பதிலில்லை.
எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.
அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார்.அந்த தாளை என்னிடம் அளித்து கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார்.நானும் அதை பெற்று மடித்த போது ..மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.
நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர் . அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம்.வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்க பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.
வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும்,உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.
என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார் .மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்..நீங்கள் எங்களுக்கு வேண்டும்..கொள்கையாய்..வழிகாட்டியாய்..ஆசானாய்..உறவாய் என்றேன்..
கண்டிப்பாக..என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.
சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.
தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.
எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்,,,தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது. காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர்.மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்…ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?

விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்….அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா…இந்த நாட்டில் துரோகி கருணாவை பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்பி தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர ..சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு..
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே…
தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே..
காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே…
ஏனய்யா …உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது..
அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..?
அவனின் உண்மையும் ,தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது?
அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?


.
வண்டி கிளம்பியது.
கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன்.
காற்று வேகமாக வீசியது..
அந்த காற்று …சிறை மதிற் சுவர்களை தாண்டியும் வீசும்..
காற்றை கைது செய்ய முடியுமா என்ன?.
.

கண்களை குருடாக்கும் தேர்தல் வெளிச்சம்…



மறக்கவே இயலாத துரோகத்தை தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் செய்ய துணிந்து விட்டன நமது அரசியல் கட்சிகள்..தாவித் தாவி ஆள் பிடிக்கும் கூடாரங்களாய் திமுகவும், அதிமுகவும் களத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றன..அனைவரும் கூட்டணி பாகுபாடு இன்றி ஒரு விஷயத்தில் ஒருமித்து இருக்கிறார்கள்…அது ஈழத் தமிழர்களின் அவலங்களை கண்டு பொறுக்க இயலாமல் போராடும் தாயகத் தமிழனின் மனநிலையை கூர் மழுங்கச் செய்வது..


இனம்,மொழி, உணர்வு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் முடியும் வரை உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடைப் போல…அணிந்திருப்பது கூட வெளியே தெரியாது அல்லது தெரிந்து விடக்கூடாது அல்லது தெரிந்தாலும் கூட வரும் கூட்டாளிக்கு உறுத்தக் கூடாது…தேர்தல் முடிந்த பிறகு உள்ளே போட்டிருக்கும் ஜட்டியை வெளியே அணிந்து கொண்டால் போயிற்று..சூப்பர் மேன் ஆகி விடலாம்..

பரவசமான, உற்சாக பானங்கள், பிரியாணி பொட்டலங்கள், ரொக்கங்கள்., துணி மணி , அன்பளிப்பு வகையறாக்கள் என அடுத்த திருவிழாவினை பார்க்க தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.. ஈழத்தமிழினம் அழிவது இவர்களுக்கு ஒட்டு எண்ணிக்கைக்கு அப்பால் தான் இனி உறுத்தும்..இன அழிப்பு வேலையை திட்டமிட்டு நடத்தி வருகின்ற காங்கிரஸிற்காக கலைஞர் உருகுவதும், குலாமோடு குதுகலிப்பதுமாக ஆளும் கட்சிகள் ஆடம்பரமாய் தயாராகி விட்டன.. விடுதலை சிறுத்தைகளுக்கு போயஸ் கார்டன் தோட்டக் கதவுகளை விட கோபாலபுரத்து கதவுகள் உயரம் குறைவு போல தோன்றுகிறது. இங்கே புரட்சி புயலும், இடது சாரிகளும் ராணுவ நடவடிக்கை என்றால் அப்பாவித் தமிழர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபக்சே நாமாவளி பாடிய போயஸ் தோட்டத்தில் ஜெ மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.மாம்பழத்திற்கு எங்கு விலை உயர்வோ அங்கு விற்கப்படும்.

பார்த்துக் கொள்ளுங்கள் தோழர்களே..இவர்கள் தான் நமது தலைவர்கள்.ஈழம் என்று தங்கள் அமைப்பின் பெயரில் கூட வந்து விடக்கூடாது என்ற கவனமாக இருக்கும் நல்லவர்கள்..யாருக்கு யார் மோசம்…யாருக்கு உண்மையிலேயே தமிழன் மீது பாசம் ..என இனி தேர்தல் மேடைகளில் சூடு பறக்கும்..அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது நம் தலைவர்களுக்கு…ஈழத்தைப் பற்றி பேசப் படும் மேடைகளில் காங்கிரஸோ, ஜெயலலிதாவோ இருக்கக் கூடாது.. இருந்தால் ஈழம் பற்றி ஈ கூட பேசாது…
அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி ஈழத் தமிழனின் அவலமும் ,துயரமும் இவர்களை எட்டவே போவதில்லை…தமிழுணர்வாளர்கள் யாரும் காங்கிரஸிக்கு ஒட்டுப்போடப் போவதில்லை..சரி ..அந்த வாக்கினை யாருக்குத்தான் போடுவது…கலைஞர் மீதான வெறுப்பு ஜெயலலிதாவிற்கு சாதகமாக முடிகிறது…காங்கிரஸின் மீதான வெறுப்பு மதவாத பிஜேபிக்கு ஆதரவாக முடிகிறது..மிஞ்சி இருப்பது யாருமில்லையே.. தேர்தல் திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் ஈழத் தமிழின ஆதரவு கலங்கி நிற்கிறது..

ஈழத் தமிழின அவலங்கள் குறித்தான மதிப்பீடுகளை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த தேர்தலை அணுகலாமா என்ற கேள்வியை என் தோழர் கேட்கிறார். சரி …சாகும் அந்த மக்களை சவக்குழியில் தள்ளி விட்டு விட்டு இந்த தேர்தலை நாம் அணுகலாமா..?- இனம் அழிகையில், நம் தொன்ம அடையாளங்கள் தொலைகையில் மிஞ்சி இருப்பது யாராக இருக்க முடியும் தோழர்களே…நன்கு சிந்தித்துப் பாருங்கள்…வேதனையும்,சுய கழிவிரக்கமாய் போனது தமிழனுடைய நிலை.

கத்தி..கதறி..போர்க்குரலாய் முழங்கிய கலைப் போராளி அண்ணன் சீமான் இன்று கம்பிகளுக்கு பின்னால்… தன்னை தானே எரித்துக் கொண்டு தமிழனாய் நிரூபித்துக் கொண்டவர்களின் தணல் கூட இன்னும் தகிக்கும் வெப்பமாய் நம் முன்னால்… இருந்தும் கூட நம்மால் நகரக் கூட முடியவில்லையே.. தெரு..தெருவாக கத்தியாயிற்று…உண்ணாவிரதம்…ஆர்ப்பார்ட்டம்,பூட்டு போடுதல் என அனைத்தையும் செய்தாகி விட்டது..மனித சங்கிலி முதல் இதய சங்கிலி வரை இழுத்து பார்த்தாகி விட்டது… ஈழத் தமிழர்களின் துயரமும், அவலமும் தீர்ந்த பாடில்லையே. காரணம் என்ன…அரசியல் கட்சிகள் என்ற பெயரில் வியாபாரக் குழுக்களும், தொழிலதிபர்களும் உருவானதுதான்…

தன்னலமற்று போராடி வந்த மாணவர்களை கல்லூரியை மூடி அவர்கள் உணர்வினை மூடியாகி விட்டது..மிஞ்சி நின்ற வழக்கறிஞர்களை காவல் துறை அடியாட்களை வைத்து அடித்து துவைத்தாகி விட்டது. இனி வழக்கறிஞர்கள் முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியாகி விட்டாயிற்று.. என்ன ஒரு சாணக்கியத்தனம்…ஆடம்பரமான அரங்கில் தேர்ந்த நடிகர்களோடு நடந்த உருக்கமான மருத்துவமனை காட்சி போல…

இனி என்ன செய்வது என்ற கையறு நிலையோடு நாம் குழம்ப வேண்டாம் தோழர்களே..

நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்..

அது இன எதிரி காங்கிரஸினை தோற்கப்படிப்பது…

அதற்கு நம் வாக்குச் சீட்டுகளை அம்புகளாக எய்வோம்.. அப்போதுதான் மிஞ்சி இருக்கும் பிழைப்புவாதிகளுக்கு பிழைப்பிற்காகவேனும் தமிழின உணர்வோடு நடித்தாக வேண்டிய பயம் பிறக்கும்….காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸிக்கு எதிராக நிற்பவர்களுக்கும் ,மிஞ்சிய தொகுதிகளில் உணர்வு எஞ்சியவர்களுக்குமாக நமது வாக்கினை பயன்படுத்துவோம்.

இதுதான் முடிவாக தெரிகிறது எனக்கு.இது முடிவு என்பதை விட ஒரு துவக்கமாக கொள்ளலாம் இப்போதைக்கு…

நாம் என்ன செய்ய போகிறோம்…?


அருமை சகோதரன் முத்துக்குமாரின் தியாகமும்…அர்த்தம் மிகுந்த அவரது மரணமும் ………மரண வாக்குமூலமும்.. நம்மை கண்ணீரில் ஆழ்த்துகிறது.

உணர்வுள்ள தமிழனாய் பிறந்த காரணத்தினால் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டு வீர மரணம் எய்திருக்கிறார் முத்துக்குமார்..
உயிரோடு இருக்கும் நமக்கெல்லாம் அவரது மரண வாக்குமூலம் மூலம் பல செய்திகளை அறிவித்து விட்டு சென்றுள்ளார்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவரது தியாகத்திற்கான மதிப்பு…கேடு கெட்ட அரசியல் பிழைப்பு வாதிகளை நம்பி பயனில்லை தோழர்களே….

முத்துக்குமாரின் உடலில் பற்றிய நெருப்பு நம் ஆன்மாவை சுட்டு பொசுக்கட்டும்…..

இனியாவது நடைப் பிணங்களாக ,சோற்று துருத்திகளாக, வாழாமல்..உணர்வுள்ள உயிராய் வாழ்வோம்..

ஒரு உண்மையான உணர்வாளனாய், உலக ஞானம் பெற்ற மேதையாய்…தியாகம் செய்ய தயங்காத மனிதனாய், நம் கண் முன்னால் வாழ்ந்து 26 வயதிற்குள் இனத்திற்காக இன்னுயிர் அளித்தும் சென்றுள்ளான் அந்த இனமான வீரன்…

நாம் என்ன செய்ய போகிறோம்…?

அய்யகோ……



அய்யகோ….

தமிழக அரசு இந்த சொல்லை வைத்துக் கொண்டுதான் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது..

இந்த தீர்மானத்திற்கு இருக்கும் அரசியல் காரணங்கள் அற்பமானவை. இப்போது தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் ஈழ ஆதரவு தீயை அணைப்பதற்காக அல்லது வலு இழக்க செய்வதற்கான குளிர் நீராய் ,காங்கிரஸ் மீதான காதலுக்காக கலைஞர் தாக்கல் செய்துள்ளார். அய்யகோ என்ற சொல்லே ..உண்மையான துயரத்தை செயற்கை மிகுந்ததாக மாற்றும் நாடகப் பாணியிலான சொல்லாகத்தான் நம்மால் பார்க்க இயலுகிறது. கலைஞர் சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் அந்த தீர்மானத்தில் வழக்கத்திற்கு மாறான…காங்கிரஸின் கட்டுப்பாட்டினை தாண்டிய வாக்கியங்கள் எதுவுமே இல்லை. இறுதி வேண்டுகோளில் எந்த தேதி இறுதி என குறிப்பிடவே இல்லை. இறுதி என்றால் யாருக்கு இறுதி ? எதற்கு இறுதி?

மேலும் கலைஞர் இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கும் மத்திய அரசில் திமுக அமைச்சர்களும் தான் இடம் பெற்றுள்ளனர். எனவே டி. ஆர்.பாலு,ராசா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருக்கும் ஒரு அவையை நோக்கிதான் கலைஞர் இன்று இறுதி வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது. கலைஞர் வேண்டுகோள் விடுக்க வைக்கிற, கலைஞரை கதற வைக்கிற ஒரு அமைச்சரவையில் தான் திமுக அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். கலைஞரை இந்த அளவிற்கு அய்யகோ என்று கண்ணீர் மல்க இரங்க செய்யும் மத்திய அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றுள்ளதுதான் நமக்கு நெருடுகிறது. உண்மையில்..உள்ளுக்குள் ..நிகழும் அரசியல் தான் என்ன..? அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்…ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தை அழிப்பதற்காக நிகழ்கிறதே இந்த பாழாய் போன அரசியல் என்பதுதான் நமக்கு வேதனையை அளிக்கிறது.


மத்திய அரசை நோக்கி தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருக்கும் கலைஞரை மதிக்காத….விரும்பாத மத்திய அரசில் திமுக இன்னும் இடம் பெற்று விளங்குவது எதன் பொருட்டு…அப்படியென்றால் அய்யகோ தீர்மானங்கள் யாரை நோக்கி…

தமிழர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பப் பட்ட சிவசங்கரமேனனை இதுவரை அங்கு நடந்த பேச்சுக்கள் குறித்து தமிழக முதல்வரிடம் விவரிக்க அனுப்ப மறுக்கிறது.. இது வரை எப்போதுமில்லாத அளவிற்கு இலங்கையோடு இணக்கமாக உறவு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக அறிவிக்கிறார் இலங்கை தூதர்.. இதே மலையாளிகளை கொன்று குவித்தால் மேனன் வாயில் இருந்து இப்படிப்பட்ட கும்மாள வார்த்தைகள் வருமா…?

அரசியல் சதுரங்கத்தில் தொடர்ந்து வெட்டப் படும் சேனையாக தமிழனம் ஆகி வருவது குறித்து தமிழக அரசியல்வாதிகளுக்கு கவலைகள் ஏதுமில்லை. பதவியும் அதன் இருப்புமே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்று முதுமொழி ஒன்று உள்ளது. தமிழக மக்கள் தனது ஊர்களில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்று திருமங்கல ஆசையில் வாழ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரு விலை நிர்ணயித்து ஏலம் போட முடிவு செய்து விட்டனர் நம் தலைவர்கள். ஏலத்தொகை தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் விழித்துக் கொள்வதும், இன உணர்வு கொள்வதும் தான் தற்போதைய ஈழ யுத்தக் களத்திற்கு நிகரான சவால்களாக நமக்கு தோன்றுகிறது..இப்போது எழுந்திருக்கும் மாணவர் போராட்டங்கள், வழக்கறிஞர்கள் போராட்டங்கள் ஆகியவை இன்னும் பல தளங்களுக்கு பரவ வேண்டியதும் காலத்தின் அவசிய அவசரத் தேவையாக இருக்கிறது..

இந்நிலையில் கலைஞர் மனோகரா காலத்து மதி மயக்கும் பழைய திரைப்பட வசனங்களை தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருப்பதில் என்ன பயன்..? பயனில்லை என்றால் திமுக பொதுக்குழு வில் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு நாசமாக போனப் பின் எடுக்கப் படுமாம்.

தான் பதவி இழந்தால் தனி ஈழம் கிடைக்கும் என்றால் இப்போதே பதவி துறக்க தயார் என்கிறார் கலைஞர். தலைவா ..நம்மால் நாற்பதில் ஒன்றை கூட இழக்க முடியாத மனநிலை இருக்கிறது. இதில் முதல்வர் பதவியை இழப்பேன் என அறிவிப்பது யாரை ஏய்க்க..

தமிழ்ப் பெரும் இனமே..தந்தை பெரியாரால் இன்று இணையம் அளவிற்கு வளர்ந்து ,தமிழணர்வோடு விளங்கும் இணையத் தமிழர்களே…உலகமெலாம் பரவிக் கிடக்கின்ற தமிழினமே… நாம் ஒன்று பட்டு , அரசியல்வாதிகளை ஒதுக்கி வைத்து விட்டு தீவிரமாக பணிப்புரிய வேண்டிய சூழல் வந்து விட்டது. உங்கள் பகுதிகளில் இருக்கும் தமிழ் உணர்வாளர்களோடு இணைந்து ,தமிழின விரோதிகளை உணர்ந்து, அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு மக்களை திரட்ட வேண்டிய மகத்தான பணி நமக்கு முன் இருக்கிறது.. எங்கெங்கு தமிழர் நலம் கெடின் - அங்கெங்கு தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்..

நாம் போராடினால் சிங்களக்காரன் போரை நிறுத்தி விடுவானா..? என்ற கேள்வியை நம்மிடையே வாழும் ஞாநிகள் கேட்கிறார்கள்.. சரி ..போராட வேண்டாம்..வீட்டிலேயே சோற்று துருத்திகளாக, நடமாடும் சுமைகளாக, ஊதிய பிஸ்கட் கவ்வும் ஏவல் நாய்களாக ,இன உணர்வில்லாத இனப்பெருக்க பன்றிகளாக வாழ்வதில் யாரும் தடை விதிக்க போவதில்லை. உன் சகோதர-சகோதரிக்கு கூட போராடாத நீ …எதிர்த்து குரல் கொடுக்காமல் மெளனசாமியாக வேடிக்கை பார்க்கும் நீ மனிதனாக தான் பிறந்தோமா என்பதை மறுபரிசீலனை செய்யலாம்.

ஈழம் அழிவதை நாம் பொறுத்துக் கொள்வது நம் இனத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஈழத் தமிழினம் அழிவதை நாம் எவ்வித சலனமும் இன்றி மெளனமாக வேடிக்கை பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையானது. அதை விட கொடுமையானது இந்த அய்யகோ..போன்ற வசனங்கள்

திருமாவளவன் விளைவு.....




தொல்.திருமாவளவனின் உண்ணாநிலை அறப்போராட்டத்தால் தமிழகத்தில் கொஞ்சம் மங்கி இருந்த ஈழ ஆதரவு மீண்டும் உணர்வுத் தளத்திற்கு திரும்பி இருக்கிறது.மீண்டும் சமூக அமைப்புகள்,மாணவர் இயக்கங்கள் ஆகியவை போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.. பட்டாளி மக்கள் கட்சி இன்று அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்பார்ட்டம் நடத்தியது. வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட மாணவர் அமைப்புகள் நாளை கல்லூரி புறக்கணிப்பை அறிவித்துள்ளன.

தாயக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள்,நடத்தப் படும் போராட்டங்கள் ஈழச்சகோதரர்களுக்கு மிகப் பெரிய துயரத்திலும் ஆறுதலாக அமையும் என்பதில் அய்யமில்லை. திருமாவாளவனின் உண்ணாவிரத அறப்போர் தனது நோக்கத்தை முழுமையாக எட்டி விட்டதாக சொல்லலாம். திருமாவளவனின் உண்ணாவிரதம் மக்கள் மத்தியில் உணர்வலைகளை அவர் நினைத்தவாறே எழுப்பியது. ஆங்காங்கு நிகழ்ந்த பேருந்து எரிப்புகளை தவிர இந்த போராட்டம் தனது மையப்புள்ளியை நோக்கி நகர்ந்து முடிந்தது.

கலைஞர் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் டெல்லியில் மன்மோகன் சிங்கினை சந்தித்து தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று தோற்றதில் இருந்து தமிழக மக்கள் உணர்வு ரீதியிலான இந்த பிரச்சனையில் தேங்கி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கிளிநொச்சி வீழ்ந்தது..ஆணையிறவும் அகன்றது …என்றெல்லாம் தினமலம் உள்ளிட்ட ராஜபக்சே ரசிகர் பட்டாளங்கள் அட்டகாசமாக செய்திகள் வெளியிட நமது மனங்கள் வெம்பி ததும்பின. அந்த நேரத்தில் தான் திருமா தனது ஆயுதத்தை சரியாக பயன்படுத்தினார். மீண்டும் ஆக்ரோஷமாக தமிழகம் தனது உணர்வுகளை வெளிப்படுத்த துவங்கி உள்ளது. உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை வழக்கறிஞர்களும் போராட துவங்கி உள்ளனர். எல்லா நிலைகளிலும் உணர்வலைகள் உசுப்பப் பட்டுள்ளன.

இங்கு போராடி என்ன பயன் என்று சிலருக்கு தோன்றலாம். ஒரு இன அழிப்பை…அதுவும் நாம் பிறந்த இனம் ..நம் கண் முன்னாலேயே சிறுக சிறுக அழிவதை மெளனமாக பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையான ஒன்றாகும். ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டங்களை நம் மத்திய அரசு மட்டும் கவனிக்க வில்லை..உலகச் சமூகமே கவனித்து வருகிறது… தனது தொப்புள் கொடி உறவுகளை பலிக் கொடுக்கும் வேளையிலும் கூட நாம் மவுனித்து, கண் மூடி, கைக் கட்டி நின்றோமானால் எதிர்காலம் நம் மேல் ஏறி நின்று காறித் துப்பாதா…?

தன் சகோதரியின் வயிற்றில் இருக்கும் சிசுவினை கூட கிழித்து எடுத்து தரையில் அடித்து கொன்று உதிரம் குடிப்பதை கூட நம்மால் மவுனமாக பார்க்க முடிகிறது. நம் வீட்டு பெண்களை நம் முன்னால் கதற கதற கற்பழித்து கொல்லும் போது கூட நம்மால் தொலைக்காட்சி இன்பத்தில் காதுகளை பொத்திக் கொள்ள முடிகிறது..கொத்து கொத்தாய் மடியும் நம் வீட்டின் குழந்தைகளின் பிணங்கள் கனவில் வந்தால் கூட நம்மால் அதை ஒதுக்கி வைத்து விட்டு உல்லாசமாக வாழ முடிகிறது. குற்ற உணர்ச்சியால் உறுத்தாத மனதோடு மானாட மயிலாட வில் மனதை பறிக் கொடுக்க முடிகிறது…இதையும் மீறி நம்மை உசுப்ப ஒரு திருமாவளவனின் தியாகம் இங்கே தேவைப்படுகிறது.

வெட்கமாக இல்லையா தோழர்களே..?நிலமிழந்து, வீடிழந்து, வாழ்விழந்து..இறுதியாக உயிரும் இழந்து வருகின்ற ஒரு சமூகத்தை மனித இனமாக கூட கருதாமல் கைக் கட்டி வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக சமூகம் ஆதரவும் ஆயுதமும் வழங்கி வருவதை நாம் காண்கிறோம்.

அந்த மக்கள் செய்த தவறு தான் என்ன..? தமிழர்களாய் பிறந்ததது தான். வரலாற்றில் யூத இன அழிப்பினை ஹிட்லர் என்ற ஒரு தனி மனிதன் முன்னெடுத்தான் .ஆனால் தமிழின அழிப்பினை உலக சமூகமே முன்னெடுத்து செல்கிறது. அந்த இன அழிப்பு படையின் தளபதியாக நம் மத்திய அரசு செயல்படுகிறது. இந்நேரம் கொல்லப்படுவது மலையாளிகளோ, கன்னடர்களோ ஆக இருந்தால் இந்நேரம் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தலையீட்டே தீர வேண்டிய சூழல் வந்திருக்கும். ஆனால் அழிவது தமிழினம். கேட்பார் யாருமில்லை. சாதியால், கடவுளால், அரசியலால் பிரிந்துக் கிடக்கும் தமிழர்களை ஒரே உணர்வுத்தளத்தில் இணைப்பது ஈழ ஆதரவு போன்ற முழக்கங்கள் தான்.

ஈழ மக்களையும் அழித்தொழித்து விட்டால் இங்குள்ளவர்களுக்கு தான் தமிழர் என்பதையே எளிதாக மறக்கடித்து விடலாம். ஏற்கனவே சினிமா,சாராய போதையில் சீரழிந்துக் கிடக்கும் இச் சமூகத்தை என்றென்றும் அடிமைச் சமூகமாக ஆக்கி விடலாம் என்ற நோக்கத்தில் தான் காங்கிரஸ் அரசு ராஜபக்சேவிற்கு சேவை செய்து வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் திருமா இதை சரியாக புரிந்துக் கொண்டுதான் காங்கிரஸை கடுமையாக எதிர்க்க துவங்கினார். மக்களை மீண்டும் இணைக்க, உணர்வினை எழுப்ப திருமாவின் உண்ணாவிரதம் ஒரு உந்துக் கோல் என்றால் அது மிகையில்லை.
ஈழ மக்கள் உயிர் வாழ – இனியாவது ஒன்று சேர்ந்து போராடுவோம் தோழர்களே… நம் சகோதரர்களை காக்க, நம் தாய்மார்களை காக்க, நம் சகோதரிகளை காக்க, நம் குழந்தைகளை காக்க….நம்மையும் காக்க…நாம் போராடுவோம்…..

ஆங்காங்கு இருக்கும் உணர்வாளர்களை இணைத்து , உணர்வினை வெளிப்படுத்தும் போராட்டங்களை நாம் செய்ய வேண்டியதுதான் நமது கடமை.

அந்த வகையில் திருமாவளவன் விளைவு- தற்போதைய அவரசக்கால தேவை.

திருமா- மன உரம் தந்த அறம்…



மிகத் துயரமான சூழலில் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத அறப்போரை தொடர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நலம் மோசமாகி வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். வருகின்ற கட்சித் தொண்டர்களுக்காக மேடையில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் வேறு அவருக்கு.

நேற்றிரவு பேசிய பேரா.சுப.வீ கூட திருமாவை அடிக்கடி பேச வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ஊடகங்களில் வெளிவந்த முதல்வர் கலைஞரின் அறிக்கையும், சற்று முன் வந்த மேனன் சந்திப்பிற்கு பிறகு சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு அமைச்சரின் பேட்டியும் கவனிக்க வேண்டியவைகளாக உள்ளன.

முதலாவது கலைஞரின் அறிக்கை. வழக்கம் போல பழமையான புள்ளி விபரங்களும்,சோர்வளிக்க கூடிய செய்திகளையும் தாங்கி வந்திருக்கிறது. எப்போதும் சொல்லும் போராட்டக் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையை பற்றி இப்போது மீண்டும் பாடி இருக்கிறார் கலைஞர். அங்கே நொடிக்கு நொடி உயிர் போய் கொண்டு இருக்கிறது. இங்கே பழைய பல்லவிகள்…விளக்கங்கள்..வில்லங்கங்கள்..

கலைஞர் அவர்களே..

உங்களிடமிருந்து இது போன்ற அறிக்கைகளை ஏராளம் படித்து விட்டோம் நாங்கள். தமிழின தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் உங்களிடம் நிதி உதவி பெற மறுத்ததை மீண்டும் சுட்டிக் காட்டி உள்ளீர்கள்.

சரி ..இந்த அறிக்கைக்கு என்ன நேரடியான பொருள்..?

மேதகு.பிரபாகரன் அவர்கள் மீது தங்களது கோபம் குறைய வில்லை என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா..? .கோபமும், வருத்தமும் கொள்ள வேண்டிய நேரமா…இது..

குவியல் குவியலாக மக்களை கொன்று குவித்து வரும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக நாம் ஒன்றுமே செய்யாமல் ,நம் இனப்படுகொலையை ஆதரிக்கும் முகமாய் கள்ள மெளனத்துடன் கைக்கட்டி நிற்கிறோமே… இந்த ஈனச்செயலை புரியும் நம்மீது நம் ஈழச் சகோதரர்கள் வருத்தம் கொள்ள மாட்டார்களா..? பழைய வரலாறு,புள்ளி விபரங்களை பேச வேண்டிய நேரமா இது,…

தமிழினப் போராளியாக ,ஒன்று பட்ட தாயக தமிழகத்தின் ஒருமித்த குரலாய் இன்று சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டு தன்னை வருத்தி, தனது இயலாமையை ஆற்றாமையை ,அர்ப்பணிப்பு உணர்வினை காட்டிக் கொண்டு நிற்கும் திருமாவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் இப்படிப்பட்ட அறிக்கைகள் முதல்வரிடமிருந்து தேவைதானா..?

ஒரு வார்த்தை..ஒரே ஒரு வார்த்தை..போரைநிறுத்து என்கிற ஒரு வார்த்தையை உதிர்க்க கூட மனமில்லாமல் தமிழினப் படுகொலையை ஆதரித்து நிற்கும் மத்திய அரசை பேச வைக்கும் மந்திரம் அறியாதவரா நம் முதல்வர்..?

கண்ணுக்கு எட்டிய தொலைவில் நம் தொப்புள் கொடி உறவுகள் உதிர்வதை காண்பதை நம்மால் இன்னும் சகித்து கொண்டு மானாட மயிலாட ஆடிக் கொண்டிக் கொண்டு இருக்கிறோம்..உலகிலேயே இனப்பற்று இல்லாமல் வேரற்று வீழப் போகும் இனம் தமிழினமாக இருப்பது தமிழ் குடியின் மூத்தக் குடி கலைஞருக்கு தெரிய வில்லையா..?

ஒரு கற்பனைக்கு வைத்துக் கொள்வோம். இந்த நேரம் ஜெயலலிதாவின் ஆட்சி நடைப் பெற்றுக் கொண்டு இருந்தால் கலைஞர் வீதியில் இறங்கி போராடி இருப்பாரே…இந்நேரம் முரசொலிக் கடிதங்கள் தமிழுணர்வையும், தன்மானத்தையும் பறை சாற்றி இருக்குமே…?

கலைஞர் அவர்களே…

இந்த பதவி…இந்த நாற்காலி …அனைத்தும் 5 வருடங்களுக்குதான்.. ஆனால் காலங் காலமாய் உங்களுக்காக மனதில் உயர்ந்த இடம் வைத்துக் கொண்டு ..உங்களது ஆறுதலுக்காக காத்திருக்கும் ஈழத் தமிழர்களை சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் காலடியில் பலியாக்குவதற்காகவா இந்த அரசியல் விளையாட்டுக்கள்..?

வேதனையும்..கண்ணீரும் மிகுந்து நிற்கிற நம் சகோதரர்களை நட்டாற்றில் முழ்கடித்து விட்டு நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா..?

மத்திய அரசில் தனக்கு வேண்டிய பதவிகளை கேட்டு வாங்கிக் கொண்ட கலைஞரால் ..இன்று மத்திய அரசை பணிய வைக்க முடியவில்லை..

கலைஞர் அவர்களே…

உங்களைப் பற்றி எழுதிக் குவித்த ஞாநி,சோ,சுப்ரமணிய சுவாமி வகையறாக்களுக்கு எதிராக நாங்கள் தான் போர்க் குரல் எழுப்பினோம்..உங்கள் நாக்கை அறுப்பேன் என்று காவிக் கொடி தூக்கிய சாமியார் சாக்கடைகளுக்கு நாங்கள்தான் எதிர்ப்பை காட்டினோம்.. அந்த நள்ளிரவு கைதின் போது எங்கள் குடும்பத்து மூதாதையை கைது செய்வதாக கருதிக் கொண்டு நாங்கள் தான் போராட்ட களத்தில் நின்றோம்..

அப்போது இந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனோ..தினமலர் பத்திரிக்கையோ…உங்களுக்கு யாருமில்லை.. இந்த அப்பாவித் தமிழர்களை தவிர…

கிளிநொச்சி வீழ்ந்தது என்று அட்டகாசமாக சிரித்துக் கொண்டு செய்தி வெளியிட்ட ,உங்களை …உங்களது குடும்பத்தினரை ஆபாசமாக வசை பொழியும் தினமலரின் விழாவில் உங்களால் கலந்துக் கொள்ள முடிகிறது. உங்கள் ஆதரவின் தயவில் அவன் அண்ணன் திருமாவின் உண்ணா விரதத்தை நாடகம் என்று செய்தி போடுகிறான்..

பதவி இன்று வரும் ..நாளை போகும்… உங்களுக்கு ஒன்று என்றால் …காங்கிரஸ் காத தூரம் ஓடி விடும் ..அன்றும் இந்த தொல்.திருமாவும், ,அப்பாவித்தமிழனும் தான் வீதிக்கு வந்து நிற்பார்கள்…


இன்று சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு துறை மந்திரியை நம் கேரளத்து மேனன் சந்தித்து முடித்த பிறகு அவர் ராஜீவ் –ஜெயவர்த்தனே ஒப்பந்தப் படி அனைத்து நடைபெற ஆவண செய்ய ,வேலைகள் நடப்பதற்காக, பணிகள் நடக்க இருப்பதாக மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்..

மக்களை கொன்று தீர்த்து விட்டு..ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறை வேற்றப்படும் என்பதுதான் இதன் பொருள்..

கலைஞர் அறிக்கையில் சொல்லியவாறு சிவசங்கர மேனன் ‘சாதித்து’ காட்டி விட்டார்.

இந்த நிலையில் தொல்.திருமாவின் உணர்வுப் போராட்டம் நாம் இன்னும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது. தொல். திருமா ஏற்றி இருக்கும் இந்த உணர்வுத் தீயை நாடெங்கும் பரவச் செய்வதுதான் நம் இனக் கடமையாக இருக்கிறது..

தமிழினமே..

இனியாவது விழித்துக் கொள்.
விழிகளை காத்துக் கொள்…

கலைப் போராளி சீமான் கைது...




அய்யா கலைஞர் அவர்களே..

கடுமையான விமர்சனங்களுக்கு பிறகும் நான் உங்களை ஆதரித்தே வந்திருக்கிறேன். உங்களை இழிவுப் படுத்தி எழுதும் கரங்களோடு நானே வலுக்கட்டாயமாக சண்டை போட்டு வந்திருக்கிறேன். ஆனால் தங்களது சமீபத்திய தமிழின எதிர்ப்பு செயல்பாடுகளால் தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருக்கிறேன்.
என்ன நேர்ந்தது தங்களுக்கு..?
காங்கிரஸின் காதல் உங்களுக்கு அவ்வளவு முக்கியமாக போய் விட்டதா என்ன..?
இன்று கூட ஈழத் தமிழர்களின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை கைப்பற்ற பாகிஸ்தான்,சீனா உள்ளிட்ட நாடுகளோடு இந்தியாவும் இலங்கைக்கு நிபுணத்துவ கருத்துக்களை வழங்கியுள்ளதாக சன் தொலைக்காட்சி தெரிவிக்கிறது . மறுபக்கம் காலணா பெறாத காங்கிரஸிற்காக இனமான சுயமரியாதை வீரர்கள் அண்ணன் கொளத்தூர் மணி,அய்யா பெ.மணியரசன் , கலைப்போராளி அண்ணன் சீமான் ஆகியோரை தமிழின உணர்வு என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்கிறீர்கள் . இது தான் தாங்கள் எங்களுக்கு அளிக்கும் வெகுமதியா..?

மழையில் கைக் கோர்த்து நின்றும் அங்கு குண்டு மழை நிற்க வில்லை. தீர்மானம் போட்டும் அங்கே நம் சகோதரிகளின் மானத்திற்கு உறுதி இல்லை. அனைத்து கட்சி கூட்டங்கள் கூடியும் அவலங்கள் தீர வில்லை. ஆனால் வீரச் சமர் புரியும் நம் சகோதரர்களின் உயிரை பறிக்க நம் இந்தியா இன்னமும் நிபுணர்களை அனுப்பிக் கொண்டு இருக்கிறது. குண்டூசி முனையளவு கூட மத்திய அரசை நகர்த்த முடியாத நமக்கு ….அண்ணன் சீமானை கைது செய்ய மட்டும் முடிகிறது,
கேவலம்..இன்னும் நம்மால் பிரணாப் முகர்ஜியை கூட அசைக்க முடியவில்லை.
காரணம்..மிகவும் சொற்பம்.. அரசியல்.
சோவும், சுப்பிரமணிய சாமியும் ,ஜெயலலிதாவும் மகிழும் படி காங்கிரஸ் ஆட்சி நடத்தும் தலைவா….
இன்னும் கைது செய்யவும்…அடக்கி ஒடுக்கவும் ஏராளம் இருக்கின்றனர்..நாட்டில்..
கைது செய்யுங்கள். சிறைகள் நிரம்பட்டும்…