யாரும் அடிமையற்ற சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்றார்
அண்ணல் அம்பேத்கர். இது கூட சாத்தியமாகி விடும் போலிருக்கிறது. ஆனால் யாரும் குடிக்காத
சமூகத்தில் நான் வாழ விரும்புகிறேன் என்று யாராவது இன்று நினைத்தால் அவர்களை நினைத்து
சிரிப்பதையோ, அழவதையோ விட பேசாமல் அவர்களை
இந்த மதுபானக்கடைக்குள் அனுப்பலாம்.
முதலில் இந்த படத்தை பாராட்டுவதா அல்லது ஏசுவதா என்ற நிலைக்கெல்லாம்
அப்பாற்பட்டு இந்த படத்தினை ஏற்றுதான் தீர வேண்டியிருக்கிறது என்கிற இச்சமூகத்தின்
அவலம் இப்படத்தின் இயக்குனருக்கு சாதகமாக அமைந்திருக்கிறது .வழக்கமான சினிமாத்தனங்களில்
இருந்து அப்பாற்பட்டு சிந்திப்பது பாராட்டத்தக்கது என்றாலும் இப்படியுள்ள சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற
நினைப்பு நம்மை உறுத்தாமல் இல்லை. ஒரு திரைப்படத்திற்கு
அடிப்படை தேவைகளான ஒரு கதை, அதற்கான திரைக்கதை, கதாநாயகன்,கதாநாயகி ,நகைச்சுவை பகுதி,
சண்டைக்காட்சிகள் , என எல்லாவித காரணிகளையும் அடித்து நொறுக்கி விட்டு தனிப்பட்ட திரைமொழியை
உருவாக்கி இருப்பது வழமையான திரைப்படக் கலையின் சமன்பாடுகளை கலைத்துப் போடுகிறது.
உலகம் முழுக்க திரைக்கலை நினைத்துப் பார்க்க முடியாத உச்சங்களை
தொட்டு வரும் இந்த நவீனயுகத்தில் மதுபானக்கடை நம் திரைமொழி வரலாற்றில் ஒரு மைல் கல்லா
என சிந்திக்கும் போது ஆம் என தயக்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கொள்கிற
இத்தயக்கம் தான் இயக்குனரின் வெற்றி. ஒரு கதை, ஒரு நாயகன்,ஒரு நாயகி என பெரும்பாலும்
நேர்க்கோட்டில் பயணிக்கும் தமிழ்த் திரைக்கலைக்கு கண்டிப்பாக மதுபானக்கடை அதிர்ச்சி
வைத்தியம் தான். தனக்கென பண்பாடுகளை இறுக்கமாக கட்டமைத்துக் கொண்டிருக்கிற தமிழ்த்
திரைப்படமொழிக்கு வில்லன் போன்ற கெட்டவன் தான் குடிக்க வேண்டும் .கதாநாயகன் மது அருந்துவதாக
காட்சிகள் அமைத்தால் கூட அது ஒரு காதல் தோல்வியாகவோ,விரக்தி மனநிலையானதாகவோ காட்டப்பட்டு
அது நியாய வகைகளில் சேர்க்கப்படும்.
ஏனெனில் மது குடிப்பு என்பது ஒழுங்கீனத்தின் வடிவமாக ,கட்டறு
நிலையின் தோற்றமாக இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களில் மது அருந்துவது போன்ற காட்சிகள்
இடம் பெறுவது தாங்கள் புனைய விரும்பும் தோற்றத்திற்கு
அது இழுக்கானது என நினைத்தார்கள். தமிழ்ச் சமூகத்தில் மது அருந்தும் இருந்திருக்கிறதா என்றால் கள் அருந்தும்
முறை இருந்து வந்திருக்கிறது .கள் குடிப்பதும்,மது அருந்துவதும் வெவ்வேறான தன்மை உடையவை.
உலக பெருநிறுவனங்களின் ஊடுருவல் உள்ளூர் டாஸ்மார்க் கடை வரை ஊடுருவி விட்ட இந்நாளில்
உள்ளூர் பனையிலிருந்து தயாரிக்கப்படும் கள்
என்பது தேசிய பானம். பொருளாதார நலன்கள் மிளிரும் மது சார்ந்த அரசியலில் தற்போதைய ஆளும்
கட்சியான அதிமுகவும், அதன் எதிர்க்கட்சியான திமுகவும் கூட்டணி என்றால் அது உண்மையானதே. சாராய நிறுவனமான மிடாஸ் –ல் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி திருமதி சசிகலாவின் பங்கு பற்றி
திமுக மேடைகளில் உரத்து பேசப்பட்டது தற்போது
மெளனமாகிப் போனதும் இவ்வாறே. திமுக ஆட்சிக்காலத்திலும் மிடாஸ் –ல் இருந்து அதிக சரக்கு
கொள்முதல் செய்யப்பட்டது இதன்படியே. சாதாரண
திமுக, அதிமுக தொண்டர்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அது தலைவர்களின் தனி அரசியல்.
உடல் நலனுக்கு பெரும் தீங்குகள் விளைவிக்கதாக கள்
அருந்தும் முறை தமிழ்ச்சமூகத்தில் ஒரு கொண்டாட்டத்தின்
வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் கள் கலயங்கள் சுமந்து
திரிவோர் பற்றி ஏராளம் குறிப்புகள் காணப்படுகின்றன. ( சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே,பெரியகட் பெறினே
,யாம்பாடத் தான் மகிழ்ந்துண்ணு மன்னே –புறநானூறு
).ஒளவையும் அதியமானும் கள் குடித்து மகிழ்ந்ததாக இன்குலாப்பின் ஒளவை நாடகம் பேசியது
.கள்ளுண்ணாமை என்ற திருக்குறள் அதிகாரமும் தமிழர்ச் சமூகத்தில் கள்ளுக்கு இருந்த அதிகாரத்தை
உரத்துப் பேசும் மிக முக்கிய ஆவணமாகும்.
மது,கள் ஆகியவற்றிக்கு முக்கிய வேறுபாடுகள் உண்டு. தயாரிப்பு
நிலையிலிருந்து சந்தைப்படுத்துதல் வரையிலான பயணத்தில் மதுதான் உற்பத்தியாளர்களின் விருப்பமாக
இருக்கிறது . மது வணிகப் பொருள். கள் தமிழர்களது உணவுப் பொருள். உடல் நலனிற்கு பெரிதும்
தீங்கினை விளைவிக்க கூடிய மதுவினை அரசு தெருவிற்கு தெரு கடையாக திறந்து விற்பதும்,
உடல் நலனிற்கு பெரிதும் கேடுகள் விளைவிக்காத, அதிகம் செலவுகள் ஆகாத கள்ளை அரசு தடை
செய்து வைத்திருப்பதும் முற்றிலும் முரணான ஒன்று.
மதுவிலக்கு என்பது அரசின் நிறைவேறாத பல இலட்சியங்களில் ஒன்று.அரசிற்கு பெரிதாக வருமானம்
தரக்கூடிய மதுவை மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு மது விலக்கினை அமல் செய்யக்
கூடிய அவ்வளவு நாகரீகமான உலகில் நாம் வாழவில்லை என உறுதியாக நம்புவோம்.தந்தை பெரியார்
மதுவிலக்கினை மிகக் கடுமையாக எதிர்த்து இருக்கிறார் என்பது ஆச்சர்யகரமான தகவல். கடும்
உழைப்பு தரும் அசதியை போக்க மனிதன் மது அருந்துகிறான்.
கடும் உழைப்பினை மட்டும் மனிதன் மேல் திணித்து மதுவினை விலக்க நினைப்பது என்ன நியாயம்
என தந்தை பெரியார் கேட்கிறார். இது குறித்து லும்பினி இணையத்தளத்தில் சுகுணா திவாகர்
ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
சரி நாமும் மதுபானக் கடைக்கு திரும்புவோம். பெட்டிசன் மணியாக
அசத்தியிருக்கும் கவிஞர் என்.டி.ராஜ்குமார் நடிப்பிற்கும்-இயல்பிற்கும் உள்ள மெல்லியக்
கோட்டை அழிக்க முயல்கிறார். பாருக்குள் வரும் இராமன் –அனுமார் பெட்டிசன் மணியை பார்த்து
பயப்படுவது கலகலப்பு ஊட்டுகிறது. இந்துத்துவாவின் புனித பிம்பங்களை சாதாரண மனித நிலையில்
நிறுத்தி குலைத்துயிருப்பது ,சாதிப் பெருமை பேசுபவருக்கு எதிராக புயலென எழும் நகர சுத்தி
தொழிலாளர்களின் கோபம் என காட்சிக்கு காட்சி பிம்பங்களை சிதைத்துப் போடுவதில் இயக்குனருக்கு
வெற்றியே.இப்படத்தின் இயக்குனர் உலக சினிமா விரும்பியாம்.அரசாங்கத்தினையே கேள்வி கேட்கும்
சாதாரண ’குடி’மகன்கள்.சிரிக்கிறோம்.பிறகு ஏண்டா சிரித்தோம் என நினைக்கிறோம்.
பல பாத்திரங்கள் மூலம் மதுபானக் கடையொன்றின் குணாதிசயத்தை
நிறுவி இருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன். இதனால் சொல்ல வருவதென்ன என்று
யோசித்தால் மதுபான கடை திரண்டிருக்கும் இச்சமூகத்தில் தான் நாமும் வாழ்கிறோம் நம்மை
சிந்தனை வயப்படுத்துவது என்றெல்லாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு சினிமா என்றால்
ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன என இயக்குனர் சிந்தித்திருப்பார் என எண்ண வேண்டியிருக்கிறது.
இயக்குனர் தனது விகடன் பேட்டியில் சொல்கிறார் . இது ‘அண்டர்ஸ்டூட்’ படம் என்று.
சரிதான்.
பழக்கம் இருக்கிறதோ..இல்லையோ..
ஒரு முறை போய் வாருங்கள்.
மதுபானக்கடைக்கு..
-மணி செந்தில்
1 comment:
நச்..!!
Post a Comment