நம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்...




நம் நிகழ்காலத்துக்கு முழுமையான சமகாலத்தவராக ஒரு போதும் நாம் இருப்பதில்லை. மாறுவேடத்துடனேயே முன்னேறுகிறது வரலாறு .முந்தைய காட்சியின் முகமூடியை அணிந்த படியே மேடையில் தோன்றுகிறது அது

-புரட்சிக்குள் புரட்சியில் ரெஜி டெப்ரே.

என்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு நாடு என்ற அடிப்படை மனித தேவையை மனித விழுமியங்களை சுரண்டி கொழிக்கும் வல்லாதிக்கம் மிகத் தீவிர எதிர்க்கிறது. வல்லாதிக்கத்தின் இருப்பு எளிய இனங்களின் அழிவின் மேல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஈழத்தின் பூர்வ குடி மக்களாகிய தமிழர்கள் ஒரு நாடு அடைய வேண்டியதற்கான அனைத்து அவசியங்களையும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அவர்களின் சுதந்திர வேட்கைக்கான புள்ளி சிங்கள பேரினவாதத்தின் மீறல்களில் இருந்து எழுகிறது. உலக மானுட சமூகம் யாரும் சிந்தித்துப் பார்க்க கூட இயலா உச்சியில் அவர்களின் வீரம் செறிந்த சமரும், தியாகமும் இருந்தன. இருந்தும் உலக வல்லாதிக்கங்கள் கூட்டமைவு கொண்டு நடத்திய போரில் நம் சகோதரர்கள் தோற்றார்கள்.

ஒரு தோல்வியை தோல்வியாக உணரும் போது தான் மீள் எழுவதற்கான சாத்தியப்பாடுகளை சிந்திப்பதற்கான மன வலு கிடைக்கும். எனவே நம் தோற்றோம் என்பதை மிக நேர்மையாக ஒப்புக்கொள்வோம். தோற்றோம் என்ற சொல்லில் அவ்வளவாக உண்மையில்லை என்பதனால் இன்னும் உண்மைக்கு நெருக்கமான சொல்லாக இருக்கக் கூடிய தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோம். நம் சம காலத்தில் ..நம் கண் முன்னால்.. நாம் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் நம்மால் எளிதில் செரிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. ஆனால் தோல்விகளையும், பின்னடைவுகளையும் உலக வரலாறு வேறு மாதிரியாக கணிக்கிறது. ஒரு தேசிய இனம் தன் உயரிய இலட்சியமான இறையாண்மை உடைய ஒரு நாடு அடைவதற்கான போராட்டத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சந்திக்கிறது. பலவிதமான பின்னடைவுகளுடன் கூடிய தியாகங்களுக்கு மத்தியில் அப் போராட்டம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக் கொண்டு ,புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.

முதலாளித்துவம் மனித மனங்களில் வரையறுத்து உள்ள எதையும் உடனே துய்க்கிற நுகர்வு மனநிலைதான் எளிய தோல்வியை கூட சந்திக்க இயலா பலவீனத்தினை பரிசாக அளித்திருக்கிறது. சம காலத்து மனிதனுக்கு எதுவும் உடனே வேண்டும் . தமிழனும் இம் மனநிலைக்கு விதி விலக்கானவன் இல்லை. முள்ளிவாய்க்கால் துயர் முடிந்து இன்னும் ஓரு வருட காலத்திற்கு பின்னரும் தமிழினம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்வதில் தலையாய சிக்கல் என்னவென்றால் தற்காலத்து தமிழன் கொண்டிருக்கிற நுகர்வு மனநிலை தொடர்ச்சியான பயணத்திற்கு தயாராக இல்லை என்பதுதான்.

ஆனால் மீள் எழுந்துதான் ஆக வேண்டும். ஒரு நாட்டினை இன்னொரு இனத்திடம் இருந்து மீட்பதற்கான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல. இந்திய பெருந்தேசத்தின் சுதந்திர போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து..இரு நாடுகளாக பிரிவதாக குழப்பத்தில் முடிந்தது. கியூபப் புரட்சியை லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு முறை நிகழ்த்திட இயலாது என்று ஒரு சொற்றொடர் உண்டு. கியூப புரட்சியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அதீத காவியத் தன்மையின் வெளிப்பாடு இது. கியூபப் புரட்சி காலக் கட்டத்தில் இருந்த சமன்பாடுகள் தற்காலத்தில் வெகுவாக மாறி விட்டன என்றாலும் அதன் ஊடாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. கியூபப் புரட்சி என்பது 12 பேரில் துவங்கி கணக்கின்றி பெருகி தலைவர் பிடல் ,தளபதி சே குவேரா போன்றோரின் சாகச உத்திகளால் வல்லாதிக்கத்தினை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய கதை என இரண்டு வரிகளில் இனிப்புத் தடவி கூறி விட முடியாது. கியூபப் புரட்சிக்கு தேவையான சூழலும், அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஈழப் போராட்டத்திற்கு ஒப்பாகவே இருந்தன. தலைவரும், தளபதிகளும் கியூப புரட்சியாளர்களை தாண்டிய சாகசக் காரர்களாகவும், மிகு ஒழுங்கினை உடையவர்களாக இருந்தார்கள் . இருந்தும் கியூபாவில் புரட்சியாளர்கள் வெற்றியடைந்தனர். நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.

தோல்விக்கான காரணங்களை மாசற்ற தலைமையின் மீதும் இயக்கத்தின் மீதும் போட்டு விட்டு எதிரியின் வெற்றியில் குளிர்காயும் துரோகிகளின் எழுத்துக்களை நாம் ஏறெடுத்துக் கூட பார்க்க மறுப்போம். நம் தேசியத் தலைவரின் சொல்லும் , வாழ்க்கையும் நமக்கு போதித்தது இதுதான் .எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.

ஆனால் நமக்குள்ளாக நம் மீள் எழுதலுக்கான சக்தியை பெற நடந்து முடிந்த ஈழப் போரின் வாயிலாக சில பாடங்களை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் ஈழம் என்பது அந்நிலப்பகுதியில் வசிக்கக் கூடிய தமிழர்களுக்கான நாடு என்பது உண்மை என்றாலும் அது உலகம் முழுக்க வாழக் கூடிய தமிழர்களுக்கான நாடும் அதுதான் என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும் . வெறும் நிலப்பகுதியும், புறவியல் காரணிகளும் மட்டுமே ஒரு நாடாக நாம் கருதி விட இயலாது. மாறாக நாடு என்பது ஒரு உணர்ச்சி. ஒரு தேசிய இனத்தின் அடிப்படையான குணம். மனித வரலாறு நாடுகளை அடையும் போராட்டங்களாகத்தான் பகுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈழம் என்ற ஒற்றைக் கனவினை சுமக்க உலகில் வாழும் 12 கோடி தமிழர்களின் விழிகளும் தயாராக வேண்டும்.

அடுத்து . நம் தேசியத் தலைவர் மீது நாம் வைத்திருக்ககூடிய விசுவாசம். இன்றளவும் சிங்களன் திகைப்பது இதில் தான். நம் தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட அவனை பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். தொன்மை வாய்ந்த தமிழினத்தின் உயரிய பெருமிதம் நம் தேசியத் தலைவர் அவர்கள் . அவரின் மீதான நம் பற்றையும் ..விசுவாசத்தினையும் நாம் தலைமுறைகளாக கடத்திப் போவோம். வீட்டுக்கு வீடு பிரமாண்டமாய் அவரது புகைப்படங்களை நாம் மாட்டுவோம். நம் பிள்ளைகளுக்கு அவரை நம் அண்ணனாக காட்டுவோம். பிள்ளைகள் அவரை பெரியப்பா என்றே அழைக்கட்டும். நம் தேசியத் தலைவர் இல்லாத தமிழன் வீடு இல்லை என்ற மிகப் பெரிய தோற்றத்தினை உருவாக்குவோம்.. நம் வீட்டு விழாக்களில் அவரையே விழா நாயகனாக முன் நிறுத்துவோம் . திருமண அழைப்பிதழ்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்த்துகளோடு என்று அச்சிடுவோம். நம் குழந்தைகளுக்கு இரவில் பயம் வந்தால் தேசியத் தலைவரை நினைத்துக் கொள் எனக் கூறுவோம். தேர்வுக்கு முன்னால் தலைவரை நினைத்து விட்டு போ என்று அறிவுறுத்துவோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அவரின் பங்கு இருக்கட்டும்.

அடுத்து நம் மரபின் மேல் , நம் மொழியின் மேல் ஆழ்ந்த பற்றும், மதிப்பும் உடையவர்களாக மாறுவோம். உலகின் எந்த மூலையில் நாம் வசித்தாலும் நம் குழந்தைகளை தமிழில் அப்பா, அம்மா என அழைக்கச் சொல்வோம். பண்டிகைக் காலங்களில் வேட்டி கட்டுவோம். தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டால் நம் மொழியில் வணக்கம் , நன்றி எனச் சொல்வோம். கூடிய மட்டும் பிற மொழிக் கலப்பின்றி பேசுவோம்.

இப்படிப்பட்ட பிடிவாதம் மிக்க நிபந்தனைகளின் பேரில் தான் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு தோற்ற சமூகம் எப்படி மீள் எழக் கற்றது என்பதனை நம் எதிரிக்கு உதவிய இஸ்ரேலில் இருந்து கற்போம். அடுத்தாண்டு இஸ்ரேலில் சந்திப்போம் என்ற அவர்களது ஆழ்ந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு இஸ்ரேலை பெற்றுத் தந்தது. எனவே நாமும் அடுத்தாண்டு ஈழத்தில் சந்திப்போம்.

தாயகத் தமிழர்கள் இனி திராவிடர்களாக அடையாளம் காட்டப்படுவதை பெரும் கோபங் கொண்டு மறுப்போம். திராவிடமும்,இந்தியமும் தான் எங்களை வீழ்த்தின என்று உரத்தக் குரலில் சொல்வோம். சாதீயம் பேசி அரசியலுக்காக அணி மாறிக் கொண்டு பேரம் பேசும் போலிமைகளை புறக்கணிப்போம். சமூகத்தினுள் ஆழமாக புரையோடிப் போன சாதீயத்தினை வெல்ல இனம் வாயிலாக ஒன்று படுவதை அவசியமாக கொள்வோம் . நாம் வாழ நாம் நதி ஆள்வோம். தர மறுக்கும் அயலானுக்கு நாமும் எதையும் தர மறுப்போம். நம் இனத்து ஆளுமைகள் ஏராளம் இருக்கையில் மாற்றான் இனத்து ஆளுமைகளை முன் நிறுத்தும் அபத்தம் ஒழிப்போம். நம் நாட்டினை நாம் ஆள வேண்டும். குறைந்த பட்சம் ஆள்பவனை தீர்மானிக்கும் சக்தியை நாம் பெறும் வல்லமையை நாம் பெற வேண்டும் . அதற்காக தான் நாம் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் . அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து குடும்பமாக இறுகி ..பல்கி பெருகிய கூட்டமாய் அதிகாரத்தினை நோக்கிய பயணத்தினை துவக்க வேண்டும். நம் மொழிக்கும், நம் மக்களுக்கும் இன்னல் இழிவென்றால் சீற்றம் கொண்டு கேட்க வேண்டும். சினம் மறந்த இனம் பிணம். நமக்குள் நம் தொன்ம மரபின் வாயிலாக பெற்றிருக்கிற அற சீற்றப் பண்பை நாம் அவ்வப் போது பயன்படுத்திட வேண்டும். மதுவிற்கும் ,தொலைக்காட்சிக்கும், காசுக்கும் மயங்கும் மாண்பினை கைவிட வேண்டும். நமக்கான உரிமைகளை எதன் பொருட்டும் யாருக்கும் விற்கவோ ,அடகு வைக்கவோ கூடாது. தமிழை வாழ வைப்போம். தமிழனையே ஆள வைப்போம்.

தமிழின இளைஞர்கள் மற்ற இனத்து இளைஞர்களை விட உழைக்க வேண்டும். நாம் அடைந்த தோல்வி நம்மை வன்மம் கொள்ள வைத்திருக்கிறது. நமக்கான .. நம் இனத்திற்கான ..பொருளாதார முன்னேற்றத்தினை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். மற்ற இனத்தவரைக் காட்டிலும் நம் திறமையை அதிகம் உபயோகித்து பொருள் சேர்க்க வேண்டும் . நம் வருமானத்தில் நம் இனமானம் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்கி இன நலப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.

உடல் முழுக்கக் காயங்களோடு..ரத்தம் வழிய வழிய… தீரா வன்மத்துடன் ..ஒரு மிருகம் போல நாம் நின்று கொண்டிருக்கிறோம். எதிரி எக்காளம் வழிய ஏளனம் பேசுகிறான். நாம் பொறுமையாக காத்திருப்போம். காத்திருப்பு என்பது ஒய்வல்ல. மாறாக வலுவோடு மீள நமக்கு கிடைத்திருக்கும் இடைவேளை .தாக்குதல் என்பது இனி நேருக்குநேர் நின்று ஒருவரை உடல்ரீதியாக விழ்துவது இல்லை. மாறாக நம் போர் வாக்காய், வாழ்க்கையாய், பேச்சாய், செயலாய், முழக்கமாய், எண்ணமாய் , கனவாய், நினைவாய், ஆற்றலாய், அறிவாய்., தெளிவாய், கொள்கையாய், கோட்பாடாய், தத்துவமாய் விரியட்டும் எமக்கான வாழ்க்கை, எமக்கான உயர்வு நம் கையில்தான் உள்ளது என்பதனை நம் அறிவு தெளியட்டும்.

நாம் தமிழர்,

மணி செந்தில் .

2 comments:

Anonymous said...

கருத்தும் பதிவும் சிறந்தது. சிந்தனைக்குப் பாராட்டு. வாழ்க. வளர்க.

நலம் விரும்பும்
அன்பன்
ஜூலை 16, 2010

Anonymous said...

நான் பலகாலமாக சிந்தித்துக் கொண்டிருந்த விடயங்களை மணி செந்தில் தமது பணியில் தெரிவித்துவிட்டார் . நம் இனமானம் காக்க நல்ல வியாபாரங்களை நாம் உலக அளவில் உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது நோர்வேயில் வசிக்கும் நன் இதற்க்கான சில ஆயத்தங்களை ஆரம்பித்துள்ளேன் Global Tamil VOIP என்ற இன்டர்நெட்இல் தமிழர்கள் இலவசமாகப் பேசும் வசதியை உருவாக்க சில பரிசோதனைகளை நான் செய்துகொண்டு இருக்கின்றேன். Contact us norceytel@yahoo.com