இயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகளில் மிதக்கும் விடுதலைச்சிறகு.




                 அது 2010 ஆம் வருடம் . சுட்டெரிக்கும் வெயிலால் தமிழ்நாட்டின் வெப்பநிலை பிரதேச வேலூர் நகரமே கொதித்திக் கொண்டிருந்தது . சிங்களர்களை எதிர்த்து பேசி மாபெரும், மகத்தான , கொடூரமான ,கொலைக்குற்றத்திற்கு (?) நிகரான குற்றத்தை இழைத்த காரணத்தினால், இந்திய தேசியத்திற்கு குந்தகம் ஏற்படுத்திய காரணத்தினால் செந்தமிழன் சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காண்பதற்காக நான் உட்பட பலரும் சிறை வாயிலின் முன் காத்திருந்தோம். அங்கு காத்திருந்த எவருக்கும் அந்நாளில் சீமானைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் என்ற காரணத்தினால் எனக்கு மட்டும் அனுமதி கிடைத்தது . நான் உள்ளே செல்ல நுழைய தயாரான போது அங்கு ஒரு கருப்பு நிற கார் அந்த வளாகத்தில் வந்து  நின்றது . அந்த காரில் தான் இனமான இயக்குனர் மணிவண்ணன் இருந்தார் . கருப்பு உடை அணிந்திருந்த அவர் எங்களை பார்த்து லேசான புன்னகை பூத்தாலும்  கடுமையாக களைப்புற்றும் சோர்வாகவும் தெரிந்தார். சமீப காலமாக அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என அனைவரும் அறிந்திருந்தோம்.  என்னை அருகே அழைத்த அவர் சிறையிலிருக்கும் சீமானை பார்க்க ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரினார்அவருடைய கோரிக்கையை பெற்றுக் கொண்டு நான் சிறைத்துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளே சென்றேன்பல முறை கேட்டுக் கொண்ட பிறகும் கூட  சிறைத்துறை நிர்வாகம் அய்யா மணிவண்ணனுக்கு சீமானை சந்திக்க அனுமதி தர மறுத்து விட்டது. இத்தகவலை அவரிடம் தெரிவித்த போது அனுபவங்களும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களும் விளைவித்த சுருக்கங்கள் பல நிரம்பிய அவரது முகம் மேலும் வாட்டமடைந்தது. நடக்கவே சிரமப்பட்ட அவர் இறுதியாக சிறைத்துறை அதிகாரிகளை சந்திக்க நேரில் வந்தார். சிறைத்துறை அதிகாரியிடம் தழுதழுத்த குரலில் அவர் இறைஞ்சிய போது உண்மையில் அவரது கண்கள் கலங்கின. ஒரு எளிய தகப்பன் ,உணர்விற்காக போராடி சிறைப்பட்டு கிடக்கின்ற தன் மகனை பார்க்க கூட உங்கள் ஜனநாயக நாட்டில் அனுமதி இல்லையா என்று கேட்ட அவரது குரலில் ஆற்ற முடியாத வேதனையும், இயலாமையும் தொனித்தது .


அவர் கேட்ட முறையும் , அவரது இரக்கம் தொனிக்கும் குரலும் அவர் நடித்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட நெகிழ்ச்சி காட்சி ஒன்றை ஒத்திருந்தது.கண்கள் கலங்க அவர் நின்ற முறையில் எனக்கு திரையில் பார்த்த மாயாண்டிதான் நினைவுக்கு வந்தார் . நிழலிலும், நிஜத்திலும், திரையிலும் அசலாக வாழ்ந்த ஒரு மனிதனாக மணிவண்ணன் திகழ்ந்தார் . இறுதியாக சிறைத்துறை நிர்வாகம் பிடிவாதமாக அனுமதி மறுக்கவே தளர்ந்த நடையோடு தடுமாறியவாறே அவர் சிறையை விட்டு வெளியேறிய காட்சி அழியாத சோகச் சித்திரமாய் ஆன்மாவில் ஆழப் பதிந்துள்ளது .

நான் அதற்கு முன்னரும்,பின்னரும் நிறைய முறை மணிவண்ணன் அவர்களை சந்தித்து இருக்கிறேன். அவரது வீட்டில் தான் நாம் தமிழர் உருவாவதற்கான முன்னேற்பாடு கூட்டங்கள் தொடர்ச்சியாக நடந்துக் கொண்டிருந்தன . ஈழத்தின் அழிவு அவரை மனதளவில் வெகுவாக பாதித்து இருந்தது. தீவிர பெரியாரியவாதியான மணிவண்ணன் திராவிட இயக்கத்து அரசியல் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்த காரணம் நிகழ்கால அரசியல் நிலைகள் அவருக்கு கற்பித்த பாடங்களே என்றால் மிகையில்லை . திராவிட இயக்கத்து அரசியல் தலைவர்களின் சுயநல,பித்தலாட்ட அரசியல் நிலைப்பாடுகளால் தான் தமிழர்கள் தங்களது தாய் நிலத்தை இழந்தார்கள் என அவர் கருதினார் . தனது அரசியல் வாழ்க்கையை திமுக அனுதாபியாக தொடங்கிய அவர்  திமுக தலைவர் கருணாநிதி மீது ஒரு காலத்தில் மிகவும் பற்றும் மரியாதையும் கொண்டிருந்தவர் . அன்றைய அதிமுக அரசினை சாடி பாலைவன ரோஜாக்கள் என்கிற இவரது திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிற அளவிற்கு அவர்கள் இருவருக்குமான உறவு இருந்தது. ஒரு காலக்கட்டத்தில் திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுக தொடங்கிய போது வைகோவோடு திமுகவில் இருந்து விலகி, அவரது தீவிர விசுவாசிகளுள் ஒருவராக திகழ்ந்தார். வைகோ சாயலில் கதாநாயகனை வடிவமைத்து சத்யராஜை நடிக்க வைத்து திரைப்படம் எடுத்தார். மதிமுக விற்காக பத்திரிக்கை நடத்தினார் .பிறகு மதிமுகவில் இருந்தும் விலகி தனித்திருந்தார். திராவிட அரசியலில் தீவிர நாட்டம் கொண்டு தலைவர்களுக்காக உழைத்து, அவர்களது சுயநல அரசியலால் களைப்புற்று,  சோர்ந்துப் போன தொண்டனாய் அவர் விளங்கினார். இனவிடுதலை,மொழியுணர்வு என யார் மேடை போட்டு கூப்பிட்டாலும் ஓடிச்சென்று உணர்வை எள்ளலும்,நகைச்சுவையுமாக கொட்டி விட்டு வருகிற வேலையை தான் வாழ்நாள் முழுக்கச் செய்தார்.  
மிகச்சிறந்த வாசிப்பாளராக திகழ்ந்த அவர் செல்லுமிடங்களில் எல்லாம் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசித்துக் கொண்டிருக்கும் பழக்கமுடையவர் . தங்கும் விடுதிகளில் அவர் அறைக் கதவை திறந்து பார்க்கும் போதெல்லாம் கண்ணாடி அணிந்துக் கொண்டு ஏதாவது ஒரு புத்தகத்தை ஆழமாக படித்துக் கொண்டிருக்கிற காட்சியை நெருக்கமானவர்கள் அடிக்கடி கண்டிருப்பார்கள். புத்தகங்களைப் பற்றி நானும் அவரும் நிறைய உரையாடி இருக்கிறோம். அதுவே எங்கள் இருவரையும் மிக நெருக்கத்தில் கொண்டு வந்து சேர்த்தது .  கும்பகோணத்தில் அன்னைக் கல்லூரி விழாவிற்காக அவர் வந்திருந்த போது திடீரென்று லா..ராவின் அபிதா படித்துள்ளாயா என கேட்டார். நூறாவது நாள் என்கிற திகில் மசாலா படம் எடுத்த இயக்குனர்  தீவிர இலக்கியம் பேசுவது சற்று முரணாகவே எனக்கு தோன்றியது. பின்னர் நானே அவரிடம் ஒரு முறை இதைப்பற்றி அவரிடம் கேட்டுள்ளேன். நீங்கள் வாசிக்கிற புத்தகங்களும், எடுக்கிற திரைப்படங்களும் எதிர்க் கோட்டு முரணாக இருக்கிறதே என்று கேட்ட என்னை சற்றே கிண்டலாக பார்த்தார். 2 படம் எடுத்துப்பார் .தெரியும் என்றார் ஆழமாக. எனக்குத் தெரியும் . அவர் தயாரிப்பாளருக்கு நேர்மையாக இருக்க முயன்றார்.ஆனால் கண்டிப்பாக அவர் தன்னளவில் நிறைவு கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே.   ஏறக்குறைய தமிழின் அக்காலத்து சர்யலிச பாணியில் அமைந்த  நவீனத்திரைப்படங்களுள் ஒன்றானநிழல்கள்அவரது கதையில் உருவானது. அவரால் நிழல்களும் எழுத முடிந்தது. அமைதிப்படையும் எடுக்க முடிந்தது . அவரால் தான் முடியும்.

          திரைத்துறையில் இருக்கிற பலர் தாங்கள் படிப்பாளிகளாக, அறிவாளிகளாக காட்டிக் கொள்கிற காலத்தில் உண்மையில் வாசிப்பாளராக, நுண்ணறிவு கொண்டவராக இருந்த அவர் தன்னை மிக எளிமையாகவே சித்தரித்துக் கொண்டார் . மார்க்சியம் தொடங்கி பின்நவீனத்துவம்,நிகழ்கால இலக்கியம், சங்கப்பாடல்கள், நவீன கவிதைகள் என அவரது அறிவு விசாலமானது. பாரதியார் கவிதைகளை வரி மாறாமல் மனப்பாடம் செய்து வைத்திருந்தார் . சிற்றிதழ்களை தேடிப் பிடித்து வாசிக்கும் பழக்கமுடையவர். நூல் வெளியீட்டு விழாக்களில் புத்தகத்தை முழுமையாக படித்து விட்டு மேடை ஏறுபவர். உதவி கேட்டு பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களை படித்து விட்டு  அந்த முகவரிக்கு தொடர்ச்சியாக  பணம் அனுப்பும் பழக்கமுடையவர். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே சிறு நீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மார்க்சியவாதியான நெடுவாக்கோட்டை ராஜேந்திரன் குறித்து அப்போதைய நிறப்பிரிகை ஆசிரியர்களான அ.மார்க்ஸ், கோ.கேசவன் ஆகியோர் தினமணியில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து விட்டு பணம் அனுப்பி உதவி செய்தார் .

        தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தன்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டு பல்வேறு கூட்டங்களில் பேசினார் .தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரைப் போல தமிழனை தமிழின வரலாறு கண்டதில்லை என்பார். மேடைகளில் சீமான் தலைவர் பிரபாகரனை  பெருமைப் பொங்க விவரிக்கும் போது  அவரது முகம் பளீரிடும் . ஈழத்தைப் பற்றி பேசும் போதெல்லாம்  கண் கலங்கி உணர்ச்சிவயப்படும் உளவியலை அவர் கொண்டிருந்தார் . இறந்த பிறகு தன் உடலில் புலிக் கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என அறிவித்ததும் ஈழ விடுதலையின் மீது கொண்ட ஆழ்ந்த பற்றுறுதி காரணமாகத்தான் .

அவரது படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒரே சாயலில் திரைமொழி எழுத அவருக்கு பிடிக்காது . டிக் டிக் டிக்,நூறாவது நாள்,24 மணிநேரம் போன்ற மர்ம திகில் படங்கள் எடுத்த அவரால் அமைதிப்படை,பாலைவனரோஜாக்கள் போன்ற அரசியல் சமூகப்படங்களையும் மிக எளிமையாக எடுக்க முடிந்தது. கொடிப்பறக்குது என்கிற படத்தில் வில்லனாக நடித்து நடிகனாக தன் மற்றொரு பரிமாணத்தை தொடங்கினார். பிறகு குணச்சித்திர ,நகைச்சுவை நடிகராகவும் முத்திரைப் பதித்தார். முதல்வன்,சங்கமம்,உள்ளத்தை அள்ளித்தா,படையப்பா, அவ்வை சண்முகி,மாயாண்டி குடும்பத்தார் என அவர் நடித்த வெற்றிப்படங்களின் எண்ணிக்கை மிக நீண்டது .

தனது திரைப்பட வாழ்வில் 50 படங்களை இயக்கியும்,400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததால் மட்டுமே மணிவண்ணன் நினைவுக்கூரத்தக்கவரல்ல. மாறாக மொழி உணர்வும், இன உணர்வும் அற்றுப் போன திரைப்படத்துறையில் இன மானம் நேசிக்கிற ஒரு உணர்வாளராய்,ஈழ விடுதலை வேட்கையின் திரைத்துறை பிரதிநிதியாய் ,ஆழ்ந்த இலக்கிய வாசிப்பாளராய், அடுத்த மனிதனுக்கு உதவும் இரக்க இதயம் இருப்பவராய் ..அனைத்தையும் விட தமிழ்த் தேசிய கொள்கை பற்றாளனாய் விளங்கிய மணிவண்ணன் என்றென்றும்  நம் ஆன்மாவில் நின்று நினைவாய் சுரப்பவர்.

தான் ஈன்றெடுத்த மகனாகவே சீமானை நேசித்து பழகியதாகட்டும், தன் உடன்பிறந்த இணையாய் நடிகர் சத்யராஜை நினைத்து அவரின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்ததாகட்டும் ,அவருடன் பழகியவர்கள் யாருக்கும் அவருடைய இழப்பு எளிதானதல்ல.  எளிய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதாலேயே அவர் நாம் தமிழர் கட்சியில் மிக நெருக்கமாக இருந்தார் .கட்சி கட்டமைப்புக் கூட்டங்களில் நம்பிக்கையுடன் பங்கேற்று தனது கருத்தினை பதிவு செய்தார்.  ஈழ விடுதலை மட்டுமல்ல மரணத் தண்டனை ஒழிப்பு, இராசீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு தமிழரின் விடுதலை, முல்லை பெரியாற்று சிக்கல் போன்ற தமிழினம் சார்ந்த முக்கிய பிரச்சனைகளில் தனக்கென தெளிவான கொள்கையை அவர் கொண்டிருந்தார்.

நாம் தமிழர் அமைப்பினரால் அன்பொழுக அப்பா என்று அழைக்கப்படும் இனமான இயக்குனர் மணிவண்ணன் சரிந்துப் போன சகாப்தம் அல்ல... என்றென்றும் தனது இனமான உணர்ச்சியினால் விரிந்தெழுந்த ஒரு பறவையின் விடுதலைப் பெற்ற சிறகு.

அவரது முடிவும் கூட அவரது முதற்படத்தின் தலைப்பை நினைவூட்டுகிறது.

கோபுரங்கள் சாய்வதில்லை.

-மணி செந்தில்.


                        
                                            

கொள்கையற்ற அரசியலின் கோமாளிகளும் – காணச்சகிக்காத காட்சிகளும் –


11-06-2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடந்த நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தேமுதிக வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி பேசும் போது தமிழக முதல்வரை புரட்சித்தலைவி என்று பெருமைப் பொங்க விளித்தார். இதில் அதிர்ச்சியடைவோ, ஆச்சர்யம் கொள்ளவோ ஏதுமில்லை என்றாலும் கூட காட்சித்தாவும் அல்லது தாவ முயலும் ஒரு நபர் கொள்ளும் தயக்கத்தின் அளவு கூட  தற்போது சற்றும் இல்லாமல் போய் விட்டதுதான் வேதனை அளிக்கிறது. தொகுதி பிரச்சனைக்காகத்தான் முதல்வரை சந்தித்தேன் என்று கூறும் சாந்தியிடம் அவருக்கு எளிதாக கிடைத்த முதல்வர் தரிசனம்  அதே தொகுதிப் பிரச்சனைக்களுக்காக ஏற்கனவே முதல்வரை சந்திக்க மனு கொடுத்து காத்திருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கும் அதன் சட்டமன்ற கொறடா சந்திரக்குமாருக்கும் கிடைக்குமா என்ற கேள்விக்கு பதில் இருக்காது.  இப்போது தேமுதிகவிற்கு நிகழ்கிற இந்த சறுக்கல்களுக்கு அது கொண்டிருக்கிற கொள்கையற்ற அரசியல் தான் மிக முக்கிய காரணமாக நம்மால் உணர முடிகிறது.

கொள்கை சார்ந்து உருவாகிற எந்த அமைப்பும்  உளவியல் ரீதியாக இறுக்கமாக உருவாகிறது. கட்சித் தலைமையின் அறிக்கைகளும், ஆவணங்களும், பொறுப்பாளர்களின் உரைகளும் அந்த கொள்கை சார்ந்து அதன் ஊழியரை மேலும் இறுக்கமடைய செய்கிறது.  ஒரு அரசியல் கட்சியின் தோற்றம் நிகழ்ந்தவுடன் அதன் திசைவழி குறித்த பார்வை பிறக்கிறது. அரிதான சில சமயங்களின் வரலாற்றின் போக்கும் ஒரு அரசியல் கட்சியின் திசை வழியை தீர்மானிக்கிறது. அரசியல் திசைவழி தீர்மானிக்கப்பட்டதும் கட்சி ஊழியர்கள் ஒரு தீர்க்கமான அம்சம் ஆகின்றார்கள். அவர்களுக்கு திசைவழி குறித்து பயிற்றுவிப்பதும் ஒரு அரசியல் கட்சியின் போராட்டக் கடமை என்கிறார் மாவோ.
   
ஆனால் தேமுதிகவின் பிறப்பும், திசைவழியும் கொள்கை சார்ந்து விளைந்தவை அல்ல.அதன் தொண்டர்களும் கொள்கை அரசியலால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்ல. ரசிக மனப்பான்மையிலும், திமுக, அதிமுக என்கிற இரு பெரும் கட்சிகளில் இடம் கிடைக்காத அனாதைகளாலும் உருவானது தேமுதிக. கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படை அம்சமாக கொண்ட திராவிட இயக்க அமைப்பொன்றின் முதல் பூசை திருப்பதியில் நடந்தது என்பதுதான்  தேமுதிகவின் கடந்த கால வரலாறு. அதனால் தான் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ரேசன் பொருட்களை வீடு தேடி வந்து கொடுப்பது என்று விஜயகாந்தால் சிரிக்காமல் பதிலளிக்க முடிந்தது. அதனால் தான் இவரை புரட்சிக் கலைஞர் கேப்டன் என்று புல்லரித்து உச்சரித்த சாந்தியால் அடுத்த நொடியே ஜெயலலிதாவை புரட்சித்தலைவி அம்மா என பூபாளம் பாட முடிகிறது.

தேமுதிக நிகழ்த்தும் அரசியல் காட்சிகள் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகளை விட கோமாளித்தனமானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பெயர் மாற்றி தடுமாறி உச்சரித்த விஜயகாந்திடம் பெயரை சரியாக சொல்ல சொன்ன கட்சி வேட்பாளர் அடி வாங்குகிறார். விமான நிலையத்தில் கேள்வி கேட்ட நிருபர்களிடம் நீயா எனக்கு சம்பளம் தர்ற..? என கேட்டு அடிக்க பாய்ந்ததும், சட்டமன்றத்தில் நாக்கைத் துறுத்தி காட்டியதும் ....எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. என்ன..நாமெல்லாம் மக்களாய் இருக்க ..இவர்கள் எல்லாம் தலைவர்களாக இருக்கிறார்களே என்கிற வேதனைதான் இதயத்தை அறுத்துக் கொண்டே இருக்கிறது.  

திராவிடக் கட்சிகள் தமிழக அரசியலின் மீது ஏற்படுத்தியுள்ள கடுமையான தாக்கம் அதன் அற விழுமியங்களை பாதித்து இருக்கிறது. தன்னைப் புகழும் ஒரு கட்சிக்காரரை காமராசர் சட்டையை பிடித்து அமர வைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தை தனது பாராட்டு மன்றமாக பாவிக்கிறார். 90 கவிஞர்களை புகழ வைத்து மகிழ்ச்சிக் கொள்ளும் கருணாநிதியின் உளவியல்தான்  ஜெயலலிதாவிடமும் இருக்கிறது. சாராயக் கடை திறந்து முதல் சாந்தி கட்சி மாறுவது வரை திராவிடக் கட்சிகளின் காட்சிகள் எதுவும் காண சகிக்காதவை. சென்ற ஆட்சியில் கருணாநிதி மதிமுகவை  உடைப்பதில் குறியாக இருந்தார். இது அம்மா நேரம். கெட்ட நேரம் தேமுதிகவிற்கு.
கொள்கை சார்ந்து இயங்கும் ஒரு அரசியல் அமைப்பில் தேமுதிக வில் நிகழ்கிற காட்சிகள் போல நிகழ்வது அரிதான ஒன்றாக இருக்கிறது. கொள்கை சார்ந்து இயங்கும் அமைப்பில் துரோகங்கள் நடக்கலாம். ஆனால் தேமுதிகவில் நடப்பது போல கோமாளித்தனங்கள் நடக்காது. தேமுதிகவின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை தமிழக முதல்வரை சந்தித்து உள்ளனர். தொகுதிப் பிரச்சனைகளுக்காகத்தான் அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்கிறார்கள் என்றால்.. முதல்வர் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையாவது தொகுதிப் பிரச்சனைக்காக சந்தித்து இருக்கிறரா..?. அல்லது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் தொகுதி பிரச்சனையே இல்லையா..?

 திராவிடக் கட்சிகளின் இரு பெரும் தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு அரசியல் வெளியை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலை காசு போட்டு காசு எடுக்கும் கம்பெனியாய் கலர் மாற்றியவர் கருணாநிதி. உள்ளூர் கம்பெனியை உலக கார்ப்ரேட் கம்பெனியாக மாற்றியவர் ஜெயலலிதா. இதன் நடுவே குண்டுச்சட்டிக்குள் எம்ஜிஆர் குதிரை ஓட்ட வந்தவர் விஜயகாந்த். கறுப்பு எம்ஜிஆரின் குண்டுச்சட்டி இன்று உடைந்து கிடைக்கிறது.

முடிவாய் ஒன்று தோன்றுகிறது.

இங்கே..
யாருக்கும் வெட்கமில்லை.


-மணி செந்தில்.

சாதீயத்தினை தகர்க்கும் தமிழ்த்தேசியம்.-மணி செந்தில




 தீர்மானகரமானது எதுவெனில் நாளும் முதிர்ந்து வரும் போராட்ட மன உறுதி, நடக்கின்ற இழிவுகளுக்கும் ,அழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிகர மாறுதல் தேவை எனும் உணர்வு, மற்றும் அது இயலும் என்னும் நிச்சயப்பாடு இவை தான் “- ரெஜி டெப்ரே (புரட்சிக்குள் புரட்சி  என்ற நூலிருந்து...)

முள்ளிவாய்க்கால் அவலத்தில் பெருகிய தமிழனின் குருதியின் ஈரம் தமிழக வீதிகளில் மூண்டெழுந்த இளையோர்களின் விழிகளில் வன்மமாய் படர்ந்ததுகடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்திற்குள் ஆழமாய் வேரூன்றி படர்ந்திருக்கும் சாதீய முரண்களை முற்றிலும் கடந்து விட்டு தமிழர்களாய் கரம் கோர்த்து தமிழக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் தம் இனத்திற்காக களத்தில் நின்றது வரலாற்றுப் பெருமிதம் வாய்ந்ததுஉண்மையில் சாதிகள் அற்ற இன ஓர்மை உடைய ஒரு போராட்ட வெளியை தமிழக அனைத்துக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினார்கள்எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தமிழக மாணவர்களின் கரங்களில் புகைப்படமாகஉடைகளில் போராட்ட அடையாளமாக,உரத்து முழங்கிய முழக்கங்களில் துளிர்த்த ஆவேசமாய் மாறி நின்றார்.தலைவரின் மகன் பாலச்சந்திரனின் உணர்வுகளை சுமந்த விழிகள் தமிழக இளையோர்களை இயக்கும் சக்தியாக மாறிப் போயின..

  ஆனால் இக்காட்சிகள் கடந்த சில நாட்களாக மாறியிருக்கின்றன.. தமிழ்த் தேசிய இனம் தனது விடுதலைப்பாதையில் விரைந்து பயணிக்க தடையாக சாதீயம் என்கிற சமூக முரணே முதன்மையான காரணியாக விளங்குகிறது என்பதை தான் அண்மையில் அதிகரித்திருக்கும் சாதீய மோதல்கள் காட்டுகின்றன. தமிழர் என்கிற தேசிய இனத்திற்குள்ளாக இரண்டு சாதிகளுக்குள் நிகழும் முரண் ஒட்டு மொத்த இனத்தின் எழுச்சியை மட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் வீழ்த்தவும் முயல்கிறது.  மேலும் இவ்வாறு நிகழும் சாதீய மோதல்கள் தமிழ்த்தேசிய உணர்ச்சியின் தோல்வியாக விவரிக்கப்படுவதன் அரசியலும் மிக நுட்பமானது. இரண்டு சாதிகளுக்கு இடையே நிகழும் மோதல்களால் கண்டிப்பாக பலன் அடைகிற பாத்திரத்தினை தமிழ்த்தேசியர்கள் வகிக்கவில்லை என்பது உண்மை என்பதோடு சாதீய உணர்வை தூண்டி மோதல்களை உருவாக்கி அதனால் ஏற்படும் அதிர்வுகளால் தன் அரசியல் பிழைப்பு வாத இருப்பினை தக்க வைத்துக்கொள்ள சாதீய அரசியல் கட்சிகளும், சாதீய சங்கங்களும் முயல்கின்றன என்பதும் நம் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தியாக இருக்கின்றன. இன்னும் ஆழமாக கவனித்தால் சாதீய சங்கங்களும், அதனைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் சமூகத்தில் வாழ்வதற்கான சக்தியை இதுப் போன்ற சாதீய மோதல்கள் மூலம் தக்க வைக்கின்றன. 

தம் இனத்திற்காக சாதிகள் கடந்து சாதிக்க துடித்த ஒரு இனத்தின் மக்கள் தங்கள் சாதிகளுக்காக போர்க் கோலம் பூண்டு நிற்கிறார்கள்.  மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவினை ஒட்டி மரக்காணம் உள்ளீட்ட பகுதிகளில்  நிகழ்ந்த சாதீய மோதல்கள் தமிழக மண்ணை அமைதியற்ற நிலமாக மாற்றி இருக்கின்றனஅங்கு ஆண்ட சாதி என்றும், உயர்ந்த சாதி என்றும் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் உறுதியாக கண்டிக்கத்தக்கது. சகத் தமிழனை இழிவாக நிறுவ முயலும் ஆதிக்க சாதி உளவியல் தமிழ்த்தேசிய ஒர்மைக்கு எதிரானது.  ஒன்று பட்ட இனத்திற்குள் குண்டு வைக்கின்ற வேலையை செய்கின்றன. அறிவியல் வளர்ச்சி விண்ணைத் தொட்ட இக்காலத்திலும் ஆதிக்க சாதி உணர்வினால் சக மனிதனை இழிவாக நடத்துவதும், தரக்குறைவாக நினைப்பதும் நாம் பேண விரும்பும் தமிழிய பெருமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.இந்நிலை இழிநிலையிலும் இழிநிலையானது.

தமிழக மண்ணை தாண்டினால் சபரிமலையில் தமிழன் முகத்தில் வெந்நீரை ஊற்றி துரத்துகிறான் கன்னடன். ஈழத்தில் கொத்து கொத்தாய் தமிழர்களை கொன்று குவித்தான் சிங்களன். தமிழனின் வயிற்றில் அடிக்க முல்லை பெரியாறு அணையை உடைக்க காலம் கணித்துக் கொண்டிருக்கிறான் மலையாளி. கூடங்குளம் அணு உலை திறந்து தமிழ்நாட்டினை சுடுகாடாக்க முடிவு செய்து விட்டான் வடவன். மூன்று தமிழர்களின் கழுத்தில் இறுகிக் கொண்டிருக்கும் தூக்குக்கயிறு என்று உயிர் பறிக்குமோ தெரியவில்லை. தமிழர்களை வீழ்த்த, அழிக்க எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து..ஒத்த அலை வரிசையில் ஒன்றாக நிற்கும் போது தமிழன் தனக்குள்ளே சாதியாக அடித்துக் கொண்டு சாகின்றான்.  இவன் ஆண்ட சாதி, இவன் அடங்கிய சாதி என்று கணக்கு வைத்தா தமிழனின் முகத்தில் வெந்நீர் ஊற்றுகிறான் கன்னடன்..? இசைப்பிரியா இந்த சாதியவள் என்று அடையாளம் கண்டு அழித்தான் சிங்களன்..? . எதிரிகள் தெளிவாக இருக்கின்றார்கள். எனதருமை தமிழினம் இழிவாக கிடக்கின்றது.

  சாதியின் பெருமிதத்தினை நிறுவி பராமரிக்க லட்சக்கணக்கில்  மக்களை திரட்ட முடிந்த ஒரு கட்சியால் ..லட்சக்கணக்கில் நம் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட போது பலன்  தரக்கூடிய முன்னெடுப்புகளை ஏன் எடுக்க முடியவில்லை என்கிற வினாவிற்கு இங்கு யாரிடத்திலும் பதிலில்லை. சகத் தமிழனின் குடிசைகளை கொளுத்துவதில்..சொத்துக்களை சூறையாடுவதில், கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதில் இவர்களுக்குள்ள அக்கறையை , ஆர்வத்தினை என்றாவது இந்த இனம் செழிக்க,வளர காட்டி இருக்கிறார்களா என்றால்..இல்லை.

பெருமைகள் பல வாய்ந்த தமிழ் மரபில் சாதிக்கான இடம் சரித்திரத்தில் எங்கும் இல்லை.வந்தேறி மரபான ஆர்ய வருணாசிரம தத்துவத்தால் தொழில் பிரிவுகளாக வேர்விட்ட சாதீயம் இன்று தமிழ்ச் சமூகத்தின் நிரந்தர பிரிவுகளாக மாற்றப்பட்டதன் விளைவே இன்றளவும் சகத்தமிழனாலேயே தமிழனின் குருதி தமிழக மண்ணில் சிந்துகிறது. 50 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக தோன்றிய திராவிட தத்துவம் வழி வந்த ஆட்சியாளர்கள் தனது அரசியல் லாபங்களுக்காக சாதீய பிளவுகளை தமிழக மண்ணில் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சாதி கடந்து தமிழர்கள் ஒன்று பட்டு நின்றால் தெலுங்கனும்,கன்னடனும் திராவிடத்தின் பெயரினால் இங்கே அரசியல் பிழைப்பு நடத்த முடியாது என்பதில் திராவிட அரசியலாளர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். சாதி என்கிற பிளவு இருந்தால்தான் தங்கள் பிழைப்பும் ஒடும் என்பதில் சாதீய சங்கத்தினரும், அதனைச்சார்ந்த அரசியல் கட்சியினரும் கவனமாக இருக்கின்றார்கள். எப்போதெல்லாம் இந்த இனம் ஒன்று பட்டு வீதிக்கு வருகின்றதோ..அப்போதெல்லாம் சாதீய பெரு நெருப்பினை ஊதி ஊழித்தீயாக மாற்றுகின்ற வேலையை திட்டமிட்டு சாதீய அரசியல்வாதிகள் செய்கின்றனர். தமிழர்களாக இச்சமூகம் திரண்டு விடக்கூடாது என்கிற பணியை சாதீயவாதிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதில் எந்த பங்கும் வகித்திராத தமிழ்த்தேசியர்கள் மேல் தேவையில்லாமல் விமர்சனங்களை சிலர் எழுப்புவது உள்நோக்கமுடைய அரசியல் நடவடிக்கையே.

தமிழர் என்பது வெறும் இனத்தை சுட்டும் ஒரு சொல்லல்ல. மாறாக அது ஒரு பிரகடனம். தமிழன் என்று தன்னை அறிவிக்கிறவன் சுய சாதி மறுப்பாளானாக, மத மறுப்பாளானாக  விளங்குகிறான். அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான உளவியலை தமிழ்த்தேசிய உணர்வே சாத்தியப்படுத்துகிறது.தமிழர்களில் யாரும் உயர்ந்தோரும் இல்லை. தாழ்ந்தோரும் இல்லை. இந்த அளவுக்கோலை மீறி யோசிக்கும் யாரும் தமிழர்களே...ஏன்..மனிதர்களே இல்லை.  

ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக, ஆதிக்கச் சாதி உளவியலுக்கு எதிராக களத்தில் முதன்மையாக நிற்பவர்கள் தமிழ்த்தேசியர்களே. சாதீய முரண்களால் மிகுந்த பின்னடைவினை சந்திப்பது தாம் அனைவரும் ஒரினம் என்ற உளவியல். இந்த உளவியல்தான் தமிழ்த்தேசிய உணர்வின் அடிப்படையாக இருக்கிறது. மாவீரன் முத்துக்குமாரும், தங்கை செங்கொடியும், அண்ணன் அப்துல் ரவூப்பூம் சுய சாதி ,மத உணர்ச்சியை தகர்த்து இனம் வாழ விழுந்த விதைகளாய் வரலாற்றில் சாட்சிகளாய் .. தமிழ்த்தேசியர்களின் இலக்கணமாய். காணக்கிடைக்கிறார்கள். சாதி என்கிற உணர்வினை  உருத்தெரியாமல் அழித்தொழிக்க வேண்டுமானால் நாம் தமிழர் என்கிற உணர்வினை ஒவ்வொரு தமிழனும் பெற்றாக வேண்டும்.இது ஒன்றே கடந்த வரலாறு கற்பித்த விளைச்சலாக இருக்கிறது . தர்மபுரி,மரக்காணத்தில்,பாப்பாபட்டி ,கீரிப்பட்டி, திண்ணியத்தில்  எரிந்த குடிசைகளும்.. அடைந்த இழிவுகளும்..ஈழத்தில்  எரிந்த உடல்களும்..அடைந்த அழிவுகளும் வெவ்வேறானவை அல்ல.. எரித்த சிங்களனும்..இவர்களும்.. வெவ்வேறானவர்கள் அல்ல என்ற புரிதலோடு சாதீயத் தகர்ப்பினையும் தனது இன விடுதலைக்கு ஒப்பான இலட்சியமாய் சுமந்து...பயணிக்கும் நாம் தமிழர்களின் அரசியல் பாதை உண்மையில் புரட்சிக்கரமானது. அதுவே சாதீயத்தை ஒழிக்கும் கருவியை சாத்தியப்படுத்துவது.

”சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்று வரும் சண்டையுலகிதனை
ஊதையினில் துரும்பு போல் அலைக்கழிப்போம்: பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்” –பாவேந்தர் பாரதிதாசனார்.

 நாம்  தமிழர்.

பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்





        பாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே  கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம்  சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும்  கருப்பேறிய அந்த துளைகளில் இருந்து  வெளியாகி, உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் தணியாவெப்பம் இனி நடு நிசிகளில் விழிகளை மூட விடாத மூர்க்க புழுக்கமாய் பற்றி எரியும். உறக்கமும், விழிப்புமாக அலைகழித்த என் கனவின் நினைவில்.. பாலச்சந்திரன் மார்பின் மீது எதிரியின் குண்டுகள் பாய்ந்தன. அந்த ஒலியில்,வலியில்  என்னருகே படுத்திருந்த என் மகன் பகலவன் ஓங்காரமாய் அழத் துவங்கினான். திடுக்கிட்டு விழித்த என் கழுத்தின் ஓரத்தின் வன்ம விலங்கொன்றின் பற்களின் தடம் ரத்தமாய் கசிந்து கொண்டிருந்தது.  என் அருகே படுத்திருக்கும் என் மகனும், தாய்நிலத்தில் வீழ்ந்திருக்கும் பாலச்சந்திரனும் வெவ்வேறானவர்கள் அல்ல என என் ஆதி அறிவு உணர்கிறது. மகனை இழந்த வலியில் தளர்ந்த தந்தையாய் கணிணி திரை முன் அமர்கிறேன்.

  எனக்கு முன்னால் ஒளி விடும் அந்த கணிணி திரையில் பாலச்சந்திரன் அசையாமல் அமர்ந்திருக்கிறான். சற்றே சரிந்து அமர்ந்திருக்கும் அவனது முறை அவனது தந்தையை நினைவுப் படுத்துகிறது.  அவனது விழிகளில் இருந்து அந்த நொடியில்..அவன் விழிகளின் எதிரே நிகழ்ந்த, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் சம்பவங்களை நான் அப்படியே வாசிக்க முயன்று தோற்கிறேன். சலனமற்ற விழிகளை அவன் அவனின் தந்தையிடமிருந்து பெற்றுள்ளான். புகைப்படங்களில் பார்க்கும் போது கூட துளியளவும் வஞ்சகம் பேசாத நேர்மையாளனின் கண்கள் அவை . களங்கமற்ற அந்த விழிகள் உண்டு,படுத்து,முயங்கி,வாழும் சராசரி மானுட இனத்திற்கு உரித்தானவை அல்ல. மாறாக  மானுட பாவத்தை செரித்து தன் உடலின் குருதியாய் கசிய விட்ட தேவனுக்கு உரித்தானவை.  

         வரலாற்றில் எப்போதாவது தோன்றும்  ஒரு மகத்தான மன்னனுக்கு மகனாக பிறந்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை அவன். ஒரு தேசிய இனத்தின் மரபியல் அடையாளமாக அந்த குடும்பம் வாழ்ந்திருக்கிறது என்பதற்கு பாலச்சந்திரன் சாட்சியாக இருக்கிறான் . வரலாற்றின் நதி முடிவிலியாக கால ,தேச,தூரங்களின் கரைகளை தழுவி ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது தன் பயணத்தில் இப்படிப்பட்ட ஒரு இளவரசனை சந்தித்ததே இல்லை.  வீழ்த்தப்பட்ட நிலமொன்றின் மன்னனாக இருக்கும் அவனது தந்தை ஒரு நொடி நினைத்திருந்தால்.. தன் மகன்களை,தன் மகளை,தன் மனைவியை பாதுகாப்பான தேசமொன்றில்  அரண்மனை ,பணியாளர்களோடு ஆடம்பரமாக வாழ வைத்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படியல்ல. உயிருடன் உருக்கும் போதே உதட்டிற்கு அருகேயே மரணத்தை தொங்கப் போட்டு திரிந்த மனிதர் அவர். மரணத்தையும், வாழ்வினையும் செய்கின்ற செயல்களை வைத்து எடை போடும் உளவியல் அவருக்கானது.  அவர் மரபு சிதையாத ஆதித் தமிழனின் நேரடி பிள்ளை. தமிழ் தொல்குடியின் ஆதித் தொழிலான விவசாயத்தினை போலவே விடுதலையையும் விதைத்து அறுத்து விடலாம் எண்ணினார் அவர். அலை அலையாய் விதைகளை நிலமெங்கும் வீசித் திரிந்த அவரது கரங்கள் ஒரு போதும் சோர்ந்ததே இல்லை. தாய்ப் பெரு நிலத்தில் முளை விட்ட விடுதலை பசுமையை மூர்க்கமாய் பேரினவாத வல்லூறுகள் தாக்க பறந்து வருகையில் தாய்ப் பறவையாய் தன் இறகை விரித்து காத்து நின்றார் அவர். விதைகள் தீர்ந்த நாள் ஒன்றில் இறுதியாய் அவர் தேர்ந்தெடுத்து தூவியது தன் மகனை..

விதையாய் விழுந்து கிடந்த மகனின் சற்று திறந்திருந்த விழிகளில் ..சிறுவயதில் அவனை தூக்கி கொண்டாடிய தளபதிகள்,வீரர்கள் ஆகியோர் மங்கலான தோற்றத்தில் தெரிந்திருக்கவும் கூடும்.

ஒரு இளவரசனாக பிறந்த அவன் எப்போதும் இளவரசனாக வாழ்ந்ததில்லை.மண்ணின் விடுதலை ஒன்றே மகத்தான இலக்காக நினைத்து இயங்கும் அவனது தந்தை மிகவும் கறாரானவர்.  வயதான தன் தாய் தந்தையரை பொதுமக்களோடு மக்களாய் அனுப்பி வைத்தவர் . தனது மூத்த மகனை போர்க்களத்தில் நிற்க வைத்து சகப் போராளிகளோடு சாவினை தழுவச் சொன்னவர். தன் மகளை சீருடை அணிய வைத்து படையணியில் முன்னணியில் நிறுத்தியவர். நம் நிலம் போல மூத்த மகனுக்கு மத்தியில் பதவி,இளைய மகனுக்கு மாநிலத்தில் பதவி ,மகளுக்கு பாராளுமன்றத்தில் பதவி என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவர்களில் யாருமே இல்லை. கொல்லப்பட்ட பாலச்சந்திரனின் மரணத்தை விட நமக்கு அதிர்ச்சியூட்டுவது தன் குடும்பம்,தன் மகன்,மகள் குறித்து அவனின் தந்தை கொண்டிருந்த மதிப்பீடுகளே. கண் மூடுவதற்கு முன் தன் மகனுக்கு அரசியல் அரியணையில் முடி சூட்டி விட வேண்டும் என்கிற கணக்குகளும்,பிணக்குகளும் மலிந்திருக்கின்ற மண்ணில் இருக்கின்ற நம்மால்  விடுதலை வேட்கையின் பால் எழுந்து விட்ட ஆழமான பற்றுறுதியை புரிந்துக் கொள்ள முடியவில்லை. 

பாலச்சந்திரனின் மரணத்தை வீரமரணம் என்றெல்லாம் வார்த்தை மெழுகு பூசி செழுமைப்படுத்திக் கொள்ள என்னால் முடியவில்லை. அந்த பாலகனின் கொலை இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை உரத்து அறிவிக்கிறது. அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு சிறுவனை கொலை  செய்யும் உளவியல் உலவும் உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்கிற செய்தி. பார்த்த உடனேயே அள்ளிக் கொள்ள தோணும் அச்சிறுவனின் மென்மையான உடலை துளைக்க பேரினவாத பயங்கரவாதத்திற்கு மட்டுமே வலு இருக்க இயலும்.  விடுதலை கோரி குருதி தோய்க்கும் அந்த ஈரப் பெரு நிலத்திற்கு மட்டுமே பாலச்சந்திரன்களை உருவாக்க,சுமக்க,விதைக்க,முளைக்க வைக்க இயலும்.
இதையெல்லாம் காண உலகிற்கு எத்தனை மனவலிமை உண்டோ, அதே  சதவீதத்தில் ஒரு தேசிய இனமே ஆழ்மன வன்மத்தோடு அமைதியாய் காத்திருக்கிறது. எந்த எதிரி என் பிள்ளையை கொன்றானோ, அந்த எதிரியை எம் கண் முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து அழைத்து உபசரிக்கும் இந்தியாவின் இரண்டக எள்ளலையும் பார்த்துக் கொண்டு காத்திருக்கிறது. என்னடா முடியும் உங்களால் என எதிரி உதிர்க்கும் எகத்தாள அறைக்கூவலை கனவிலும் செவியெடுத்துக் கொண்டு கவனமாக காத்திருக்கிறது. கண்களில் வெடிக்கும் அழுகையை கழுத்திலேயே தேக்கி ..கண் சிவந்து காத்திருக்கிறது...காத்திருக்கிறது...கணக்குத் தீர்க்கும் கவனத்தோடு. மெளனமாக..

கனன்று எரியும் கண்களில்
நிழலாய் நிற்கிறாய்..
வடித்தெடுத்த  வார்த்தைகளில்
எதிரிகளின் மீது
உமிழும் வன்மமாய் மிஞ்சுகிறாய்..
பால்யம் சுமக்கும் உன் விழிகளை
ஒத்த குழந்தைகள் மீண்டும்
இம் மண்ணில் பிறக்க கூடும்..
அவற்றில் ஏதேனும் ஒன்று
ஏக்கமாய் என்னை பார்க்கும்
தருணத்தில் உன்னை
என்னுள் தருவித்து கொள்வேனடா..
என் மகனே...பாலச்சந்திரா..

-மணி செந்தில் 

ஈழ விடுதலை உணர்வை வீழ்த்த துடிக்கிற விகடனின் வில்லங்கம்.. -- மணிசெந்தில்




            இன்னும் சில நாட்களில் மாவீரர் தினம் உலகத் தமிழர்களால் அனுசரிக்க இருக்கின்ற நிலையில்  இந்த வார ஆனந்தவிகடனில் வெளிவந்திருக்கும் ’பெண் போராளி ’யின் பேட்டி கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது . ஒட்டு மொத்த போராளிகளின் உணர்வினையும் பிரதிபலிப்பதாக படிப்பவர் கருதும் வகையில் மிக திறமையாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பேட்டியை நாம் வெறுமனே கடந்து விட முடியாது.   
               இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பின்  தமிழ்த் தேசிய இனம் தன்னகத்தே அடைந்திருக்கின்ற  மாற்றங்கள் மகத்தானவை . ஈழம் என்கிற நாடு தமிழ்த் தேசிய இனத்தின் தணியாத தாகமாய் இன்று உருவெடுத்து நிற்கின்றது.  12 கோடிக்கும் குறைவில்லாத இனமாக தமிழ்த் தேசிய இனம் தழைத்து நின்றாலும் தன் பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போனதற்கான  காரணங்களையும், அதனை சார்ந்த  உலக ஒழுங்கினையும் ஆய்விற்கு உட்படுத்தி, எதிர்காலம் ஒன்றை புதிதாக சமைக்க தமிழ்த் தேசிய இனம் தன்னையே தயார் படுத்தி வரும் நிலையில் ..விகடனின் இந்த பதிவினை நாம் சாதாரணமான ஒன்றாக கருதிவிட இயலாது

                தீரமும், தியாகமும் நிறைந்த ஒரு விடுதலைப் போராட்டம் என்பது தோல்வி, வெற்றி நிலைகளுக்கு அப்பாற்பட்டது . உலகத்தில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் கடுமையான பல இன்னல்களையும், இழப்புகளையும் தாண்டி தான் விடுதலை காற்றை சுவாசிக்கின்றன . முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது ஒரு சாதாரண சொற்றொடர் அல்ல. நம் கண்ணில் வழிகின்ற கண்ணீரை துடைத்து விட்டு..இன்னும் மூர்க்கமாக..இன்னும் திறமையாக.. மீண்டெழுதலுக்கான உந்துதல்.  அத்தகைய உந்துதலைத்தான் ஒரு பெண் போராளியின் பேட்டியாக விகடன் வெளியிட்டு இருக்கும் பதிவு மிகத் திறமையாக சிதைக்கிறது .  ’எல்லாம் முடிந்து விட்டதுஎன்பதான குரல் தொடர்ந்து இயங்குவதற்கான  மனநிலையை வீழ்த்துகின்ற அரசியலாகவே நம்மால் உணர முடிகிறது.

 தலைவர் இல்லை என்கிற குரலை சற்று உயர்த்தியே முழங்கும் அந்த பதிவு குறிவைத்து மாவீரர் மாதத்தில் ஏவப்பட்டதன் நோக்கம் ஆராயத் தக்கது. எம் தேசிய தலைவர் பிரபாகரன் இல்லை  என்பதை உலகத் தமிழினம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற அழுத்தமும் அந்த பதிவில் தொனிக்கிறதுதேசியத் தலைவர் பிரபாகரன் உலகத் தமிழினத்தின் முகமாக ,முகவரியாக, அறவியல் அடையாளமாக திகழ்கிறார்அவரது உன்னத தலைமையும், அர்ப்பணிப்பும், தியாகமும் உலகத் தமிழர் வாழும் நிலங்களில் ..குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழல்களில் மிகப் பெரிய தாக்கத்தினை இன்று ஏற்படுத்தி இருக்கின்றன. நேர்மையும், தியாகமும் உடைய சமரசமற்ற தலைமை குறித்தான இக்கால தமிழின இளைஞர்களின் கனவாக தேசியத் தலைவர் திகழ்கிறார். அவரது நிலைப்பாடுகளை இன்று பெருகி வரும் நூல் வாசிப்பு மூலம், இணையத்தின் மூலம் அறிந்துக் கொள்ளும் இளையத் தலைமுறையினர் சுயநல ,சமரச, வியாபார அரசியல் தலைவர்கள் மீது  கடுமையாக ஆவேசம் கொள்கின்றனர். ஒரு தலைமை மாசற்ற வடிவமாக, புனிதத்துவமாக திகழ வேண்டும் என்கிற எளிய இளைஞனின் அக விருப்பம் ..எம் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒப்பற்ற தியாகம்,வீரத்தினால் விளைந்தது  ஆகும் . எனவே தான் அவர் இருக்கிறார் என்கிற நினைவோடு தாயக கனவை நோக்கி உலகத் தமிழர் இன்று பயணப்படுகின்றனர் .

 வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குமாவீரர் தினம்குறித்த அளவீடுகள் புனிதத் தன்மை வாய்ந்ததாக மேம்பட்டு  நிற்பதன் காரணமும் இது தான்.இன்று  உலகம் முழுவதும் தமிழர் வாழ்கின்ற நிலங்களில் மாவீரர் தினம் அனுசரிக்காத பகுதி இல்லை என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. சாதி மறுப்பு,பெண்விடுதலைபொருளாதார சமநிலை வாழ்வு, விடுதலை உணர்வு ஆகியவற்றின் குறியீடாக தேசியத் தலைவர் திகழ்கிறார்அதனால் சிங்கள பேரினவாதம் உடல் ஒன்றினை காட்டிய போதும், அவ்வப்போது தமிழரின் உளவியலை சிதைக்கின்ற செய்திகளை கசிய விடுகின்ற போதும்.. மீறி வரும் கண்ணீரையும் கண்ணுக்குள்ளேயே தேக்கி, அடங்காத ஆவேசம் விளைவிக்கும் கனத்த மெளனத்தோடு, காயங்கள் தந்த வன்மத்தோடு தமிழர்கள் இறுகிக் கிடக்கிறார்கள்தங்களை இயக்கும் சக்தியாக  தலைவரின் இருப்பு குறித்த நம்பிக்கைகளை தங்களுக்குள் விதைத்து கொண்டு முன்னேறுகிறார்கள்இவையெல்லாம் விகடன் அறியாததா என்ன..?

                  ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டதன் சூழல் நமக்கு இன்னும் போராடுவதற்காக ஆவேசத்தினை ஏற்படுத்த வேண்டும். மாறாக அந்த பதிவுஎல்லாம் முடிந்து விட்டதுஎன உரத்த குரலில் அறிவிப்பது..இப்போது இருக்கின்ற கேடான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கான கதவுகளை அடைப்பதற்கு சமம். தமிழ்நாட்டில் இருக்கின்ற,புலம் பெயர்ந்து இருக்கின்ற தமிழர்கள் ஈழம் அழிவில் அரசியல் செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ..இதற்காக போராடி வருகின்ற அமைப்புகளை பின்னடைவிற்கு உள்ளாக்கும் செயலாக தெரிகிறதுஈழம், தலைவர் பிரபாகரன் போன்ற சொற்கள் பயன்படுத்தக் கூட தடையாகவும் ,அச்சமாகவும் இருந்த இந்தியா உள்ளீட்ட உலகச்சூழல் இன்று மாறி இருக்கிறது. ஈழத்தின் அழிவும், நடந்த இனப்படுகொலைகளுமே சென்ற தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அதிகம் வாக்களித்த இளைய தமிழ்ச் சமூகம் கொண்டிருந்த காரணங்களாக விளங்கின. முகமூடியும்,புனைவும் அணிந்த அரசியல் தலைமைகள் இளைய தமிழ்ச் சமூகத்தின் ஆவேசத்தினால் நிர்மூலமாக்கப்பட்டு முடிந்திருக்கிறார்கள். எனவே ஈழத் தமிழர்களின் அழிவு என்பது பலவித காரணிகளை கொண்டு விரிவாக்கப்பட்ட ஆழ்நிலை காரணமாக, பல்வேறு அரசியல் செயல்களுக்கு மூலமாக இருக்கின்றதுஈழத்தின் அழிவு ஓட்டு மொத்த தமிழ்த் தேசிய இனத்தின் இழப்பு என்பதாலேயே அரச, நில எல்லைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட பல தமிழர்கள் தங்கள் உயிரை ஈகம் செய்தார்கள். தமிழ்நாட்டில் பிறந்த முத்துக்குமார் ஈழ நாட்டின் விடுதலையை தனது தாயக விடுதலையாக கருதினார் . அங்கு விளைந்த இழப்புகளை தன் இழப்புகளாக உணர்ந்த காரணத்தினால் தான்   உயிர் ஈகம் செய்யும் அளவிற்கு வலியை பெற்றார்ஒரு முத்துக்குமார் இறந்தார். ஆனால் இன்னும் பல முத்துக்குமார்கள் உயிருடன் உலவி, தன் இனத்திற்காக களமாடி நிற்பதற்கான நம்பிக்கைகளை விதைத்தது அந்த பிரபாகரன் என்கிற ஒற்றை சொல்.

தலைவர் இல்லை. நீ படுத்து தூங்கு. நாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்று சொல்ல ஈழத்தமிழர் மட்டுமல்ல யாருக்குமே உரிமை இல்லை. ஈழமும் ,தமிழகமும் ஒரு தேசிய இனத்தின் இரு தாய்நிலங்கள் என்பதாலேயே முத்துக்குமார் ,அப்துல் ரவூப் போன்ற இளைஞர்கள் தன் உயிர் தந்தனர். அதை தலைவர் பிரபாகரன் அவர்களும் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தான் தமிழ்நாட்டில் உயிர் ஈகம் செய்த முத்துக்குமாருக்குமாவீரர்தகுதி அளித்து விடுதலை புலிகள் அன்று வீர வணக்கம் செலுத்தினர் .

 நம் கண் முன்னால் நம் இனம் அழிந்த  நிகழ்வு ஆறாத குற்ற உணர்ச்சியாய் இன்று தமிழர் மனதில் மாறி நிற்பதன் விளைவே இன்று கூடங்குளம் அணு உலை பிரச்சனையாக இருக்கட்டும், மூன்று தமிழரை மரண தண்டனையில் இருந்து காக்கும் போராட்டமாக இருக்கட்டும், காவிரி,முல்லை பெரியாறு என நதி நீர் சிக்கலாக இருக்கட்டும்  ..திரண்டு வருகின்ற இளைஞர் கூட்டம் அமைப்புகள் ,கட்சிகள் சாராத்து என்பது குறிப்பிடத்தக்கது .  இங்கு ஈழமே ஆதியாக இருக்கிறது அனைத்திற்கும்.

குளிர் நிறைந்த காலமென்றாலும் ,கொட்டும் பனியிலும் குழந்தை குட்டிகளுடன் நின்று சிங்கள இன அதிபர் ராசபக்சே விற்கு எதிராக ஆவேசமாக எதிர்ப்பினை காட்டிய புலம் பெயர் உறவுகளின் உணர்வினைஎல்லாம் முடிந்து விட்டதுஎன அறிவித்து உத்திரத்தில்  போட்டு விடலாமா ?

உலகத் தமிழர்களின் ஓயாத உழைப்பினால் போர் குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான விசாரணை  என சிங்கள நாட்டிற்கு எதிராக வருகிற ஜனவரி மாதத்தில் வர இருக்கின்றதே.. அதையும்எல்லாம் முடிந்து விட்டதுஎன அறிவித்து அழித்து விடுவோமா..?

ஒரு பெண் போராளி பாலியல் தொழிலாளியாக மாறிய அவலத்திற்கு சிங்கள பேரினவாதம் காரணமே ஒழிய..இழிநிலை துடைக்க ,விடுதலை கனவோடு போராடியவர்களும், போராடுபவர்களும் காரணம் இல்லை. என் சகோதரி ஒரு பாலியல் தொழிலாளியாக எதிரியால் மாற்றப்பட்டிருப்பதன் சூழல்எல்லாம் முடிந்து விட்டதுஎன நான் முடங்கிப் போவதால் மாறி விடுமா..?.

         சுகமாக,பாதுகாப்பாக இருந்துக் கொண்டு ஈழத்தை பற்றி பேசுகிறார்கள் என்றால்.. நீரில் முழ்குபவர்களை கரையில் நிற்பவர்கள் தான் காப்பாற்ற இயலுமே ஒழிய ..குறைந்த பட்சம் காப்பாற்ற கோரி கத்த முடியமே ஒழிய.. கரையில் நிற்கிறாய்..உனக்கென்ன தெரியும் முழ்குதலின் வலி..? ..கத்தாமல் அமைதியாக நில் என சொல்வதுதான் சரியானதா…?

தலைவர் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள் என்றால்.. அவரை  நடமாடும் உடலாக பார்த்தவர்களுக்கு தான் இருப்பு,இறப்பு சிக்கல். அவரை அறவியல் அடையாளமாக , தமிழின மரபின் வடிவமாக, தானே தோன்றிய தத்துவமாக,உளவியல் வலிமையாக காண்கிற இளையத் தமிழ் பிள்ளைகளுக்கு  ’அவர் இருக்கின்றார்’ .
 
             இறுதி கட்டப் போரின் போது விகடன் ஆற்றிய ஊடகச் சேவை மகத்தானது.ஆனால் சமீப காலமாக  விகடன் குரலின் தொனி பிசகி இருப்பதை நுட்பமான வாசகர்கள் கவனித்து தான் வருகிறார்கள் . தமிழினம் புத்தெழுச்சி அடைந்து..தம் இனத்திற்காக  ஒன்று பட்டு போராடி  சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ,இழைக்கப்பட்ட ,இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக ,இனப்படுகொலைக்கு எதிராக..நம்பிக்கை ஒளியை பாய்ச்ச வேண்டிய விகடன் அவநம்பிக்கை குழியில் தள்ளியிருப்பது அதன் ஊடக நேர்மைக்கு நேர்ந்த சறுக்கல்.

              பேட்டி வழங்கி இருப்பதாக சொல்லப்படுகின்ற எம் சகோதரி பாலியல் தொழிலாளியாக மாறிய சூழல் தனி நபருக்கு விளைந்தது அல்ல. அது எம் இனம் அடைந்த இழிவு. இந்த இழிவும் ,அழிவும் ஏற்பட்டு விடக் கூடாது என்கிற காரணத்தில் தான்  தேசியத் தலைவர் பிரபாகரன் போராடினார் . மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காகவும், இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும்  எதிராகத்தான்   இன்றளவும் தமிழக வீதிகளிலும், உலக வீதிகளிலும்..எண்ணற்ற இளைஞர் கூட்டம் ..தன் வாழ்க்கை, தன் சுகம் மறுத்து வீதிகளில்   போராடுகிறார்கள்.

              அவநம்பிக்கை ஒளி அளித்து இனத்தை ,இனத்தின் விடுதலையை முடிக்க சிங்கள பேரினவாதம் முனைந்திருக்கிறது . எத்தனையோ காட்சிகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன..உளவியல் உறுதி ஏற்பட்டு விட  கூடாது சாகசங்கள் புரியப்படுகின்றனஇந்த உளவியல் தாக்குதலையும் தமிழ்த்தேசிய இனம் வெல்லும்

             இனப்படுகொலைக்கு எதிராக,மறுக்கப்பட்ட தாயக விடுதலைக்காக போராடியவர்கள்போராடுபவர்கள் போரின் மீது விருப்பம் கொண்டவர்கள் அல்லர். மாறாக இது சிங்கள பேரினவாதம் திணித்த போர்போர் கொடுமையானது தான். அதை விட கொடுமையானது அடிமைகளாக வாழ்வதுஎல்லாவற்றையும் விட கொடுமையானதுஎல்லாம் முடிந்து விட்டதுஎன்றெண்ணி அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்வது. மெளனமாய் நிற்பது. அவநம்பிக்கையோடு அடங்குவது.. இதுதான் விகடன் விளைவிக்க விரும்புகிறதா..?

                 மேலும் ஒரு பெண் போராளியின் துயரம் மிகுந்த பதிவாக முடியும் அந்த பேட்டியில் .. அந்த துன்பத்திற்கான தீர்வாக காட்டப்படுவது எதுவுமில்லை என்பது மட்டுமல்ல..ஈழத் துயரத்தின் காரணமாக விளையும் அரசியலையும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் கை விட்டு விட வேண்டும்  என்பதுதான். ஈழத்தின் துயரமும், இனப்படுகொலைகளும் இன்று ஒரு குறிப்பிட்ட நிலத்தின் அரசியலாக இருந்த நிலை மாறி , உலகத்தின் கண்களை திறந்திருக்கின்றன. ஈழத்தின் துயரம் தோய்ந்த முடிவு பக்கத்து நிலமான  தமிழ்நாட்டில் கூட அரசியலாக மாறாமல் போனால் அதை விட பின்னடைவு என்னவாக இருக்க இயலும்..? .மனித உரிமை,இனப்படுகொலை போன்ற பொதுவான அம்சங்கள் உலகச்  சமூகம் அனைத்திற்கும் தொடர்புடையது தானே..
  
                       முடிவாக விகடன் இந்த பெண் போராளியின் பதிவு மூலம் நிறுவ விரும்புவது ஈழத்தின் அவலம் மட்டும் தான் என்றால் இந்த எதிர்வினையே தேவையற்றது. ஆனால்  வேரோடும், வேரடி மண்ணோடும் ஈழ விடுதலைப் போராட்டம் பிடுங்கி எறியப்பட்டு விட்டது என்கிற பிரகடனம் தான் இதில் மிக முக்கிய அம்சமாக வெளிபடுகிறது. இந்த பிரகடனம் இன்றளவும் இனப்படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, தனி ஈழத்திற்காக, பொதுவாக்கெடுப்பிற்காக எடுக்கப்படும் முன்னெடுப்புகளை பலவீனப்படுத்துவதோடு வீழ்த்தவும் முயல்கிறது.

               எக்காலமும் சிங்கள பேரினவாதத்தின் முகம்எல்லாம் முடிந்து விட்டதுஎன்றெண்ணி சிரிப்பினை சிந்த வைக்க எம்மால் முடியாது. கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழம் சாத்தியமே என்ற செய்திதான்  உலகத் தமிழினத்தின் ஒற்றை பிரகடனம். இதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

இதுவெல்லாம் விகடனுக்கு புரியும். இருந்தும் ஏன் இந்த வில்லங்க வேலை ..? யாருக்கு தெரியும்..? சிங்கள ரத்னாக்கள் புன்னகைக்கிறார்கள்.

     -மணி செந்தில்