புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..
கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்...

திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…
கருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.
மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு..
உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.
முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.
என்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.
டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )
என்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா ஆயிட்டிச்சி.
ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.
அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .
விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?
இப்படிக்கு.
கருணாநிதியின் கடிதம்
வணக்கங்கள்.

அன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு ..
வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் நான் எழுதுகிறேன். நாம் துயருற்ற கணங்களை நமக்குள்ளே நிறுத்துவோம் . அவை அளிக்கும் நமக்கான ஆற்றல் மிகுந்த வன்மத்தினை.
என் இனம் வீழ்ந்த துயரமே என்னை எழுத வைக்கிறது. தோல்வியின் வன்மமே என்னை இயங்க வைக்கிறது. எம் இனத்திற்கான விடுதலைக் கனவே என் எழுத்திற்கான அடிப்படை.
எழுதுவோம்..இயங்குவோம்..இறங்குவோம்.
நேசங்களுடன்
மணி.செந்தில்
மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..
(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.)மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..
ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி ...வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர்க் கொள்ளலாம்.
இந்த வக்கிரக்காரர்களின் பின்புல அரசியல் மிக கீழ்த்தரமானது. மக்கள் அவலத்தின் ஊடே இவர்கள் தேடுவது எவ்விதமான நியாயத் தீர்வுகளும் இல்லை. மாறாக இவர்களின் சொல்களின் ஊடாக கசியும் மனித இறைச்சி வாசனை கொடுங்கோலன் ராஜபக்சே மனநிலையை விட அபாயமானது. புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகுதான் இவர்களுக்கு வாயே முளைத்திருக்கிறது..முளைத்ததும் கள்ளிப் பாலாய் சொட்டுகிறது. இது போன்ற நபர்களை பொருட்படுத்தாமல் இருப்பதும் அபாயம்தான். இவர்களை தனிமைப்படுத்துவதும்..இவர்களின் பின்புல அரசியலை ஊரறியச் செய்வதும்தான் நம் பணியாக இருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்தினை வாய் கூசாமல் விமர்சனம் என்கிற பெயரில் ஏசவும், தூற்றவும் துணிகிற இவர்களது சொல்லாடல்களின் பின்னால் உள்ள அரசியல் என்ன தெரியுமா..?
இவர்களின் ஒருவரான சுகன் ..சென்னையில் நடந்த சமீபத்திய கூட்டமொன்றில் சிங்கள தேசிய பாடலை பெருமையுடன் பாடுவதில் இருந்து இவர்கள் யார் ...? இந்த நரிகள் யாருக்காக ஓலமிடுகின்றன...? என்பது தெரியவில்லையா..?
தோழமையுடன்
மணி.செந்தில்
கும்பகோணம்
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
தாயகத் தமிழகத்திலிருந்து...மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. உங்களின் முகத்தை பார்க்க கூட எங்களுக்கு திராணியில்லை. உங்களின் துயரத்தை கேட்டு பொங்கி அழ கூட எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
இங்கே சினிமா ரசனையும்..மாத சம்பளம் வாங்கும் வர்க்கமும்…போதையில் முழ்கிக் கிடக்கும் கூட்டமும் அரசியலை தீர்மானிக்கின்றன..இங்கே யாருக்கும் தொன்மம் குறித்த புரிதலோ..தமிழ்ச் சமூகம் குறித்த அறிதலோ இல்லை.
மிக எளிதாக நாங்கள் விலைபோனோம் உறவுகளே… எங்களை நாங்களே காட்டிக் கொடுக்க சில ரூபாய் தாள்கள் போதுமானதாக இருந்தது. எங்களின் தொன்ம பெருமை மிகு அடையாளமாய் இருந்த உங்களை கொன்று குவிக்க காரணமாய் இருந்தவர்கள் மேடை ஏறும் போது..நாங்கள் தலைவர்கள் தொண்டை கிழியும் அளவிற்கு வாழ்க கோஷம் போட்டுக் கொண்டு இருந்தோம். தமிழ் மரபுகளை மீட்டெடுத்து..இந்த தலைமுறையின் கண்களுக்கு முன்னாலேயே நாடு கட்டி ஆண்டு பார்த்த எங்கள் உறவுகளான உங்களை அழிக்க மூலமாய் இருந்தவர்களின் கரங்களில் நாங்கள் மலர்க் கொத்து கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் தொப்புள் கொடி நம்மை துவளாமல் காக்கும் என நம்பிக்கையோடு இருந்தீர்கள் உறவுகளே….இறுதி வரைக்கும் காத்திருந்தீர்கள்.ஆனால் நாங்கள் ..கேவலம். ஒரு சாராயப் பாக்கெட்டிற்காகவும், பிரியாணி பொட்டலத்திற்காகவும், இருநூறு ரூபாய் காசுக்காகவும் உங்களை கைக் கழுவி விட்டோம் உறவுகளே…
நீங்கள் பசியால் கதறிய போது..கூக்குரல் கேட்க கூடாது என மருத்துவமனையின் ஏசி அறைக்குள் ஒளிந்துக் கொண்டோம்..
சாவுக் குழிகளுக்குள் நின்றுக் கொண்டு யாராவது காப்பாற்ற வாருங்களேன் நீங்கள் என கதறிய போது ..நாங்கள் கடற்கரை காற்று வாங்க … மதிய உணவு நேரம் வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தினோம்.
மழை மழையாய் பொழிந்த குண்டுகளினால் காயம் பட்டு…வலி பொறுக்க முடியாமல் நீங்கள் சயனைடு குப்பிகளை மென்ற போது..நாங்கள் தேர்தல் வெளிச்சத்தில் எங்களை மறந்துக் கொண்டிருந்தோம்.
எல்லாம் முடிந்தது. வதை முகாம்களில் சிக்குண்டு கிடக்கிற உங்களை நாங்கள் சிந்தித்து பார்க்கவே கூடாது என்பதற்காக..விதவிதமான திரைக்கதைகள்..விதவிதமான நாடகங்கள்..
ஈழ உறவுகளை காப்பாற்றாமல் ..இந்த ஆட்சி இருந்தால் என்ன..போனால் என்ன என்று உருக்கமாய் அய்யகோ கூப்பாடு போட்டோம். .
இங்கு அனைத்திற்குமே ஒரு விலை இருக்கிறது..
எனவே தான் எங்களது ஊழலுக்கும் ,பதவிக்குமான விலையாய் உங்களை நிர்ணயித்தோம்.
ஆனால் டெல்லிக்காரன் புத்திசாலி. இந்த முறை அவன் வாங்கியது உங்களை அல்ல உறவுகளே..
எங்களை.
எங்களை நாங்களே ஒரு விலை போட்டு விற்றுக் கொண்ட கூத்திற்கு இங்கே வித்தியாசமான ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள் – அது பெயர் தேர்தல்.
இனி தாயகத் தமிழகத்தில் இப்போது வாழும் இந்த தலைமுறை தன் வாழ்நாள் முழுக்க துயர் மிகு வலியை சுமந்தே வாழும். இதற்கு அப்பாலும் உங்களை நாங்கள் எங்கள் உயிரினும் மேலாய் நேசித்தோம் உறவுகளே..அதை நாங்கள் முத்துக்குமாராய் நிரூபித்தும் காட்டினோம்.,தெரு தெருவாய் அலைந்து மக்களை திரட்டி..ஆர்பார்ட்டம், பேரணி, உண்ணாவிரதம், மறியல், மனித சங்கிலி என அனைத்தும் செய்தோம்.ஆனால் இந்திய அரசு எங்களை சிறிது கூட மதிக்க வில்லை. எப்படி எங்களை மத்திய அரசு மதிக்கும்..? பதவிக்காகவும், ஊழல் பிழைப்பிற்காகவும் எங்கள் தலைவர்கள் தான் டெல்லியின் காலை தொழுதுக் கொண்டிருக்கிறார்களே....எப்படி மதிக்கும்...?...எல்லாம் முடிந்த பின்னர்...என்ன செய்வது என்று தெரியாமல் வலி மிகுந்த மெளனத்தோடு தலைக் குனிந்து நடக்கிறோம்... பிறர் அறியாமல் தனிமையில் அழுகிறோம்.. தலைவரால் நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.. நாங்கள் தலைவர்களால் அழிந்துப் போனோம். இது தான் உண்மை.தமிழர்களுக்கான தேசத்தை நீங்கள் அவசியம் கட்டமைப்பீர்கள். உறவுளே... அதில் எனக்கெல்லாம் எள்ளவும் சந்தேகமில்லை..ஆனால் அந்த வெற்றியில் நாயினும் இழி பிறவிகளான எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நீங்கள் எழுவதும் …வாழ்வதும் சாத்தியம் தான் …ஆனால் நாங்கள்.?
துரோகங்களை வெல்லுங்கள்…
யாருக்கும்..எதற்கும் விலை போகாதீர்கள்…
நல்லத் தலைவனின் வழி தொடருங்கள்..
இல்லையேல் நாளை நம்முடையதல்ல..
அதற்கு சாட்சியாக… தோற்ற சமூகமாக..உங்கள் தாயக தமிழ் உறவுகள்
நாங்கள் இருக்கிறோம்..
எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்..
எப்படி வாழக் கூடாது என்பதற்கு.
தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….
மணி.செந்தில்
கவிஞர். தாமரை அவர்களின் பதில்.
Sorry that I've to reply in english as i don have tamil font . I keep getting a lot of cals from all over the world as a response to my speech . T;hough i am not an orator, i spoke bec , as you said, that is the only thing we can do now. Your letter explains perfectly the feeling of an ordinary tamilian .
Lets hope for a good news. Til then let us do whatever we can , to eradicate congress from tamil soil.
Nanri thozhar.
anbudan thamarai
எழுத்தாளர்.எஸ்.ரா அவர்களுக்கு...
என் மதிப்பிற்கும்,மிகுந்த அன்பிற்கும் உரிய எஸ்.ரா அய்யா அவர்களுக்கு....
வணக்கத்துடன் மணி செந்தில். மிக நேர்த்தியாக ,அழகாக, தரமாக இணையத்தளம் உருவாகி உள்ளது..
மிகவும் மகிழ்ச்சி...
உங்களின் ஒவ்வொரு எழுத்தையும் எப்படியாவது தேடி வாசித்து விடுதலே வாழ்வின் இலக்காக கொண்ட எனக்கு இந்த இணையத்தளம் சிறகு முளைக்க வைத்துள்ளது.....
என் தவிப்பும்,தணிப்பும் உங்கள் எழுத்துக்கள் மூலமே நிகழ்கின்றன...இரவின் ஏதோ ஒரு புள்ளியில் நான் விழிக்கும் போது இன்றளவும் நடந்து செல்லும் நீருற்றில் மனம் நனைக்காமல் படுக்க முடியவில்லை...
உங்கள் புத்தகங்களை படிக்க எனக்கு கால,நேர,இட வரையறைகள் இல்லை..நெடுங்குருதியின் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க துவங்குவேன்....துணையெழுத்தை இன்று வாசித்தாலும் கண்கலங்குகிறேன்...ஏதேனும் முடிவில்லாத சாலைகளில் அந்த எளிய மனிதர்களை கண்டு விட மாட்டோமா என்று தவிக்கிறேன்..பின்னிரவின் விழிப்பின் ஊடே எனக்கு சதா உபபாண்டவத்து சகுனியின் பகடை உருட்டும் ஒலி துரத்திக் கொண்டே உள்ளது...
நான் அதிகம் நிம்மதியாக இருப்பதும் ,நிம்மதியற்று போவதும் தங்கள் எழுத்துக்களால்தான்...
ஒரு வாசகனை ஒரு படைப்பாளன் இந்த அளவில் பாதிக்க முடியுமா என்பதே எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது.
இன்னும் நிறைய இருக்கிறது...
ஒரு மழை பொழியும் நாளில்....
நாம் இதை கும்பகோணத்தில் உள்ள நம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசுவோம்......
முடிவிலியாக நீளும் நம் உரையாடல்களின் மூலமே நான் மீதி நாட்களில் வாழ்வதற்கான ஆர்வத்தையும், ஆசையையும் சேகரித்துக் கொள்கிறேன்...
மிகுந்த மகிழ்ச்சியோடு....
உங்களின் எளிய வாசகன்.
மணி.செந்தில்
