Showing posts with label கட்டுரைகள்... Show all posts
Showing posts with label கட்டுரைகள்... Show all posts

பெரியாரின் ‘பச்சைத் தமிழரும்’-தொடரும் தமிழ்த்தேசிய முழக்கங்களும்..


தாயக விடுதலைக்காக ஈழ மண்ணில் பெருக்கெடுத்த மண்ணின் மைந்தர்களின் செங்குருதிதான் தமிழர்களின் மற்றொரு தாய்நிலமான தமிழகத்திலும் தமிழ்த் தேசிய இனத்திற்கான உரிமைக் குரலை கூர்மைப்படுத்தி,செழுமைப்படுத்தி,வலுவேற்றியது. தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கும் மண்ணின் மைந்தர்களின் குரல் வரலாற்றில்  எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்து ஒலிக்கத்துவங்கி இருப்பதன் அரசியல் மிகவும் நுணுக்கமானது. தமிழர் என்ற உணர்வின் அரசியல் வெளியாக இதுவரை கருதப்பட்டு வந்த திராவிடம் முரண் செயல்பாடுகளால் தனது இறுதி காலத்தில் நிற்கிறது. அவரவர் அளவிற்கு திராவிடர் –தமிழர் என சிந்திக்க வைத்ததில் இம்மண்ணின் மைந்தர்களுக்காக புறப்பட்டு இருக்கின்ற புதிய அரசியலுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
எப்படிப்பட்ட மகத்தான தத்துவமும் ,கருத்தும்  உரிய தலைமைகளால் உறுதியாக்கப்படாவிட்டால் உருக்குலைந்து போகும் என்ற சரித்திர உண்மைக்கு சமீபத்திய சரியான எடுத்துக்காட்டு திராவிடம் .
திராவிடம் என்பது மொழியா என்றால் இல்லை.
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என நீளும் ஒரு மொழிக் குடும்பத்தின் பொதுப்பெயராகத்தான் நான் சூட்டினேன் என்கிறார் கால்டுவெல். நான் இனத்தால் திராவிடன்,மொழியால் தமிழன் என கதறும் திமுக தலைவர் கருணாநிதி கருத்துப்படி அது இனத்தினை குறிக்கும் சொல்லா என்றால் ஒரு இனத்திற்கான வரையறைகளான ஒரே மொழி, குறிப்பிட்ட நிலம், பொதுவான பொருளாதார வாழ்வு,பொது பண்பாட்டில் வெளிபடும் தாம் ஓரினம் என்ற உளவியல் என்பவைகளான எவையும் திராவிடத்திற்கு பொருந்தவில்லை. பிறகு திராவிடம் ஒரு நிலமா என ஆயும் போது வடவேங்கடம் தென்குமரியோடு தமிழன் எல்லை முடிந்து விட்டது எனில் திராவிட நிலம்  என்பது என்ன..? .மராத்தியும்,குசராத்தும் கூட ஒரு காலத்தில் திராவிட நிலங்களாக கருதப்பட்டிருக்கிறது .1948 ஆம் ஆண்டில் திருவாரூர் மாநாட்டில் உரையாற்றிய தந்தை பெரியார் இனி திராவிடம் என்ற சொல் மண் சார்ந்ததாக இருக்க இயலாது என அறிவித்தார்.   பிறகு நிலமும்,இனமும்,ஒரு மொழியும் இல்லாத திராவிடம் கடந்த 60 ஆண்டுகளாக ஒரு பெரு நிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்னமும் ஆள துடிக்கிறது எனில் இந்த மண்ணின் பூர்வீக குடிகளான  தமிழர் என்கிற தேசிய இனத்தின் உரிமைக்குரல் எப்படி தவறாகும் .?
 இன்றைய திராவிட கருத்தியல்களுக்கு மூல அமைப்பாக தோன்றிய நீதிகட்சியின் தோற்றம் 1916 –ல் நடந்தது. பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக துவங்கிய அதன் துவக்கம் ‘திராவிடம்’ என்ற பெயரில் துவங்கப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 1916 துவங்கி அதன் இறுதியான காலம் 1936 வரையிலான 17 ஆண்டுக் காலத்தில் தமிழர் எவரும் அக்கட்சியில் தலைவர் ஆனதில்லை.  அது மட்டுமில்லாமல் பார்ப்பனரல்லாதோர் அமைப்பாக கருதப்பட்ட நீதிக்கட்சியின் ஆதரவோடு என்.ஆர்.சேதுரத்தினம் அய்யர் என்ற பார்ப்பனர் கூட அமைச்சராக முடிந்தது.
 ஆனால் அக்கட்சியில் இருந்த இரட்டைமலை சீனிவாசன்,திரு.வி.ஐ.முனுசாமி பிள்ளை,திரு.தர்மலிங்கம் பிள்ளை , திரு என்.சிவராஜ் போன்ற  படித்த பட்டதாரி தமிழர்கள் அமைச்சராக கூட ஆகமுடியவில்லை. தமிழனாக, தாழ்த்தப்பட்டவனாக பிறந்ததுதான்  இவர்களின் மாபெரும் தகுதி குறைவு.  1923 முதல் 1933 வரை சென்னை சட்டமன்றத்திற்கு சென்னை தொகுதிக்கு உரிய 4 பொது இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 3 பேர் தமிழர் அல்லதோர். 1 தமிழர். மேலும் நீதிக்கட்சி ஆண்ட 16 ஆண்டு காலத்தில்  சென்னை மாநகராட்சிக்கு தெலுங்கரே கமிசனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1916-ல் நீதிக்கட்சி பிறந்த போது  தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் மூன்று நாளிதழ்கள் துவங்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜஸ்டீஸ் எனவும், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனவும் துவங்கப்பட்ட அந்த நாளிதழ் தமிழில் மட்டும் ‘திராவிடன் ‘ என்ற பெயரில் வெளிவந்தது மிகவும் கவனிக்கத்தக்கது.
திராவிடம் பார்ப்பனர்களுக்கு எதிரான ஒரு குறியீட்டு சொல். தமிழன் என்றால் பார்ப்பான் புகுந்து விடுவான்.திராவிடன் என்றால் பார்ப்பனுக்கு இடமில்லை என்பதான திராவிட சிந்தனை மரபு எங்கிருந்து துவங்கியது என நாம் ஆராயும் போது  தென்னிந்தியாவில் பிறந்த திருஞான சம்பந்தரை ’திராவிட சிசு’ என  அழைப்பு ஆதிசங்கரனின் விளிப்பு    நமக்கு தெளிவாக அறிவுறுத்துவது என்னவென்றால்  20 ஆம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் சமூகத்தேவைகளே பார்ப்பனரல்லாதோரை ஒரு குடையின் கீழ் திரட்டும் அரசியல் தந்திரோபயமான (political tactics)  சொல் ‘திராவிடம்’ என்பதுதான் .
எதையும் இவரிடம் இருந்துதான் துவங்க வேண்டி இருக்கிறது. இதையும் இவரிடமிருந்துதான் துவங்கி இருக்கிறோம். தமிழ்த் தேசிய உணர்விற்கு எதிராக பெரியார் நிறுத்தும் அரசியல் கண்டிப்பாக முரண் தன்மை உடையது என்ற புரிதலில் தான் நாம் பெரியாரை அணுகுகிறோம்.
தமிழ் நாட்டினை தமிழன் தான் ஆள வேண்டும் என்ற உரத்தக்குரலை முதன் முதலில் அரசியல் தளத்தில் எழுப்பிய தந்தை பெரியாரை தமிழ்த்தேசிய உணர்வின் மூலவராக நாம் அறிகிறோம். தமிழ்நாடு தமிழருக்கே  என்ற குரலை தனது அரசியல் வாழ்க்கையின் துவக்க காலத்திலும், இறுதி காலத்திலும் தீர்க்கமாக முழங்கிவிட்டு போன அவரது தெளிவு  இன்று மாற்றார்கள் இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற துடிப்பை உள்ளுக்குள் உருவேற்றிக் கொண்டு உதட்டில் திராவிடம் முழங்கும் அறிஞர்களிடம் உண்டா என்பதை நாம் சற்று விரிவாக பார்ப்போம்.
‘1924 முதல் 1954 வரை ஒரு தமிழன் கூட முதன் மந்திரியாக வரமுடியவில்லை. முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாக கொண்ட தமிழர் ஒருவர் முதலமைச்சராக வந்திருக்கிறார்”. (காமராசர் முதல்வரான போது தந்தை பெரியார் விடுதலையில் 3-12-19)
காமராசரை தந்தை பெரியார் ஆதரித்தது வரலாற்றின் ஏடுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது. காமராசரை தந்தை பெரியார் ஆதரித்து பேசிய பெரும்பாலான கூட்டங்களில் அவரை ‘பச்சைத் தமிழர்’ என அழைத்ததன் அரசியலை இப்போது உள்ள ’திராவிட பற்றாளர்கள்’ ஏற்பார்களா ? –இதில் பச்சை என்கிற சொல்லில் தான் தந்தை பெரியாரின் ஆன்ம விருப்பம் புதைந்து கிடக்கிறது. மிகவும் தூய இரத்த கலப்பில்லாத மண்ணின் மரபணு மைந்தனாக (purest)  காமராசரை தந்தை பெரியார் உருவகிக்கிறார். வெறும் தமிழர் என்று சொன்னால் போதாது.அதிலும் கறார் தன்மை கொண்டு,இன்னமும் வடிகட்டிய வார்த்தையான ‘பச்சை தமிழராக’காமராசரை தந்தை பெரியார் அடையாளம் காட்டியது எதற்காக.? தமிழ்நாட்டினை திராவிடன் என்ற பெயரால் தெலுங்கனும்,கன்னடனும்,மலையாளியும், ஆள்வதற்காகவா..?- ஒரு தலைவனை முன்னிருத்தும் போது தந்தை பெரியாருக்கு இருந்த புரிதல்,அக்கறை ஏன் இந்த திராவிடவியாளர்களுக்கு இல்லை ?
தமிழன் என்று பேசினால் தந்தைபெரியாரை எதிராக நிறுத்துவதென்பது அவரது சிந்தனைகளுக்கு திராவிட பற்றாளர்கள் செய்கிற துரோகம்.
 ஒரு திராவிட இயக்கத்திற்கு கன்னடத்து ஆரிய தலைமை வாய்த்தது பற்றியோ,பெரியாரின் பள்ளியில் பயின்று சாய்பாபாவின் பெருந்தொண்டராக மாறிப் போன மஞ்சள் துண்டு போர்த்தி ,குடும்ப உறுப்பினர்களின் சோதிட ஆலோசனைகளின் பேரில் செயல்படும்  கருணாநிதி தலைமை தாங்குவது பற்றியோ, ஒரு தனியார் நிறுவனமாக  திக வை மாற்றிய கார்ப்பரேட் முதலாளி வீரமணி பற்றியோ , ஈசானி மூலையில் புறாக்களை பறக்க விட்டு,திருப்பதி கோவிலில் திராவிட கட்சி துவக்கப் பத்திரிக்கையை வைத்து துதித்த விஜயகாந்த் பற்றி திராவிட பற்றாளர்களுக்கு எவ்வித அக்கறையுமில்லை. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை பெரியார் விசுவாசம் போற்றும் இம் மண்ணின் மைந்தர்கள் மேல் தான் இவர்களுக்கு இத்தனை காழ்ப்புணர்வு.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ,முல்லை பெரியாற்றிலும், காவேரி நதி நீரிலும்,பாலாற்றிலும், பிற ’திராவிட’ சகோதரர்களால் பாதிக்கப்பட்ட பிறகு,இந்த இத்துப் போன திராவிடத்தினை  மற்ற திராவிட இனங்கள் என இவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தெலுங்கர்களோ,மலையாளிகளோ,கன்னடர்களோ  ஒரு முடியளவு கூட மதிக்காத நிலை இருக்கும் போது தமிழனை மட்டும் திராவிடனாய் இருக்கச்சொல்லுவதன் அரசியல் இந்த மண்ணில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் பெற்றிருக்கின்ற, தொடர்ந்து பெற்று வருகின்ற சமூக,கலை,அரசியல்,பண்பாட்டு செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் தொலைந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக என்பது அப்பட்டமாக தெரிகிறது .

தமிழன் என்றால் பார்ப்பனர்கள் இடம்பெற்று விடுவார்கள் என்கிற அச்சம் தேவையற்றது மற்றுமல்ல, நம்மை நம் அடையாளத்தின் மூலம் அங்கீகாரம் பெறுவதை தடுக்கின்ற திராவிடத்தின் சூழ்ச்சி என நாம் தெளிவாக வேண்டும். இன்று எந்த தமிழ்த்தேசிய அமைப்பிலும் பார்ப்பனர்கள் இடம் பெறுவது இல்லை. .இது வரை இடம் பெற்றுதும் இல்லை. ஆனால் திராவிடக் கட்சிகளில் இன்று இடம் பெற்றுள்ள பார்ப்பனர்களின் பட்டியலை நாம் வெளியிட்டால் இப்பக்கங்கள் போதாது தமிழ் ,தமிழர் என்று பேசினால் இந்து ராம்,துக்ளக் சோ, மாலன்,சுப்பிரமணிய சாமி போன்ற அக்கிரகாரத்து அசல் மனிதர்களுக்கு இன்றும் வேப்பங்காயாகத்தான் கசக்கிறது என்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன் தமிழ் மண்ணில் உண்டு. ஆரிய படை வேண்டாம், ஆரியத்தின் சடையை தொட்ட திராவிட மன்னன் என்று எங்கேயும் குறிப்புகள் உண்டா.? 
1933 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தந்தை பெரியாரின் முழக்கம் அப்போது ஆரிய பத்திரிக்கையான ஆனந்த விகடனுக்கு கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. ‘எலி வலை எலிகளுக்கே’ என எகத்தாளம் பேசவும் வைத்தது, ஆரியத்தின் தீவிர எதிரி தமிழ்த் தேசியமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய திராவிடம் எக்காலத்திலும் இல்லை.

திராவிடத்தின் இன்றைய இலக்கு தமிழ் மண்ணில் தமிழனைத் தவிர மற்றவர்களுக்கான அரசியல் இடத்தினை உறுதி செய்வது . இம் மண்ணின் மைந்தர்கள்  மண்ணை ஆள விரும்பும் இயல்பான விருப்புறுதியை குலைப்பது.
நான் பிறப்பால்,மொழியால்,இனத்தால்,பண்பாட்டால் தமிழன். நான் ஏன் திராவிடன் என அழைக்கப்பட வேண்டும் என்று கேட்டால் யாரிடமும் பதிலல்லை.  பார்ப்பனரல்லாதோருக்கான ஆரிய எதிர்ப்பு அரசியல் குறியீட்டுச் சொல்தான் திராவிடம் என்றால் இன்றைய திராவிடம் என்ற கருத்தியலின் அரசியல் வடிவங்கள் அதற்கு முற்றிலும் முரணானவை. நான் மொழியால் தமிழன்,இனத்தால் திராவிடன்,நாட்டால் இந்தியன் என குழப்பும் கருணாநிதி  1947க்கு முன் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்.? கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதுவதற்கு முன்னால் பிறந்திருந்தால் என்னவாக இருந்திருப்பார்..? .
இந்தியம்,திராவிடம் என்ற இரண்டுமே தமிழ்த்தேசிய கருத்தியல்களுக்கு எதிரானவை. தமிழரின் தனித்த அடையாளங்களை, இறையாண்மையை மறுப்பவை. மேலும் இவைகள் தான் ஆரியத்தினை பாதுக்காக்கும் கவசங்களாய் இன்று செயல்படுபவை.ஈழத்தின் அரசியலில் சிங்களனின் ஆதிக்கத்தினை எதிர்க்கும் திராவிட பற்றாளர்கள் இங்கே ..இந்த மண்ணில்  தமிழனின் அரசியலில் தெலுங்கனின், கன்னடனின் ஆதிக்கத்தினை ஏன் இங்கே எதிர்க்க மறுக்கிறார்கள் ?
திராவிடம் எனும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல்.இது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. திராவிடம் என்பது கற்பனை –(பாவலரேறு பெருஞ்சித்திரனார். –வேண்டும் விடுதலை –பக்கம் எண் 294,295 )
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூட தனது இறுதிக்காலத்தில் தமிழ்த்தேசியராகத்தான் வாழ்ந்தார் என்பதும்,திராவிட நாடு என வருகின்ற இடத்தில் செந்தமிழ்நாடு என திருத்தினார் என்பதும் வரலாறு. எம் இனத்தின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்  இந்த இனத்தினை தமிழ்த்தேசிய இனம் என்றுதான் வரையறுத்தாரே தவிர திராவிட இனம் என திருகி குழப்பவில்லை.
தமிழர்களில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டோரை ஆதி திராவிடர்கள் என அழைத்த திராவிட பற்றாளர்கள் ஆதி திராவிடர் என ஆந்திராவில் யாரையாவது அடையாளம் காட்ட இயலுமா ? தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்ட தமிழர்களின் நிலை கருதி 1890- துவங்கப்பட்ட பறையர் மகாஜன சபை 1910 ஆண்டு கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலின் தாக்கத்தினால் ‘ஆதி திராவிடர் மகாஜன சபை’ என பெயர் மாற்றம் அடைந்தது. இந்த சபை 1918 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தங்களை பறையர்-பஞ்சமர் என குறிக்கக் கூடாது, ஆதி திராவிடர் என குறிக்க வேண்டும் என மனு அளித்தது. ஆனால் தெலுங்கர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. தங்களை ஆதி ஆந்திரர் என அறிவிக்கவேண்டும் என போராடிய தெலுங்கர்கள் வென்றார்கள். தாழ்த்தப்பட்ட கன்னடர்களும் தங்களை ஆதி திராவிடர் என அழைக்கக்கூடாது என்றும் தங்களை ஆதி கன்னடர் என்றுதான் பதிய வேண்டும் எனவும் போராடி வென்றார்கள். 1922 –ல் சென்னை சட்டமன்றத்தில் நீதிக் கட்சி கொண்டுவந்த தீர்மானத்தின் படி தமிழன் ஆதி கன்னடன் ஆதி கன்னடன் ஆனான். தெலுங்கன் ஆதி தெலுங்கன் ஆனான். ஆனால் தமிழனை மட்டும் ஆதி திராவிடன் ஆக்கி ‘திராவிட’ தொடர்பினை அறுந்து விடாமல் பாதுகாத்தது நீதிக்கட்சியில் ஆதிக்கம் பெற்ற தெலுங்கர்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே ஆகும்.  ஆந்திராவினைச் சேர்ந்த திரைப்பட நடிகர் என்.டி.ராமராவ் அந்த மண்ணுக்கான அரசியலை முன் வைத்து தெலுங்கு தேசம் துவங்கினார். ஆனால் நம் நாட்டு நடிகர் விசயகாந்த் திராவிடத்தில் தேசியத்தினை ஊற்றி முற்போக்கில் முழ்கினார். ஏனெனில் திராவிடம் என்று சொன்னால் தான் தமிழர் அல்லாத மாற்றார்கள் தமிழ் மண்ணில் அரசியல் பிழைக்க தகவாக இருக்க முடியும்.
தந்தை பெரியார் திராவிடம் என்ற கருத்தியலை சமூகத்தளத்தில் பயன்படுத்தியதன் நோக்கம் மிக வெளிப்படையானது. தீவிர பார்ப்பன எதிர்ப்பினை சமூக மாற்றத்திற்காக தன் கையில் எடுத்த தந்தை பெரியார் சமூகக் கொடுமைகளுக்கு ஆதாரமாக இந்து மதமும், அது பாதுகாக்குகிற பார்ப்பன மேலாண்மையும் இருப்பதை கண்டார். எனவே தான் இந்து மத எதிர்ப்பு,மற்றும் அது சார்ந்த கடவுள் மறுப்பு, அது வளர்த்து வந்த சமூக பண்பாட்டு காரணிகளை வேறோடு வீழ்த்துதல் ஆகியவற்றை தனது அரசியலாக அவர் கொண்டார். இந்து மத பண்பாட்டினை தாங்கிப் பிடிக்கும் மிகப்பெரிய ஆயுதங்களாக தமிழ்மொழியும், அதன் இலக்கியங்களும் இருப்பதை உணர்ந்தார். தமிழன் என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது. மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன் வைத்த மறைமலை அடிகளார்,ம.பொ.சி,திரு.வி.க போன்றோர் சமய ஆதரவாளர்களாக திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில் வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர்,  பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன்  போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற் போல் தமிழ்த்தேசிய கருத்தியலை படைக்க முயன்றனர். பெரியாரின் அக விருப்பமான தமிழ்த்தேசிய கருத்தியலை தத்துவார்த்தமாக நிறுவியதில் அய்யா பழ.நெடுமாறன்,அய்யா.பெ.மணியரசன்,தோழர்.தியாகு,பேரா.சுப.வீ போன்றோர்க்கு அதிகம் பங்கு உண்டு. சித்தர் மரபில் துவங்கி ,தந்தை பெரியாரின் சிந்தனை மரபின் தொடர்ச்சியாக செழுமையடைந்து, ஈழம் கற்றுத்தந்த பாடங்களை உள்வாங்கி இன்று தமிழ்த்தேசிய கருத்தியல் தனக்கென அரசியல் வெளியையும் தகவமைக்க துவங்கியுள்ளது. தமிழ் மொழி கல்வி குறித்து ஆழமாக சிந்தித்த தந்தை பெரியாரை ஆங்கிலம் படிக்கச்சொல்லி தமிழை தவிர்க்கச்சொன்னார் பெரியார் என முழங்கும் திராவிட பற்றாளர்கள்
”ஆங்கிலம் வளர்ந்த மொழி-விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் வளர்ச்சி யடையாத பழங்கால மொழி என்பதும் எனது மதிப்பீடு .இதை நான் சொன்னதற்கான மிக முக்கியமான நோக்கம் தமிழ்மொழி ஆங்கிலம் அளவிற்கு விஞ்ஞான மொழியாக,பகுத்தறிவு மொழியாக ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்ழொழி மீது எனக்கு  தனி வெறுப்பில்லை. நான் பேசுவதும் ,எழுதுவதும் தமிழில் தான்”. (1-12-1970 விடுதலை தலையங்கம்) என்று தமிழ்மொழி மீது பெரியார் கொண்டிருக்கிற பற்றினை, மொழி வளரவேண்டும் என்கிற பரிதவிப்பினை உணர்வார்களா..?. அவருக்கு தமிழ் மொழி மீது இருந்த காத்திரம் அதன் சமயம் சார்ந்த தன்மை பொறுத்ததே தவிர கண்டிப்பாக  அதன் இனம் சார்ந்த  தன்மை பொறுத்தது இல்லை.
 தந்தை பெரியார் தனது இறுதி காலம் வரை முழங்கிய முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே. அவரது இறுதி பிறந்த நாள் அறிக்கையிலும் (1973 செப்டம்பர் ) தனது உறுதியான ,இறுதியான விருப்பத்தினை உரக்கச் சொல்லி விட்டுத்தான் போனார். தந்தை பெரியார் நின்ற காலமும் ,களமும் இன்று வெகுவாக மாறி இருக்கின்றன.  வெகு சன அரசியல் விழிப்புணர்வு கூடியிருக்கிறது. ஈழத்தின் அழிவு உணர்வினையும்,விழிப்பினையும்,பாடங்களையும் போதித்து இருக்கிறது. எனவே ,  என்ன சொன்னாலும் அப்படியே ஏற்காதே என்றும் சிந்தித்து செயல்படு என்றும் அறைகூவிய தந்தை பெரியாரின் கருத்துக்களை மண்ணுக்கேற்ற மார்க்சியம் போல சூழலின் பாற்பட்டு, தற்காலத்திற்கேற்றாற் போல் தகவமைக்க வேண்டிய மாபெரும் கடமை அறிவுலகத்திற்கு உண்டு. தமிழ்த் தேசிய கருத்தியலை சமூக நீதி புரிதலின் வழி நின்று பெரியார் சிந்தனை மரபின் தொடர்ச்சியாய் வளர்த்து வார்த்தெடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை.
தந்தை பெரியார் பிறப்பால் கன்னடர். அதை மறைக்காமல்,மறக்காமல் வெளிப்படுத்திய உண்மையாளர். தமிழ்மண்ணில் தனக்கென எழுந்த அரசியல் ஆதரவை தன் பதவிக்காக பயன்படுத்தாமல்  ஒரு தமிழனை முன் நிறுத்திய தகைமையாளர். அர்ஜெண்டினா நாட்டில்பிறந்தாலும் கியூப விடுதலைக்கு பாடுபட்ட சே குவேரா போன்ற, உலகப்பந்தின் ஏதோ மூலையில் பிறந்தாலும் உலக மாந்தனின் பசி பற்றி சிந்தித்த மாமனிதர் மார்க்சைப் போல ஆளுமை மிக்க புரட்சியாளர். அவரை புறக்கணித்து தமிழ்த் தேசமோ,தமிழ்த் தேசியமோ இல்லை. மாறாக அவர் வகுத்த பாதையில் தான்  தமிழர்கள் இன்றளவும் தனக்கான தேசியக் கருத்தியலோடு நடக்கிறார்கள்.
ஆம் எம் தந்தை பெரியார்.
 கண்டிப்பாக கன்னடனுக்கோ,தெலுங்கனுக்கோ,மலையாளிகளுக்கோ அல்ல.  
 தொடர்புடைய நூல்கள்:
1.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் –கால்டுவெல்
2. திராவிடம் தமிழ்த்தேசியம்-பெ.மணியரசன்-பன்மை வெளி வெளியிடு
3. பெரியார் ஈவேரா சிந்தனைகள் –வே. ஆனைமுத்து.-பெரியார்-நாகம்மை கல்வி அறக்கட்டளை
4.தமிழகத்தில் பிற மொழியினர் –ம.பொ.சிவஞானம்- புலம் வெளியீடு
5.பெரியார்-தமிழ்-தமிழர்-தமிழ்நாடு –தொல்தமிழன்.-கரந்தை வெளியிடு
6. மார்க்சியம்,பெரியாரியம்,தேசியம்- எஸ்.வி.ராஜதுரை –விடியல் பதிப்பகம்
7. பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம் -சுப.வீரபாண்டியன் -தமிழ் முழக்கம் வெளியீடு
8.பெரியாரும் பெருந்தலைவரும்- கோபண்ணா- நவ இந்தியா பதிப்பகம்

 -மணி.செந்தில்

மீண்டெழுந்த தமிழ் உணர்வில் சிதறுண்ட காங்கிரசு.-மணி செந்தில்


“ ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ, ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் விடுதலைப்பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்”

– தேசியத் தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள்.

நான் முதன்முதலில் அவரை சந்தித்தப்போது அவர் வெகு சாதாரணமான இருந்தார். ஒரு கிராமத்து எளிய மனிதனுக்குரிய சொற் பிரயோகங்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ அண்ணன்’, ’ மூத்தவர் ’என்றெல்லாம் தேசியத்தலைவரை அழைத்துக் கொண்டிருந்த தன்மை.எளிய உடை. அனைவரையும் கவரக் கூடிய புன்னகை. வயதானவர்கள் தன்னைக் காண வரும் போது எழுந்து நின்று வணங்கும் பணிவு . நான் அவரைக் காணும் போது கையில் சேகுவேரா புத்தகமான ’கனவிலிருந்து போராட்டத்திற்கு’ என்ற புத்தகத்தினை அவர் வைத்திருந்தார். உண்மையில் உணர்வோடிய ஒரு கனவிற்கு உயிர்க் கொடுக்க அவர் அப்போது தயாராகிக் கொண்டிருந்தார் என எனக்கு அப்போது தெரியவில்லை.

மறுமுறை நான் அவரைப் பார்த்த இடம் ஒரு சிறை . சிறை ஒரு மனிதனை இத்தனை உற்சாகமாக வைத்திருக்குமா என ஆச்சர்யப்பட வைத்த சந்திப்பு அது. உடல் வியர்த்து கண் சிவந்திருந்த அவர் பல நாள் உறக்கமற்று சிறை அறைக்குள் தவித்துக் கொண்டிருந்தார். ஈழ பெரு நில யுத்தம் தனது இறுதியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. தன்னோடு உடன் பிறந்தானாய் பிறந்த , தன்னோடு ஈழ நிலத்தில் பழகிய விடுதலைப்புலிகளின் தளபதிகள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்துக் கொண்டிருந்த கனமான நாட்கள் அவை. மிகுந்த கோபம் இருந்தது அவருக்கு. எந்த நொடியும் வெடித்து விடும் இதயச் சுமையோடு வார்த்தைகளில் தன் கோபத்தினை வைத்திருந்தார் அவர். தனது சகோதரர்கள் ஒவ்வொருவராய் வீர மரணம் எய்தும் போது குளியலறைக்குள் சென்று கத்தி, கதறி அழுது விட்டு வந்ததாக சொன்னார். அதை அவரது முகமே காட்டியது.

மிக நீண்ட தூர பயணம் அது. ஆபத்துக்கள் நிறைந்த , இழப்புகள் மலிந்த அந்த பயணத்திற்கு எங்களை தயார் செய்வதில் தன்னுடைய கடுமையான முயற்சியினை அவர் செலவிட்டுக் கொண்டிருந்தார். தமிழ்நாடு எங்கும் சுற்றி வரப்போகும் பயணத்திற்கு நாங்கள் அனைவரும் எங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளை தெரிவித்துக் கொண்டிருந்தோம். குறைவான நாட்களில் மிகுதியான மக்களை சந்திக்கப் போகும் அந்த பயணத்தில் எதிர்க்கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளை அவர் படிப்படியாக திட்டமிட்டார். எங்களின் ஒவ்வொரு அசைவையும் அவர்தான் தீர்மானித்தார். எங்களுடைய எதிரிகள் பலமானவர்கள். பண பலமும், ஆட்சி அதிகாரமும் நிரம்பிய எதிரிகளை எவ்விதமான அதிகாரமும், பொருளாதார வலுவும் இல்லாத ..இந்த எளிய இளைஞர்களாகிய நாங்கள் எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்ற பிரமிப்பு எங்களிடம் அப்போது இருந்தது. அப்போது அவர் சொன்னார் ’ எல்லாம் முடியும்.செய்வோம்’.

இது போன்ற சோதனை மிகு காலங்களில் சுடர் விடும் நம்பிக்கையை அவர் அவரது உள்ளொளியாக விளங்கும் , அவரது அண்ணன் பிரபாகரனிடம் இருந்து அவர் கற்றிருந்தார். அதைத்தான் எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்தார் . மக்களை சந்தியுங்கள், வீதியில் இறங்குங்கள் – மக்களை புறக்கணித்து விட்டு எதுவும் ஆகாது என எங்களிடம் கடுமையாக அவர் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு புதிய வரவான நாங்கள் மக்களை எவ்வாறு சந்திப்பது என கற்றிருக்கவில்லை . ஆனால் அவரோ ’மக்களிடமிருந்துதான் நாம் வந்திருக்கிறோம். மக்களுக்காக வந்திருக்கிறோம், மக்களிடமே போவோம்’ என்றார். தெருக்களை நோக்கி நகருங்கள் என்ற அவரது கண்டிப்பான உத்திரவில் நாங்கள் அனைவருமே கட்டுண்டு கிடந்தோம்.

மக்களை புறக்கணித்து விட்டு மண்டபங்களில் கருத்து கதா காலட்சேபசம் நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என நன்கு உணர்ந்திருந்தார். மக்களை திரட்டி பெரும் திரளாய் எதிரியோடு மோதாமல் எதுவும் நடக்காது என அறிந்திருந்தார் . வயதான தோள்களில் முடியாமல் தொங்கிக் கொண்டிருந்த ஜோல்னா பையில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவினை ஜீன்ஸ் அணிந்து, பிரபாகரன் பனியன் போட்ட இளைஞர்களின் கரங்களுக்கு அவர் மாற்றினார்.

பிரபாகரன் படம் வைத்திருந்தாலே கைது என்று அச்சம் ஊறிக் கிடந்த காலக்கட்டத்தில் தன் தலைவரின் படத்தினை நெஞ்சில் பனியன்களாக ஏந்தி வீதிகளில் திரிந்த இளைஞர் பட்டாளத்தினை அவர் உருவாக்கினார். ஒரு சிறிய துண்டறிக்கையானாலும் சரி.. அதை மிகுந்த நுணுக்கமாக ஆராய்ந்து ..திருத்தங்கள் கூறி அதை அவர் சிறப்பாக்கினார். தன்னை வாழ்க..வாழ்க என முழக்கமிடும் இளைஞர்களை கடிந்துக் கொண்ட அவர் தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க என முழங்கு என அறிவுறுத்தினார்.

அரசியல் கட்சியாக மாறிய உடனே ஓட்டு வாங்கிக் கொண்டு பதவி ஏறி பல்லக்கில் பவனி வர போவதற்கான திட்டம் இது என விமர்சனக் கணைகள் பாய்ந்து வந்த போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. பதவி தான் முக்கியம் என்றால் நான் திமுக, அதிமுக என ஏதோ ஒரு கட்சியில் இணைந்து விட்டிருப்பேனே, கட்சி,நிர்வாகம் எனவெல்லாம் தொந்தரவுகள் ஏதுமின்றி நான் நினைத்த பதவியை அடைந்திருப்பேனே.. என மிகுந்த அலட்சியமாக பதிலளித்தார். பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல்சேகரனார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், புலவர் கலியபெருமாள், போன்ற மறைந்த தமிழகத்தலைவர்களின் நினைவிடங்களுக்கு அவர் சென்ற போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அவர் சட்டை செய்ததே இல்லை. நானும் ஒரு நாள் இது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டதற்கு” மறைந்துப் போன நமது பாட்டான்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டிருக்கலாம். அவர்களுக்குள்ளாக இருந்த முரண்களை பெரிது படுத்தி இப்போது இருக்கும் அண்ணன் தம்பிகளை என்னால் அடிச்சிக்க வைக்க முடியாது. நான் தமிழனாய் ஒன்று படுத்த வந்திருக்கிறேன். யாரையும் குறை கூறி பிரிக்க அல்ல’ என்று தனது எளிய தமிழில் வலிமையாக சொன்னார்.

அவரிடம் அசைக்க முடியா கனவொன்று இருந்தது. அந்த கனவில் ஒரு இனத்தின் மீது கவிழ்ந்த துயரங்களுக்கு பிறகு மிஞ்சிய வன்மம் இருந்தது. என்ன விலைக் கொடுத்தேனும் நம் இனத்தினை அழித்த காங்கிரசுக்கு வாக்கு என்ற ஆயுதத்தினை பயன்படுத்தி வீழ்த்த வேண்டும் என்ற அவரது உளமார்ந்த விருப்பத்திற்கு அவர் எதையும் இழக்க தயாராக இருந்தார். கொடுஞ்சிறையும், கடுமையான அலைக்கழிப்புகளும் உடைய அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த உடற்உபாதைகள் அவரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கினாலும் அவரின் அசாத்திய கனவுகள் அவரை இயக்கிக் கொண்டே இருந்தன.

தன்னை சுற்றி தனது அண்ணன் பிரபாகரனின் படங்களை அவர் மாட்டியிருப்பதற்கு ஏதோ உளவியல் காரணம் இருக்கக் கூடும் என என் உள்மனம் சொல்லியது. ஆம். அது உண்மைதான். பல அசாத்தியங்களை சாத்தியப்படுத்தும் திறனை அவர் தேசியத் தலைவரிடம் இருந்து தான் எடுத்துக் கொண்டார். இன்னமும் தனது அண்ணன் பிரபாகரன் உடனான சந்திப்பினை அவர் சிலிர்ப்பாய் விவரிக்கையில் அவரின் கண்களில் மிளிரும் ஒளியை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன்.

தமிழினத்தின் பெருங்கனவான ஈழப் பெருநிலத்தினை அழித்த காங்கிரசு கட்சியினை அரசியல் பலம் கொண்டு,மக்களை திரட்டி வீழ்த்தி விட அவர் முயன்றார். அப்போது அவரிடம் அதை நிறைவேற்ற நம்பிக்கை என்ற ஆயுதம் மட்டுமே இருந்தது. எதிரே நின்ற எதிரி சாமன்யப்பட்டவன் அல்ல. நூற்றாண்டு கடந்த பழமையும், அதிகாரம் தந்த வளமையும் உடைய இந்த தேசத்தினை பல முறை ஆண்டு, இப்போதும் ஆண்டுக் கொண்டிருக்கிற காங்கிரசுக் கட்சி. ஆனால் அவரும் , அவரது தம்பிகளும் அசரவே இல்லை. அவரும், அவரது இயக்கத்து தம்பிகளும் தங்களது கடுமையான உழைப்பினால் தமிழ்த் தேசிய இனத்தின் இலட்சியக்கனவொன்றை நிறைவேற்ற தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்கள். ஈழப் பெரு நிலத்தில் இறுதிக்கட்ட போரின் போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் எப்போதும் அவரது மனக்கண்ணில் தோன்றி அவரை உசுப்பேற்றிக் கொண்டே இருந்தது. கண்ணீரை துடைத்து விட்டு, பாய்ந்து எழுந்து மக்களிடம் ஓடினார். அடிவயிற்றிலிருந்து பொங்கிய கோபத்தினை எல்லாம் திரட்டி எடுத்து உக்கிர வார்த்தைகளால் காங்கிரசை வறுத்தெடுத்து ஓட விட்டார் அவர். ஏன் இத்தனை கோபம் என கேட்டதற்கு” பிரபாகரனை சோனியா காந்தி வீழ்த்தினார் என வரலாறு சொல்லக் கூடாது. பிரபாகரன் தன் தம்பியை வைத்து சோனியா காந்தியை வீழ்த்தினார் என்றுதான் வரலாறு சொல்லவேண்டும் “ என துடிப்புடன் கூறிய அவரை யாராலும் நேசிக்காமல் இருக்க இயலாது.

உண்மையில் அது தான் நடந்தது. பிரபாகரன் தோற்கவில்லை. மாறாக தன் தம்பியை அனுப்பி காங்கிரசை தோற்கடித்தார். இப்படித்தான் வரலாறு இதை பதியப் போகிறது.

போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58 தொகுதிகளில் காங்கிரசு தோல்வி அடைந்ததற்கான முழு முதற் காரணம் அவரும், அவரின் தம்பிகளும் தான். வேகமாக வரும் வாகனத்தில் இருந்து அடுத்த ஊருக்கு பயணப்பட்டாக வேண்டும் என்ற அவசரத்தில் பாய்ந்தோடி மேடையில் ஏறி ,காங்கிரசினை ஏன் தோற்கடிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கடுக்காக ஆவேசமாக எடுத்து வைத்த போது காற்று திசை மாறி வீசத் துவங்கி இருந்தது. அடித்து வீசிய புயலில் சிக்குண்ட சருகுகளாகி காங்கிரசு வேட்பாளர்கள் சிதறுண்டு போனார்கள்.

காங்கிரசை எதிர்க்கப் போய் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்கிறார்களே…இது அடுக்குமா,தகுமா என்றெல்லாம் வழக்கம் போல் சங்கு ஊதினர் சிலர். இந்தியத் தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது. இந்திய தேர்தல் கமிசன் நடத்தும் தேர்தலில் பங்குப் பெற்றால் தமிழ்த்தேசியம் மலராது. எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் செய்ய வேண்டும் என்றனர் சிலர். காங்கிரசிற்கு ஓட்டு போடாதீர்கள் என்று மட்டும் சொல்லுவோம் ,எந்த கட்சிக்கும் ஓட்டு கேட்காமல் இருப்போம் என தானும் குழம்பி,மக்களையும் குழப்ப முயன்றனர் சிலர். ஆனால் இவற்றை எல்லாம் காதில் ஏற்றிக் கொள்ளாமல் தெளிவாக இருந்தார் அவர்.

தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவார்ந்த பெருமக்கள் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவோ, என்னவோ தெரியவில்லை. 85% -க்கும் மேலான ஓட்டுப் பதிவினைக் கண்டது தமிழகம். மக்களை விட்டு விட்டு இவர்கள் யாருக்கு எதை செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத காரணத்தினால் இவற்றை எல்லாம் அவர் யோசிக்கக் கூட இல்லை. காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒற்றைத் திட்டம். அதற்கு எதிர்த்து நிற்கும் பிரதான எதிர்க்கட்சி வெல்ல வேண்டும் என்பது சிறு குழந்தைகளும் அறிந்த, அறிவார்ந்த பெருமக்கள் மட்டும் அறியாத உண்மையாதலால் காங்கிரசை எதிர்த்து இரட்டை இலை என்ன ,அங்கு மொட்டை இல்லை நின்றால் கூட நான் ஆதரிப்பேன் என்று தெளிவாக இருந்தார் அவர்.

காங்கிரசின் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தன்னை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என கேட்டதற்கு” தங்கையே! நீ காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடு. நான் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன். என அறிவித்தார் அவர்.

ஓயாத அலைகளை நினைவுப்படுத்தும் தாக்குதல்களை காங்கிரசின் இன எதிர்ப்பு அரசியலின் மீது நிகழ்த்தினார் அவர்.காங்கிரசின் கோட்டைக்குள் அவரின் சொற்கள் பாய்ந்து குண்டுகளாய் வெடித்தப் போது குலைந்துப் போனது காங்கிரசின் கோட்டை.இதோடு முடியவில்லை. தன் தாய்நில மக்களுக்கான ..ஒரு தாயக நாட்டை அடைவது வரைக்குமான அவரது கனவு மிகுந்த நீண்ட நெடிய ஒன்றாகும். சற்றும் சளைக்காத அவரது சொற் அம்புகள் எதிரிகளின் மீதும், துரோகக் கூட்டங்களின் மீது மழைப் போல பொழிய காத்திருக்கின்றன .

இனம் அழிந்த கதையிலிருந்து ஆவேசத்தினையும், தன் அண்ணன் பிரபாகரன் வாழ்க்கையில் இருந்து நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அவர் செல்லவிருக்கும் தொலைத் தூர லட்சிய பயணத்தில் பங்குப் பெற்று தன்னேயே ஒப்புக் கொடுக்க தமிழின இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரது பயணமும் துவங்கி விட்டது. அந்த இராஜப்பாட்டையில் அதிரும் குதிரைக் குளம்பொலிகளில் சிதறுண்டுப் போகும் எதிரிகளின் பகை.

நீண்ட இலக்கினை நோக்கி பாய்ந்த அம்பொன்று, குறுகிய இலக்கொன்றை ஊடறுத்து தாக்கி, துளைத்து பின் பாய்வது போல , காங்கிரசினை தமிழ் மண்ணில் வீழ்த்தி இருக்கும் அவர் தளராமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசிய இனத்தின் நம்பிக்கை அவர்.

அவர்தான் செந்தமிழன் சீமான் எனும் தமிழினத்தின் புதிய வெளிச்சம்.

-மணி.செந்தில்

என் அண்ணன் பாடல் – நெஞ்சுருக்கும் நல்லிசை.



.

காற்று குளிராய் வீசுகிறது. அனேகமாக மழை வரலாம். சன்னல் கதவுகள் வேகமாக படபடத்துக் கொண்டன. குளிர் காற்று அறைக்குள் வரட்டும் என கருதி சன்னல்களை திறந்து வைத்து கொக்கிகள் போட்டேன். அறையெங்கும் குளிர் பரவியது. கொஞ்சம் ஆழ்ந்து சுவாசித்துப் பார்த்தேன். மீண்டும் அந்த பாடலை கேட்கலாம் போலிருந்தது. நேற்று அமெரிக்காவில் இருந்து அருமை நண்பர் பாக்யராசன் அந்த பாடலுக்கான சுட்டியை அனுப்பி அவசியம் நான் கேட்டாக வேண்டும் என்று பணித்தது முதல் இந்த நொடி வரை அந்த பாடலை பல முறை கேட்டு விட்டேன். பாடலை கேட்ட முதல் முறையில் அந்த பாடல் கண்ணனுக்கானது இல்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது. பாடலைக் கேட்கும் பலரும் இப்படித்தான் உணர்ந்துக் கொள்கிறார்கள்.

.

கண் கலங்கிக் கொண்டு இருக்கிறேன். ஆழமாக ஊடுருவி ஆறாத ரணமாய் சதா உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு வலிக்கு தன் தமிழால் மயிலிறகு மருந்து தடவி இருக்கிறார் என் அறிவுமதி அண்ணன். இருட்டின் ஆழத்தில் கிடக்கும் விழிக்கு வெளிச்ச தெளிப்பொன்றை பற்ற வைத்து ஆறுதல் சொல்லும் சொற்களோடு .. வரும் சுதா ரகுநாதனின் குரல் நம்மை அசத்திப் போடுகிறது.


.

ஒரு மனிதனை தொழுது வணங்குதல் என்பது அறிவு நிலைகளுக்கு எதிரானதாக இருக்கலாம். பிம்பங்களினால் எழுப்பப்படும் உருவம் நிலையற்றதாக போகலாம். ஆனால் அவரை சந்தித்தவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் அவரைப் பற்றி..அவரோடு இருந்த கணங்கள் பற்றி கேட்டு மீண்டும் மீண்டும் சிலிர்ப்படைகிறேன். அவரது தோற்றம் என் முன்னால் விரிந்துக் கிடக்கிறது. என் படுக்கை அறையில் துவங்கி…. என் அலுவலக அறை வரை அவரது படங்களை ஆசையுடன் மாட்டி வைத்திருந்து என் வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாய் அவரை எனக்குள் மாற்றி வைத்திருக்கிறேன். எதிரிகளால் கூட குறை கூற முடியாத அந்த மனிதனின் நேர்மையையும், ஒழுக்கத்தினையும் கண் கலங்க நினைவு கூர்கிறேன். நான் அந்த மனிதனை நினைக்காத நொடியில்லை. என் மகனை அவரின் படத்தினை காட்டி பெரியப்பா என அவனை அழைக்கச் சொல்லி பெருமைப் படுகிறேன். என் வீட்டின் சிறப்பு நிகழ்வுகளின் போது அவரது படத்திற்கு முன்னால் நிகழ்வுகளை நிகழ்த்திக்கொள்கிறேன். அண்ணனைப் பற்றி ஏதாவது தகவல் உண்டா என கண்கள் முழுக்க ஆர்வத்துடன் கேட்கும் தம்பிகளுக்கு அவர் இருக்கிறார். வருவார் என நம்பிக்கையாய் உண்மையை சொல்கிறேன். அவர் இல்லாத உலகத்தில் நான் வாழ முடியாது என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவரைப்பற்றிய காணொளிகளை பார்க்கும் போது அவரது கண்களில் மிதக்கும் நம்பிக்கை மிகுந்த கனவுகளை யாராலும் களவாட முடியாது எனக்குள் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். அவரைப் பற்றி அவதூறு பேசுபவர்களை..அவரை விமர்சிப்பவர்களை நான் வெறுப்பின் உச்சத்தில் தள்ளுகிறேன். உலகத்தின் அனைத்து தத்துவ சாரங்களிலும் அவரை நான் பொருத்திப் பார்க்கிறேன். இரவு நேரங்களில் தனியே போகப் பயப்படும் என் மகனிடம் பெரியப்பாவினை நினைத்துக் கொண்டே போடா என பெருமைப் பொங்க சொல்கிறேன். எம் இனத்திற்கான நாட்டை அழித்தவர்களையும், அழிக்க துணைப் போனவர்களையும் நான் ஆழ்ந்த வன்மத்துடன் பார்க்கிறேன். வீதிகளில் எப்போதாவது நெகிழி பதாகைகளில் நிற்கும் அவரது உருவத்தினை கண்கலங்க பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.என்னால் இப்படித்தான் வாழ முடியும் என தோன்றுகிறது. அண்ணன் வருவார் என்ற நம்பிக்கைதான் என்னை இயங்க வைக்கிறது. அவரின் சாகசங்களினை யாராவது பெருமைப் பொங்க பேசினாலோ, எழுதினாலோ நான் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவனாகிறேன்.

.

கண்களை மூடுங்கள் . விளக்குகளை அணையுங்கள். அசையாமல் இந்த பாடலை மென்மையாக உள்வாங்குங்கள். ஒற்றை புல்லாங்குழலோடு இதழ் இதழாய் விரியும் பாடலில் உங்கள் மனதை இழப்பீர்கள். சுதாவின் குரலில் ஒழுகும் உயிர் அறிவுமதி தமிழை பற்றி அப்படியே தேசியத் தலைவரை ஸ்தூலமாக நம் கண் முன்னால் நிறுத்திப் போடுகிறது.

“அவன் வருவான்; கண்ணில் மழை துடைப்பான்”

என குரல் உயரும் போது நாம் உடைகிறோம்.

“ பனி மூட்டம் மலையை மூடலாம், வழி கேட்டு பறவை வாடலாம்.”

என குரல் குழையும் போது இதுவரை இறுகிக் கிடந்த இதயத்தின் முடிச்சிகள் ஒன்றொன்றாய் அவிழ்ந்து இறகாகிறது.

.

இந்த பாடலும்..வரிகளும்..இசையும் ஓர் அனுபவம். இசைக்கு உயிர் உண்டு என்பதை மிக நெருக்கமாக உணர வைக்கும் தன்மை இப்பாடலுக்கு இருக்கிறது. எளிய சொற்களில் விரியும் இசை நம்மை ஆட்கொள்கிறது.

பாடலின் ஊடே தொக்கி நிற்கும் நம் தொன்மம் தந்த தாய்மையின் விரல்கள் நம்மை சாந்தப்படுத்துகிறது. கரைகிறோம். உருகுகிறோம். கரைந்து மிஞ்சிய கரைசலில் கண்ணீரின் உப்புத் துகள்கள் மிதக்கின்றன.

.

இந்த பாடல் படத்தின் எந்த சூழலுக்காக எழுதப்பட்டது என்ற இயக்குனரின் நோக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ..நாம் இந்தப் பாடலை அண்ணன் பாடலாகத் தான் உள்வாங்குகிறோம். அப்படித்தான் அதுவும் உள்ளே போகிறது. உயிரிசை வழங்கிய வித்யாசாகருக்கும்.. குரல் கொடுத்து அனுபவமாய் நம்முள் இறக்கிய சுதா ரகுநாதனுக்கும்., படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பனுக்கு நன்றிகளும்..பாராட்டுகளும்.

.

அறிவுமதி அண்ணனுக்கு நன்றி எல்லாம் சொல்லப் போவதில்லை.

அவர் அப்படித்தான். நான் இப்படித்தான்.

நாங்கள் இவ்வாறாக.

.

என்ன குறையோ என்ன நிறையோ

திரைப்படம்: மந்திரப் புன்னகை

இசை : வித்யாசாகர்

என்ன குறையோ

என்ன நிறையோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன தவறோ

என்ன சரியோ

எதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

என்ன வினையோ

என்ன விடையோ

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

அதற்கும் நான்

உண்டென்பான்

கண்ணன்

( என்ன குறையோ )

நன்றும் வரலாம்

தீதும் வரலாம்

நண்பன் போலே

கண்ணன் வருவான்

வலியும் வரலாம்

வாட்டம் வரலாம்

வருடும் விரலாய்

கண்ணன் வருவான்

நேர்க்கோடுவட்டம்

ஆகலாம்

நிழல் கூட

விட்டுப் போகலாம்

தாளாத துன்பம்

நேர்கையில்

தாயாக கண்ணன்

மாறுவான்

அவன் வருவான்

கண்ணில் மழைத் துடைப்பான்

இருள் வழிகளிலே

புது ஒளி விதைப்பான்

அந்தக் கண்ணனை

அழகு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

உண்டு எனலாம்

இல்லை எனலாம்

இரண்டும் கேட்டு

கண்ணன் சிரிப்பான்

இணைந்தும் வரலாம்

பிரிந்தும் தரலாம்

உறவைப் போலே

கண்ணன் இருப்பான்

பனி மூட்டம் மலையை

மூடலாம்

வழி கேட்டு பறவை

வாடலாம்

புதிரான கேள்வி

யாவிலும்

விடையாக

கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்

எங்கும் நிறைந்திருப்பான்

அவன் இசை மழையாய்

உலகினை அணைப்பான்

அந்தக் கண்ணனை

கனிவு மன்னனை

தினம் பாடி வா

மனமே

( என்ன குறையோ )

பாடலை பருக: http://www.raaga.com/a/?T0002515

பேரறிவாளன் - துயரக் காற்றில் அலையும் தீபம்.
























பேரறிவாளன் - துயரக் காற்றில் அலையும் தீபம்.

( ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் எழுதிய

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – என்று நூலை முன் வைத்து)

மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது . மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும் தூக்குக் கயிறு சிதைத்துப் போடுகிறது .

மரணத்தின் நிழல் தரும் மன வலி மிக கொடுமையானது. வாழ்வதற்கான பற்றை வைத்துதான் மனித சமூகமே கட்டமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஒரு மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியதை ‘குற்றமும் தண்டனையும்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். நாஸி வதை முகாமில் இருந்து தப்பி வந்த யூத இளைஞன் ஒருவரான எலீ வீஸல் என்பவர் தனது அனுபவங்களை எழுதியுள்ள இரவு என்ற சுயசரிதை நாவலும் (தமிழில் வெளிவந்துள்ளது. யூனிடெட் ரைட்டர்ஸ் வெளியீடு ) வாழ்வின் மீது மனிதன் கொண்டுள்ள மாறாப் பற்றை விளக்குகிறது. சிறை வாழ்க்கை குறித்து தோழர் .தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களும் இத்தகையதுதான்.

உயிர் வாழும் வேட்கை தரும் உணர்வில் தான் மனித சமூகத்தின் இயக்கமே நடைபெறுகிறது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் ,எதற்கும் இல்லை என உலகச் சட்டங்கள் அனைத்தும் உரத்த குரலில் கூறுகின்றன. ஆனால் சட்டங்களை அமல் படுத்தும் நீதிமன்றங்களுக்கு மட்டும் தண்டனை என்ற பெயரில் ஒரு உயிரைக் கொல்வதற்கு உரிமை இருக்கிறதென்றால் எத்தகைய முரண்பாடு ?

இறுக்கி கட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் அமர்ந்து கொண்டு ..சட்டப் புத்தகங்களின் காற்புள்ளி, அரைப்புள்ளிக்கெல்லாம் அர்த்தம் தேடுவதுதான் நீதிமன்றத்தின் பணியா என்றால் இல்லை. மாறாக தனி மனித விழுமியங்கள் மேல் கவிழும் இருட்டினை துடைக்கும் வெளிச்ச தெறிப்பாக சட்டங்களும், நீதிமன்றங்களும் மாறி இருந்திருக்க வேண்டும். இன்றளவும் சர்ச்சைகள் நீங்காத வழக்கொன்றின் முடிவு தவறொன்றும் செய்யாத ஒரு எளிய மனிதனின் மரணத்தில் தான் விளையும் என்பது வெட்கக்கேடானது. துயரமானது. பேரறிவாளன் தனது முறையீட்டு மடல்களில் முன் வைத்திருக்கும் எந்த கேள்விக்கும் எந்த அமைப்பிடமிருந்து பதிலில்லை. மூர்க்கமும் , அவசரமும் நிரம்பிய நம் நாட்டு அதிகார கட்டமைப்புகளின் துயரமான விளைவாக மாறி நிற்கிறது பேரறிவாளனின் உயிர்.

அமெரிக்க விடுதலைப் போராட்டக் காலத்தில் அங்கு குடியேறிவர்களுக்காக ஆதரவு குரல் கொடுத்து விடுதலையை ஆதரித்த குற்றத்திற்காக பிரிட்டிஷ் கவிஞர் தெல்வால் (THELWALL) சிறையிலடைக்கப்பட்டார். அப்போது அவர் தன் வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் “ என் வழக்கினை நானே உரைக்காவிடில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும்” என எழுதி இருந்தார். அதற்கு அவரது வழக்கறிஞர் எழுதிய பதிலில் “ உங்களின் வழக்கினை நீங்களே உரைத்தாலும் தூக்குத் தண்டனை கிடைக்கும்” என கூறியிருந்தார் – இந்த உரையாடல்களில் இருந்து உருவான சொற்றொடர்தான் “ நான் செய்தால் தூக்கிலிடப்படுவேன், செய்யாவிடில் தூக்கிலிடப்படுவேன் “(I’ll be hanged if I do and hanged if I don’t ). அதிகார வல்லாதிக்கத்தின் உச்சக் கட்ட அவல காட்சியின் வடிவம் இந்த சொற்றொடர்தான் அமெரிக்க பெரு நிலத்தின் வல்லாதிக்க அரசாட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாக ,ஆவேசம் மிகுந்த முழக்கமாக அமெரிக்க வீதிகளில் எழுந்தது.

உயர்ந்த மதிற்சுவர்களுக்கு மத்தியில் நாள், கிழமை, மாத வருடம் பேதம் அறியாமல் சிறை அறைகளில் எப்போதும் தேங்கி இருக்கும் வற்றா இருட்டில் ..துளித்துளியாய் கசிகிற வெளிச்சத் துளிகளை கண்களுக்குள் உள்வாங்கி ..வாழ்வின் ஏதோ ஒரு முனையில் திரும்பி விட மாட்டோமா…அதிசயம் நிகழ்ந்து விடாதா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு கண்கள் பனிக்க காத்திருப்பதன் வலியை பேரறிவாளன் எத்தனை நாள் சுமப்பார்?.. ஒரு ஆயுள் தண்டனைக்கும் அதிகமான நாட்களும் கடந்து..இயல்பான வாழ்க்கையின் எவ்வித சுகங்களையும் அறியாமல் ..அடைப்பட்டு கிடக்கும் பேரறிவாளன் மீதுள்ள குற்றச்சாட்டு – ஒரு கொலைக் குற்றத்திற்கு உதவி செய்ததாக . ராஜீவ் காந்தியின் படுகொலையை ஒரு தனி நபர் படுகொலையாகத்தான் கருதப்பட வேண்டும் என உச்சநீதிமன்றமே முடிவு செய்து விட்ட நிலையில்.. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் சூழ்ந்துக் கிடக்கிற மரணத்தின் இருட்டில் தான் கழிக்க வேண்டும் என்ற தண்டனை ஒரு நொடியில் தொண்டையை இறுக்கி..கண்களை பிதுக்கி உயிரை கக்குகிற மரண தண்டனையைக் காட்டிலும்...கொடுமையானது.

தனது 19 ஆவது வயதில் சிறை புகுந்த பேரறிவாளனுக்கு இன்று 35 வயது ஆகிறது. தனிமைச் சிறையும், மரண வாசலின் முன்னே ஊசலாடும் தன்மையும் தந்த பரிசினால் கடுமையான உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற அவரது நூலின் தலைப்பில் உள்ள மடலில் பேரறிவாளன் நெஞ்சுருக்கும் சொற்களோடு தன் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல எடுத்து முன் வைக்கிறார். பக்கங்கள் புரள புரள உண்மைகளும், உண்மைகளை புறந்தள்ளி ஒரு குற்றமற்றவனை பலியிடும் தன்மைகளும் வெளிவந்து நம்மை கண்கலங்க செய்கின்றன. ஒரு எளிய மனிதன் வெகு சுலபமாக கொல்லப்படும் அவலம் நிறைந்த சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற உணர்வு நம்மை மிகுந்த அச்சத்தில் கிடத்துகிறது. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் புலனாய்வுத் துறையினரும், ஆளும் வர்க்கத்தினரும், உளவுத்துறையினரும், ஊடக தாக்குதல்களும் சூறையாடிய ஒரு அப்பாவி இளைஞனின் ரத்தக்கறை படிந்திருக்கிறது.

பேரறிவாளன் மீது அரசுத் தரப்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களில் முக்கிய மாபெரும் குற்றச்சாட்டு என்னவெனில் ராஜீவ் காந்தி கொலையாளி தனுவிற்கு பெல்ட் பாம் செய்ய மின்கலம்(பேட்டரி) அதாவது சாதாரண பெட்டிக் கடைகளில் கிடைக்கும் 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்து குண்டு தயாரிக்க உதவியது.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்து ஒய்வுப்பெற்ற ரகோத்தமன் 10-08-2005 தேதியிட்ட குமுதம் வார இதழிலும்., 31-07-2005 தேதியிட்ட ஜீனியர் விகடன் இதழிலும் “தனு தன் இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டை செய்து கொடுத்தவர் யார் என்று இது நாள் வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை “ என மிக மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இது நாள் வரை கண்டுபிடிக்கப்படாத ஒரு காரணிக்காக பேரறிவாளன் தலையின் மேல் தூக்குக் கயிறு தொங்குகிறது என்பது எவ்வளவு மோசமான சமூகத்தில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்பதற்கு உதாரணம். ஆள்பவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் நினைத்தால் அப்பாவியான ஒரு எளிய மனிதனை தன் அதிகார கரங்கள் கொண்டு கொன்று விட முடியும் என்கிற நிலையில் தான் நாமெல்லாம் வாழ்கிறோம்.

ராஜீவ்காந்தி கொலைக்கு பிறகு 20-06-1991 ஆம் தேதியில் வெளிவந்த இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட “ராஜீவ் படுகொலை – சதி திட்டம்” தீட்டப்பட்டது எப்படி என்ற கட்டுரையில் பேரறிவாளன் வெடிகுண்டு நிபுணர் எனவும், ராஜீவை கொன்ற தனு கட்டியிருந்த வெடிகுண்டை செய்தவர் என்றும் சித்தரித்து எழுதப்பட்டிருந்தது. புலனாய்வு குழுவினரும், உளவுத் துறையினரும் திட்டம் போட்டு ஊடகங்களில் பரப்பி விட்ட பொய்யான கதைகளால் பேரறிவாளன் குற்றவாளியாக்கப்பட்டு தூக்குத் தண்டனை கைதியாக இன்று மரணக் கொட்டடியில் வாடிக் கொண்டிருக்கிறார். பிறகு இதே இந்தியா டுடே இதழ் 1996 ஆண்டு “துப்பில் துவாரங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில் இது நாள் வரை வெடிகுண்டு குறித்து எந்த புலனாய்வும் செய்யவில்லை என கட்டுரை வெளியிட, அதை எதிர்த்து புலனாய்வு துறையினர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வேறு கதை.

அரசு தரப்பு சாட்சிய ஆவணம். 392 என்ற 07-05-1991 ல் பெறப்பட்டதாக கம்பியில்லா தந்தியில்

( சிவராசன் சென்னையிலிருந்து இலங்கையிலிருக்கும் பொட்டுஅம்மானுக்கு கம்பியில்லாத் தந்தி வழியாக அனுப்பியதாக சொல்லப்படும் சங்கேதச் செய்தியை இடைமறித்து ஆராய்ந்து பார்த்து உருவாக்கிய ஆவணம்) கொலைச்சதி சிவராசன், தனு,சுபா ஆகிய மூவருக்கு மட்டும்தான் தெரியும் என பதிவாகி உள்ளது. இந்த கூற்றை வழக்கினை விசாரித்த நீதிபதிகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். எனவே கொலைச்சதி பற்றி பேரறிவாளனுக்கு எதுவும் தெரியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கிறது. “குற்றமனமில்லா செயல் குற்றமென ஆவதில்லை “(actus non facit reum nisi mens sit rea- The intent and the act must both concur to constitute the crime –The act itself does not make a man guilty unless his intention were so –An act does not make one guilty unlees the mind is also guilty) என்ற சட்ட முதுமொழிகேற்ப பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டகோட்பாடுகளின் மீதும், இயற்கை நீதியின் மீதும் அரசியலும், அதிகாரமும் நிகழ்த்திய வன்முறையாக பேரறிவாளனின் வாதங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புரை (Pachan singh vs State of Punjab) பேரறிவாளன் வழக்கில் பின்னுக்கு தள்ளப்பட்டதில் இருந்து நியாயமும், நீதியும் மட்டுமே தண்டனையையும், விடுதலையையும் முடிவு செய்வன அல்ல என்பது முடிவாகி இருக்கிறது.

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் தூக்குத் தண்டனை என்பது தடா சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டது ஆகும். தடா சட்டம் மிகக் கொடுமையான ஒன்று என்பதிலும், அது அரசியலைப்பு சட்டத்திற்கே முரணானது என்பதிலும் யாருக்கும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது. இக்கருத்தினை அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி சவாண் தடாச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என பாரளுமன்றத்திலேயே ஒத்துக் கொண்டார். (19-08-1994 மாநிலங்களவையில்). போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் சாதாரண சட்டங்களின் படி நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. (A confession made to a police officer is irrelevant-sec 25 Indian Evidence Act 1872 ) ஆனால் தடா என்ற ஆட்தூக்கி சட்டத்தின் வாயிலாக( பிரிவு 15 தடா சட்டம்) போலீஸ் அதிகாரிகளிடம் பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு எதிராக நீதிமன்ற சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தான் நிரபாரதி என்பதற்கு அனைத்து விதமான காரணங்களையும் தன் முறையீட்டு மடல்களில் பட்டியலிடுகிறார் பேரறிவாளன். ஆனால் ஒரு எளிய மனிதனின் நியாயங்களை கேட்பதற்கும், அவரது துன்பச் சூழல்களையும் போக்குவதற்கும், நெடிய சிறை தந்த காயங்களை ஆற்றுவதற்கும் ஆள்வோருக்கு விருப்பமில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவினை ஒட்டி தன்னை விடுவிக்க கோரி தமிழக முதல்வருக்கு எழுதியிருக்கின்ற முறையீட்டு மடலில் பேரறிவாளனின் ஆழமான புரையோடிப் போன காயத்தின் வலி தெரிகிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தானும் தன் குடும்பமும் அனுபவித்து வரும் சொல்லவியலா துன்பத்தினை வடித்து இருக்கிறார் அறிவு. அந்த மடலில் தனக்கென கொள்கை பின்னணி இருந்ததே ஒழிய அரசியல் பின்னணி- செல்வாக்கு ஏதுமில்லை என குறிப்பிடுகிறார். உண்மைதான். பட்டப்பகலில் பத்திரிக்கை அலுவலகத்தினை தாக்கி 3 பேரை கொன்று விட்டு வரும் நபர்களுக்கு கூட மிக எளிதாக விடுதலை கிடைத்து விடும் இந்த நாட்டில் எந்த குற்றமும் செய்யாமல் 15 வருடமாய் சிறையில் வாடும் எளிய நிரபாரதிக்கு நியாயம் கிடைத்து விடுமா ..என்ன.?

பேரறிவாளன் தனது முறையீட்டு மடலில் தன்னை மொழி, இனப் பற்றாளன் என்றும், தொப்புள் கொடி உறவான தமிழீழ மக்கள் படும் இன்னல்களை போக்க உலகத் தமிழர்கள் போல தன்னால் இயன்றதை செய்பவன் எனவும் அடையாளம் காட்டியுள்ளார். இவ்வாறு பிறந்து வாழ்ந்ததுதான் பேரறிவாளன் செய்த ஒற்றை குற்றம். உண்மையான மொழி, இனப்பற்றாளர்கள் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் கொலைகாரன் ,கொள்ளைக்காரன் என பட்டங்கள் சூட்டி கொல்லப்படுவார்கள். இல்லையெனில் தீவிரவாதி என சிறைப்படுத்தப்படுவார்கள். அதுவும் இல்லையென்றால் அண்ட சராசரங்களையும் ஆட்டிப்படைக்கிற வல்லாதிக்க நாடாக வளர்ந்து வருகிற இந்திய திரு நாட்டின் இறையாண்மை ஒரு எளிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து போராடி ஒரு இயக்குனராக உயர்ந்து ..காலத்தின் கோலமாய் இனம் அழிந்த சோகத்தில் இனி அழியாமல் இருக்க ஒரு அமைப்பினை கட்டி.. இளைஞர்களை சேகரித்து ..களமாடி வருகிற செந்தமிழன் சீமானின் தன் சகோதரன் கொல்லப்படுகிறானே என்ற வேதனையில் உதிர்த்த சொற்களில் இருக்கிறது என கூறி சிறையில் போடுவார்கள். வேதனை.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அவர்களை நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளிலும், உணர்வாளர்களின் திருமணங்களிலும் நான் சந்தித்திருக்கிறேன். கண்களில் நிரந்தரமாக தங்கிவிட்ட சோக நிழலினை காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்புடன் பழகும் அற்புத தாய் அவர்கள். வயதான அந்த தாய் தன்னுடைய நிரபாரதியான மகனுக்காக இன்றளவும் ஒரு நெடிய போராட்டத்தினை மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய மகன் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றின் நிழலினை அகற்றிட ஒய்வு எடுக்க வேண்டிய வயதில் போராடிக் கொண்டிருக்கிறார் .ஒரு நாள் அவர் என்னிடம் சொன்ன “ ரொம்ப அலைஞ்ச்சிட்டேன்பா” என்ற சொற்கள் என்னை இன்றளவும் தூங்க விடாமல் அலைகழிக்கின்றன. கடுமையான மன உளைச்சலும், நெடிய சிறைவாசம் தந்த சோர்விலும் இருந்தாலும் பேரறிவாளன் சிறையில் ஒரு நன்னடத்தை உடைய மனிதனாக வாழ்ந்து இளநிலை கணி செயல்முறையியல் (B.C.A) படிப்பினை இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலம் 3 ஆண்டுகள் படித்து முடித்து பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு 5 க்கும் மேற்பட்ட சான்றிதழ் கல்வியையும் இந்த துயர் மிகுந்த இடைப்பட்ட காலத்தில் முடித்துள்ளார். பேரறிவாளன் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது அரசு இறுதித் தேர்வில் பள்ளியின் இரண்டாவது மாணவனாக வந்திருந்து ஜேசிஸ் சங்க விருது பெற்றிருக்கிறார். N.C.C என்ற தேசிய மாணவர் படையில் இணைந்திருந்து உயர்நற்சான்றிதழ்களை பெற்றிருக்கிறார். இன்றளவும் சிறை வாழ்க்கையில் சிறையில் உள்ள நூலகத்தினை பராமரித்து வருகிறார். அங்கு வந்திருக்கும் அனைத்து புத்தகங்களையும் வாசித்து விட்டு குறிப்பு எடுத்து வைத்திருக்கிறார். சிறை வாழ்க்கையில் சக கைதிகளுக்கு சான்றான நபராக இருப்பதோடு..சக மனிதர்களின் மீட்சிக்காகவும் உழைத்து வருகிறார். அப்பழுக்கில்லாத அந்த மாமனிதனின் விடுதலையை கோர வேண்டியது மனசாட்சி உள்ள மானுட கடமையாக இருக்கின்றது.

குற்றம் செய்யாத ஒரு எளிய மனிதனை, அவரது வயதான தாயை அலைகழிப்பதும், மரணத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுவதும்தான் உயர்ந்த மாண்புகள் பெற்றிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டின் நீதி என்றால் நாம் வாழும் நாடு நாடல்ல என்பதனை நாம் உணர வேண்டும் . தூக்குத் தண்டனையை உலகத்தில் பெரும்பாலான நாடுகள் அகற்றி மனித உரிமைகள் மீதான தங்களது அக்கறையை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றளவும் தூக்குத் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான ,பிற்போக்கு அம்சங்கள் உடைய நீதி பரிபாலன கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்பது மிகவும் சிந்திக்க வேண்டியது. மரண தண்டனையை ஒழிக்கும் போராட்டத்தின் மிக முக்கியப் புள்ளியாக பேரறிவாளனின் இந்த நூலை கொள்ளலாம்.

தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் என்ற நூலில் மனித உரிமைகள் மீது மிகுந்த அக்கறை காட்டும் நீதியரசர் டி. ஆர்.கிருஷ்ணய்யர் , நீதியரசர் எச்.சுரேஷ் உள்ளீட்ட பல அறிஞர் பெருமக்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அணிந்துரைகளின் வாயிலாக வலியுறுத்தப்படும் கருத்துக்கள் மனித உரிமைகள் மீதும், அதன் விழுமியங்கள் மீது ஆர்வம் உள்ளோர் மிகவும் ஆழமாக கற்க வேண்டியவை ஆகும். பல்வேறு சமயங்களில் பேரறிவாளன் எழுதியுள்ள முறையீட்டு மடல்கள், விண்ணப்பங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தான் சிக்குண்ட விதம் குறித்தும், எவ்வாறெல்லாம் விசாரணை என்ற பெயரில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விபரங்களையும் இந்த மடல்களில் அறிவு மிக விளக்கமாக எடுத்தியம்பி உள்ளார். அவரது முறையீட்டு மடல்களும், விண்ணப்பங்களும் கெஞ்சல்களும், புலம்பல்களும் நிறைந்த இரங்கத் தக்க மனுக்களாக இல்லை. மாறாக இந்த உலகத்தில் தான் வாழ்வதற்கான உரிமை கோரும் ஒரு மனிதனின் நேர்மையான கோரலாக இருக்கிறது. இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி செல்வதற்கான வழியாக விரியவில்லை. மாறாக ஒழிக்கப்பட வேண்டிய மரணதண்டனையை எதிர்க்கவல்ல இயக்கமாகவும் இந்த நூல் விளங்குவது சிறப்பு. இந்த நூல் ஆகாயம் வரை உயர்திருந்து பளபளக்கும் இந்தியாவின் நீதிமன்றங்கள் போற்றும் மாட்சிமை நிறைந்த நீதி பரிபாலனத்தின் மனசாட்சியில் வடுவாக நிலைத்திருக்கிறது.

நூல் முழுக்க அரசு தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஆதாரப்பூர்வமாக பதில் அளித்து, சட்டத்தின் முன்பாகவும், இந்த சமூகத்தின் முன்பாகவும் வினாக்களை வைத்து காத்திருக்கிறார் பேரறிவாளன். அவரது விளக்கங்களைப் படித்து இந்திய நீதிமன்றங்களின் இரண்டு புகழ்ப் பெற்ற நீதியரசர்கள் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்கள். இந்த ஒற்றை நூலை படித்தால் போதுமானது. பேரறிவாளனின் விடுதலை என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறியலாம். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் படித்து.. உணர வேண்டிய உணர்ச்சியாக.. அவரவர் உள் மனச் சான்றினை உலுக்கி எடுக்கும் வினாவாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

இனத்தின் மேலும், இந்த மொழியின் மீதும் பற்று வைத்து ஒரு முற்போக்கு குடும்பத்தின் மகனாய் பிறந்து தான் எந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டோம் என்று இன்றளவும் யோசித்துக் கொண்டிருக்கிற துயரோடு வாழும் பேரறிவாளனின் ஆன்மா நீதிபதி கிருஷ்ணய்யர் சொன்னது போல உயர்வானது. பேரறிவாளனின் துயர் மிகுந்த இருட்டில் உலக வெளிச்சம் பட வேண்டும் . உலகமெங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு பேரறிவாளனின் துயர் சேர வேண்டும். இந்த புனிதக் கடமையை உலகத் தமிழர்கள் தாங்களாக முன் வந்து செய்ய வேண்டும். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

ஒரு மனித உயிரை பறிக்க நம் நாட்டு சட்டங்களும், நீதிமன்றங்களும் வைத்திருக்கும் அளவு கோல்கள் மிகவும் அபாயகரமானவை. பெரும்பாலான சமயங்களில் குற்றமற்றவர்களே சிக்கிக் கொள்ளும் வகையில் தூக்குமேடையின் உயரம் மிக அருகில் இருக்கிறது. இதனால் தான் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மரணவாசல் அருகே வரை சென்று விட்டு இன்று தமிழ்த் தேசிய அறிவுலகின் ஆளுமையாக திகழ்ந்து வரும் தோழர். தியாகு இதற்கு மிகச் சரியான உதாரணம். கண்டிப்பாக பேரறிவாளனுக்கு சீர்க்கெட்டு கிடக்கும் தமிழ் உலக சூழலில் தேவை இருக்கிறது. நிச்சயமாக பேரறிவாளன் எங்களுக்கும் , எம் தமிழ்ச் சமூகத்திற்கும் அவசியத்தேவையாக இருக்கிறார். அனைத்திற்கும் மேலாக நீதியின் மேலும் ,இந்த தமிழ்ச் சமூகத்தின் மேலும் நம்பிக்கை வைத்து வயது முதிர்ந்த நிலையி்லும் எப்படியாவது குற்றம் செய்யாத தன் மகன் விடுதலை ஆகி விடுவான் என்ற எண்ணத்தின் உச்சியில் கனவை சுமந்து நிற்கும் எங்கள் தாய் அற்புதம் அவர்களுக்காகவது…

சிதிலமடைந்த உச்சியில்

சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றில்

அலைந்தெரியும் தீபம்.

பேரறிவாளன் திரு.

(தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – அ.ஞா.பேரறிவாளன். வெளியீடு: திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம். விலை.ரூ.60. மேலதிக தகவல்களுக்கு : அற்புதம் குயில் தாசன் 11,கே.கே.தங்கவேல் தெரு,பெரியார் நகர், சோலையார் பேட்டை-635851 .www.hang-hanging.com,perarivalan.blogspot.com)